Tuesday, January 17, 2023

"படம்பக்கப் பெருமான்" & "கண்கூடு" - சிறுவிளக்கம்


மிக மிக பழமையான திருவிடமான திருவொற்றியூரில் (சென்னை) குடிகொண்டிருக்கும் பெருமானின் 🌺🙏🏽🙇🏽‍♂️ பெயர்களிலொன்று "படம்பக்கப் பெருமான்" ஆகும். இந்த அருமையான தமிழ் பெயரின் பொருள்: படத்தின் பக்கமிருக்கும் பெருமான்.

எந்த படத்தின் பக்கம்? வையகம் (உலகம்) எனும் திரைப்படத்தின் பக்கம்.

திரையரங்கில் நாம் ஒருபுறம் அமர்ந்திருக்க, எதிர்புறத்திலுள்ள திரையில் காட்சிகள் தெரிவதுபோன்று, அவருக்கு வையகம் தோன்றுகிறதென்பது பொருளாகும். இப்படி தோன்றும் காட்சிக்கு திருக்கயிலாயக் காட்சியென்று பெயர்.

இக்காட்சியில் காண்பான் (அப்பன்) உண்டு; காட்சியும் (அம்மை) உண்டு. ஆனால், காட்சியில் பொய்தன்மையில்லை (மனம் / மாயை). அதாவது, தோன்றும் காட்சி "காட்சிமட்டுமே & உண்மையல்ல" என்ற அறிவுமிருக்கும். தற்போது நமக்கு தோன்றும் வையகக் காட்சியை பொய்யென்றால் நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். காட்சியின் தன்மை அப்படிப்பட்டதாகும். இதுவே, திருக்கயிலாயக் காட்சியின்போது, காட்சியை உண்மையென்றால் ஏற்றுக்கொள்ளமாட்டோம்! ஏன்? மீண்டும் மேற்கண்ட பதில்தான்: காட்சியின் தன்மை அப்படிப்பட்டதாகும்! 😊

திருக்கயிலாயக் காட்சிக்கு அன்னைத் தமிழில் ஓர் அருமையான பெயருண்டு: கண்கூடு!!

ஒன்று கண்கூடாகத் தெரிகிறது எனில் பொய்யின் கலப்பில்லாமல், உண்மை தெளிவாகப் புரிகிறதென்பது பொருளாகும். இப்பொருளை மேற்கண்ட திருக்கயிலாயக் காட்சியிலிருந்து எடுத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். எப்படியென்று பார்ப்போம்.

ஒரு தொலைநோக்கி வழியாக காண்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். ஒரு முனையிலிருந்து நாம் பார்த்துக்கொண்டிருப்போம். இன்னொரு முனையில் காட்சி தெரியும். இடையிலுள்ள தொலைநோக்கியின் உட்புறப் பகுதிகளும் தெரியும். இதே போன்றொரு அமைப்பு திருக்கயிலாயக் காட்சியின்போது தெரியும். ஒருபுறம் காணும் நாம், இன்னொருபுறம் காட்சி, இடையில் நம் கண்கள் அமைந்திருக்கும் மண்டையோட்டின் உட்பகுதி (கண்கூடு) தெரியும். இப்போது, தெள்ளத்தெளிவாக,

- நாம் உடலல்ல என்பதை உணர்வோம்
- நாம் என்றுமே நாமாகத்தான் இருந்துள்ளோம் என்பதை உணர்வோம்
- நாம் தேடியது நம்மையே என்பதை உணர்வோம்
- தோன்றும் காட்சி காட்சிமாத்திரமே - உண்மையல்ல - என்பதையும் உணர்வோம்

மொத்தத்தில், உண்மை உண்மையாகவும், பொய் பொய்யாகவும் தோன்றும். மாற்றி கருதுவதற்கு வாய்ப்பேயில்லை. இதற்கு கண்கள் அமைந்திருக்கும் கூடுகளே ஏதுவாவதால், பொய்யின் கலப்பின்றி உண்மை தெள்ளத்தெளிவாக புலப்படும் சூழ்நிலைக்கு "கண்கூடு" என்று பெயரிட்டுள்ளனர் நம் முன்னோர். 

முதன்முதலில் இந்த காட்சியைக் கண்டு மற்றவர்களுக்கு தெரியப்படுத்தியவர் ஒரு மெய்யறிவாளராகத்தான் (சிவன்) இருக்கமுடியும். அதை ஆராய்ந்து உறுதிசெய்த மற்றவர்களும் மெய்யறிவாளர்களாகவோ அல்லது உள்ளபொருளை பற்றிய அறிவுடைய ஆன்றோராகத்தான் இருக்கமுடியும். "கண்கூடு" என்ற சொல் மட்டுமல்ல; அன்னைத்தமிழின் மொத்த அடித்தளமும் இப்படித்தான் போடப்பட்டிருக்கிறது. இதனால்தான் முதல் சங்கத்தில் சிவபெருமான், முருகர், அகத்தியர் (எல்லோரும் மெய்யறிவாளர்களே) இடம்பெற்றிருந்தனர் என்று பதிவு செய்திருக்கிறார்கள்.

oOo

🌷 திருக்கயிலாயம் செல்லும் வழியிலுள்ள ஒரு குளத்தில் மூழ்கி, திருவையாற்றிலுள்ள உப்பங்கோட்டை பிள்ளை குளத்தில் (அப்பர் குட்டை) வெளிப்பட்டவுடன், திரு அப்பர் பெருமானுக்கு 🌺🙏🏽🙇🏽‍♂️ இறைவன் திருக்கயிலாயக் காட்சி கொடுத்தாரென்று படித்திருப்போம். அதாவது, மேற்கண்டவாறு வையகக் காட்சியை "கண்கூடாக" பார்த்திருக்கிறார் என்பது பொருளாகும்.

🌷 சில திருக்கோயில்களில், கருவறையினுள்ளே பின்புற சுவற்றில், (உடையவருக்கு பின்புறம்) அம்மையப்பர் திருவுருவை புடைப்பாகவோ அல்லது பாவையாகவோ (சிலையாகவோ) காணலாம். இதன் பொருள் யாதெனில், அக்கருவறையிலுள்ள உடையவரின் கீழே திருநீற்று நிலையிலிருக்கும் பெருமான், உடல் தாங்கியிருந்த காலத்தில் திருக்கயிலாயக் காட்சியை காணும் பேறு பெற்றவரென்பதாகும்.

🌷 சொக்கர் என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பெற்றவரும், பெரும் புகழ்பெற்றவருமான திரு சுந்தரானந்த பெருமானும் 🌺🙏🏽🙇🏽‍♂️ (மதுரையிலுள்ள திரு சுந்தரேசுவரர் எனும் உடையவரின் கீழே திருநீற்று நிலையிலிருப்பவர்) ஒரு படம்பக்கப் பெருமானாவார். தன் வாழ்நாளின் இறுதிவரை வையகக் காட்சியை "கண்கூடாக" காணும் பேறுபெற்றவராக இருந்திருக்கிறார்.

oOo

ஆழமான பொருள்கொண்டதும், சிந்திக்க எளிமையானதும், நம்மை செம்மையாக்கக்கூடியதுமான "படம்பக்கப் பெருமான்" போன்ற தமிழ் திருப்பெயர்களை பயன்படுத்தி பயன்பெறுவோம். பன்னெடுங்காலமாக நம் முன்னோர்கள் பாடுபட்டுச் சேர்த்த விலைமதிப்பற்ற முத்துக்களைக் காப்போம்.

சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே 💪🏽

oOOo

என்றுமுள தென்தமிழ் வாழ்க 🌷🙏🏽

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

Friday, January 13, 2023

பொங்கலோ பொங்கல்!! 😍🥳



🔥 மனதிலுள்ள குப்பைகளை போக்கி (போகி),

🍚 நமது தன்மையுணர்வாய் எக்கணமும் விளங்கும் உள்ளபொருளைப் பற்றிய மெய்யறிவைப் பொங்கவிட்டு (பொங்கல்)

⛏️ வான்புகழ் வள்ளுவன் சுட்டிக்காட்டும் உழவனாக வாழ்ந்து (யாரிடமும் இரவாமலும், வந்து இரப்போர்க்கு இல்லையென்று சொல்லாமலும்)

🛕 வேண்டுதலும் வேண்டாமையும் இல்லா நிலைபேற்றினை (சிவம்) அடைந்து, வருவதை கண்டு களித்திருப்போம் (காணும் பொங்கல்)!!

அனைவருக்கும் எனது உளங்கனிந்த போகி, பொங்கல் & உழவர் திருநாள் நல்வாழ்த்துகள்!! 🌞🌧️🐂🌾🪔🙏🏽

Wednesday, January 4, 2023

வைகுண்ட ஏகாதசி - சில சிந்தனைகள்



🌷 வைகுண்ட ஏகாதசி - திரு நம்மாழ்வார் 🌺🙏🏽🙇🏽‍♂️ உடலிலிருந்து விடுதலை (முக்தி) பெற்ற நாள்.

🌷 மண்டையோட்டின் உச்சிப்பகுதி திறந்து, அதன் வழியாக நம்மாழ்வாரின் உயிர் வெளியேறியதாக தொன்நம்பிக்கை. இதையுணர்த்தவே திருவரங்கத்து நம்பெருமாள் (விழாத்திருமேனி) பரமபதவாயில் வழியாக கொண்டுவரப்படுகிறார். கருவறை தலைக்கு சமம். பரமபதவாயில் தலையுச்சிக்கு சமம்.

🌷 நம்மாழ்வாரின் விடுதலை நிகழ்வு வெகு சிறப்பாக திருவரங்கத்தில் கொண்டாடப்பட்டாலும், அவர் திருநீற்று நிலையை அடைந்தது ஆழ்வார் திருநகரி எனப்படும் திருக்குருகூரில்தான். எனில், திருவரங்கத்தில் (உடையவருக்கு கீழே) திருநீற்று நிலையிலிருப்பது... 18 சித்தர்களில் ஒருவரான சட்டைமுனி சித்தராவார் 🌺🙏🏽🙇🏽‍♂️.

🌷 முதன்முதலில் திருவரங்கத்தில் நம்மாழ்வாருக்கு விழா எடுத்தது திருமங்கையாழ்வாராவார். ஒரு நாள் விழாவாக தொடங்கப்பட்டது, பின்னர் வந்தவர்களால் 10 நாட்கள், 20 நாட்கள் என விரிவு படுத்தப்பட்டு தற்போதைய நிலையை பிற்காலத்தில் அடைந்தது.

oOo

வைகுண்ட ஏகாதசி என்றதும் "பரமபதவாயில் வழியாக வெளியேறுவது" என்ற படி நம் நினைவுக்கு வரும்படி விழாவை வடிவமைத்திருக்கிறார்கள். இதை இரு வகையாக அணுகலாம்.

🔸 முதலில், நம்மாழ்வாரை வைத்து அணுகுவோம்:

விழாத்திருமேனி பரமபதவாயில் கடக்கும்போது, மண்டையோட்டின் உச்சிப்பகுதி திறந்து, அதன் வழியாக நம்மாழ்வார் வெளியேறினார் என்ற நிகழ்வு நம் நினைவுக்கு வரவேண்டும். நினைவு வருகிறதா?

நம்மாழ்வார் மெய்யறிவு பெற்ற / காட்டிய வழியைப் பற்றி சிந்திப்பது நல்லதா? அல்லது, அவர் வெளியேறிய வகையைப் பற்றி சிந்திப்பது நல்லதா? 

எந்த வகையில் அவர் வெளியேறியிருந்தால் என்ன? 

வேறு வகையில் அவர் வெளியேறியிருந்தால் நிலைபேற்றினை அடைந்திருக்கமாட்டாரா?

வெளியேறும் வகை அவர் கையிலாயிருந்தது? 

உடலைவிட்டு அவர் வெளியேறினாரா? அல்லது, அவரைவிட்டு உடல் விலகியதா?

🔸 அடுத்து, நம்மை வைத்து அணுகுவோம்:

வைகுண்ட ஏகாதசி என்றதும் நம் நினைவுக்கு வருவனவற்றில் ஒன்று, "பரமபதவாயில் வழியாக வெளியேறினால் வைகுண்டம் உறுதியாகக்கிட்டும்" என்ற நம்பிக்கையாகும். அதாவது, நம்மாழ்வாரைப்போன்று நமது மண்டையோட்டின் உச்சி திறந்து, அதன் வழியாக நாம் வெளியேறினால் நிலைபேறு கிட்டும் என்பது பொருளாகும். இது முற்றிலும் தவறான நம்பிக்கையாகும்.

பகவான் திரு இரமண மாமுனிவரின் 🌺🙏🏽🙇🏽‍♂️ வரலாற்றில் திரு கணபதி முனி என்றொரு ஆரியக்கவிஞர் இடம்பெறுகிறார். கடுமையாக வடக்கிருந்ததின் விளைவாக மண்டையோடு திறக்கப்பெற்றவர். ஆனால், பிறவி முடியும்போதும் பற்றுகள் மீதமிருந்ததால் அவருக்கு நிலைபேறு கிட்டவில்லை. இது பகவானே சொன்ன செய்தியாகும்.

ஆக, மண்டையோடு திறப்பதினால் பயனில்லை என்பது உறுதியாகிறது. 

oOo

"மண்டையோடு பிளந்து வெளியேறுவது" என்று வடிவமைத்ததைவிட, "உடலெனும் சிறையிலிருந்து வெளியேறுவது" என்று விழாவை வடிவமைத்திருந்தால் சிறப்பாக மட்டுமில்லாமல், பயனுள்ளதாகவும் அமைந்திருக்கும். ஏனெனில், நம்மை பற்றிய மெய்யறிவை பெறுவதென்பது ஒரு படியை கடப்பதற்கு சமமெனில், அதில் நிலைபெறுவதென்பது பத்து படிகளை கடப்பதற்கு சமமாகும்!!

பெருமாளின் திருவிறக்கக் கதைகள் யாவற்றிலும், எதிரியை அவர் தனித்து நின்றே எதிர்கொள்வார் - இரு கதைகளைத் தவிர: நரகாசுரன் & கம்சன். இருவரும் குறிப்பது... "நான் இவ்வுடல்" என்ற எண்ணத்தை! அவ்வளவு கடினமானது இந்த தப்பெண்ணத்தை விடுவதென்பது!

oOOo

யானே என்னை அறியகிலாதே
யானே என் தனதே என்றிருந்தேன்
யானே நீ என் உடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே

-- நம்மாழ்வார் 🌺🙏🏽🙇🏽‍♂️

(நம்மாழ்வாரின் இப்பாடலில் இரண்டன்மை (அத்துவைதம்) வெளிப்படுவதாக பகவான் அருளியிருக்கிறார்.)

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸