Sunday, August 27, 2023

திரு பண்ணாரி அம்மன் என்ற திருப்பெயருக்குள் புதைந்திருக்கும் பொருட்கள்!! 🌺🙏🏽🙇🏽‍♂️


🔸 பண்ணாரி - பண் + ஆரி

🔸 ஆரி - ஆர் -> ஆரி - அருமை, மேன்மை, சிறப்பு, அழகு.

🔸 பண் - இசை, நரம்பு இசைக்கருவி, கூத்து, குதிரைக்கலனை (Saddle), ஒப்பனை, விலங்கு செல்லும் வழி, கப்பலின் இடப்பக்கம், தொண்டு, நீர் நிலை.

இனி, இவற்றை இணைத்துப் பார்ப்போம்.

🌷 இசை + அருமை / மேன்மை / சிறப்பு / அழகு + அம்மன் - அருமையான இசையை வெளிப்படுத்தும் அம்மன்.

இசையென்பது எதை குறிக்கிறது? நம் மனதில் தோன்றும் எண்ணங்களை! நாம் காணும் காட்சிகளை!!

🌷 நரம்பு இசைக்கருவி + அருமை... + அம்மன் - அருமையான நரம்பு இசைக்கருவியை மீட்டும் அம்மன்.

எது அப்படிப்பட்ட கருவி? நமதுடல்!!

🌷 கூத்து + அருமை... + அம்மன் - அருமையான கூத்தாடும் அம்மன்.

எது அப்படிப்பட்ட கூத்து? நமது வாழ்க்கை; நாம் வாழும் இவ்வையகம்!!

🌷 ஒப்பனை + அருமை... + அம்மன் - அருமையான ஒப்பனையாகிய அம்மன்.

எது அப்படிப்பட்ட ஒப்பனை? நமது உடல்தானது!

யாருக்கு அப்படிப்பட்ட ஒப்பனை? நமக்கு. 

உடலை ஆதனுக்கு (ஆரியத்தில், ஆன்மா) போர்த்திய போர்வையாகவும் கொள்வார்கள்; ஆதனுக்கு அணிவிக்கப்பட்ட அணிகலனாகவும் (ஒப்பனை) கொள்வார்கள்.

🌷 விலங்கு செல்லும் வழி + அருமை... + அம்மன் - விலங்கு செல்லும் அருமையான வழியாகிய அம்மன்.

எந்த விலங்கு? நமது மனமெனும் விலங்கு!! மனம் செல்லும் வழி. மனம் போன போக்கு. மனமடங்கினால் அப்பன். மனம் வெளிப்பட்டால் அன்னை.

🌷 கப்பலின் இடப்பக்கம் + அருமை... + அம்மன் - கப்பலின் இடப்பக்கமாகிய அருமையான அம்மன்.

எனில், வலப்பக்கம் அப்பனுடையதாகிறது. இடப்பக்கம் + வலப்பக்கம் = அம்மையப்பர் = கப்பல். எனில், கப்பல் எதை குறிக்கிறது? நாமே அந்த கப்பல்!! அசைவற்ற நமது தன்மையுணர்வு அப்பனாகும். அசையும் நமது மனம் & உடல் அம்மையாகும்.

🌷 தொண்டு + அருமை... + அம்மன் - அருமையாக தொண்டாற்றும் அம்மன்.

திரு விசாலாட்சி அன்னை எவற்றையெல்லாம் திரு விசுவநாதருக்கு உணவாக பரிமாறுகிறாரோ அவற்றையெல்லாம் "அப்பனுக்கு அம்மை ஆற்றும் தொண்டு" என்று கொண்டால் நமக்கு கிடைப்பது "அருமையாக தொண்டாற்றும் பண்ணாரி அம்மன்"!!

எவற்றையெல்லாம் அன்னை பரிமாறுகிறார்? அல்லது, எவற்றையெல்லாம் பரிமாறும் தொண்டு புரிகிறார்? எண்ணங்கள் மற்றும் ஐம்புலன்களின் வழியே கிடைக்கும் நுகர்ச்சிகளே (ஆரியத்தில், அனுபவங்கள்) அன்னை நமக்கு பரிமாறும் உணவாகும். இதுவே அவர் நமக்கு ஆற்றும் சிறந்த தொண்டுமாகும்.

🌷 நீர்நிலை + அருமை... + அம்மன் - அருமையான நீர் நிலையாகிய அம்மன்.

அசைவற்ற உள்ளபொருளை (இறைவனை) மலையாகவும், அசையும் மற்றனைத்தையும் (அன்னையை) நீர்நிலையாகவும் கொள்வது மரபாகும். எ.கா.: திருக்கயிலாய மலை & மானசரோவர் நீர்நிலை.

அசையும் தன்மையை தவிர, நீர்நிலையின் இன்னொரு தன்மை: எதிரொளிப்பு (ஆரியத்தில், பிரதிபலிப்பு)!

நமக்கு கிடைத்திருக்கும் உடல், நம் கண்முன்னே விரியும் வையகம் என யாவும் நமது எதிரொளிப்பாகும். அதாவது, முற்பிறவிகளின் வினைப்பயன்களாகும். எதற்கு இப்படிப்பட்ட எதிரொளிப்பு?

இதற்கு பகவான் திரு இரமண மாமுனிவர் கொடுக்கும் பதில்: காண்பான் என்றொருவன் இருப்பதை உணர்வதற்காக!!

oOo

🌸 பண்ணாரி அம்மன் திருக்கோயில் ஓர் உயிருள்ள கோயிலாகும். கருவறையின் கீழே ஒரு பெருமான் திருநீற்று நிலையிலிருக்கிறார்.

🌸 அப்படியொருவர் இருக்கிறாரென்பதை குறிப்பதற்காக வைக்கப்பட்ட அடையாளச் சின்னம்தான் பண்ணாரி அம்மன் எனும் திருவுருவமாகும். 

🌸 இறை-உயிர்-தளை (ஆரியத்தில், பசு-பதி-பாசம்) பற்றிய அப்பெருமானின் கண்ணோக்கத்தை பண்ணாரி அம்மன் எனும் திருவுருவாக வடித்துள்ளனரென்று கொள்ளலாம். 

🌸 அல்லது, அந்த திருவிடம் (ஆரியத்தில், சமாதியிடம்) அம்மன் வழிபாட்டினரிடம் சென்றுவிட்டதால், அவர்களது நம்பிக்கைகளுக்கு ஏற்றவாறு ஒரு திருவுருவை வடித்து வைத்துள்ளனரென்றும் கொள்ளலாம்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Wednesday, August 23, 2023

7 கன்னியர் - சிறு விளக்கம்


தேவாரப் பாடல் பெற்ற திருக்கடம்பந்துறை (குளித்தலை) திரு கடம்பங்காட்டு அப்பர் (கடம்பவனநாதர்) திருக்கோயிலின் கருவறை பின்புற சுவற்றில் 7 கன்னியர் புடைப்புச்சிற்பமாக இருப்பதைக் காணலாம். இதற்கு அத்திருக்கோயிலின் புனைவுக்கதை கூறும் விளக்கம்: கருவறை உடையவரின் கீழே திருநீற்று நிலையிலிருக்கும் பெருமானை வணங்கியவர்களுள் 7 கன்னியரும் அடங்குவராம். அதை குறிக்கவே 7 கன்னியரின் உருவம் புடைப்பாக செதுக்கப்பட்டுள்ளதாம். 🤦🏽🤦🏽

("புகை நமக்கு பகை", "குடி குடியை கெடுக்கும்" என்று அச்சிடுவது போன்று, இதுபோன்ற பிட்டுகளுடன், "தல புருடாக்கள் அன்பர்களுக்கும், இந்து சமயத்திற்கும் கேடு" என்று அச்சிடவேண்டும். அல்லது, திரைப்படங்களுக்கு தரச்சான்றிதழ் வழங்குவது போன்று, இவைகளுக்கும் வழங்கவேண்டும். எ.கா.: "அனைவருக்கும் பொருந்தும்", "வயது வந்தவர்களுக்கு மட்டும்", "மனநலம் பாதிக்கக்கூடும்"... 👊🏽👊🏽👊🏽)

கடம்பந்துறை கோயில் உயிருள்ள திருக்கோயிலாகும். அதாவது, இங்குள்ள கருவறை உடையவரின் கீழே ஒரு பெருமான் திருநீற்று நிலையில் (ஆரியத்தில், சமாதி) இருக்கிறாரென்பது பொருளாகும். அவரது நிலையை குறிக்கும் இறையுருவங்கள்தாம் கருவறையிலிருக்கும்:

🌷 சிவலிங்கம்

- சீரான தண்டுப்பகுதி - உள்ளபொருளாய் சமைந்துள்ள பெருமானின் நிலை என்றும் மாறாதது

- சற்றே வளைந்துள்ள உச்சிப்பகுதி - பெருமானின் நிலை முடிவற்றது

🌷 7 கன்னியர்

"7 கன்னியர்" என்றவுடன் பிராம்மி, வாராகி... என்ற ஆரியப் பெயர்வரிசையை நாம் நினைவுகூறும்படி கைங்கரியம் செய்திருக்கிறார்கள். இவ்விடத்தில், இது தவறாகும்!

இங்கு, 7 கன்னியர் எனில் நிணநீர், குருதி, தசை, கொழுப்பு, எலும்பு, எலும்புச் சோறு மற்றும் வெண்ணீர் ஆகும்.

அதாவது, 7 கன்னியர் = நமது உடல்!!

எனில், 7 கன்னியரின் புடைப்பிலிருந்து நாம் எய்தக்கூடிய முடிவுகள்:

🔸 உடையவரின் கீழேயிருக்கும் பெருமான் உடலுடன் உள்ளேயிறங்கி இருக்கலாம்.

(திரு சதாசிவ பிரம்மேந்திரப் பெருமானும் உடலுடன் திருநீற்றுக் குழிக்குள் இறங்கினாரென்பதை இங்கு நினைவுகூறலாம்.)

🔸 அல்லது, அப்பெருமான் இன்றும் உடல் தாங்கியிருக்கலாம்.

(வள்ளிமலை திருப்பணியின்போது, மலைப்பாதையில், ஓரிடத்திலிருந்த கற்பலகையை நகர்த்திப் பார்த்தபோது, உள்ளே 4 (அல்லது, 5) பெருமான்கள் எலும்புந்தோலுமாக, திருநீற்றுநிலையில் இருப்பதைக் கண்டு திரு கிருபானந்த வாரியாரும், அவருடனிருந்த இன்னொருவரும் மயங்கி விழுந்த நிகழ்வை இங்கு நினைவுகூறலாம்.)

🔸 அல்லது, உடலென்பது மேற்கண்ட 7 பொருட்களால் ஆனது என்ற கூற்றை வையகத்திற்கு வழங்கியது அப்பெருமானாக இருக்கலாம்! அவரது பங்களிப்பை வையகம் மறவாதிருக்க, 7 கன்னியர் புடைப்பை கருவறையில் வைத்திருக்கிறார்கள் என்று கொள்ளலாம்.

oOo

சில திருக்கோயில்களில், உடையவருக்கு பின்புறம் அம்மையப்பர் திருவுருவை செதுக்கியிருப்பார்கள். இதற்கு "அவ்விடத்தில் திரு அகத்தியப் பெருமானுக்கு இறைவன் திருமணக்காட்சியை காட்டியருளினார்" என்றொரு கதையை புனைந்திருப்பார்கள்.

திருமணக்காட்சி, திருக்கயிலாயக்காட்சி, சூழ்ச்சியில்லாக்காட்சி என பல பெயர்களில் அழைக்கப்படும் அக்காட்சியில் காண்பானும் (அப்பன் - நாம்) உண்டு, காட்சியும் (அம்மை - நம்மை தவிர மீதமனைத்தும்) உண்டு. உடலல்லாத நம்மை உடலாக காணும் சூழ்ச்சி (அன்னை மாயை / மாயோன்) மட்டுமிருக்காது. இப்போது, வையகம் என்ற திரைப்படத்திற்குள் நாமிருப்பது போன்று தோன்றுகிறது. திருக்கயிலாயக்காட்சியில், நாம் ஒரு புறமும் (அப்பன்), காட்சி ஒரு புறமும் (அம்மை) தோன்றும். இதையே அம்மையப்பராக உருவகப்படுத்தியிருக்கிறார்கள்.

இவ்வுருவகம் இருக்கும் திருக்கோயில்களில் உறையும் பெருமான்கள் (கருவறை உடையவர்களுக்கு கீழே திருநீற்று நிலையிலிருப்பவர்கள்) அத்தகைய காட்சியை கண்டுகொண்டிருக்கிறார்கள் என்பது பொருளாகும்.

oOo

சென்னை திருவேற்காட்டிலுள்ள திரு வேற்காட்டீசர் திருக்கோயிலின் கருவறையில் அம்மையப்பருடன் பிள்ளையாரையும் காணலாம்.

திருக்கயிலாயக்காட்சியில் காண்பான் (அப்பன்) காட்சியுடன் (அம்மை), காணும் அறிவும் (பிள்ளையார்) உடனிருக்கிறது என்பது அங்கு உறையும் பெருமானின் கருத்து என்று கொள்ளலாம்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Thursday, August 17, 2023

சிதறு தேங்காய் / சூரத்தேங்காய் - உட்பொருள்


பிள்ளையார் வழிபாட்டின் முகமைச் சடங்குகளில் ஒன்றான சிதறு தேங்காய் பற்றி சற்று பார்ப்போம்.

தேங்காய் என்பது நமது தலைக்கு சமமாகும். நமது தலையென்பது "நான் இன்னார்" என்ற எண்ணம் முதற்கொண்டு நாம் சேர்த்து வைத்திருக்கும் அனைத்து பற்றுகளுக்கு சமமாகும். தேங்காயை சிதற விடுவதென்பது எல்லா பற்றுகளையும் உடனடியாக, இப்பொழுதே விட்டொழிப்பதற்கு சமமாகும்.

எவ்வாறு "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என்ற வரியை படித்ததும், திரு பட்டினத்து அடிகள் அனைத்தையும் விட்டுவிட்டாரோ (அதாவது, அவரது தேங்காயை உடைத்துவிட்டாரோ), அவ்வாறு யாவற்றையும் விட்டுவிடுவதுதான் [சிதறு] தேங்காய் உடைப்பதின் உட்பொருளாகும். இதுவேதான் "தேங்காய் சிதறுவதுபோன்று ஒருவரது துன்பங்களும் சிதறிப்போகும்" என்ற நம்பிக்கையின் உட்பொருளுமாகும்.

ஒன்று நமதென்ற எண்ணம் இருக்கும்வரை அதனால் விளையும் இன்பமும் துன்பமும் நம்மை சாரும். எதுவும் நமதல்ல என்ற உண்மையை புரிந்துகொண்டு, பற்றுகளை விட்டுவிட்டால் (தேங்காயை உடைத்துவிட்டால்), விளைவுகளும் நமதல்ல என்றாகிவிடும் (விளைவுகளால் பாதிப்படையமாட்டோம்).

oOo

சிதறு தேங்காயை சூரத் தேங்காயென்றும் அழைப்பர்.

சூரன் என்ற சொல்லுக்கு, இங்கு, ஆரியத்தில் பொருள் காணவேண்டும்.

சூ + ர -> தந்தை + பற்று -> பற்றுகளின் தந்தை -> எல்லா பற்றுகளும் எங்கிருந்து தோன்றுகின்றனவோ அது -> பற்றுகளின் ஆணிவேர்!!

எது பற்றுகளின் ஆணிவேர்?

"நான் இவ்வுடல்" என்ற தவறான எண்ணம்தான் எல்லாவற்றிற்கும் தொடக்கமாகும். இதை விட்டொழித்தலே சூரத்தேங்காய் உடைத்தலாகும்.

oOo

பற்றுகளை விடுவதென்பது ஒரு முறைதான் நடக்கும் (ஒரு தேங்காய் உடைப்பதற்கு சமம்). பிறகு, ஏன் 11, 18, 108 என்று பல தேங்காய்களை உடைக்கிறார்கள்? உட்பொருளை உணராததால்!

பொருள் புரியாமல் சடங்குகளை செய்வது பொருளாதாரத்திற்கு நல்லதாகும்! பொருளை புரிந்துகொண்டு செய்வது அன்பர்களுக்கு நல்லதாகும்!! ☺️

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Saturday, August 12, 2023

பாபத்த அக்னிலேயோ / ஜலத்துலேயோ போக்குவது & பிறந்த ஊரில் / காசியில் மடிவது


அண்மையில், ஒரு தொடரி பயணத்தின்போது, இரு வயதான ஆரியப் பூசாரிகள் பேசுவதை கேட்க நேர்ந்தது. அவர்களது பேச்சிலிருந்து சில பகுதிகள்:

> பாபத்த அக்னிலேயோ, இல்ல ஜலத்துலேயோதான் போக்கமுடியும். அதனாலதான் நம்ம பெரியவா யாகம் பண்ணிண்டிருந்தா. சமுத்துரத்துல ஸ்நானம் பண்ணச் சொன்னா.

> கடைசி காலத்த காசியில கழிக்கலாம்னு இருக்கேன்.

சொந்த ஊர்ல இல்லயா பிராணன் போவணும்னு சொல்லுவா?

அப்படியும் சொல்லுவா. காசிலேயும் போகலாம்னு சொல்லுவா. என்னோட பெரியவாவும் அங்க போயிதான் முடிச்சிண்டா.

oOo

இனி அவர்களது நம்பிக்கைகளின் உட்பொருளை பார்ப்போம்.

🌷 வினைப்பயன்

ஆரியத்தில் பாவமென்பது பாவம், புண்ணியம் என இரண்டையும் குறிக்கும். நம் தமிழில் வினைப்பயன் என்றழைக்கலாம். நல்வினை & தீவினை என இரண்டு பயன்களையும் குறிக்கும்.

வினைப்பயன்கள் எண்ணங்களை தோற்றுவிக்கும். எண்ணங்களை நாம் அனுமதித்தால் செயல்களாக மாறும். செயல்கள் விளைவுகளை ஏற்படுத்தும். விளைவுகள் மீண்டும் எண்ணங்களுக்கு வித்திடும் ...

🌷 வேள்வி செய்தல்


> வேள்விக்குழி (யாகக்குண்டம்) - நமதுடல்
> அதில் எரியும் நெருப்பு - நாம் (நமது தன்மையுணர்வு)
> நெருப்பிலிடப்படும் பொருட்கள் - நமக்கு தோன்றும் எண்ணங்கள்

ஒரு எண்ணம் தோன்றியவுடன் அதன் பின்னே செல்லாமல், அது யாருக்கு தோன்றியது என்று பார்த்தால், எழுந்த எண்ணம் அடங்கிவிடும். இதுவே "பாபத்த (எண்ணத்தை) அக்னில (நமது தன்மையுணர்வில்) போக்குவது" என்பதின் பொருளாகும்.

🌷 கடலில் குளித்தல் (சமுத்திர ஸ்நானம்)


கடல் என்பது ஒரு வகையில் நமதுடலை குறிக்கும்; இன்னொரு வகையில் வையகத்தை குறிக்கும். கடலில் குளித்து "பாபத்தை" போக்குவதென்பது இவ்வையகத்தில் நாம் வாழும் வாழ்க்கையை குறிக்கும்.

எதையும் "நான் செய்கிறேன்" என்ற எண்ணத்துடன் செய்யும்போது, விளைவுகளும் நம்மையே சாரும். இல்லையெனில், சாராது. இக்கண்ணோட்டத்துடன் வாழ்தலே "பாபத்த (எண்ணத்தை) ஜலத்துல (வாழ்க்கையை வாழ்ந்து) போக்குவது" என்பதின் பொருளாகும்.

🌷 காசி

> காசி - ஒளிபொருந்திய / இருளற்ற இடம்.
> இருள் - உடல், வையம் ஆகியவற்றை உண்மையென்று நம்பும் அறியாமை.
> ஒளி - நமது தன்மையுணர்வு. நாமே உள்ளபொருளென்ற மெய்யறிவு.
> காசியில் இறப்பது - உடல் இறக்கும்போது, நாம் நாமாக - நமது தன்மையுணர்வாக (சிவமாக) - இருப்பது.

உடலிறக்கும் போது, நாம் நாமாக இருக்கவேண்டுமெனில், அதற்கு முன்னரே நாம் யாரென்று அறிந்திருக்கவேண்டும். இதற்கு பயிற்சிவேண்டும். இப்பயிற்சியே "கடைசி காலத்த காசியில கழித்தல்" ஆகும்!!

🌷 பிறந்த ஊர்

நமதுடல்தான் பிறந்திருக்கிறது. அதற்குதான் பிறந்த நாளும் பிறந்த ஊரும். நமக்கில்லை. உடல் விலகியபின், நாம் நாமாகிவிடுவோம். உண்மையில் எப்போதுமே நாம் நாமாகத்தான் இருக்கிறோம். ஆனால், இவ்வுண்மையை நாம் உணருவதில்லை. உணராததால், அன்னை மாயை / மாயோனின் தில்லுமுல்லுக்கு (உடல்-வையகக் காட்சிக்கு) இடங்கொடுத்துவிடுகிறோம். இதிலிருந்து தப்பவேண்டுமெனில், நம்மை பற்றி நாம் அறிந்திருக்கவேண்டும். இதற்கு பயிற்சிவேண்டும். இப்பயிற்சியே "கடைசி காலத்த சொந்த ஊரில் (நமது தன்மையுணர்வில்) கழித்தல்" ஆகும்!!

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Tuesday, August 8, 2023

திரு மணிவாசகப் பெருமான் கண்ட திருக்கயிலாயக் காட்சி 🌺🙏🏽🙇🏽‍♂️


உணக்கிலாததோர் வித்துமேல்விளை யாமல் என்வினை ஒத்தபின்
கணக்கி லாத்திருக்கோலம் நீவந்து காட்டினாய் கழுக்குன்றிலே.

-- திருவாசகம் - திருக்கழுக்குன்றப் பதிகம் #1

🌷 உணக்கிலாததோர் வித்து

உணக்கம் - வாட்டம்.
உணக்கம் + இல்லாத + ஓர் வித்து - வாட்டமில்லாதவன்.

அதாவது, சோர்வறியாமல், வாடாமல் கடகடவென செயல்களை செய்து வினைப்பயன்களை சேர்த்துக் கொள்பவன் என்று தன்னைப் பற்றி கூறிக்கொள்கிறார்.

🌷 மேல் விளையாமல் என் வினை ஒத்தபின்

ஆனால், அப்படி வினைப்பயன்களை தான் சேர்த்துக் கொள்ளாதபடி இறைவன் தன்னை ஆக்கிவிட்டதாகக் கூறுகிறார்.

ஒரு செயலை, நாம் செய்கிறோம் என்ற கண்ணோட்டத்துடன் செய்தால், அதன் விளைவுகளையும் நாம் துய்க்கவேண்டியிருக்கும். அப்படியில்லாமல், செயல் எவ்வாறு நடைபெறுகிறது என்ற உண்மையை புரிந்துகொண்டுவிட்டால், நாம் யாரென்ற நமதுண்மையை புரிந்துகொண்டு, அதில் நிலைபெற்றுவிட்டால், அதாவது, மெய்யறிவு பெற்று அதில் நிலைபெற்றுவிட்டால், செயலும் நடைபெறும்; விளைவுகளும் நம்மை பாதிக்காது. இந்நிலைக்கு தன்னை இறைவன் கொண்டு சென்றதாக பாடுகிறார் மணிவாசகர்.

🌷 கணக்கிலாத் திருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே

கணக்கிலா - சூழ்ச்சியில்லா.

அதென்ன சூழ்ச்சியில்லாத் திருக்கோலம்?

தற்போது, உடலல்லாத நம்மை ஓர் உடலாக காண்கிறோம். பார்வையாளனான நம்மை செயல்படுபவனாக காண்கிறோம். வையகம் உண்மையில் நம்முள் இயங்கிக் கொண்டிருக்க, நாம் அதனுள் இயங்குவதாக காண்கிறோம். இதுதான் சூழ்ச்சி நிறைந்த திருக்கோலம்!

சூழ்ச்சியில்லாத் திருக்கோலமெனில் நமதுண்மையும், வையகத்தின் உண்மையும் தெளிவாக தெரியவேண்டும். அப்படி தெளிவாக தெரியும் காட்சிக்கு புகழ்பெற்ற இன்னொரு பெயருண்டு... திருக்கயிலாயக் காட்சி!!

ஆம்! மணிவாசகப் பெருமான் திருக்கழுக்குன்றத்தில் கண்டது திருக்கயிலாயக் காட்சியாகும். அக்காட்சியில் காண்பானாகிய நாமும் உண்டு; காட்சியாகிய வையகமும் உண்டு. ஆனால், தவறாகக் காணும் சூழ்ச்சி (மாயை / மாயோன்) மட்டுமிருக்காது.

oOo

இணைப்புப் படத்திலுள்ள திருவிடம் திருக்கழுக்குன்ற மலையின் அடிவாரத்திலுள்ளது. "கணக்கிலாத் திருக்கோலம்" என்று பெருமான் குறிப்பிட்ட திருக்கயிலாயக் காட்சியை, "திரு வேதகிரீசுவரரின் திருப்பாதம்" என்று குறிப்பிட்டுள்ளார்கள். இவ்விடத்தில் அப்பர் பெருமானின் வாழ்வில் நடந்த ஒரு புகழ்பெற்ற நிகழ்வை நினைத்துப் பார்ப்பது பொருத்தமாகவிருக்கும்.

திருக்கயிலாயம் செல்லும் வழியிலுள்ள ஒரு நீர் நிலையில் மூழ்கி, திருவையாற்றிலுள்ள ஒரு குளத்திலிருந்து வெளிப்பட்டவுடன், அப்பர் பெருமானுக்கு திருக்கயிலாயக் காட்சி கிட்டியது. அப்போது அவர் பாடிய பதிகத்தில், "... கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் ..." என்று பாடினார். "அவர் திருப்பாதம்" என்று அப்பர் பெருமான் குறிப்பிட்டதை, "வேதகிரீசுவரரின் திருப்பாதம்" என்று இப்பகுதி பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளனர் என்று எடுத்துக்கொள்ளலாம். மற்றபடி, இரு அருளாளர்களும் கண்டது ஒரே காட்சியாகும்.

oOOo

கணக்கிலாத் திருக்கோலம் கண்ட பிரான் கழல் போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Saturday, August 5, 2023

பொதியின் மலையில் குடிகொண்டிருக்கும் பொதியிலான்!! 🌺🙏🏽🙇🏽‍♂️


"பாவநாசம் சிவன் கோயில்" என்று பேச்சு வழக்கில் அழைக்கப்படும் திருக்கோயில், ஒரு புகழ்பெற்ற தேவார & திருவாசக வைப்புக்கோயிலாகும். இங்குள்ள கருவறை உடையவரின் கீழே திருநீற்று நிலையிலிருக்கும் பெருமானை, "பொதியிலான்" என்றழைத்துள்ளார் காழியூர் பிள்ளையார். இத்திருவிடத்தினை "பொதியின் மலை" என்றழைத்துள்ளார் அப்பர் பெருமான்.

இப்பெயர்களின் உட்பொருளை சற்று பார்ப்போம்.

🌷 பொதியிலான்

> பொதி + இலான் -> சுமை + இல்லாதவன்

"நான் இன்னார்" என்ற எண்ணம் முதற்கொண்டு நாம் சேர்த்து வைத்திருக்கும் தளைகள் யாவும் சுமைதான். இவ்வுடையவரின் கீழே திருநீற்று நிலையிலிருக்கும் பெருமான், எந்த சுமைகளும் (தளைகளும்) இல்லாதவர் என்பதால் பொதியிலான் என்றழைத்துள்ளார் பிள்ளையார்.

🌷 பொதியின் மலை

பொதி என்ற சொல்லுக்கு பல பொருட்களுண்டு. அவற்றில் நிறைவு (முழுமை) & சுமை ஆகியவற்றை பொருத்திப் பார்ப்போம்.

அ. நிறைவு (முழுமை)

> பொதியின் மலை - நிறைவின் / முழுமையின் மலை.

நிறைவானது / முழுமையானது எது? உள்ளபொருள்!

உள்ளபொருளின் மலை / உள்ளபொருள் இருக்கும் மலை.

ஆ. சுமை

> பொதி - சுமை - தளை - எண்ணங்கள்.

எண்ணம் என்பது அன்னை மாயையின் கூறாகும். எனில், பொதி என்ற சொல் அன்னையை குறிக்கும்.

> மலை என்ற சொல்லுக்கு ஆண் என்றொரு பொருளுண்டு.

>> பொதியின் மலை - அன்னையின் மணாளன் - சிவ பெருமான்!

பொதி என்ற சொல்லுக்கு நிறைவு என்று பொருள் கொள்ளும்போது பொதியின் மலை என்ற பெயர் இடத்தை குறிக்கிறது!சுமை என்று பொருள் கொள்ளும்போது இறைவனை குறிக்கிறது!!

oOo

எவ்வாறு அண்ணாமலை என்ற பெயர் அங்கு குடிகொண்டிருக்கும் பெருமான், மலை மற்றும் ஊரை குறிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறதோ, அவ்வாறு பொதியின் மலை என்ற பெயரை பயன்படுத்தினால் பொருத்தமாகவிருக்கும்.

oOOo

பொதியின் மலையை வணங்குவோம்.
பொதியிலா நிலையை எய்துவோம். 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻