Saturday, May 29, 2021

ஆச்சாரம் பார்க்கிறவன் காசிக்கு போன கதை - கதையும், உட்பொருளும்!

"ஆச்சாரம் பார்க்கிறவன் காசிக்கு போன கதை" என்ற தலைப்பில் ஒரு கதை சமூக வலைதளங்களில் இன்று "ஹிட்" அடித்திருக்கிறது!! கதையை கீழே இணைத்துள்ளேன். இப்போது அதன் உட்பொருளைப் பார்க்கலாம்.

oOOo

"காசி" என்ற சொல்லுக்கு பல பொருள்கள் உண்டு: காசி என்ற நகரம், நமது புருவங்களின் நடுப்பகுதி, நான் எனும் தன்மையுணர்வு (உள்ளபொருள்) ...

சுத்தம் என்பது நமது தன்மையுணர்வில் நிலைபெற்று இருப்பது. அசுத்தம் என்பது தன்மையுணர்வை விட்டு விட்டு, உலக வாழ்க்கைக்குள் நுழைவது.

தொடக்கத்தில், ஓர் ஆன்ம பயிற்சியாளனால் தொடர்ந்து தனது தன்மையுணர்வில் நிலைபெற்று நிற்க முடியாது. அடிக்கடி, உலக வாழ்க்கைக்குள் சிக்கிக்கொள்வார். சிக்கிக்கொண்ட பிறகே, தனது தவறை உணர்வார். இப்போது அவர் செய்ய வேண்டியதெல்லாம், திரும்பவும் காசிக்குப் போவதே - தனது தன்மையுணர்விற்கு திரும்புவதே!!

அவரது நிலையை உணர்ந்த அருகிலிருந்தோர், எப்போதெல்லாம் அவரது கவனம் உலக நிகழ்வுகளுக்குள் நுழைகிறதோ, அப்போதெல்லாம் அவரை தடுத்து, "காசிக்குப் போ" என்று குறிப்பால் உணர்த்துவர். அவரும் தனது தவறை உணர்ந்து, தனது கவனத்தை தன் மீது (தனது தன்மையுணர்வின் மீது) திருப்பிக்கொள்வார்!!

அன்று வாழ்ந்த மக்களின் தரம் அவ்வளவு உயர்ந்திருந்தது. 😌 சொன்னவருக்கும் கேட்டவருக்கும் உள்ளபொருளைப் பற்றி தெரிந்திருந்தது. இன்றோ, பகுத்தறிவு உச்சமடைந்துவிட்டது. 🤢 உண்மைப்பொருள் மறைந்து, வெறும் சடங்கு மட்டும் தங்கிவிட்டது. 😔

oOOo

(இனி, கதையை பார்ப்போம். கிடைத்ததை அப்படியே பகிர்ந்துள்ளேன்.)

ஒரு ஊரில் ஒரு ஆசாமி இருந்தான். அவன் ரொம்பவும் சுத்தம் பார்க்கிற ஆளு. அவனுக்கு எதை கண்டாலும் அருவெறுப்பா இருந்தது. ஒரு சமயம் நம்ம ஆளு ஒரு கல்யாண வீட்டுக்கு போயிருந்தான். கல்யாணம் முடிஞ்சு சாப்பாடு பந்தி ஆரம்பமாச்சு.. நம்ம ஆளு ஒரு ஓரமா போய் உக்கார்ந்துகிட்டான், சாப்பாடு பிரமாதமா இருந்துச்சு. இவனுக்கு பக்கத்து இலையில் உக்கார்ந்திருந்த ஆசாமி பால் பாயசத்தை உறிஞ்சி உறிஞ்சி குடிச்சிட்டுருந்தான். அப்போ எச்சில் நம்ம ஆளு மேலே தெரிச்சிட்டுது . நம்ம ஆளுதான் ரொம்பவும் சுத்தம் பார்க்கிற ஆளாச்சே. இந்த கருமத்தை காசியில் போய்தான் தொலைக்கணும்னு நினைச்சிகிட்டு மறுநாளே காசிக்கு கிளம்பி போனான்.

அந்த காலத்தில் இப்போ மாதிரி பஸ், ரயில் வசதி எல்லாம் கிடையாதே. வசதி இருக்கிறவங்க வண்டி கட்டிக்கிட்டு போவாங்க. வசதி இல்லாதவங்க கால் நடையாவே போவாங்க..

போய் சேரவே பல நாள் ஆகும். பகல் முழுக்க நடப்பாங்க, இரவு நேரத்தில் ஏதாவது சத்திரத்திலோ அல்லது யார் வீட்டு திண்ணையிலோ படுத்து தூங்கி விட்டு மறுநாள் பயணத்தை தொடங்குவாங்க. இப்படி மத்தவங்க தங்கறதுக்கு வசதியாகவே அந்த காலத்தில் பெரிய திண்ணைகள் வைத்து வீடு கட்டினாங்க. திண்ணையில் வந்து தங்குறவங்களுக்கு சாப்பாடோ, அல்லது நீர்மோரோ அல்லது தங்கள் சக்திக்கு முடிஞ்ச ஏதோ ஒன்றை அவங்களுக்கு சாப்பிட கொடுப்பாங்க.
நம்ம ஆளு பகல் முழுக்க நடந்து, இரவில் ஒரு வீட்டு திண்ணையில் வந்து சுருண்டு படுத்தான்.

அந்த வீட்டு ஆள் வந்து "ஐய்யா, உங்களை பார்த்தால் ரொம்ப தூரம் நடந்து களைச்சு போனவரா தெரியுது. வாங்கையா. வந்து சாப்பாடு சாப்பிட்டுட்டு படுங்க" என்றார்.

நம்ம ஆளுக்கு நல்ல பசிதான். ஆனால் ஆசாரம் தடுத்தது. கடைசியில் வயிறுதான் ஜெயித்துசு. நம்ம ஆளு சாப்பிட சம்மதிக்கவும், அந்த ஆளு தன்னோட மனைவியை கூப்பிட்டு இவனுக்கு சாப்பாடு போட சொன்னார்.

கைகால் சுத்தம் பண்ணிவிட்டு சாப்பிட உட்கார்ந்த நம்ம ஆளு "அம்மா எனக்கு இலையில் சாப்பிட்டுதான் பழக்கம். அதனாலே இலையில் பரிமாறனும்"னு
சொல்ல, கொஞ்சம் யோசித்த அந்த அம்மா "சரி",ன்னு சொல்லி ஒரு இலையை கொண்டு வந்து போட்டு சாப்பாடு பரிமாரினாங்க. சும்மா சொல்லக்கூடாது. சாப்பாடு அருமையா இருந்துச்சு. நம்ம ஆளு நல்லா திருப்தியா சாப்பிட்டான். சாப்பிட்டு முடிச்சு இலை எடுக்கும்போது அந்த அம்மா ஓடி வந்து "ஐய்யா, நான் எடுக்கிறேன்"னு சொல்லி ரொம்ப பயபத்திரமா எடுத்துட்டு போனாங்க.

இதை பார்த்த நம்ம ஆளு " தூர வீசி எறிய போற இலையை என்னத்துக்கு இவ்வளவு பத்திரமா எடுத்துட்டு போறீங்க"ன்னு கேட்க, அந்த அம்மா "இந்த ஊரில் வாழை இலை கிடைக்கிறது குதிரைக்கொம்புதான். என்னோட மாமனாரும் உங்களைபோல வாழை இலையில் சாப்பிடற ஆள். அவருக்காக ஒரேஒரு வாழை இலை வாங்கி வச்சிருக்கோம். அவர் சாப்பிட்டதும் அதை கழுவி பத்திரமா எடுத்து வச்சிருவோம்.நீங்க வந்து வாழை இலையில்தான் சாப்பிடுவேன்னு சொன்னதும் இலை இல்லைன்னு சொல்லவும் மனசு வரலே. உங்களை பட்டினியா போடவும் மனசு வரலே. அதான் என்னோட மாமனார் சாப்பிடுற இலையில் உங்களுக்கு சாப்பாடு போட்டுட்டு இப்போ பத்திரமா எடுத்து வைக்கிறேன்"னு சொல்லவும் இவனுக்கு சாப்பிட்ட சாப்பாடெல்லாம் தொண்டையிலே சிக்கிகிட்ட மாதிரி ஆகி போச்சு.
சரி. இந்த கருமத்தையும் காசியிலே போய் தொலைசிடுவோம்னு நினைச்சிகிட்டு படுத்து தூங்கினான். மறுநாள் எழும்பி நடக்க ஆரம்பித்தான். அன்றைக்கு பகலெல்லாம் நடந்துவிட்டு ராத்திரி ஒரு வீட்டு திண்ணையில் தங்கினான். அந்த வீட்டம்மா இவனை பார்த்ததும் "ஐயா சாப்பாடு சூடா இருக்கு. வந்து ஒரு வாய் சாப்பிட்டுட்டு படுங்க " என்றதும் நம்ம ஆள் முன்னெச்சரிக்கையா வாழை இலை வேண்டாம்னு சொல்லிட்டு, "தினமும் புழங்காத மண் பாத்திரம் இருந்தால் அதில் சாப்பாடு போடுங்க " என்றான்.
அந்த அம்மா ஒரு அறைக்குள் போய் ரொம்ப நேரம் தேடி துருவி ஒரு மண் பாத்திரத்தை கொண்டு வந்து அதில் இவனுக்கு சாப்பாடு வைத்தாள்.

திருப்தியா சாப்பிட்ட இவன் மண் பாத்திரத்தை கிணற்றடிக்கு கொண்டு போய் கழுவ ஆரம்பித்தான். கை தவறி கீழே விழுந்து மண் பாத்திரம் உடைஞ்சு போச்சுது . இதை பார்த்ததும் அந்த வீட்டில் இருந்த ஒரு கிழவி குய்யோ முறையோன்னு கத்த ஆரம்பிச்சிட்டுது .
"என் புருஷன் சாக கிடந்த கடைசி காலத்தில் இந்த பாத்திரத்தில்தான் அவர் கை கழுவி வாய் கொப்பளிப்பார். என்னோட கடைசி காலத்துக்கு இது உதவும்னு பத்திரமா வச்சிருந்தேன். அதை இந்த பாவி இப்படி போட்டு உடைசிட்டானே"ன்னு அலறுச்சுது .
நம்ம ஆளுக்கு ஒரு மாதிரி ஆயிட்டுது . இருந்தாலும் இருக்கவே இருக்கு காசி. அங்கே போய் இந்த கருமத்தையும் தொலைச்சிடுவோம்"ன்னு நினைச்சிகிட்டு படுத்தான்.

மறுநாள் எழும்பி நடக்க ஆரம்பிச்சான். அன்னிக்கு ராத்திரி ஒரு வீட்டு திண்ணையில் தங்கினான். அந்த வீட்டிலிருந்த பாட்டி இவனை சாப்பிட சொன்னாள்.
இவன் முன்னெச்சரிக்கையா "இலை, பாத்திரம் எதுவும் வேண்டாம். நான் கையை நீட்டறேன். நீங்க கரண்டியாலே எடுத்து போடுங்க"ன்னு சொன்னதும் அந்த பாட்டியும் அதுமாதிரி செய்ய, வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு திண்ணையில் வந்து உட்கார்ந்தான். அங்கிருந்த ஒரு மாடபிறையில் வெத்திலை பாக்கு இருந்துச்சுது . பாட்டி நமக்குதான் வச்சிருக்கு போலிருக்கு என்று நினைச்சு இவன் பாக்கை எடுத்து வாயில் போட்டு கடித்தான். இவன் கடிச்சதும் பாக்கு உடை படுற சத்தம் வீட்டு உள்ளே இருந்த பாட்டிக்கு கேட்டது. பாட்டி குடுகுடுன்னு ஓடி வந்து "என்ன"ன்னு விசாரித்தாள்.

"ஒன்னுமில்லே. இங்கிருந்த பாக்கை எடுத்து வாயில் போட்டு கடிச்சேன். அந்த சத்தம்தான்"ன்னு நம்ம ஆளு சொல்ல,

"பரவாயில்லை. உங்க பல்லு ரொம்பவும் பலமாத்தான் இருக்கு. நானும் இந்த பாக்கை பத்து நாளா வாயிலே போட்டு கடிக்க முடியாமே எடுத்து எடுத்து வச்சிடுதேன். நீங்க ஒரே கடியிலே கடிச்சு வச்சிங்கன்னா நீங்க பலசாலிதான்"ன்னு பாராட்டு பத்திரம் வாசிச்சா.
நம்ம ஆளு ரொம்பவும் நொந்து போயிட்டான்.

"போதும்டா சாமி காசிக்கு போன லட்சணம்"ன்னு முடிவு பண்ணிட்டு மறுநாள் தன்னோட ஊருக்கு திரும்ப ஆரம்பிச்சிட்டான். இதுதான் ஆசாரம் பார்த்தவன் காசிக்கு போன கதை "

😆😂🤣😂

Thursday, May 27, 2021

திருஞானசம்பந்தர் 🌺🙏🏽🙇🏽‍♂️ திருநாள்!!

வைகாசி - மூலம் (28/05/21)

திருஞானசம்பந்தர் திருநாள்!!

வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்
மதுமலர்நற் கொன்றையான் அடியலால் பேணாத
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்!!

🌺🙏🏽🙇🏽‍♂️

oOOo


சீர்காழி திரு தோணியப்பர் திருக்கோயிலில் உள்ள பெருமானின் விழா வடிவம்


சீர்காழியில் உள்ள பெருமான் பிறந்த இல்லம்


பெருமான் பிறந்த அறை


சீர்காழி திரு தோணியப்பர் திருக்கோயில்

பெருமான் மெய்யறிவு பெற்ற (ஞானப்பால் குடித்த) திருக்குளம் & முதல் பதிகம் பாடிய திருத்தலம்.

தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண்மதிசூடிக்
காடுடைய சுடலைப்பொடிபூசி என் உள்ளங்கவர்கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்தேத்த அருள்செய்த
பீடுடைய பிரமாபுரமேவிய பெம்மான் இவனன்றே!!


திருக்கோலக்கா திருத்தாளமுடையார் திருக்கோயில்

பெருமான் பொற்றாளம் பெற்ற திருத்தலம்.


திருநெல்வாயில் அரத்துறை திரு உச்சிநாதர் திருக்கோயில்

பெருமான் முத்துச்சிவிகை, மணிக்குடை & பொற்சின்னங்களைப் பெற்ற திருத்தலம்.


திருமறைக்காடு (வேதாரண்யம்) திருமறைக்காடர் திருக்கோயில் (விசுவாமித்திர மாமுனிவரின் 🌺🙏🏽🙇🏽‍♂️ சமாதித்தலம்)

அப்பர் பெருமான் 🌺🙏🏽🙇🏽‍♂️ பதிகம் பாடி மறைக்கதவை திறக்க, சம்பந்த பெருமான் பதிகம் பாடி திரும்பவும் மூடிய திருத்தலம்; கோளறு பதிகம் பாடிய திருத்தலம்.


கூடல் மாநகரம்

பெருமானின் பிறவிநோக்கம் ஈடேறிய திருத்தலம். இருள் சமயத்தினரை வென்று நம் மொழி, சமயம் & கலாச்சாரத்தைக் காத்த தலம். பெருமான் மட்டும் தோன்றாமல் போயிருந்தால்... நாம் பிறந்தமேனியர்களாக / மொட்டைகளாக கதியற்று என்றோ வடக்கத்தாருக்கு அடிமைகளாகியிருப்போம்!!

அன்னை தமிழைக் காப்பாற்றிய காரணத்தினால்தான் வடலூர் பெருமானும் 🌺🙏🏽🙇🏽‍♂️ திருவாசகத்தை தனது வழிகாட்டி நூலாகக் கொண்டாலும், தனது மானசீக மெய்யாசிரியராக சம்பந்த பெருமானையேக் கொண்டார்.


திருமயிலை கபாலீச்சுரம்

என்றோ பாம்பு தீண்டி இறந்து சாம்பலாகிப் போயிருந்த பூம்பாவை அம்மையாரை பதிகம் பாடி உயிர்ப்பித்த திருத்தலம்.

(ஆனால், அவர் பதிகம் பாடியது இன்றிருக்கும் திருத்தலத்தில் அல்ல. பரங்கி பொறுக்கி வாஸ்கோட காமா உடைத்தெறிந்த மூலவரைக் கொண்டுவந்து, இன்றிருக்கும் இடத்தில் வைத்துக் கட்டப்பட்டது தான் தற்போதைய திருக்கோயில். உண்மையான கபாலீச்சுரத்தின் (ஒரு மாமுனிவரின் சமாதியின்) மேல்தான் பரங்கியரின் தோமையர் பேராலயம் கட்டப்பட்டுள்ளது. உண்மையான தோமையர் பாரதத்திற்கு வரவேயில்லை என்பதும், அவரது சமாதி இத்தாலியில் உள்ளது என்பதும் உறுதியான பின்னரும் இன்னமும் காட்சிகள் மாறவில்லை!)


திருநல்லூர் பெருமணம் (ஆச்சாள்புரம்) பெருமணமுடையார் திருக்கோயில்

பெருமானுக்கு திருமணம் நடந்த திருத்தலம். திருமணம் முடிந்தவுடன், மனதை கொள்ளை கொள்ளும் "காதலாகி கசிந்து..." பதிகத்தை அருளியவாறு, தனது மனைவி சொக்கியார், நாயன்மார்கள் திருநீலநக்கர், திருநீலகண்டர், முருகனார் ஆகியோருடன் மற்றும் வினைப்பயன் முடிந்திருந்த சிவனடியார்கள் சிலரோடு பெருமான் சிவசோதியுள் கலந்த திருத்தலம்.

🌺🌺🌺🙏🏽🙏🏽🙏🏽🙇🏽‍♂️🙇🏽‍♂️🙇🏽‍♂️


பெருமானின் மணக்கோலம்

காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்நெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயவே!!

🌺🙏🏽🙇🏽‍♂️


பெருமானுக்கு உமையன்னை அமுதூட்டும் ஓவியம்

பரந்தெழுந்த சமண்முதலாம் பரசமய இருள்நீங்கச்
சிரந்தழுவு சமயநெறித் திருநீற்றின் ஒளிவிளங்க
அரந்தைகெட புகலியர்கோன் அமுதுசெயத் திருமுலைப்பால்
சுரந்தளித்த சிவகாம சுந்தரிபூங் கழல்போற்றி

-- உமாபதி சிவாச்சாரியார் 🌺🙏🏽🙇🏽‍♂️

சிவாச்சாரியார் அருளிச்செய்த இந்த ஒரு பாடல் போதும் பெருமானின் அருமை பெருமைகளை உணர!

இது உமையன்னையின் துதி பாடலாகும். ஆனால், அன்னைக்கு 1.25 அடி தான்! பிள்ளைக்குத்தான் 2.75 அடி!!

வடக்கிலிருந்து வந்த மதங்களினால் ஏற்பட்ட இருளைப் (அறியாமை, மடமை) போக்கவும், பேருண்மைகளைக் (திருநீறு) காக்கவும், வடக்கத்தாரால் ஏற்பட்ட துன்பங்களை (அரந்தை) நீக்கவும் பிறவியெடுத்த காழியூர் பிள்ளை பசியாறிட திருமுலைப்பால் அளித்ததினால்தான் அன்னை போற்றுதலுக்கு உரியவராகிறாராம்!! ☺️

oOOo

பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

💮🌻🏵️🌸🌼

Monday, May 24, 2021

ஒண்டர் வுமன் 1984, ப்ளேட் ரன்னர் 2049 & ஃபோர்ட் x ஃபெர்ராரி

கடந்த சில ஆண்டுகளில் வெளிவந்த 3 ஹாலிவுட் படங்களில் இடம்பெற்றுள்ள உயர்தரமான உரையாடல் பகுதிகளிலிருந்து சிற்சில பகுதிகளை இந்த இடுகையில் பார்ப்போம்.

(நம் செய்தி ஊடகங்கள் செய்வது போல், கூகுள் மொழிபெயர்ப்பானை பயன்படுத்தாமல், நேரடியாக மொழிபெயர்த்துள்ளேன். ஆகையால், சிற்சில வேறுபாடுகளைக் காணலாம்.)

oOOo


2020ஆம் ஆண்டு வெளிவந்த "ஒண்டர் வுமன் 1984 (Wonder Woman 1984)" என்ற படத்தின் இறுதிக்காட்சிகளில், கொடியவன் (வில்லன்) வழியாக உலக மக்களிடம் கதாநாயகி பேசும் உரையாடலின் ஒரு பகுதி:

நாம் வாழும் இவ்வுலகம், அது ஏற்கனவே உள்ளபடி, அழகானதாகும். ஆனால், இவ்வுலகில் உள்ள யாவற்றையும் உங்களால் துய்க்கமுடியாது. உங்களால் துய்க்க முடிந்ததெல்லாம் உண்மையை மட்டும்தான். அந்த துய்ப்பு போதும். உண்மை தான் உண்மையில் சுகமானதாகும்.

(ஆங்கில மூலம்: This world was a beautiful place just as it was, and you cannot have it all. You can only have the truth. And the truth is enough. The truth is beautiful.)

இதில் "உண்மை" என்ற சொல் குறிப்பது உள்ளபொருளை! "உங்களால் துய்க்க முடிந்ததெல்லாம் உண்மையை மட்டும்தான்" என்ற வரி குறிப்பது நனவு, கனவு நிலைகளை நாம் துய்க்கும் விதத்தை!! ("[உலக] விசயங்களைப் பார்க்கும் அஞ்ஞானி கூட ஆன்மாவையே பார்க்கிறான்" என்பது பகவான் திரு ரமண மாமுனிவரது 🌺🙏🏽🙇🏽‍♂️ வாக்கு. அதாவது, எப்போதும் எல்லோரும் துய்ப்பது தங்களையே - உள்ளபொருளையே - உண்மையையே!)

oOOo


2017ஆம் ஆண்டு வெளிவந்த "ப்ளேட் ரன்னர் 2049 (Blade Runner 2049)" என்ற படத்தில் ஒரு காட்சியில், அப்போது "தயாரிக்கப்பட்டு" வெளிவந்து விழுந்து, எழுந்து நின்று, சற்று பயத்துடனும், நடுக்கத்துடனும் நின்று கொண்டிருக்கும் ஒரு "மனிதப்பிரதியியைக்" (Replicant) கருத்தில் கொண்டு, அதன் முதலாளி நியாண்டர் வாலஸ் பேசும் உரையாடலின் ஒரு பகுதி:

பிறந்து கண்விழித்தவுடன் தோன்றும் முதல் உணர்வு: உடலைப் பற்றிய பயம்! சிறு பூச்சி முதல் மனிதன் வரை, தன்னைப் பற்றி ஆராய்ந்து தெளிவதற்கு முன், தனக்கு வாய்த்திருக்கும் களிமண்ணைப் பாதுகாக்க முயற்சிப்பது ... விந்தை! வினோதம்!! வியப்பு!!! ... பிறந்தநாள் வாழ்த்துகள்!!

(ஆங்கில மூலம்: The first thought one tends to fear, to preserve the clay. It's fascinating. Before we even know what we are, we fear to lose it. Happy Birthday.)

மண், கோணிப்பை, புற்று என்று பலவாறு நமது அருளாளர்களால் "பூசை" செய்யப்பட்ட நமதுடலை, இந்த கதாசிரியர்கள் "களிமண்" என்று அழைத்திருக்கிறார்கள். "காட்சிகள் யாவும் பொய். காண்பவனே மெய்." என்று பகவானும், ஏனைய மெய்யறிவாளர்களும் திரும்ப திரும்ப வலுயுறுத்திய கருத்துத்தான் "தன்னைப் பற்றி ஆராய்ந்து..." என்ற சொற்றொடர் குறிக்கிறது.

oOOo


2019ஆம் ஆண்டு வெளிவந்த "ஃபோர்ட் x ஃபெர்ராரி (Ford vs Ferrari)" என்ற படத்தின் இறுதியில் கென் மிலெஸ் இறப்பதற்கு சற்றுமுன், திரைமறைவிலிருந்து கரோல் ஷெல்பை பேசும் உரையிலிருந்து ஒரு பகுதி:

சிற்றுந்து இயந்திரத்தின் வேகம் நிமிடத்திற்கு 7,000 சுற்றுகளைத் தாண்டியதும் அது நடக்கிறது... எல்லாம் மறையத் தொடங்குகிறது. சிற்றுந்து எடையற்றதாகிறது. மறைந்தும் போகிறது. இருப்பதெல்லாம், இடம் மற்றும் காலம் என்னும் இரு பரிமாணங்களினுடே பயணிக்கும் நமது உடல் மட்டும்தான். 7,000 ஆர்.பி.எம்.!! அப்போது தான் அந்த உணர்வு தோன்றுகிறது. உடலின் கீழிருந்து மேலாக பயணிக்கிறது. உடலும் மறைந்துபோகிறது. இப்போது எழும் கேள்வி: நாம் யார்?

(ஆங்கில மூலம்: There's a point at 7,000 RPM... where everything fades. The machine becomes weightless. Just disappears. And all that's left is a body moving through space and time. 7,000 RPM. That's where you meet it. You feel it coming. It creeps up on you, close in your ear. Asks you a question. The only question that matters. Who are you?)

(இந்த மொழிபெயர்ப்பில் நிறைய மாற்றங்களை செய்துள்ளேன். "மூலத்திற்கு ஏற்றாற்போல" என்பதை விட அது உணர்த்தும் "கருத்திற்கு ஏற்றாற்போல்" என்ற வகையில் மொழிபெயர்த்துள்ளேன்.)

நாம் என்றுமே உள்ளபொருள் தான். ஆனால், இதை நாம் உணர்வதில்லை. காரணம் - காணும் காட்சிகளின் தரம்! அன்னை மாயையின் திறம்!! "காண்பவனே மெய்" என்பதை நாம் உணர ஒவ்வொரு மெய்யறிவாளரும் ஒவ்வொரு வழியை சுட்டிக்காட்டினர்:

🌷 பகவான் காட்டிய வழிகள்: நான் யார்? (நமது தன்மையுணர்வின் மீது கவனத்தை வைத்தல்), நிறைமாதமாக இருக்கும் பேரரசி நடைபயில்வது போல அண்ணாமலையாரை வலம் வருதல் (ஒரு சமயத்தில் உடல் மறத்துப்போகும். மீதமிருக்கும் தன்மையுணர்வை இறுகப் பற்றிக் கொள்ளவேண்டும்).

🌷 திரு நந்திதேவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ காட்டிய வழி: கங்கையில் மூழ்குவது (நீரின் குளிர்ச்சியால் உடலுணர்வு ஒரு சில கணங்கள் அற்றுப்போகும். அச்சமயம், மீதமிருக்கும் தன்மையுணர்வை இறுகப் பற்றிக் கொள்ளவேண்டும்.)

இந்த உத்திகளைப் போன்றொரு உத்திதான் வண்டியை வெகு வேகமாக ஓட்டுவதென்பது. ஆனால், ஆபத்தானது. பந்தய சிற்றுந்துகளைப் பற்றிய திரைப்படத்தில் மெய்யறிவு பற்றிய உரை இடம் பெறக் காரணம்: உடலுணர்வு அற்ற நிலையில் கென் மிலெஸ் இறந்ததால் அவர் மெய்யறிவு பெற்றிருப்பார்; பிறவி சுழற்சியிலிருந்து விடுபட்டிருப்பார் என்று அவரை உயர்த்திக் காட்டுவதற்காக!

oOOo

மேற்கண்ட 3 திரைப்படங்களின் உரைகளை 8 பேர் எழுதியுள்ளனர். ஒரு படத்தின் குழுவிற்கும் இன்னொரு படத்தின் குழுவிற்கும் தொடர்பில்லை. ஆனால், அனைவரும் ஆன்மிக அடிப்படைகளை சரியாக தெரிந்துகொண்டு உரை எழுதியுள்ளனர். ஆழ்ந்து ஆராய்ந்தோமானால், இவர்களது ஆன்ம அறிவிற்கு அடிப்படை நமது இந்து சமயம் அல்லது பௌத்த மதமாகத்தானிருக்கும். பெரும்பாலும், பகவான் தான் இருப்பர்!!

சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் கூட, வீட்டிலுள்ள அனைவரும் ஒரே பாத்திரத் தண்ணீரில் முகம் கழுவி, வாய் சுத்தம் செய்து கொண்ட "சுத்தமானவர்கள்", 500 ஆண்டுகளுக்கு முன்னர் கூட, நம்முடன் மீண்டும் தொடர்பு ஏற்படும் வரையில், "பூமி தட்டையானது", "பூமியைத் தான் கதிரவன் சுற்றி வருகிறது" என்று நம்பிக் கொண்டிருந்த "அறிவாளிகள்", சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்னர் கூட மரங்களும் உயிருள்ளவைதாம் என்பது கூட அறிந்திராத "தருக்க புத்தியுள்ளவர்கள்" இன்று உள்ளபொருளை உள்ளபடி உணர்ந்து, எல்லோருக்கும் புரியும்படி எளிமையான நடையில் உரையாடல் எழுதுமளவுக்கு உயர்ந்துள்ளனர்! 👍🏽

ஆனால், உலகிலுள்ள அனைத்து கலாச்சாரங்களுக்கும். மதங்களுக்கும், மொழிகளுக்கும், உணவு & மருத்துவ முறைகளுக்கும் முன்னோடியான நாம் ... 1960களில் கூட நன்னீர் ஆறாக இருந்த கூவத்தை சாக்கடையாக்கி பகுத்தறிவின் உச்சம் கண்டுள்ளோம்! சமூக நீதி காத்துள்ளோம்!! 😔🤬

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Friday, May 14, 2021

நந்தி எனும் சிவன்காளை என்பது நமது மனம்!!

நம் முன்னோர் வடித்த மிகச்சிறப்பான வடிவங்களில் ஒன்று. இவ்வுலகில் நாம் எப்படி வாழ வேண்டுமென்பதை உணர்த்துவது. அன்றைய பெருந்தொழிலான உழவை அடிப்படையாகக் கொண்டது.

காளையின் தலைவன் அதன் முதலாளி. அவன் இட்ட பணிகளை பலன் எதிர்பார்க்காமல் செவ்வனே செய்யும். விளைந்த நெல்லை தலைவன் எடுத்துக் கொள்ள, அவன் கழித்து விட்டுச்சென்ற தட்டையை உண்டு உயிர் வாழும். காளையின் கழிவுகளால் நிலம் மேம்படும். எந்த வேலையில் ஈடுபட்டிருந்தாலும், தலைவன் மீது கவனம் வைத்திருக்கும்.

இவ்வாறே, நாமும் இவ்வுலகில் வாழவேண்டும். இறைவன் நம் தலைவன். பிரதிபலன் எதிர்பார்க்காமல், வாழ்வை சேவையாகக் கருதி வாழவேண்டும். நமது கழிவுகளால் உலகம் மேம்படவேண்டும் (#பகவான் திரு #ரமண மாமுனிவரின் 🌺🙏🏽🙇🏽‍♂️ கழிவு: நான் யார்?). எந்த வேலையில் ஈடுபட்டிருந்தாலும், நமது தன்மையுணர்வின் மீது கவனம் இருக்கவேண்டும். ("ஒருவன் உழைக்க வேண்டியிருக்கும் வரையில் தன்னையறியும் முயற்சியையும் கைவிடக்கூடாது" என்பது பகவானது வாக்கு.)

oOOo

8ம் நூற்றாண்டில், பௌத்தத்திலிருந்து தோன்றிய வைணவத்திலுள்ள பசுமாட்டுச் சடங்கிற்கும் சைவத்தின் சிவன்காளைதான் அடிப்படை!

நமது பெரியவர்கள், காளையை இறைவன் முன் அமரவைத்து உழவிற்கு பெருமை சேர்த்தனர் என்பதால் வைணவர்கள், திருப்பள்ளியெழுச்சி சடங்கின் போது, பெருமாளின் முன் பசுமாட்டை திருப்பி நிற்க வைத்து உழவிற்கு பெருமை சேர்த்தனர் (சைவத்தில் உள்ளவை யாவும் வைணவத்தில் இன்னும் சிறப்பாக, பெரிதாக இடம் பெற்றிருக்கவேண்டுமே!! ☺️).

பசுவின் பின்புறத்தின் வழியாக சிறுநீரும், சாணமும் வெளியேறும். இவற்றை நிலத்தில் சேர்த்தால், நிலம் வளம் பெரும். வளமடைந்தால், விளைச்சல் பெருகும். விளைச்சல் பெருகினால் வருமானம் (செல்வம்) பெருகும். ஆக, வருமானம்=செல்வம்=லட்சுமி இருக்குமிடம் பசுவின் பின்புறம்!!

மற்ற உயிரிகளின் சாணத்தை விட, நம் நாட்டுப்பசுவின் சாணத்தில் பலமடங்கு நல்லது செய்யும் நுண்ணுயிரிகள் உள்ளன.

திருப்பள்ளியெழுச்சியின் போது, பெருமாளின் முன்புறம் பசுமாட்டை திருப்பி நிற்கவைப்பார்கள். இதற்கு, "பெருமாள் தனது மனைவியை பார்த்துக்கொண்டே எழுகிறார்" என்பார்கள். சிலர், பசுமாட்டைக் கண்டவுடன் அதன் பின்பகுதியைத் தொட்டு வணங்குவார்கள். இவ்விரண்டிற்கும் உட்பொருள் மேற்கண்ட விளக்கம் தான்.

இப்படிப்பட்ட சடங்கு மற்றும் செயல்களின் மூலம் நாட்டுப்பசுவினுடைய கழிவுகளின் மேன்மையைப் பற்றிய அறிவை பதிவு செய்து காப்பாற்றியிருக்கிறார்கள்!!

oOOo

🔹திருபுன்கூரில் "நந்தனாருக்காக விலகிய நந்தி" எனில், அவ்விடத்தில், உலக காட்சிகள் நீங்க பெற்று, நந்தனார் நாயனார் 🌺🙏🏽🙇🏽‍♂️ சமாதித் துய்ப்பு பெற்றுள்ளார் என்று பொருள். இதேதான் "பட்டீச்சுரத்திலுள்ள திருஞானசம்பந்த பெருமானுக்காக 🌺🙏🏽🙇🏽‍♂️ விலகிய நந்தி" என்பதன் பொருளும். அவ்விடத்தில் பிள்ளையார் சமாதித் துய்ப்பு பெற்றுள்ளார்.

🔹திருவல்லத்தில் (முதலாம் ராஜராஜ சோழரின் மாமனும், படைத்தளபதியுமான வந்தியத்தேவனின் ஊர்) கஞ்சனுடன் போராடிய நந்தி: கஞ்சன் என்பது உலகக்காட்சி. கஞ்சனை வெல்வது என்பது உலகக் காட்சிகளின் பொய்த்தன்மையை உணர்வதாகும்!!

இங்குள்ள மூலவருக்கு முன்னுள்ள பலிபீடம் போன்ற அமைப்பின் கீழே தான் சனத்குமார மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ சமாதியடைந்துள்ளார் என்பது தொன்நம்பிக்கை.

🔹நந்தா - முடிவில்லாதது. உள்ளபொருள்.
நந்தி - முடிவுள்ளது. மனம்.

oOOo

எனது நண்பர் ஒருவர், நம் திருத்தலங்களில் மூலவர் முன் அமர்ந்திருக்கும் சிவன்காளைகளைப் பற்றிய ஒரு நீண்ட இடுகையை அனுப்பியிருந்தார். அவருக்கு நான் அனுப்பிய கருத்துகளின் தொகுப்பே இந்த இடுகையாகும். நன்றி. 🙏🏽

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Saturday, May 8, 2021

திரு அண்ணாமலையாரும் தோகை விரித்தாடும் மயிலும்!

இது ஒரு அருமையான படம்!! 👌🏽

படமும் அழகு! அது உணர்த்தும் தத்துவமும் அழகு!!

🌷 நாம் காணும் உலகம், திரையில் காணும் காட்சிகளைப் போன்றது. திரை அசைவதில்லை. காட்சிகளால் மாற்றம் அடைவதில்லை. இதை உணர்த்துவது போல், பின்புறம் அசையா அண்ணாமலையார்! முன்புறம் அசைந்தாடும் மயில்!!

🌷 இன்னொரு வகையில், எத்தனை பிறவிகள் எடுத்தாலும், ஆன்மா மாறுவதில்லை; அழிவதில்லை. பிறவிகளே (உடல்களே) மாறுகின்றன; அழிகின்றன. இந்த பேருண்மையை, மயிலை அணைத்தபடி இருக்கும் முருகப்பெருமானின் திருவுருவம் உணர்த்தும். முருகப்பெருமான் உள்ளபொருளைக் குறிக்கிறார். அவரது வேல் மெய்யறிவைக் குறிக்கும். அவர் அணைத்திருக்கும் மயிலின் தோகையிலுள்ள கண்கள் பிறவிகளைக் குறிக்கும். இது போன்று, அண்ணாமலையார் அழியாத, மாறாத உள்ளபொருளையும், முன்னர் நிற்கும் மயிலின் தோகையிலுள்ள கண்கள் பிறவிகளையும் குறிக்கும்.

🌷 இன்னுமொரு வகையில், எத்தனையோ கோடி உயிரிகள் உலகில் வாழ்வது போல் தோன்றினாலும், அனைத்துள்ளும் இருப்பது ஓர் ஆன்மாதான். ஆன்மாவை முருகப்பெருமானும் (இங்கு அண்ணாமலையாரும்), பிறவிகளை மயிலின் தோகையிலுள்ள கண்களும் குறிக்கின்றன.

🌷 இறுதியாக, திரை-காட்சிகள் உவமைக்கு திரும்புவோம். வைணவத்தின் திரு சக்கிரத்தாழ்வார் திருவுருவம் உணர்த்துவதும் இதுவே. முன்புறமுள்ள சக்கிரத்தாழ்வார் இயங்கும் உலகிற்கு (காட்சிகளுக்கு) சமம். பின்புறமுள்ள வடக்கிருக்கும் சிங்கப்பெருமாள் திரைக்கு சமம்.

(மதுரையம்பதியில் கால்மாறி ஆடிய கூத்தப்பெருமானின் திருவுருவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டவர் சக்கிரத்தாழ்வார். பெருமானின் வலது காலும், ஆழ்வாரின் பாதங்களும் குறிப்பது இயங்கும் உலகத்தை!)

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮