Tuesday, May 26, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #30: பிரான், வானவர், தேவர் - சிறு விளக்கம்

கண்டம் இருளக் கடுவிடத்தை வானவர்க்கா
உண்டுபிரான் ஆகி உதவுமலை - தொண்டர்
இணங்குமலை வானோரும் ஏனோரும் போற்றி
வணங்குமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #30

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

பிரான் என்று சொல்லை குரு நமச்சிவாயர் 🌺🙏🏽 பயன்படுத்திய விதம் சிந்திக்க வேண்டியது!

#பிரான் என்ற சொல்லுக்கு எல்லோருக்கும் இறைவன், அரசன், தலைவன் மற்றும் தந்தை ஆகிய பொருள்கள் உண்டு. இன்று பல தெய்வங்களைக் குறிக்க பயன்படுத்திக் கொண்டிருந்தாலும், ஆதியில் இது சிவபரம்பொருளை மட்டுமே குறிக்க பயன்படுத்தப்பட்டது.

🔹பிரான் ஆகி - எப்படி ஒருவர் பிரான் ஆக முடியும்? கொடிய விடத்தை வானவர்க்காக உண்டு.

🔹யார் #வானவர்? #தேவர்கள். முப்பத்து முக்கோடி தேவர்களில் பெரும்பாலானோர் நுண்ணுயிரிகளே!! நாம் இல்லாமல் இவ்வுலகு இயங்கும். ஆனால், நுண்ணுயிர்கள் இல்லாமல் இவ்வுலகு இயங்காது. மீதமுள்ளவை, உடலிலும் உலகிலும் இயங்கும் இயற்கை விதிகள் (ஈர்ப்பு விசை...), ஐம்பூதங்கள், பகலவன், நிலவு போன்ற கோள்கள். இவை எல்லாவற்றையும் சேர்த்தால் என்ன கிடைக்கும்? மொத்த உலகம்! 😊 வானவர்க்காக எனில் உலகுக்காக!! (மனிதர்களின் எண்ணிக்கை ஒரு பொருட்டே இல்லை. மொத்த உலக மக்கள் தொகையைவிட ஒரு கையளவு மண்ணில் அதிக நுண்ணுயிரிகள் இருக்கும்!)

🔹தன்னை பாதித்தாலும், தான் இறந்தே போனாலும் பரவாயில்லை என்று, தனது உலகுக்காக, கொடிய விடத்தைக்கூட அருந்தத் தயங்காதவரே பிரான் என அழைக்கப்பெறும் தகுதி பெற்றவர். இங்ஙனமே அரசன், தலைவன், தந்தை என விரித்துப் பொருள் கொள்ளலாம். (இவ்விதி இன்றைய ஆட்சியாளர்களுக்கு பொருந்தாது என்பது சிறு பிள்ளையும் அறிந்ததே. 😛)

🔹இவ்வளவு பாடுகளையும் பட்டு பிரான் நிலையை அடைவது எதற்காக? உதவுவதற்காக!! ("பிரான் ஆகி உதவுமலை")

🔹யாருக்கு உதவுவதற்காக? தன்னை நாடி வரும் அன்பர்களுக்காக.

🌷"ஐயே! அதிசுலபம் ஆன்ம வித்தை" என்று ஊக்குவித்து,
🌷 "மனத்தின் உருவை மறவாது உசாவு" என்று வழிகாட்டி,
🌷"தானாயிருத்தலே தன்னை அறிதலாம்" என்று இருத்துவதற்காக!! (இருத்து - நிலைபெறு - நிலைபேறு)

(எல்லாம் பகவான் திரு ரமணரது 🌺🙏🏽 பாடல் வரிகள்!!)

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

No comments:

Post a Comment