Monday, August 31, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #65 - பெருமானுக்கும் மேலான அன்னைத்தமிழ் & அவரது புலவர்கள்!!

பொருந்துதலைச் சங்கப் புலவர்தமைப் போலே
விரிந்தபுகழ்க் கூடலிலே மேவி - அரும்தமிழை
ஆய்ந்தமலை பார்மீதில் ஐந்துஎழுத்தன் ஆகிவந்து
வாய்ந்தமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #65

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

கடல்கொண்ட தென்மதுரையில் நடந்த முதல் தமிழ்சங்கத்தில் அன்னைத்தமிழை, தகுதியான புலவர்களோடு ஆராய்ந்த சிவபெருமானையும் 🌺🙏🏽, தனது மெய்யாசிரியரான திரு குகை நமச்சிவாயப் பெருமானையும் 🌺🙏🏽 போற்றுகிறார் ஆசிரியர்.

இங்கு சிவபெருமான் எனில் பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 போன்ற மெய்யறிவாளர் என்று பொருள்.

அந்த மெய்யறிவாளர் எப்படி நம் நிறைமொழியை ஆராய்ந்தாராம்? தமிழ் சங்கத்திலே அங்கம் வகித்த தகுதியான புலவர்களைப் போன்று ஆராய்ந்தாராம்!! உலகின் வேறெந்த கலாச்சாரத்திலும் இப்படியொரு நடைமுறை இருந்திருக்குமா என்று தெரியவில்லை. புலவர்களை இறைவனுக்கும் மேலானவர்களாக சித்தரிக்கும் உரிமையை கொடுத்துள்ள இனம் எவ்வளவு பண்பட்டதாக இருந்திருக்கும்! அவ்வாறு மேலானவர்களாக சித்தரிக்கப்படும் புலவர்கள் எவ்வளவு "திரு" உடையவர்களாக இருந்திருப்பர்!! தனது மொழியை எல்லாவற்றிற்கும் மேலானதாக ஒரு இனம் கருதுகிறது என்றால் அந்த மொழி எவ்வளவு மேன்மையானதாக இருக்கும்!!!

நம் அன்னைத்தமிழ் நிறைமொழி மட்டுமல்ல. உண்மையான இறைமொழி. அவரை முறையாகக் கற்றால் அவரே நிலைபேற்றினை நமக்கு கொடுத்துவிடுவார்!

அந்நிய இனத்தின் ஊடுறுவல், இருள் மதங்களின் படையெடுப்பு (சமண, பௌத்த மற்றும் பௌத்தத்திலிருந்து தோன்றியவைகளும் சேர்த்து), தகுதியற்றவர்களின் கையில் ஆட்சி, அதிகாரம் & அனைத்திலும் முன்னுரிமை, பகுத்தறிவு என்னும் பெரும் தீநுண்மி ... இத்தனைக்குப் பிறகும் நமது மொழியும், அடையாளங்களும் இன்னமும் பெயரளவிலாவது இருக்கிறதென்றால் அது நம் முன்னோர் செய்த நல்வினைகளும், விட்டுச்சென்ற உறுதியான கட்டமைப்பும் தான் காரணம். 🙏🏽🙏🏽🙏🏽

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Sunday, August 30, 2020

"பசுவின் பின்புறத்தில் மலர்மகள் வசிக்கிறார்" என்பதின் பொருள்...

"பசுவின் பின்புறத்தில் மலர்மகள் வசிக்கிறார்" என்பதின் பொருள்:

🔸பசுவின் பின்புறம் சாணம் வெளிவரும்
🔸 இந்த சாணத்தை மக்க வைத்து நிலத்திற்கு உரமாக இட்டால் விளைச்சல் பெருகும்
🔸 விளைச்சல் பெருகினால் வருமானம் - செல்வம் - பெருகும்
🔸 செல்வம் என்பது மலர்மகள்
🔸 பின்னே சென்றால்: மலர்மகள் <- செல்வம் <- விளைச்சல் <- சாண உரம் <- பசுமாடு

எனவே, பசுமாட்டின் பின் பகுதி மலர்மகள் வசிக்குமிடம் என்றார்கள்!!

oOOo

"மலர்மகள் இப்பிறவியில் செல்வவளமும், பிறவி முடிந்த பின் விடுதலையும் தருபவர்" என்பதின் பொருள்:

முதலில், மலர்மகளின் தோற்றத்தைப் பார்ப்போம். பாற்கடலைக் கடையும் போது இறுதியாக வெளிவந்தவர் மலர்மகள் என்று படித்திருப்போம்.

🔸 பாற்கடல் - நமது உடல்
🔸 கடைதல் - கடும் வடக்கிருப்பு

வடக்கிருப்பின் தொடக்கத்தில் பல குப்பைகள் நம்முள்ளிருந்து வெளிவரும். சில புதிய ஆற்றல்கள் கூட நமக்கு கிடைக்கும். இவையனைத்தும் மூத்தவள் - மூத்தாயி - மூதேவி (ஆரியத்தில், ஜேஷ்டாதேவி) எனப்படும். இவற்றை ஒதுக்கி, மேலும் தொடர்ந்தால், இறுதியில் மெய்யறிவு கிடைக்கும். இம்மெய்யறிவே இளையவள் - சின்னாயி - நப்பின்னை (பின்னே வந்தவர் - நல்ல பின்னை) - மலர்மகள் (ஆரியத்தில், ஸ்ரீதேவி) - செல்வமகள் (ஆரியத்தில், லட்சுமி) எனப்படும்.

இந்த மெய்யறிவை விடாப்பிடியாக இறுகப் பற்றிக்கொண்டால் நிலைபேற்றில் முடியும். இடையில் படைப்பின் பல புதிர்கள் திறக்கப்படலாம். இவற்றைத்தான் "இப்பிறவியில் செல்வவளமும்" என்ற சொற்றொடர் குறிக்கிறது.

மெய்யறிவில் நிலைபெற்ற ஒருவர் பிறவிகளைப் பற்றி சிந்திக்கப்போவதில்லை. அவர் ஏற்கனவே விடுதலை அடைந்தவர் தான். இருந்தாலும், தற்போதைய பிறவி முடிந்த பின், இறுதித் தளையான உடலும் விலகுவதையே விடுதலை (ஆரியத்தில், மோட்சம்) என்றழைக்கின்றனர். இறப்பின் போது எல்லோருக்கும் தான் உடல் விலகுகிறது. மெய்யறிவில் நிலை பெறாதவர் அடுத்த பிறவியில் சிக்கிக் கொள்கிறார். நிலைபெற்றவர் விடுதலையடைகிறார். இதனால் தான் மெய்யறிவை (மலர்மகளை) "பிறவி முடிந்த பின் விடுதலையும் தருபவர்" என்று போற்றுகின்றனர்.

இறுதியாக, மெய்யறிவு என்றால் என்ன? நம்மைப் பற்றிய அறிவு. நாமே உள்ளபொருள் என்ற அறிவு. இதுவரை நாம் தேடியது நம்மையே என்ற அறிவு.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Saturday, August 29, 2020

கங்கை = வடக்கின் காவிரி, திரிவேணி சங்கமம் = உத்திரபிரதேசத்தின் கூடுதுறை!!

"பாரதத்தின் மான்செஸ்டர்", "பாரதத்தின் டெட்ராய்ட்" என்று அழைப்பதெல்லாம் எவ்வாறு அடிமைத்தனமாகுமோ அவ்வாறே "#தட்சிண #கங்கை", "#தமிழகத்தின் #திரிவேணி" என்று அழைப்பதுமாகும்.

💥 "உலகின் எந்த நதிக்கரையில் அதிக மாமுனிவா்கள் சமாதி கொண்டுள்ளனர்?" என்ற கேள்வியெழுந்தால் நமது #காவிரி அன்னையே முதலிடம் பெறுவார்! எண்ணற்ற மாமுனிவர்கள் அவரது பயண வழியில், அவரது கரைகளில் சமாதி கொண்டுள்ளனர். இந்த புனிதக் கணக்கின் அடிப்படையில் பார்த்தால் கங்கையன்னை தான் "வடக்கின் காவிரி" என்றழைக்கப்படவேண்டும்.

💥 #பவானி (#திருநணா) கூடுதுறையில் திரு அளகேசப் பெருமான் (திரு #சங்கமேஸ்வரர்) 🌺🙏🏽 குடி கொண்டுள்ளார். திருஞானசம்பந்தப் பெருமானின் 🌺🙏🏽 தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம். (#அளகேசர் எனும் சிவ அடையாளத்தின் கீழ் சமாதி கொண்டுள்ள மாமுனிவர் யாரென்று தெரியாவிட்டாலும், இத்திருத்தலம் ஒரு மாமுனிவரின் சமாதி என்பதில் எந்த ஐயமும் இல்லை) இது போன்று எந்த மாமுனிவரும் #பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் குடி கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. எனவே, மீண்டும் புனிதக் கணக்கின் படி, திரிவேணி சங்கமம் தான் "உத்திரபிரதேசத்தின் கூடுதுறை" என்றழைக்கப்படவேண்டும்!

💥 கங்கையன்னை பனிப்பாறையிலிருந்து வருகிறார். காவிரியன்னையோ ஊற்றிலிருந்து வெளிவருகிறார். எப்போதுமே ஊற்று நீருக்கு தான் மதிப்பு அதிகம்!

oOOo

கங்கையன்னையை மட்டம் தட்டுவது எனது நோக்கமல்ல. "நமது அடையாளங்கள் யாருக்கும் எதற்கும் இரண்டாவதல்ல" என்று உரக்கச் சொல்வதே எனது நோக்கம். 🙏🏽

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #64

கூனல் சிறுபிறையைக் கோள்அரவுக்கு அஞ்சாமல்
வான்அப்பு அணிசடைமேல் வைத்தமலை - ஞானச்
சரதமலை ஆனந்தத் தாண்டவத்துக்கு ஏற்ற
வரதமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #64

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

🔸கூனல் சிறுபிறையைக் ... வைத்தமலை

சிவபெருமானின் திருவுருவைப் பற்றி பாடுகிறார் ஆசிரியர். பெருமான் என்பது நிலைபேற்றை அடைந்த ஒரு மெய்யறிவாளருக்கு சமம். எனில், அவரது திருவுருவத்தில் இருக்கும் பொருள்கள் மெய்யறிவாளரின் உள்ளநிலை மற்றும் அவரிடம் காணப்படும் பண்புகள், இயல்புகள் & தன்மைகளைக் குறிப்பவையாகும்.

🔸ஞானச் சரதமலை - மெய்யறிவில் உறுதியாய் உள்ள மலை அல்லது மெய்யறிவை உடலாகக் கொண்ட மலை

🔸ஆனந்தத் தாண்டவத்துக்கு ஏற்ற வரதமலை

ஆனந்த - ஆ+நந்த - எல்லையில்லா / முடிவற்ற.

ஆனந்த தாண்டவம் - எல்லையில்லா / மரணமில்லாப் பெருவாழ்வு - நிலைபேறு.

வடக்கிருந்து நிலைபேற்றினை அடைவதற்கு ஏற்ற இடம் திருவண்ணாமலை என்கிறார் ஆசிரியர்!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

🌸🌼🌻🏵️💮

Friday, August 28, 2020

"பசுவுக்கு அகத்திக்கீரை, பழம் கொடுங்கள்" என்பதின் பொருள்

🐂 பசு - மெய்யறிவு பெறாதவர்கள். உலக வாழ்க்கையில் சிக்கிக்கொண்டிருக்கும் மனிதர்கள்.

🌿 அகத்தி - அகம் + தீ - மெய்யறிவு. பல பிறவிகளாக, பன்நெடுங்காலமாக உடலையும், உலகையும் உண்மை என்று கருதிக் கொண்டிருப்பவர்களை மாற்றுவது எளிதல்ல. அவர்களுக்கு சிறிது சிறிதாக, ஆனால், தொடர்ந்து மெய்யறிவைப் பற்றி எடுத்துக்கூறவேண்டும். இதனால் தான், "தினம் ஒரு கட்டு வாங்கிக் குடுங்க" என்றார்கள். "ஒரு செமை" என்று சொல்லவில்லை.

🥭 பழம் - நாம் கேள்விப்படுவதை எல்லாம், நமக்கு தோன்றுவதையெல்லாம் மற்றவர்களிடம் தெரிவிக்கும் முன், அவற்றைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டு, சோதித்துப் பார்த்துவிட்டு, துய்த்தும் பார்த்து விட்டு மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

"பசுவுக்கு அகத்திக்கீரை..." என்ற சொற்றொடரின் உட்பொருளைப் புரிந்து கொள்ளாமல், அகத்திக்கீரை சாகுபடியை வளர்த்துவிட்டார்கள்! பல மாடுகளை, தினமும் அதிகாலையில், கீரை கொடுக்கப்படும் இடங்களில் வடக்கிருக்க வைத்துவிட்டார்கள்!! 😁

oOOo

Thursday, August 27, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #63 - அடி முடி காணா அண்ணாமலையார் - சிறு விளக்கம்

அண்டமுழு தும்பறந்தே அன்னஉரு வாய்த்தேடி
மண்டலம்எ லாம்கோல மாய்த்தேடிப் - புண்டரிகன்
சீர்க்கமலை கோன்அறியாத் தெய்வச் சிவஞான
மார்க்கமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #63

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

மீண்டும் ஒரு முறை திருவண்ணாமலை தலவரலாற்றில் வரும் "அடி முடி காணா அண்ணாமலையார்" படலத்தைப் பற்றி பாடுகிறார் ஆசிரியர். (அன்னம் - நான்முகன், கோலம் - பன்றி - பெருமாள்)

"நான்முகனாலும் மாயோனாலும் இறைவனைக் காணமுடியவில்லை" எனும் உவமையைக் கொண்டு 2 பொருள்களைப் பெறுவர்:

1. கல்வியாலும் (குறிப்பாக, மெக்காலே கல்வியால் 😊) செல்வத்தாலும் மெய்யறிவைப் பெறமுடியாது

2. புத்தியாலும் ஆணவத்தாலும் இறைவனை உணரமுடியாது

உவமையில் வரும் மேல் - கீழ் என்பதை வெளி - உள் என்று மாற்றிக்கொண்டால் இன்னொரு பொருளும் கிடைக்கும்.

பூமி என்பது மண். மண் என்பது நம் உடல். "பெருமாள் பூமிக்குள் சென்று தேடினார்" என்பது நாம் நமக்குள் இறைவனைத் தேடுவதற்கு சமம். நான்முகன், பெருமாள் சென்ற திசைக்கு எதிரில் சென்றிருப்பார். எனில், உடலுக்கு வெளிப்புறம் என்று பொருள். இது, நாம் உலகிற்குள் இறைவனைத் தேடுவதற்கு சமம். இருவரும் தோற்றார்கள். அதாவது, இறைவன் உடலினுள்ளும் இல்லை. வெளியேயும் இல்லை. பிறகு, எவ்வாறு இறைவனை அடைவது?

உவமையில் மீதமிருக்கும் கதாபாத்திரமான சிவபெருமான் வழிகாட்டுகிறார். தொடக்கமும் முடிவும் இல்லாத ஒரு நெருப்புத் தூணாக நின்றிருப்பார். இறைவனை அடைய நாம் செய்யவேண்டியது தேடுவதல்ல. இருத்தல்!! நாமாக - தன்மையுணர்வாக - இருக்கவேண்டும். "தானாய் இருத்தலே தன்னையறிதலாம்" என்பது பகவான் திரு ரமணரின் 🌺🙏🏽 வாக்கு.

உவமை உணர்த்தும் மூன்றாவது பொருள்: இறைவன் உடலினுள்ளும் இல்லை. வெளியேயும் இல்லை. இறைநிலையை அடைய நாம் செய்ய வேண்டியதெல்லாம் நாமாக இருத்தலே!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

🌸🌼🌻🏵️💮

Sunday, August 23, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #62 - பிட்டுக்கு மண் சுமந்த படலம், கூத்தப்பெருமான் - சிறு விளக்கம்

பண்அடுத்த கூடல் பழம்பதியில் பிட்டமுதை
உண்ணடுத்து வைகை உடையாமல் - மண்எடுத்துப்
போடுமலை சந்ததமும் பொன்னம் பலத்தில்நடம்
ஆடுமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #62

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

சிவப்பரம்பொருள், பழமையான மதுரை மாநகரில் சொக்கநாதப் பெருமானாக பிட்டுக்கு மண் சுமந்த படலத்தையும், தில்லையில் கூத்தப்பெருமானாக திருநடனம் புரிவதையும் போற்றிப் பாடுகிறார் ஆசிரியர்.

🔸#பிட்டுக்கு #மண் #சுமந்த #படலம்

🔹பிட்டு - இவ்வுலகில் நமக்கு கிடைக்கும் அனைத்து துய்ப்புகள்

🔹சுமக்கும் மண் - நமது உடல். "மண்ணினாய விகாரமும் மண்ணே" என்பது கண்ணபிரானின் 🌺🙏🏽 வாக்கு. உடல் எப்படி உருவானது? உணவிலிருந்து. உணவு எங்கிருந்து கிடைத்தது? தாவரங்களிடமிருந்து (அசைவம் எனில் தாவரம் -> விலங்கு -> மனித உடல்). தாவரம் எங்கிருந்து உருவானது? மண்ணிலிருந்து. ஆக, உடல் = மண்.

மண்ணை (உடலை) சுமந்து என்ன பெறுகிறோம்? வாழ்க்கை எனும் ஒரு சொல்லில் அடங்கும் பலவிதமான துய்ப்புகள். இந்த துய்ப்புகள் எனும் பிட்டுக்காக மண்ணைச் சுமக்கிறோம். எப்போது "இனி, பிட்டு வேண்டாம்" என முடிவெடுத்து அசைவற்று நிற்கிறோமோ (தன்மையுணர்வில் நிலை பெறுகிறோமோ) அதன் பிறகு மண்ணைச் சுமக்க வேண்டியிருக்காது.

🔹பெருமானின் மீது பட்ட பிரம்படி அனைத்துயிர்களின் மீதும் படுவது - எல்லோருக்குள்ளும் இருப்பது ஓர் இறைவன் தான் என்பதைக் குறிக்கிறது. படைப்பு என்பது நீரில் தோன்றும் குமிழிகள் போன்றது. குமிழிகள் பலவாக இருந்தாலும், எல்லாம் நீர் தான்.

#பகவான் திரு #ரமணர் 🌺🙏🏽 அருளுகிறார்: ... பொருட்களை, அவற்றின் உருவங்களையும், பெயர்களையும் கொண்டு வேறுபடுத்தி அறியலாம். ஆனால், மனிதர்களைப் பொறுத்தவரையில், எல்லோரும் தங்களை ஒரே பெயரில் தான் அறிகிறார்கள். அப்பெயர்... "நான்"! யாரை வேண்டுமானாலும் கேட்கலாம். ஒவ்வொருவரும் தன்னை "நான்" என்றே உணர்கிறார். சிவபெருமானேயானாலும் அவரும் தன்னை "நான்" என்றே உணர்கிறார். ... (பகவத் வசனாம்ருதம் - #582)

🔸#கூத்தப்பெருமான் திருநடனம் புரியும் தில்லை பொன்னம்பலம்

🔹பொன்னம்பலம் என்பது திருமூலர் 🌺🙏🏽 மற்றும் அவரது வழிச்சென்ற சிலரது 🌺🙏🏽 சமாதித் தொகுப்பாகும்.

🔹கூத்தப்பெருமான் என்பது நம்மைப் பற்றிய மெய்யறிவைக் கொடுக்கும் மெய்யாசிரியர், அவ்வறிவில் நிலைபெற உதவும் நல்ல துணைவன், நிலைபெற்ற பின் இவ்வுலகில் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை சுட்டிக்காட்டும் நல்வழிகாட்டி!!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

🌸🌼🌻🏵️💮

Friday, August 21, 2020

மூத்தோன் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!! 🌺🙏🏽

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறம்இது பொருள்என
வாடா வகைதான் மகிழ்தெனக் அருளி...

-- ஒளவைப் பாட்டி 🌺🙏🏽

இன்று #பிள்ளையார் #பிறந்தநாள்! 🌺🙏🏽 எனில், "இப்படியொரு இறையுருவத்தை உருவாக்கலாம்" என்ற எண்ணம் நம் சமயப் பெரியவர்களுக்குத் தோன்றிய நாள். அல்லது, அவர்கள் #கரிமுக உருவத்தை வெளியிட்ட நாள்.

#ஆனைமுகத்தானை பரம்பொருளாகவும் காணலாம்; சிவகுடும்பத்தில் ஒருவராகவும் காணலாம். சிவகுடும்பத்தில் ஒருவராகும் போது அவர் அறிவைக் குறிக்கிறார். அவரை பரம்பொருளாகக் காணும் போது...

🌷 அவரது யானை உருவம் உணர்த்துவது நமது நினைவுகளை! முதன் முதலில் எழும் "நான்" என்பதிலிருந்து அனைத்துமே நினைவுகள் தாம்; எண்ணங்கள் தாம். நினைவுகளின் குவியலே நாம். எல்லா நினைவுகளையும் நீக்கிவிட்டால் இங்கு எதுவும் மிஞ்சாது. யாரும் இருக்க மாட்டார்கள்.

எனவே, நினைவாற்றலுக்குப் பெயர் பெற்ற யானை உருவத்தை எடுத்துக்கொண்டுள்ளனர்.

🌷 #முறக்கன்னன் தனது வலது தந்தத்தை உடைத்து தனது வலது கையில் வைத்திருக்கும் அமைப்பு உணர்த்துவது:

🔹 நம் வாழ்க்கை நம் கையில்
🔹 தீதும் நன்றும் பிறர் தர வாரா

சென்ற பிறவிகளில் நாம் ஆடியக் கூத்துகளின் விளைவுகளில் ஒரு பகுதி இப்பிறவியாக அமைந்திருக்கிறது. மீதமிருப்பவையும், இப்பிறவியில் நாம் சேர்ப்பவையும் இனி வரும் பிறவிகளாக அமையும்.

சில ஓவியங்களில் #வேழமுகத்தான் மகாபாரதம் எழுதுவது போல் வரைந்திருப்பர். அந்த மகாபாரதம் குறிப்பது நமது வாழ்க்கையை! "வியாச பெருமான் சொல்ல சொல்ல #ஐங்கரன் எழுதினார்" என்று படித்திருப்போம். இங்கு வியாசர் பெருமாளுக்கு சமம். பெருமாள் மாயைக்கு சமம். மாயை என்பது உடல், உலகக் காட்சிகள். இந்தக் காட்சிகளின் பொய்த்தன்மையை உணராமல் மேலும் மேலும் வினைகளைச் சேர்த்துக்கொண்டிருக்கிறோம். நமது மகாபாரதத்தை எழுதிக் கொண்டேயிருக்கிறோம்!!

🌷 #வாரணனின் மேல் இடது கையிலிருக்கும் பாசக்கயிறு உணர்த்துவது: நமது பற்றுகளுக்கு நாமே காரணம். நமது பற்றுகளை நாமே சேர்த்துக் கொள்கிறோம். உலக வாழ்க்கை எனும் மாயையிடம் நாமே சிக்கிக் கொள்கிறோம்.

🌷 #ஒற்றைக்கொம்பனின் மேல் வலது கையிலிருக்கும் மழு / அங்குசம் உணர்த்துவது:

🔹 மழு எனில்: நமது பற்றுகளை நாமே அறுத்தெறிய முடியும்.
🔹 அங்குசம் எனில்: நமது ஆணவத்தை நாமே போக்கிக் கொள்ள முடியும்.

🌷 #மூத்தோனின் இடது கையிலிருக்கும் சிவலிங்கம் உணர்த்துவது: தன்மையுணர்வில் நிலைபெறுவதும் (சிவமாவதும்) நம்மிடம்தான் உள்ளது.

எல்லாம் நம்மிடமிருந்தும், வாழ்க்கையை வளர்க்கவே - பற்றுகளைச் சேர்த்து கொள்ளவே - நாம் விரும்புகிறோம். எனவேதான் #நால்வாயனின் வலது கையில் உடைந்த தந்தமும், இடது கையில் சிவலிங்கத்தையும் கொடுத்திருக்கின்றனர் நம் சமயப் பெரியோர்கள்.

🌷 #தும்பிக்கையான் அறிவைக் குறித்தால் அவரது ஊர்தியான எலி (சுண்டெலி, பெருச்சாளி) குறிப்பது அறியாமையை (மாயை). அறியாமை என்பது இருள். எனவேதான், இருட்டில் வாழும் கருமை நிற எலியை ஊர்தியாகக் கொடுத்துள்ளனர். நமக்கு அன்னியமாக ஒன்று இருப்பதாகக் கருதுவதே அறியாமை. இது ஆசைக்கு இடங்கொடுக்கும். ஓர் ஆசை பல ஆசைகளாக வெகு குறுகிய காலத்தில் பெருகிவிடும். எலிகளும் வெகு குறுகிய காலத்தில் எண்ணிக்கையில் பெருகிவிடும். #பூழ்க்கைமுகனுக்குப் படைக்கப்பட்ட கொழுக்கட்டையை (அல்லது இனிப்பை) எலி உண்ணுவது போல் வரைந்திருப்பார்கள். இதன் பொருள்: நம்மிடமுள்ள மெய்யறிவை அறியாமை அழித்துவிடும்.

🌷 மொத்தத்தில் #ஆகூர்தியானின் உருவம் உணர்த்துவது:

🔹நம் வாழ்க்கை நம் கையில்
🔹மாயையிடம் சிக்கிக் கொள்வதும் நாமே
🔹அதனிடமிருந்து நம்மை விடுவித்துக் கொள்வதும் நாமே
🔹நிலைபேறும் நம்மிடமே உள்ளது
🔹உடல், உலகக் காட்சிகளைக் கண்டு அச்சப் படத்தேவையில்லை. அவை தோன்றினாலும், தோன்றாவிட்டாலும் நாம் நாமே.

oOOo

பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீஎனக்குச்
சங்கத் தமிழ் மூன்றுந் தா

-- ஒளவைப் பாட்டி

oOOo

இவ்விடுகையில் நான் பயன்படுத்தியுள்ள சில பிள்ளையார் பெயர்களின் பொருள்:

🔹முறக்கன்னன் - முறம் போன்ற காதுகளைக் கொண்டவர்
🔹வாரணன் - யானை உருவத்தான்
🔹நால்வாயன் - தொங்கும் வாயை உடையவர்
🔹பூழ்க்கைமுகன் - யானைமுகன் அல்லது தும்பிக்கை முகன்
🔹ஆகூர்தியான் - பெருச்சாளியை ஊர்தியாகக் கொண்டவர்

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

(இணைப்புப் படங்கள்: இந்தோனேசியாவிலுள்ள புரோமோ மலையின் மீதமைந்திருக்கும் பழமையான பிள்ளையார். பின்புறம் இருப்பது ஓர் எரிமலை.)

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #61

முக்குணம் ஐம்புலனும் மூளா வகைஅடக்கி
ஒக்கும்உணர் வாஇருப்போர் உள்ளத்தே - புக்குஉலவும்
பாதமலை தாய்வயிற்றில் பார்மீதில் வந்துபிற
வாதமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #61

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

🔸முக்குணம் ... பாதமலை

மனதின் மூன்று குணங்களையும், உடலின் ஐம்புலன்களையும் அடக்கி, தகுந்த பக்குவ நிலையை அடைந்தோர் உள்ளத்தே புகுந்து உலாவும் இறைவன்.

ஏற்கனவே வீட்டிலிருப்பவர் மீண்டும் வீட்டிற்குள் எப்படி புக முடியும்? தன்மையுணர்வு என்பது புதிதாகவா நமக்குள் வருகிறது? நம்மை நாம் உணராத பொழுது என்று ஏதேனும் உள்ளதா? நம்மை நாம் எப்பொழுதுமே உணர்ந்திருந்தாலும், "இது தான் நாம்" என்று அறிவதில்லை. இந்த அறிவு தான் நமக்குள் புக வேண்டியது. இதுவே மெய்யறிவு. இவ்வறிவு கிடைப்பதையே - உட்புகுதலையே - "உள்ளத்தே புக்கு" என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

எல்லாம் இறைவனுக்குள் இருக்கும் போது இறைவன் எங்கே உலாவ முடியும்? உலா எனில் மகிழ்ச்சியுடன் சுற்றிவருதல். இங்கு முனைப்பு அற்றிருத்தலைக் குறிக்கும். மெய்யறிவில் நிலைபெற்றவுடன் தானாகவே முனைப்பு என்பது போய்விடும். பின்னர் வாழ்க்கை என்பது... உலா வருதல் தான்!! மீதமிருக்கும் ஊழ்வினைப்படி வருவதை துய்த்துக் கொண்டிருக்க வேண்டியது தான்.

🔸தாய்வயிற்றில் ... பிறவாதமலை

எல்லாம் இறைவனுக்குள் இருக்கும் போது தாய் மட்டும் எங்கிருக்க முடியும்? அவரும் இறைவனுக்குள் தான்! பார் எனும் தமிழ் சொல் குறிக்கும் உலகமும் (ஆரியச் சொல்லான "லோக"த்திலிருந்து வந்தது) இறைவனுக்குள் தான். தனக்குள் இருப்பவற்றில தான் எப்படி வந்து பிறக்க முடியும்? எனவே, இறைவன் பிறப்பற்றவாராகிறார். பிறப்பில்லா ஒன்று இறக்கவும் முடியாது. எனவே, இறைவன் இறப்புமற்றவராகிறார். சொற்களை சற்று மாற்றிக்கொண்டால், இறைவன் தொடக்கமற்றவர் முடிவுமற்றவர் என்றாகும். பிறப்பற்ற, இறப்பற்ற, தொடக்கமற்ற & முடிவற்ற பொருள் எப்படியிருக்கும்? என்றும் இருக்கும்! இதனால்தான் பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 இறைவனை  [என்றும்] உள்ளபொருள் என்றழைத்தார்!!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Wednesday, August 19, 2020

முளைப்பாரி / முளைப்பாலிகைச் சடங்கின் ஆன்மிக அடிப்படை

முளைப்பாரியைப் பற்றி ஏதேச்சையாக இணையத்தில் தேடிய போது கிடைத்த கட்டுரைகள் அனைத்தும் அதை உழவுடன் மட்டுமே தொடர்பு படுத்தி, ஆன்மிக அடிப்படை சற்றும் இல்லாததுபோல் காட்டியிருந்தன. சில கட்டுரைகள் "பகுத்தறிவு" கண்ணாடி வழியாக ஆராய்ந்திருந்தன! 😁

ஆன்மிகம் தான் முளைப்பாரியின் அடிப்படை! பெண்தெய்வ வழிபாட்டுடன் தொடர்புடையது. பிறப்பறுக்கும் மெய்யறிவுக்கு எதிரானது. உலக வாழ்க்கையைப் போற்றுவது. அவ்வாழ்க்கைக்கு அடிப்படையான ஆசைகளை ஊக்குவிப்பது.

🔸#முளைப்பாரி - மண்ணில் முளைத்திருக்கும் நாற்றுகள். பாரி - மண். பாரியாள் - மனைவி. மண், தன் மீதும் விழும் மற்றும் தனக்குள் இடப்படும் விதைகள் வளர இடங்கொடுக்கும். மனைவி, கணவர் தனக்குள் இடும் விந்து வளர இடம் கொடுப்பவர்.

🔸#முளைப்பாலிகை - மண்ணும் அதை தாங்கியிருக்கும் பாத்திரமும் (மண் குடம், மூங்கில் / பனையோலைக் கூடை) பாலிகையாகும். முளைப்பாரி என்பதை விட முளைப்பாலிகை என்பதே சரி.

🔹பாத்திரம் - நம் உடல்
🔹வளமான மண் - நல்ல மனது
🔹இடப்படும் நல்விதைகள் - நல்ல ஆசைகள்

🔸முளைப்பாலிகையை பூசையறையில் இருட்டானப் பகுதியில் பகலவனின் ஒளி தீண்டாத வகையில் வைத்து வளர்ப்பர்.

ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் செல்வோம். அது, பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 உடலுடன் இருந்த காலம். அச்சமயம், திருவருணையில், பெரும் கனவுடன் ஒருவர் வாழ்ந்து வருகிறார் என்று வைத்துக்கொள்வோம்.

அவரது கனவு: தனது மகன் மெக்காலே கல்வியை நன்கு படித்து, மொழிகளில் பரத்தையான ஆங்கிலத்தில் நன்கு பேசி, பாரதக்கொல்லிகளான வெள்ளையர்களின் தாயகமான இங்கிலாந்து சென்று, பொய் பேசவும் பணம் கறக்கவும் கற்று (அதாவது, பாரிஸ்டர் பட்டம் பெற்று), தாயகம் திரும்பி, பெரும் பொருள் ஈட்டி, வாழ்வின் அனைத்து வசதிகளையும் பெற்று, நிம்மதியாக வாழவேண்டும் என்பது.

இவர் தனது மகனை பகவானின் அருகில் செல்லவிடுவாரா? அப்படியே செல்ல நேர்ந்தாலும் பகவானின் அறிவுரைகளைப் படிக்கவோ சிந்திக்கவோ விடுவாரா?

இதைத்தான் "பகலவனின் ஒளி படாமல் இருட்டில் வைத்து முளைப்பாலிகையை வளர்க்க வேண்டும்" என்பது குறிக்கிறது.

🔹பகலவன் - பகவான் போன்ற மெய்யறிவாளர்கள்

🔹பகலவனின் ஒளி - நமக்குள் உதிக்கும் மெய்யறிவு அல்லது பகவான் போன்றோரின் அறிவுரைகள்.

🔹இருட்டு - மெய்யறிவைப் பற்றிய அறிவின்மை. அறியாமை.

🔸9 விதைகள் இடப்பட்ட முளைப்பாலிகை - 9 விதைகள் நமது உடலிலுள்ள 9 துளைகளைக் குறிக்கும். எனில், முளைப்பாலிகை என்பது நமது உடலைக் குறிக்கும். செழித்து வளரும் பயிர்கள் என்பது நம் உடலைக் கொண்டு இவ்வுலகில் நாம் விளைவிக்கும் நல்விளைவுகள். பாலிகையைத் தாங்கும் பெண் என்பவர் உலகை இயக்கும் இறையாற்றல் - காளியன்னை!

🔸21 விதைகள் இடப்பட்ட முளைப்பாலிகை - நமது உடலிலுள்ள 5 உணரும் பொறிகளையும், அவற்றின் மூலம் கிடைக்கும் 5 உணர்வுகளையும், 5 தொழிற்கருவிகளையும், உடலினுள் இயங்கும் 5 காற்றுகளையும் மற்றும் மனதையும் குறிக்கும். மொத்தத்தில், நமது உடலைக் குறிக்கும். மேலேச் சொன்ன மீதம் யாவும் இங்கும் பொருந்தும்.

🔸சில ஊர்களில், அம்மன் கோயிலுக்கு அருகில், பகலவனின் ஒளி புகாவண்ணம் ஒரு கீற்றுக்குடிசையை நன்கு கட்டி, அதில் ஊராரின் முளைப்பாலிகைகளை வைத்து பராமரிப்பர். இதற்கென்று நல்ல பக்குவமுள்ள ஒரு பெண்ணை நியமிப்பர். அவர் அம்மனின் தீவிர பத்திமையராக இருப்பார். மிகவும் சுத்தமானவராக இருப்பார். அக்குடிசையில் தங்கியிருக்கும் வரை தலைவாராமல், தலைக்கு எண்ணெய் தடவாமல், எந்த ஒப்பனையும் செய்துகொள்ளாமல் இருப்பார்.

பல துளைகளைக் கொண்ட கீற்றுக்கொட்டகை என்பது சற்று பெரிய 9 துளைகளையும், எண்ணற்ற வியர்வைத் துளைகளையும் கொண்ட நமது உடலுக்கு சமம். கொட்டகையினுள் வைத்துப் பராமரிக்கப்படும் முளைப்பாலிகைகள் என்பவை நமக்குள் இருக்கும் எண்ணற்ற எண்ணக்குவியல்களுக்கு சமம். பராமரிக்கும் பெண் என்பவர் காளியன்னைக்கு சமம். (ஒப்பனையற்ற அவரது கோலத்தைப் பற்றி பிறகு பார்ப்போம்)

🔸9 அல்லது 10ஆம் நாள், முளைப்பாலிகைகளை ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்துச் சென்று, அம்மனின் பாதங்களில் வைத்து வணங்கிவிட்டு, கோயில் வளாகத்திலேயே பொங்கலிட்டு, அம்மனுக்கு படைத்துவிட்டு, படைத்ததை எல்லோருக்கும் பிரித்து வழங்கி விட்டு, முளைப்பாலிகைகளை நீர் நிலைகளில் விட்டுவிடுவர்.

🔹நமது பண்டைய மன்னர்கள், தங்களை தங்களது குல தெய்வத்தின் அடியவர்களாக, பணியாளர்களாக கருதிக் கொண்டு ஆட்சி புரிந்தார்கள். (முற்காலச் சோழர்கள் - உய்யக்கொண்டான் திரு உச்சிநாதர் / கற்பகநாதர் 🌺🙏🏽, பிற்காலச் சோழர்கள் - திரு கூத்தப்பெருமான் 🌺🙏🏽, பாண்டியர்கள் - திரு சொக்கநாதப் பெருமான் 🌺🙏🏽, சேதுபதிகள் - இராமேச்சுரம் திரு இராமநாதப் பெருமான் 🌺🙏🏽). இவ்வாறே இவர்களும் (பாலிகைகளை சுமந்து வந்தோர் மற்றும் அவர்களது குடும்பத்தினர்) தங்களை அம்மனின் அடியவர்களாக கருதிக் கொண்டு, வாழும் வாழ்க்கையை அம்மனின் திருப்பணியாக கருதி வாழவேண்டும் என்பதே வளர்த்த முளைப்பாலிகைகளை அம்மனின் பாதங்களில் வைப்பதின் பொருள்.

- முளைப்பாலிகைகள் - நமது உடல்

- அம்மனின் பாதத்தில் வைப்பது - நம்மை அம்மனின் பணியாளனாகக் கருதுவது

🔹பிறந்துவிட்டோம். வளர்ந்துவிட்டோம். ஆசைகளை, குறிக்கோள்களை வளர்த்துக்கொண்டோம். உழைக்கிறோம். போராடுகிறோம். பொருளோ, அறிவோ, பாடமோ சம்பாதிக்கிறோம். சம்பாதித்ததை (பொங்கியதை) தன்னோடு மட்டுமே வைத்துக் கொள்ளாமல் ஏனையோருக்கும் பிரித்துக் கொடுப்பதே பொங்கலிட்டு அனைவருக்கும் வழங்குவது.

🔹எவ்வளவு வளமுடனும் நலமுடனும் வாழ்ந்தாலும் ஒரு நாள் இறக்கவேண்டிவரும். எவ்வளவு பாடுபட்டு சம்பாதித்திருந்தாலும், சம்பாதித்தவற்றை எவ்வளவு போற்றிப் பாராட்டிப் பாதுகாத்திருந்தாலும் அனைத்தும் ஒரு நாள் நம்மைவிட்டு விலகிவிடும். இவையே முளைப்பாலிகைகளை நீர்நிலைகளில் விடுவதின் பொருள்.

இதை உணர்ந்து கொண்டால், உணர்ந்ததை என்றும் நினைவில் கொண்டால் சுயநலம், அகந்தை, பேராசை போன்றவற்றை ஒதுக்கி, முறையுடன் நீதியுடன் அடக்கத்துடன் எளிமையாக அமைதியாக வாழ்வோம்.

(இன்று ஆறுகள் இல்லாததால் கிணறு, குளம், ஏரி போன்ற நீர்நிலைகளில் விடுகின்றனர். ஆறுகளில் விடுவதே சரி. ஆற்றுநீர் காலவெள்ளத்திற்கு சமம். காலவெள்ளத்தில் தோன்றும் குமிழ்கள் போன்றது படைப்பு. பெருமானின் திருப்பெயர்களில் ஒன்று காலபைரவர்.)

oOOo

மீண்டும் ஒரு முறை சுருக்கமாக...

முளைப்பாலிகை திருவிழா உணர்த்துவது:

🔹உலகை பரிபாலிப்பது காளியன்னை
🔹 உலகில் காணப்படுபவை யாவும் ஏதாவது ஒரு உடலால் விளைந்தவையே
🔹 விளைவு செயலிலிருந்தும், செயல் எண்ணத்திலிருந்தும் தோன்றுகிறது. ஆகையால், நமக்குள் நல்லெண்ணங்களை விதைக்க வேண்டும்.
🔹 வாழ்வின் நிலையாமையை உணர்ந்து, அகந்தையற்று தன்னலமற்று பொறுப்புடன் வாழ்ந்து, கிடைப்பதை மற்றவருடன் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியுடன் வாழவேண்டும்.

oOOo

வடக்கிருந்து சமாதி நிலையடையும் போது உலகத்தோற்றம் மறைந்து கருப்பாக இருக்கும். நம்மிடம் இன்னமும் பழவினைகள் மீதமிருப்பின், அவற்றைக் கொண்டு நம்மை சமாதி நிலையிலிருந்து வெளியே தள்ள இறையாற்றல் முயற்சிக்கும். இன்னதென்று உணரமுடியாத கொடுமையான உருவங்களைத் தோற்றுவித்து அச்சமூட்ட முயற்சிக்கும். பெண்தெய்வ வழிபாட்டை உருவாக்கிய பெரியவர்கள் இத்தோடு புறமுகமாகிவிட்டார்கள் என்பது என் கருத்து. இதனால் தான், கருப்பு நிறத்தையும், அதில் கொடுமையான உருவங்களையும் தோற்றுவித்த இறையாற்றலை முடிவாகக் கருதி, கருப்பாயி (கருப்பு + ஆயி - காளியன்னை) என்று பெயரிட்டு, பெண்தெய்வ வழிபாட்டை உருவாக்கியுள்ளனர்.

இன்னும் சற்று தாக்குப் பிடித்திருந்தால், முயற்சித்திருந்தால் அடுத்த நிலைக்கு சென்றிருப்பர். காட்சிகளை விட காண்பவனே உயர்ந்தவன். மேற்சொன்ன காட்சிகளைக் கண்ட தாமே என்றுமுள்ள மெய்ப்பொருள் (சிவம்) என்பதை உணர்ந்திருப்பர். பெண்தெய்வ வழிபாட்டுப் பிரிவை உருவாக்காமல், ஏற்கனவே இருந்த சிவ (மெய்ப்பொருள்) வழிபாட்டையேக் கடைபிடித்திருப்பர்.

(இங்கே உணர வேண்டிய மிக முக்கியமான செய்தி: மத & கருத்து உரிமை!! குறையுள்ளது என்று தெரிந்தும் அன்றைய சமயப்பெரியவர்கள் பெண்தெய்வ வழிபாட்டை அனுமதித்திருக்கிறார்கள். இதுவே பாலைவன மதங்களாக இருந்திருந்தால்...? ஒரு கூட்டம் வெட்டியே அழித்திருக்கும்! இன்னொன்று நயவஞ்சகமாக ஏமாற்றி முடித்திருக்கும்!!)

இந்தப் #பெண்தெய்வ #வழிபாடு பிற்காலத்தில் மூன்றாக பிரிந்துவிட்டது:

🔹 காளியம்மன், மாரியம்மன், அங்காளம்மன், ...
🔹காமாட்சியம்மன், மீனாட்சியம்மன், கோமதியம்மன், விசாலாட்சியம்மன், லலிதா திரிபுரசுந்தரி, ...
🔹 பெருமாள் (பெண்தெய்வ வழிபாட்டில் எந்தக் கோட்பாட்டைப் பெண்ணாகக் கருதினரோ அதை வைணவம் ஆணாக மாற்றிக்கொண்டது)

oOOo

கருப்பு நிறம், கொடுமையான அச்சமூட்டும் காட்சிகள் போன்றவை காளியன்னையின் அடையாளங்கள் என்பதால் தான் முளைப்பாலிகை குடிசையை பராமரிக்கும் பெண் (காளியன்னையாகக் கருதப்படுபவர்) திருவிழா காலம் முழுவதும் தலைவிரி கோலமாக, எந்த ஒப்பனையும் செய்துகொள்ளாமல் இருக்கிறார்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

🌸🌼🌻🏵️💮

Saturday, August 15, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #60 - செறிவு, விள்ளு, யாது - விளக்கம்

கள்ளப் புலவேடர் கைவசமா கக்கனிந்து
தெள்ளத் தெளிந்தோர் செறிவாக - விள்ளக்
கருத்துமலை யாதுஇருக்கக் காட்சிதரும் தெய்வ
மருத்துமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #60

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

🔸கள்ளப் புலவேடர் ... கருத்துமலை

ஐம்புலன்களை அடக்கி, பக்குவமடைந்து, உலகம் எனும் மாயையிலிருந்து தெளிந்தோர் நிலைபெறுவதற்காக (செறிவாக - திண்ணியராக - திடமாக - அசைவற்று நிற்க) மலர்ந்த பெருமான்.

எப்போது நிலைபெறுவோம்? நாம் யாரென்று உணர்ந்த பிறகு. எப்போது நாம் யாரென்று உணர்வோம்? உலக காட்சி நீங்கிய பிறகு. இந்த உலக காட்சி நீங்குதலையே "விள்ள" (மலர்ந்த) என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர். உலக காட்சிகள் நீங்குவது என்பது கிட்டதட்ட ஒருவர் அணிந்திருக்கும் அணிகலன்களைக் கழட்டுவது போலிருக்கும். (இதை வைத்தே திரு சட்டைமுனி சித்தர் 🌺🙏🏽 (திருவரங்கத்து மூலவரின் கீழ் சமாதியாகி இருப்பவர்) "பெருமாள் அலங்காரப்பிரியர்" என்று அருளியிருக்கவேண்டும் என்பது என் கருத்து)

🔸யாது இருக்கக் ... மருத்துமலை

யாது என்ற சொல் ஐயம், மயக்கம் மற்றும் நினைவு போன்ற பொருட்களில் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. நாம் யாரென்று ஐயமற தெரிந்துகொள்ளாத வரை, உலக காட்சிகளைக் கண்டு மயங்கும் வரை (உண்மையென்று நம்பும் வரை), பழவினைகள் மீதமுள்ள வரை உடல் & உலக காட்சிகள் தோன்றிக்கொண்டுதானிருக்கும்.

காட்சிகள் தோன்றுவது எதற்காக? ஒரு முறை பகவான் திரு ரமணரிடம் 🌺🙏🏽 இத்தகைய கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், "காண்பான் ஒருவன் இருக்கின்றான் என்பதை உணர்வதற்காக" என்று பதிலளித்தார்!! 👌🏽👏🏽

இவ்வகையில், காட்சிகளின் தோற்றம் என்பது நாம் நம்மை உணர்வதற்காக, அதில் நிலைபெறுவதற்காக, பிறப்பறுப்பதற்காக. பிறப்பு எனும் நோயை, காட்சிகளின் மூலம் குணப்படுத்துவதால் இறைவனை தெய்வ மருத்துவன் என்றழைக்கிறார் ஆசிரியர்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Thursday, August 13, 2020

திருச்சத்திமுற்றம் - பெயர் விளக்கம்

(தினமலர் - ஆன்மீக மலர் - 17/07/2020)

#திருச்சத்திமுற்றம் என்ற தேவாரப்பாடல் பெற்ற திருத்தலத்தில், அன்பின் காரணமாக உமையன்னை பெருமானுக்கு முத்தம் கொடுத்தாராம்! இதனால் இத்தலம் "சக்தி முத்தம்" என்று அழைக்கப்பட்டதாம்!! பின்னர், மருவி, சத்திமுற்றம் என்றாயிற்றாம்!!! 😝

மெக்காலே கல்வியும் பகுத்தறிவும் அவற்றின் உச்சநிலையை அடைந்து விட்டதற்கு இந்த பெயர் விளக்கத்தை விட சிறந்த சான்று இருக்கமுடியாது. 😁

தில்லைக் கூத்தப்பெருமான் 🌺🙏🏽 ஆடும் மேடை எதைக் குறிக்கிறதோ, எந்த அரங்கத்திற்கு திருவரங்கம் பெருமாள் 🌺🙏🏽 நாதராக இருக்கிறாரோ அதையே தான் சக்தி முற்றமும் குறிக்கிறது. நாம் வாழும் அண்டமே அது!!

இப்போது நாம் அண்டத்திற்குள் இருப்பதாக உணர்கிறோம். ஆனால், இது உண்மையல்ல. அனைத்தும் நம்முள் இருக்கின்றன. சமாதியில் இதை உணர்வோம். எல்லாம் நமக்குள் நடப்பதைப் பார்ப்போம். இதை திரையில் தோன்றும் காட்சிகளாக, நீரில் தோன்றும் குமிழிகளாக, மேடையில்/அரங்கத்தில் அரங்கேறும் நடனமாக உருவகப்படுத்தியிருக்கிறார்கள் நம் பெருமான்கள். திருச்சத்திமுற்றத்தில் சமாதியாகியிருக்கும் பெருமானோ அல்லது அவருக்குப் பின் தோன்றிய பெரியவர்களோ, ஒரு பெரிய வீட்டின் முற்றத்தில் நடைபெறும் விழாவாக உருவகப்படுத்தியிருக்கிறார்கள்.

#சத்திமுற்றம் = சக்தி முற்றம் = நாம் வாழும் அண்டம்

oOOo

பொத்தார் குரம்பை புகுந்தைவர் நாளும் புகலழிப்ப
மத்தார் தயிர்போன் மறுகுமென் சிந்தை மறுக்கொழிவி
அத்தா வடியே னடைக்கலங் கண்டா யமரர்கடம்
சித்தா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே

-- அப்பர் 🌺🙏🏽 தேவாரம் 4.96.3

பொழிப்புரை: மெய்யறிவில் நிலைபெற்றவர் உள்ளத்தில் இருப்பவராய் உள்ள திருச்சத்திமுற்றச் சிவக்கொழுந்துப் பெருமானே! 🌺🙏🏽 பல துளைகள் உள்ள கூடாகிய இவ்வுடம்பில் புகுந்து ஐம்பொறிகளும் நாள்தோறும் அடியேனுக்குப் பற்றுக்கோடான உன் திருவடிப்பற்றினை அழிக்க, மத்தால் குழப்பப்படும் தயிர்போலச் சுழலும் என் சிந்தையின் கலக்கத்தை ஒழியச் செய்வாயாக. தலைவனே! அடியேன் உன் அடைக்கலம் என்பதனை நோக்குக.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

🌸🌼🌻🏵️💮

Wednesday, August 12, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் - #59 - வடக்கிருத்தல், மலைமாது, ஒரு பாகம் - சிறு விளக்கம்

தரைஎலாம் உய்யத் தனித்திருந்து செய்யும்
கரைஇலா மாதவத்தைக் கண்டு - விரவிஒரு
பாகம்மலை மாதுபெறப் பாலித்து நின்றுஅருளும்
மாகமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #59

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

மேலோட்டமாகப் பார்த்தால் உமையன்னை இடப்பாகம் பெற்ற வரலாற்றைப் பற்றி பாடுகிறார் குருநமச்சிவாயர் 🌺🙏🏽 என்று தோன்றும். ஆனால், சற்று ஆழ்ந்து சிந்தித்தால் பல காலம் கடுமையாக வடக்கிருக்கும் ஒருவர், முதலில் நிர்விகற்ப சமாதியைப் பெற்று, இறுதியில் சகஜ சமாதியில் நிலை பெறுவதைப் பற்றி பாடியிருக்கிறார் என்பது விளங்கும்.

🔸தனித்திருந்து - உலக வாழ்க்கையிலிருந்து விலகியிருந்து

🔸கரைஇலா மாதவம் - ஆற்றின் நீரோட்டத்தைப் போல், உருக்கிய நெய்யின் வீழ்ச்சியைப் போல் விடாது செய்யப்படும் வடக்கிருத்தல்.

நம் தலையானது உடலின் வடக்குப் பகுதியில் இருப்பதாக கணக்கு. நமது கவனத்தை உடலின் வேறு பகுதிகளுக்கு செல்லவிடாமல் நம் தலை / முகப்பகுதியிலேயே வைத்திருப்பதற்குப் பெயர் தான் #வடக்கிருத்தல் (ஆரியத்தில், #தவம்). எப்படி எக்கணமும் கவனத்தை தலையிலேயே வைத்திருப்பது? நம் மீது - நம் இருப்புணர்வின் மீது - கவனத்தை செலுத்திக்கொண்டிருந்தால் முடியும். இவ்வாறு நம் மீது கவனத்தை செலுத்திக்கொண்டிருப்பதே சும்மா இருத்தல், தானாய் இருத்தல், தன்னை நாடுதல், தன்னாட்டம், ஆத்மவிசாரம் (ஆரியம்) என பலவாறாக அழைக்கப்படுகிறது.

தானாய் இருத்தலே தன்னை அறிதலாம் - #பகவான் திரு #ரமணர் 🌺🙏🏽

🔸#விரவி - கலந்து. "நாம் வேறு உலகம் வேறு" என்ற துய்ப்பை நீக்கி, "நாமும் உலகமும் ஒன்றே" / "நாமே உள்ளபொருள்" என்ற துய்ப்பைக் கொடுத்தலே விரவுதல்.

🔸ஒரு பாகம் மலைமாது பெற பாலித்து

🔹#மலைமாது - சீவன். விழிப்பு நிலையில் சீவன் தலையிலிருப்பதாக கணக்கு. இங்கு மலை என்பது தலையைக் குறிக்கும். மெய்யறிவு பெறும் வரை மாது. பெற்ற பின், அப்பன்!

🔹ஒரு பாகம் - இடப்பாகமோ வலப்பாகமோ அல்ல. அசைவற்ற பாகம் - அசைவற்ற நிலை. மேற்சொன்ன "விரவி" நிலைக்குப் பின், நாம் யாரென்றும், உலகின் தன்மை என்னவென்றும் உணர்ந்து கொள்வோம். முயற்சிகளற்று (அசைவற்று) இருப்போம். இந்நிலையை நாம் அடைவதற்கு உதவிய "விரவுதலே" அருள் பாலித்தலாகும்.

🔸மாக மலை - வானளாவிய உயர்ந்த மலை

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽