Thursday, June 4, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #35: சிவபெருமானைத் தம்பிரான் தோழர் தூது அனுப்பியது - சிறு விளக்கம்

பாடல் தனைவிரும்பிப் பாவலர்க்கா கப்பரவை
வீடு தனக்குஇருகால் மேவியே - கூட
இணக்குமலை தன்புகழை எண்திசைகள் தோறும்
மணக்குமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #35

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

🔸பாடல் ... இணக்குமலை - சுந்தரமூர்த்தி நாயனாருக்காக 🌺🙏🏽 பரவை நாச்சியாரிடம் இறைவன் தூது சென்று வரலாறு

இது வரையில் பார்த்த 35 பாடல்களில் 2 இடங்களில் சுந்தரமூர்த்தி நாயனாரைக் குறிப்பிடுகிறார் குரு நமச்சிவாயர். 🌺🙏🏽

3வது பாடலில், "ஆரூரன் போற்றச் சிறந்தமலை" என்றார். நாயனார் பல திருத்தலங்களுக்கு சென்றுவந்தாலும், அவர் பெரிதும் விரும்பியது கமலாலயம் எனப்படும் திருவாரூரைத்தான். அதாவது, திருவாரூரில் மூலவருக்கு கீழே சமாதியாகி உள்ள கமலமுனி சித்தரைத்தான் 🌺🙏🏽. ஆகையால், சிறந்தமலை என்பது பொதுவாக சிவபரம்பொருளைக் குறித்தாலும், இங்கு கமலமுனி சித்தரைத்தான் குறிக்கிறது என்பது என் கருத்து. ஏனென்பதை பின்வரும் பத்திகள் உணர்த்தும்.

இந்த 35வது பாடலில், நாயனாரையும் அவர் தம் மனைவியையும் இணைத்த மலை என்று பாடியுள்ளார். உடனே, சடைமுடி, நீல உடல், புலித்தோல், பிறைநிலவு, முத்தலை சூலம் (திரிசூலம்) கொண்ட ஒரு உருவும் பரவை நாச்சியரைச் சென்று சந்தித்தது என்று நாம் கற்பனை செய்து கொள்வோம். 😁 இது உண்மையல்ல. பகவான் ரமணர் 🌺🙏🏽 போன்று நிலைபேற்றிலுள்ள (சிவ நிலையில் உள்ள) முனிவர் (சிவன்) ஒருவர் 🌺🙏🏽 தூது சென்றிருக்கிறார். இவர் போன்று நாயனார் வரலாற்றில் பலர் வருவர். சில எடுத்துக்காட்டுகள்:

🌺🙏🏽 திருக்கச்சூரில் நாயனாருக்காக ஊருக்குள் சென்று உணவு பெற்று வந்தவர். இவரது சமாதி திருத்தல வளாகத்துக்குள் உள்ளது.

🌺🙏🏽 திருப்பேரூருக்கு நாயனார் சென்ற போது நிலத்தை உழுதுகொண்டு இருந்தவர். இவரே திருப்பேரூர் திருத்தல மூலவர்.

(ஏன் திரும்பத் திரும்ப சமாதி விபரங்களை எனது இடுகைகளில் பதிவிடுகிறேன் என்றால் இந்த அடிப்படை உண்மை எல்லோரையும் போய்ச்சேர வேண்டும். கேள்விகள் எழ வேண்டும். சிந்தனை வளமாக வேண்டும். இது ஒன்றே நம் சமயத்தை காக்கும். இந்தப் பாடல் எழுதப்பட்ட காலத்தில், இப்பாடலைக் கேட்டவரும் படித்தவரும் மேற்படி நான் எழுதியிருப்பது போன்று தான் சிந்தித்திருப்பார்கள். ஆனால், இன்று.....? 😔 எனவேதான் திரும்பத் திரும்ப பதிவிடுகிறேன்.)

இந்த வரிகளில் இன்னொரு சிந்திக்க வேண்டிய பொருள் உள்ளது. நாயனார் போற்றிய கமலமுனி சித்தரையும், நாயனாருக்காக தூது சென்றவரையும் சிவபரம்பொருளாகக் கண்ட குரு நமச்சிவாயர், நாயனாரை அப்படிக் காணவில்லை. புலவராகத்தான் காண்கிறார். எனில், "நாயனார் மெய்யறிவாளர் இல்லையா?" என்ற கேள்வி எழும். திருவெண்ணெய்நல்லூரில் முதன் முறையாக சிவநிலையை துய்த்தவர், பின்னர் அவ்வப்போது, வெவ்வேறு திருத்தலங்களில் துய்த்துள்ளார். இறுதியாக, திருவஞ்சைக்களத்தில் நிரந்தர நிலைபேற்றினை அடைந்து சதாசிவமாகியுள்ளார். முனிபெருமானை தூது அனுப்பிய காலத்தில் நாயனார் அலைபேறில் இருந்திருக்க வேண்டும். (முனிபெருமான் நாயனாருக்கும் நாச்சியாருக்கும் நன்கு தெரிந்தவராக இருந்திருக்கவேண்டும்) ஆகையால்தான், அவரை புலவராக மட்டும் காண்கிறார் குரு நமச்சிவாயர்.

இப்படி நான் எழுதுவது நாயனாரின் அருமை பெருமைகளை குறைத்துக் கூறுவதாகாது. மாறாக, நிலைபேறு - அலைபேறு என மாறி மாறி பயணிப்போருக்கு பெரும் ஆறுதலாகவும், உதவியாகவும் இருக்கும். மேலும், இந்த விளக்கம், "நாயனார் தனது சுயநலத்திற்காக சிவபெருமானை தூது அனுப்பியது சரியா?" என்று கேள்வி கேட்கும் பகுத்தறிவு மா-மாக்களுக்குப் பதிலாகவும் அமையும். 👊🏽😌

தம்பிரான் தோழர் அடியார்க்கும் அடியேன்!! 🌺🙏🏽

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

No comments:

Post a Comment