Friday, April 22, 2016

வாழ நினைத்தால் வாழலாம்!!


(தினமலர் - சென்னை - 21/04/2016)

இந்த செய்தி என்னை மிகவும் பாதித்ததால், எனது கருத்துப் பதிவாகவும் மற்றும் இது போன்று பிரச்சினையுள்ளவர்களுக்கு தீர்வும் காண விழைந்ததன் விளைவே இந்த இடுகை!

"சேர்ந்து வாழவும் முடியவில்லை; பிரித்து விடவோ, பிரிந்து விடவோ முடியவில்லை" என்ற நிலையில் தான் பெரும்பாலானோர் வாழ்கிறார்கள். இந்நிலையில், தானாகவே மனைவி பிரிந்துவிட்டாள் எனும் போது, இவர் போன்றவர்கள் வாழ்க்கையை திரும்பவும் புதியதாக ஆரம்பிக்கலாம். தேவையில்லாத உறவுகளையும் மனிதர்களையும் தூக்கி எறிந்துவிட்டு, புத்துணர்ச்சியோடு தொடங்கலாம். இந்த வயதில் வாழ்க்கை என்றால் என்ன, யார் வேண்டும், என்ன வேண்டும் போன்ற கேள்விகளுக்கு ஒரளவு பதில்களும் கண்டுபிடித்திருப்பார். எத்தனை பேருக்கு தங்கள் வாழ்க்கையை மீண்டும் ஆரம்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும்? அப்படி வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் எத்தனை பேர் அதே வாழ்க்கைக்குத் திரும்புவர்? 1 சதவீத மக்கள் கூட தங்களின் பழைய வாழ்க்கைக்குத் திரும்பமாட்டர். எனில், இவர் ஒர் அருமையான வாய்ப்பை இழந்துவிட்டார் எனலாம்.

குழந்தைகளை பராமரிக்க சிரமபட்டிருக்கிறார் என்கிறது செய்தி. வளர்ந்த குழந்தைகளை பராமரிப்பதில் என்ன சிரமம்? பெரும்பாலும் ஆண்களுக்கு சமைப்பது தான் பிரச்சினை. கோவை போன்ற நகரத்தில் அதுவும் இல்லை. ரோட்டு சாப்பாடு, வீட்டு சாப்பாடு, நட்சத்திர சாப்பாடு என அனைத்தும் கிடைக்கும்.

கோவையைப் பொறுத்தவரை இன்னொரு சிறப்பு, நகரம், கிராமம், மலை & காடு என 4 விதமான நிலப்பரப்புகள் அருகருகே உள்ளன. நகர வாழ்க்கையை உதறிவிட்டு வேறு வாழ்க்கையை முயற்சித்திருக்கலாம்.

பெரும்பாலான மக்களுக்கு ஜாதக அறிவில்லை. அடிப்படை விஷயங்களாவது தெரிந்து கொள்ளவேண்டும். 7-ஆம் இடம் தான் ஒருவரின் வாழ்க்கைத்துணை & தொழில் பங்குதாரரைக் காட்டும். வாழ்க்கைத்துணை சரியாக அமையாதவர்கள், யாரையும் பங்குதாரராக சேர்க்கக் கூடாது. சேரவும் கூடாது. முதல் துணையை 7-ஆம் இடமும், இரண்டாவது துணையை 9-ஆம் இடமும் காண்பித்தாலும், 7-ஆம் இடத்தின் அதாவது முதல் துணையின் குணாதிசயங்கள் இரண்டாவது துணையிடமும் இருக்கும். ஆகையால், முதல் துணை சரியாக அமையாதவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன், தகுந்த ஆலோசனைகளுக்குப் பிறகு இரண்டாவது துணையைத் தேடலாம். என்னைப் பொறுத்தவரை, முதல் துணை கொடுமையானவராக அமைந்தால், மேற்கொண்டு துணையில்லாமல் வாழ்வதே நிம்மதி. இந்த அறிவிருந்திருந்தால், இவர் இரண்டாவது துணையை தவிர்த்திருக்கலாம்.

அடுத்தது, "சமூகத்தின் பார்வை". ஒரு சமூகத்தோடு தான் நாம் வாழ்ந்தாக வேண்டும். தனியாக வாழ முடியாது. அதே நேரத்தில், ஒரளவு தான் "சமூகத்திற்காக" என்ற வார்த்தை நம் வாழ்க்கையில் இடம் பெற வேண்டும். மேலும், வாழ்க்கைத்துணை சரியாக அமையப் பெறாதவருக்கு சமூகமும் சரிவர அமையாது. ஆகையால், அப்படிப்பட்டோர் சமூகத்தில் "தாமரை இலை தண்ணீர்" போல வாழ்ந்துவிட்டுப் போகவேண்டும்.

ஆண், பெண் இருவருமே வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்படி அவர்களை வளர்க்க வேண்டியது இன்றைய சூழலில் ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். இது ஆணின் வேலை, இது பெண்ணின் வேலை என்று எதுவும் கிடையாது. அப்படி இவர் வளர்ந்திருந்தால், குழந்தைகளை பராமரிப்பதில் சிரமப்பட்டிருக்கமாட்டார்.

எல்லா துணைகளிலும் சிறந்த துணை இறைவனே என்பதை நம் பெரியோர், "நற்றுணையாவது நமச்சிவாயமே" என இரு வார்த்தைகளில் அருமையாகச் சொல்லியிருக்கின்றனர். அக்கால குருகுல கல்விமுறை இருந்திருந்தால், இந்த வார்த்தைகளின் பொருள் அவருக்குத் தெரிந்திருக்கும். அப்படித் தெரிந்திருந்தால், விட்டுப்போன துணைக்காக உடலை விட்டுப் போயிருக்கமாட்டார்.

posted from Bloggeroid

No comments:

Post a Comment