Saturday, February 11, 2023

தைப்பூசம் - பாம்புக்காவடி - சிறுவிளக்கம்


காணொளி: கடந்த தைப்பூசத்தன்று திருச்செந்தூர் கடற்கரையில் நடந்த நிகழ்வு. இத்துடன் சுற்றி வந்த உரையை இவ்விடுகையின் கீழே இணைத்துள்ளேன்.

oOo

காலமாற்றத்தால் சடங்குகள் எவ்வளவு தூரம் திரிந்துபோகின்றன என்பதற்கு இந்த பாம்புக்காவடி ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்!

பாம்பிற்கும் [கல்] உப்பிற்கும் ஆகாது. பாம்பு நடமாட்டம் மிகுதியாக உள்ள பகுதிகளில் வாழ்வோர், தங்களது வீட்டைச் சுற்றி சரளைக்கற்கள் அல்லது கல்லுப்பு போட்டுவைப்பர். எனில், கல்லுப்பையும் பாம்பையும் சேர்த்து, ஒரே பெட்டியில் கொண்டுவந்து, கடலருகில் வைத்து, திறந்துவிட்டால் என்னவாகும்? அது, "ஆளைவிடுங்கடா, சாமி" என்று தலைதெறிக்க கடலுக்குள் போய்விடும்!

(சுற்றியிருப்பவர்களுக்கு தீங்கு ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு.)

> காவடி - உடல்

> பாம்பு - மனம்

> கடல் - வையகம்

> கடலுக்குள் பாம்பை விடுவது - மனமெனும் பாம்பை வையகத்திற்குள் விட்டுவிடுவது

> விட்டுவிட்டால் என்னவாகும்?
நாம் மட்டுமிருப்போம். நாமாக இருப்போம். இதுவே வீடுபேறாகும்.

> மனதை எப்படி விடமுடியும்?

எளிய பதில்: மனதை கண்டுகொள்ளாமல் விட்டால் போதும்.

பகவான் திரு இரமண மாமுனிவரின் 🌺🙏🏽🙇🏽‍♂️ பதில்: ஒவ்வொரு எண்ணம் எழும்போதும், அதை பின்தொடர்ந்து செல்லாமல், "இந்த எண்ணம் யாருக்கு எழுந்தது?" என்று கேட்டு, நோக்கத்தை தன்மீதே திருப்பி வைத்துக்கொண்டால் போதும். எழுந்த எண்ணம் அடங்கிவிடும்.

oOo

"பாம்பை கடலுக்குள் விடுவது" என்ற சடங்கிற்கு எதிரான சடங்கு "நீர்நிலைகளில் காசை வீசுவது":

> நீர்நிலை (கடல், ஆறு, சில சமயம், கிணறு) - வையகம்

> காசு - மெய்யறிவு / மெய்யறிவுத் தேடல்

> காசை நீர்நிலைக்குள் வீசுவது - மெய்யறிவுத் தேடலை விட்டுவிடுவது அல்லது அடைந்த மெய்யறிவை விட்டுவிடுவது

> விட்டால் என்னவாகும்?
பொருளாதார சிந்தனை முளைக்கும்.

வேடிக்கையாக சொன்னால்: கடவுள் எனும் காசைவிட்டால், காசு எனும் கடவுள் நம்மை பற்றிக்கொள்ளும்!! 😊

oOo

காணொளியுடன் வந்த உரைச் செய்தி:

பால் காவடி , பழக் காவடி, பன்னீர்க் காவடி சர்ப்பக் காவடி என்ற பாடலில் வரும் சர்ப்பக்காவடி 🐍 இதுதான்... அரோகரா 🐓

பாம்பினைக் காவடியில் கட்டிக்கொண்டு வந்து காணிக்கை செலுத்துவது சர்ப்பக் காவடியாகும்.

சர்ப்பக்காவடி எடுப்பவர் கடும் விரதம் இருப்பார்கள். சர்ப்பக் காவடி எடுப்பவர்கள் 41 நாள் விரதம் இருப்பார்கள். அவர்கள் கனவில் ஒரு குறிப்பிட்ட பாம்பு வரும்... அது காட்டில் எந்த இடத்தில் இருக்கிறது என்று கனவில் தெரியுமாம். அவர்களும் அந்தக் காட்டில் போய் ஒரு குறிப்பிட்ட அந்த இன பாம்பை போய் பிடித்து அதை ஒரு பெட்டியில் வைத்து உப்பிட்டு கொண்டு வந்து, அதைக் காவடியாக சுமந்து வந்து திருச்செந்தூர் கடற்கரையில் விடுவார்கள். அது வேறு எங்கும் யாருக்கும் தொந்தரவு செய்யாமல் நேரே கடலின் உட் பகுதிக்கு சென்று விடுமாம். 

அந்த அரிய காட்சி இதோ🙏🙏🙏

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

Friday, February 10, 2023

திரு கபிலர் குன்று 🌺🙏🏽🙇🏽‍♂️


🌷 சங்ககாலப் புலவரான திரு கபிலரின் திருக்கோயிலாகும் - அவர் வடக்கிருந்து திருநீற்று நிலையடைந்த திருவிடமாகும்.


🌷 கபிலர் குன்று என்றழைக்கப்படும் இந்த பாறைக்கோயில், தேவாரப்பாடல் பெற்றதும், அட்டவீரட்டத் திருக்கோயில்களில் ஒன்றானதும், திரு சுந்தரமூர்த்தி நாயனார் காலத்திய ஒளவைப்பாட்டி "விநாயகர் அகவல்" பாடி, திருநீற்று நிலையடைந்ததுமான திரு வீரட்டேசுவரர் திருக்கோயிலுக்கு பின்புறம் பாயும் தென்பெண்ணை ஆற்றுக்குள் உள்ளது. (இன்று வீரட்டேசுவரர் திருக்கோயிலுக்கும் ஆற்றுக்குமிடையே பல வீடுகள் தோன்றிவிட்டன. அன்று, வெற்றிடமாக / காடாக இருந்திருக்கும்; பலர் வடக்கிருந்திருப்பர்.)

🌷 கபிலர் சங்ககாலத்திய ஒளவைப்பாட்டியின் சமகாலத்தவர். இருவரும் இணைந்து, பாரி வள்ளலின் மகள்களான அங்கவை & சங்கவைக்கு, திரு வீரட்டேசுவரர் திருக்கோயிலில் திருமணம் நடத்திவைத்தனர்.

🌺🙏🏽🙇🏽‍♂️🌺🙏🏽🙇🏽‍♂️🌺🙏🏽🙇🏽‍♂️🌺🙏🏽🙇🏽‍♂️

இனி, வடக்கிருத்தல் பற்றி சற்று பார்ப்போம்.

வடக்கிருத்தல் எனில் வடக்கு முகமாக அமர்ந்து, உணவு தவிர்த்து உயிர்விடுதல் என்று பெரும்பாலானோர் கருதுகின்றனர். இது தவறாகும்!

புற உலகிற்கு எவ்வாறு திசைகள் இருக்கின்றனவோ, அவ்வாறே நமதுடலுக்கும் திசைகள் இருக்கின்றன. இடுப்பிலிருந்து கீழேயுள்ள பகுதி தெற்கு. நெஞ்சு கூட்டின் நடுவிலிருந்து வலது பகுதி முழுவதும் கிழக்கு. நெஞ்சு கூட்டின் நடுவிலிருந்து இடது பகுதி முழுவதும் மேற்கு. தலை, முகம் & கழுத்து ஆகியவை வடக்கு.

வடக்கிருத்தல் - வடக்கில் இருத்தல் - வட பகுதியில், குறிப்பாக முகத்தில், கருத்தை வைத்திருத்தல். அதாவது, தன்மையுணர்வில் நிற்றல். தொடக்கத்தில், முயற்சியுடன் செய்யப்படும் இப்பயிற்சி, இறுதியில், நமது இயல்பாகிவிடும். புறநாட்டமென்பது அறவே அற்றுப்போகும். இத்துடன் உணவை தவிர்த்தோமானால், 2-3 வாரங்களில், உடல் இறந்துவிடும். உடல் நீங்கியபின்னர் மீதமிருப்பது... நாம் மட்டுமே. இதுவே திருநீற்று நிலையெனப்படும். இதில் நிலைபெற முதிர்ச்சிவேண்டும். இல்லையெனில்... கோவிந்தா! மீண்டும் உடல்-வையக சிறைக்குள் சிக்கிக்கொள்வோம்.

இவ்வாறு அக்குன்றின் மீது வடக்கிருந்து, தன்மையுணர்வில் நிலைபெற்று, உடல் உகுத்திருக்கிறார் கபிலர். இதை உறுதி செய்த அன்றைய பெரியோர்கள், அவரது உடலை அடக்கம் செய்து, அதன்மீது அவரது நிலையைக் குறிக்கும் சிவ அடையாளத்தை நிறுவி, சுற்றி ஒரு திருக்கோயிலை எழுப்பியுள்ளனர். அக்கோயிலும் 2,300-2,800 ஆண்டுகளாக காலவெள்ளத்தை தாங்கி நின்றுகொண்டிருக்கிறது.

வெளி விடயங்களைவிட்டு மனம்
தன்னொளி உரு ஓர்தலே உந்தீபற
உண்மை உணர்ச்சியாம் உந்தீபற

-- உபதேச உந்தியார் #16

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

Wednesday, February 8, 2023

அன்னை அகிலாண்டேசுவரி, திருவானைக்கா 🌺🙏🏽🙇🏽‍♂️



ஒரு சைவ திருக்கோயிலுக்கு வெளியே, இறைவனும் இறைவியும் இரு வேறு பொருட்களை குறிப்பர். ஆனால், ஒரு திருக்கோயிலுக்குள்ளே இருவரும் ஒருவரையே குறிப்பர். வெவ்வேறு வகையாக குறிப்பர்.

திருவானைக்கா என்ற பழம்பெரும் திருக்கோயில் திரு ஜம்பு மாமுனிவரின் 🌺🙏🏽🙇🏽‍♂️ திருவிடமாகும். திரு ஜம்புலிங்கேசுவரர் என்ற உடையவரின் கீழே திருநீற்று நிலையிலிருக்கும் அம்மாமுனிவரையே அன்னையும் குறிப்பிடுகிறார். அதாவது, அன்னையை வணங்கினாலும் ஜம்பு மாமுனிவரை வணங்கியது போலாகும். இதை புரிந்துகொள்வதற்கு மிக எளியதொரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.

நடிகர் திலகத்தின் மீது பேராவல் கொண்ட அன்பரொருவர், அவரது கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்திலிருந்து ஒரு படத்தை தன் வீட்டில் வைத்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். சிவாஜியை பற்றி அறிந்திராத வெளி மாநில / நாட்டு நபரொருவர் அப்படத்தை காண நேர்ந்து, அது பற்றி அவரிடம் கேட்டால் அவர் என்ன சொல்வார்?

"இதுதான் நடிகர் திலகம்" என்று சொன்னால் அது "ஜம்புலிங்கேசுவரர்" என்று சொல்வதற்கு சமம்.

"கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் நடித்த நடிகர் திலகம்" என்று சொன்னால் அது "அன்னை அகிலாண்டேசுவரி" என்று சொல்வதற்கு சமம்.

🌷 ஜம்புலிங்கேசுவரர் - எல்லையற்ற, மாசற்ற, மாறுபாடற்ற, செயலற்ற உள்ளபொருள்

🌷 அன்னை அகிலாண்டேசுவரி - தன்னை அண்டியவரை காத்து (அன்னையின் வலது கை) அருளும் (இடது கை), அன்பே வடிவான (வலதுகையின் மேலுள்ள கிளி) ஜம்பு மாமுனிவர்.

(கிளி என்ற சொல்லுக்கு இன்பம் என்று பொருள் கொள்வதைவிட, அன்பு என்று பொருள் கொள்வதே இங்கு பொருத்தமாகவிருக்கும். "அன்பே சிவம்" என்பது திருமூலர் வாக்காகும். 🌺🙏🏽🙇🏽‍♂️)

நமது திருக்கோயில்களை பின்வருமாறு குறிப்பிடுவர்: அருள்மிகு + அன்னையின் பெயர் + உடனுறை / உடனாய + இறைவனின் பெயர் + திருக்கோயில்

இதை சற்று மாற்றினால்,

> அன்னை + உடனுறை / உடனாய + இறைவன்

> தனித்தன்மை + உடனுறை + பொதுத்தன்மை

> ஜம்பு என்ற தனித்தன்மை உடனுறையும் உள்ளபொருள்

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

Wednesday, February 1, 2023

திருநெறிய தமிழிலுள்ள திரு கலந்த சில வசைமொழிகள்!!


- கேடு கெட்டவன்
- பொளப்பத்தவன்
- போக்கத்தவன்
- கண்டவன்
- கூறு கெட்டவன்
- வெறிச்சுப் பாக்குறான்

இன்று இச்சொற்றொடர்கள் வசைமொழியாக பயன்படுத்தப்படுகின்றன. அதுவும் எதிர்மறையான பொருளில்! ஆனால், உண்மையில், இவை நேர்மறையானவை; ஆழமான பொருள் பொதிந்தவை. சற்று பார்ப்போம்.

🔸 கேடு கெட்டவன்

கேடு எனில் குறை, தீங்கு, அழிவு என பல பொருட்களுண்டு. இவற்றோடு "கெட்டவன்" என்ற சொல்லை சேர்ப்போம்:

குறை + கெட்டவன் = குறையில்லாதவன்
தீங்கு + கெட்டவன் = தீங்கில்லாதவன்
அழிவு + கெட்டவன் = அழிவில்லாதவன்

குறையில்லாத, தீங்கில்லாத, அழிவில்லாதவர்கள் யார்? பகவான் திரு இரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ போன்ற மெய்யறிவாளர்கள்!!

🔸 பொளப்பத்தவன்

பொளப்பு -> பொழப்பு -> பிழைப்பு
பிழைப்பு + அற்றவன்

கடல்நீர் ஆவியானபிறகு மீதமிருப்பது உப்பு. வாயில் போட்டால் உவர்க்கும். உவர்'ப்பு.

லட்டு சாப்பிட்டு முடிந்தவுடன் வாயில் மீதமிருப்பது? இனிமையான சுவை. இனி'ப்பு.

"பிழைப்பு அற்றவன்" எனில் வேலையில்லாதவன். வேலை என்ற சொல்லின் உண்மையான பொருள் அசைவு. மனதை அசையவிடுவது. சிறுவயது முதல் ஓடி, ஆடி, விளையாடி, மெக்காலே கல்வி கற்று, பொருள் தேடி, திருமணம் செய்து, பிள்ளைகள் பெற்று, அவர்களை வளர்த்து, குடும்ப, சமூக, நாட்டுக் கடமைகளை சரிவர செய்துமுடித்து இறக்கும்போது அல்லது இறந்த பிறகு புரியும் மொத்தமும் தவறென்பது! 😀 தவறு -> பிழை. எஞ்சுவது, பிழை. பிழை'ப்பு.

1. பிழைப்பு + அற்றவன் எனில் பிழையில்லாதவன்.
2. பிழைப்பு + அற்றவன் -> வேலையில்லாதவன். மனதை அசையவிடும் தேவையற்றவன்.

யார் பிழையில்லாதவரும், மனதை அசையவிடும் தேவையற்றவரும் ஆவார்கள்? பகவான் போன்ற மெய்யறிவாளர்கள்!!

🔸 போக்கத்தவன்

போக்கத்தவன் -> போக்கு + அற்றவன்

வழிப்போக்கன் = வழியில் செல்பவன்
போக்கு = செல்வது / போவது

போக்கு + அற்றவன் -> போகும் தேவையற்றவன் -> வையகத்தினுள் போகும் தேவையற்றவன் -> வையகத்தினுள் மனதை செலுத்தும் தேவையற்றவன்.

யாருக்கு வையகத்தினுள் மனதை செலுத்தும் தேவையில்லை? வேறு யாருக்கு? பகவான் போன்ற மெய்யறிவாளர்களுக்கு!!

🔸 கண்டவன்

"அன்பே வா" திரைப்படத்தில், ஓரிடத்தில், "இங்க யாரெல்லாம் தங்கியிருக்காங்க?" என்று எம்ஜிஆர் கேட்க, "கண்டவனெல்லாம் தங்கியிருக்கான்; உன்னையும் சேத்து." என்று நாகேஷ் பதில் கூறுவார். "கண்டவன்" என்ற சொல்லுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இவ்வளவுதான்!

கண்டவன் -> கண்டு முடித்தவன் / கண்டுகொண்டவன்

எதை கண்டுகொண்டவன்?

தானே உள்ளபொருள் என்ற தனதுண்மையை, வையகமென்பது வெறும் காட்சிமட்டுமே என்ற பேருண்மையை கண்டுகொண்டவன்.

எங்கே கண்டுகொள்ளமுடியும்?

திருநீற்று நிலையில் (ஆரியத்தில், சமாதி). திருக்கயிலாயக் காட்சியில் ("கண்கூடாகக் காணுதல்").

யாரெல்லாம் திருநீற்று நிலைக்கு சென்றவர்கள்? யாரெல்லாம் திருக்கயிலாயக் காட்சியைக் கண்டவர்கள்?

பகவான் போன்ற மெய்யறிவாளர்கள்!!

🔸 கூறு கெட்டவன்

கூறு என்ற சொல்லுக்கு பகுதி, பிரிவு, பங்கு, தன்மை, பாலின உறுப்பு என பல பொருட்களுண்டு. இங்கு 'பிரிவு' என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

'கெட்டவன்' என்ற சொல் மேலே "கேடு கெட்டவனில்" பார்த்தது போன்று 'இல்லாதவன்' என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது, பிரிவு இல்லாதவன். அல்லது, பிரிவை உணராதவன்.

நம்மை நாம் காணும் வையகத்திலிருந்து வேறாக உணர்கிறோம். வையகத்திற்குள் நாமிருப்பதாக உணர்கிறோம். மெய்யறிவாளர்கள் அப்படி உணர்வதில்லை. அவர்களுக்குள் வையகமிருப்பதாக உணர்கிறார்கள். தமக்குள்ளிருப்பதை தம்மிலிருந்து வேறாக எவ்வாறு காணமுடியும்?

எனவே, தாம் வேறு, வையகம் வேறு என்ற பிரிவு இல்லாதவர்கள். அதாவது, கூறு கெட்டவர்கள்!

🔸 வெறிச்சுப் பாக்குறான்

"அந்த கொள்ளிக்கண்ண[ன்] வெறிச்சுப் பாக்குறதப் பாரு" போன்ற சொற்றொடர்களை கேள்விப்பட்டிருப்போம். இங்கு "வெறிச்சு" என்பது "உற்று" என்ற பொருளிலும், "கொள்ளிக்கண்ண[ன்]" என்பது "அழுக்காறு உடையவன்" என்ற பொருளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை தவறாகும்.

கொள்ளிக்கண்ணன் -> பார்வையாலேயே சுட்டெரிப்பவன்

எதை சுட்டெரிப்பவன்?
தன்னை அண்டியோரின் அறியாமையை சுட்டெரிப்பவன்.

இதற்கு சமமான ஆரியச் சொற்றொடர்: நயன தீக்கை.

வெறிச்சு -> வெறிது -> ஒன்றுமில்லாமை

ஒன்றுமில்லாமல் எப்படி பார்க்கமுடியும்? அல்லது, ஒன்றுமில்லாமையை எவ்வாறு பார்க்கமுடியும்?

சில சமயம், கண்களை திறந்தபடியே திருநீற்று நிலைக்குப் போய்விடுவார் பகவான். கண்கள் திறந்திருக்கும். ஆனால், காணுதல் எனும் தொழில் நடக்காது. அவர் திருநீற்று நிலையிலிருப்பார். அங்கு அவரை தவிர வேறொன்றுமிருக்காது. இதுவே, ஒன்றுமில்லாமையைக் காண்பதாகும். வெறிச்சுப் பார்த்தலாகும்.

oOo

ஆக, மேற்கண்ட அனைத்து சொற்றொடர்களும் மெய்யறிவாளர்களைக் குறிக்கும் ஆழ்ந்த பொருள் பொதிந்த, மேன்மையான சொற்றொடர்களாகும். எப்போது இவை வசைமொழியாக மாறியிருக்கும்?

எளிய பதில்: பொருளாதார சிந்தனை மேலோங்கிய பின்னர்.

நீண்ட பதில்: தொடர்ந்த மத & அரசியல் படையெடுப்புகள், அந்நிய இனங்களின் ஊடுறுவல், இனப்பெருக்கம், வெள்ளையர் விதைத்த பஞ்சம், இயற்கை பேரிடர்கள், பல நூற்றாண்டுகளாக தமிழரல்லாதவரின் ஆட்சி, கடந்த 60 ஆண்டுகளாக "ஊருக்குள் சேர்க்கவேக்கூடாது" என்ற வகையறாக்களின் கையில் ஆட்சி & ஏவல்... இந்த மேலான சூழ்நிலையில், மெய்யியல் சிந்தனை எங்கே மிஞ்சும்!

தற்போது நிலவும் பொருளாதார சூழல் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும். இறக்கும் தருவாயிலும்கூட ஒருவர் தனது பொருளாதாரத்தின் மீது ஒரு கண் வைத்திருக்கவேண்டிய சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறார்கள். இந்நிலையில், பொருள் தேடவேண்டிய ஒருவர் வடக்கிருத்தல், மெய்யறிவு, வீடுபேறு என்று கிடந்தால்... 😏

oOo

🔸 ஆள் அரவமின்றி

இறுதியாக, "ஆள் அரவமின்றி" என்ற சொற்றொடரை பார்ப்போம்.

ஓரிடத்தில் ஒருவருமில்லாமல், எவ்வகையான ஓசையுமில்லாமல் இருந்தால், அவ்விடம் ஆள் அரவமின்றி காணப்படுகிறதென்று சொல்வோம். ஆள் என்பது எதனை குறிக்கிறதென்று கேட்டால், "மனிதன்" என்று பதில் சொல்லுவோம். சரி, அதென்ன அரவம் (பாம்பு)? பூனை, நாய், மாடு என எத்தனையோ பழக்கப்பட்ட உயிரிகள் இருக்கையில், ஏன் அரவமென்றார்கள்?

அரவமெனில் ஓயாமல் நமக்குள் எண்ணங்களைத் தோற்றுவிக்கும் மனமாகும்! மனதை பாம்பு, அன்னை (மாயை), மாயோன் (மாயக்கண்ணன்) என்று பல வகையாக உருவகப்படுத்தியுள்ளனர். சிவபெருமானின் உச்சந்தலையில் குடிகொண்டிருக்கும் கங்கையன்னையும் மனதையே குறிப்பிடுகிறார். ஓயாமல் அவரிடமிருந்து வெளிப்படும் நீரானது, ஓயாமல் நமக்குள் தோன்றும் எண்ணங்களைக் குறிக்கும். எவ்வளவு மோசமான எண்ணமாகவிருந்தாலும், இறுதி விளைவு நல்லதாகத்தான் இருக்கும் என்ற கணக்கில், அந்நீரை மேன்மையான நீராக (புனிதநீர் - கங்கை) காண்பித்துள்ளனர்.

அடுத்து, ஆள்.

ஆள் எனில் மனிதனல்ல. "நான் இன்னார்" என்ற எண்ணமாகும்! இந்த எண்ணமே நமக்கு தனித்தன்மையைக் கொடுக்கிறது.

"நான் இன்னார்" (ஆள்) & மனம் (அரவம்) ஆகிய இரண்டும் எந்த நிலையில் காணாமல் போகின்றன? திருநீற்று நிலையில் (ஆரியத்தில், சமாதி)!!

(தூக்கத்திலும் இவ்விரண்டும் இருப்பதில்லை. ஆனால், இவை இல்லையென்பதை நாம் உணருவதில்லை. திருநீற்று நிலையில் தெளிவாக உணருவோம்.)

எனவே, ஆள் அரவமின்றி = திருநீற்று நிலை.

இவ்வாறு, ஓரிடத்தைப் பற்றி விளக்குவதற்கும், ஒருவரை திட்டுவதற்கும்கூட மெய்யியலை பயன்படுத்திய குடி, வையகத்தில் தமிழ் குடியாகத்தான் இருக்கமுடியும். மேலும், மேற்கண்ட சொற்றொடர்கள் யாவும் கற்றவர் மட்டுமே பயன்படுத்தியவையல்ல. இன்னும் சொல்லப்போனால், சில சொற்றொடர்கள் பாமரர்கள், எளியவர்கள் மட்டுமே பயன்படுத்தியவையாகும். அவ்வளவு தூரம் மெய்யியல் தமிழோடும், தமிழர்களோடும் கலந்திருந்துள்ளது. இன்னும் ஆராய்ந்தால், மெய்யியலே அன்னைத்தமிழின் உயிர்நாடியென்பது தெளிவாக விளங்கும். இவ்வளவு பண்படுவதற்கு எத்தனை ஆயிரம், இலட்சம் ஆண்டுகளாயிற்றோ!

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே! 💪🏽

oOOo

என்றுமுள தென்தமிழ் வாழ்க 🌷🙏🏽

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

Tuesday, January 17, 2023

"படம்பக்கப் பெருமான்" & "கண்கூடு" - சிறுவிளக்கம்


மிக மிக பழமையான திருவிடமான திருவொற்றியூரில் (சென்னை) குடிகொண்டிருக்கும் பெருமானின் 🌺🙏🏽🙇🏽‍♂️ பெயர்களிலொன்று "படம்பக்கப் பெருமான்" ஆகும். இந்த அருமையான தமிழ் பெயரின் பொருள்: படத்தின் பக்கமிருக்கும் பெருமான்.

எந்த படத்தின் பக்கம்? வையகம் (உலகம்) எனும் திரைப்படத்தின் பக்கம்.

திரையரங்கில் நாம் ஒருபுறம் அமர்ந்திருக்க, எதிர்புறத்திலுள்ள திரையில் காட்சிகள் தெரிவதுபோன்று, அவருக்கு வையகம் தோன்றுகிறதென்பது பொருளாகும். இப்படி தோன்றும் காட்சிக்கு திருக்கயிலாயக் காட்சியென்று பெயர்.

இக்காட்சியில் காண்பான் (அப்பன்) உண்டு; காட்சியும் (அம்மை) உண்டு. ஆனால், காட்சியில் பொய்தன்மையில்லை (மனம் / மாயை). அதாவது, தோன்றும் காட்சி "காட்சிமட்டுமே & உண்மையல்ல" என்ற அறிவுமிருக்கும். தற்போது நமக்கு தோன்றும் வையகக் காட்சியை பொய்யென்றால் நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். காட்சியின் தன்மை அப்படிப்பட்டதாகும். இதுவே, திருக்கயிலாயக் காட்சியின்போது, காட்சியை உண்மையென்றால் ஏற்றுக்கொள்ளமாட்டோம்! ஏன்? மீண்டும் மேற்கண்ட பதில்தான்: காட்சியின் தன்மை அப்படிப்பட்டதாகும்! 😊

திருக்கயிலாயக் காட்சிக்கு அன்னைத் தமிழில் ஓர் அருமையான பெயருண்டு: கண்கூடு!!

ஒன்று கண்கூடாகத் தெரிகிறது எனில் பொய்யின் கலப்பில்லாமல், உண்மை தெளிவாகப் புரிகிறதென்பது பொருளாகும். இப்பொருளை மேற்கண்ட திருக்கயிலாயக் காட்சியிலிருந்து எடுத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். எப்படியென்று பார்ப்போம்.

ஒரு தொலைநோக்கி வழியாக காண்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். ஒரு முனையிலிருந்து நாம் பார்த்துக்கொண்டிருப்போம். இன்னொரு முனையில் காட்சி தெரியும். இடையிலுள்ள தொலைநோக்கியின் உட்புறப் பகுதிகளும் தெரியும். இதே போன்றொரு அமைப்பு திருக்கயிலாயக் காட்சியின்போது தெரியும். ஒருபுறம் காணும் நாம், இன்னொருபுறம் காட்சி, இடையில் நம் கண்கள் அமைந்திருக்கும் மண்டையோட்டின் உட்பகுதி (கண்கூடு) தெரியும். இப்போது, தெள்ளத்தெளிவாக,

- நாம் உடலல்ல என்பதை உணர்வோம்
- நாம் என்றுமே நாமாகத்தான் இருந்துள்ளோம் என்பதை உணர்வோம்
- நாம் தேடியது நம்மையே என்பதை உணர்வோம்
- தோன்றும் காட்சி காட்சிமாத்திரமே - உண்மையல்ல - என்பதையும் உணர்வோம்

மொத்தத்தில், உண்மை உண்மையாகவும், பொய் பொய்யாகவும் தோன்றும். மாற்றி கருதுவதற்கு வாய்ப்பேயில்லை. இதற்கு கண்கள் அமைந்திருக்கும் கூடுகளே ஏதுவாவதால், பொய்யின் கலப்பின்றி உண்மை தெள்ளத்தெளிவாக புலப்படும் சூழ்நிலைக்கு "கண்கூடு" என்று பெயரிட்டுள்ளனர் நம் முன்னோர். 

முதன்முதலில் இந்த காட்சியைக் கண்டு மற்றவர்களுக்கு தெரியப்படுத்தியவர் ஒரு மெய்யறிவாளராகத்தான் (சிவன்) இருக்கமுடியும். அதை ஆராய்ந்து உறுதிசெய்த மற்றவர்களும் மெய்யறிவாளர்களாகவோ அல்லது உள்ளபொருளை பற்றிய அறிவுடைய ஆன்றோராகத்தான் இருக்கமுடியும். "கண்கூடு" என்ற சொல் மட்டுமல்ல; அன்னைத்தமிழின் மொத்த அடித்தளமும் இப்படித்தான் போடப்பட்டிருக்கிறது. இதனால்தான் முதல் சங்கத்தில் சிவபெருமான், முருகர், அகத்தியர் (எல்லோரும் மெய்யறிவாளர்களே) இடம்பெற்றிருந்தனர் என்று பதிவு செய்திருக்கிறார்கள்.

oOo

🌷 திருக்கயிலாயம் செல்லும் வழியிலுள்ள ஒரு குளத்தில் மூழ்கி, திருவையாற்றிலுள்ள உப்பங்கோட்டை பிள்ளை குளத்தில் (அப்பர் குட்டை) வெளிப்பட்டவுடன், திரு அப்பர் பெருமானுக்கு 🌺🙏🏽🙇🏽‍♂️ இறைவன் திருக்கயிலாயக் காட்சி கொடுத்தாரென்று படித்திருப்போம். அதாவது, மேற்கண்டவாறு வையகக் காட்சியை "கண்கூடாக" பார்த்திருக்கிறார் என்பது பொருளாகும்.

🌷 சில திருக்கோயில்களில், கருவறையினுள்ளே பின்புற சுவற்றில், (உடையவருக்கு பின்புறம்) அம்மையப்பர் திருவுருவை புடைப்பாகவோ அல்லது பாவையாகவோ (சிலையாகவோ) காணலாம். இதன் பொருள் யாதெனில், அக்கருவறையிலுள்ள உடையவரின் கீழே திருநீற்று நிலையிலிருக்கும் பெருமான், உடல் தாங்கியிருந்த காலத்தில் திருக்கயிலாயக் காட்சியை காணும் பேறு பெற்றவரென்பதாகும்.

🌷 சொக்கர் என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பெற்றவரும், பெரும் புகழ்பெற்றவருமான திரு சுந்தரானந்த பெருமானும் 🌺🙏🏽🙇🏽‍♂️ (மதுரையிலுள்ள திரு சுந்தரேசுவரர் எனும் உடையவரின் கீழே திருநீற்று நிலையிலிருப்பவர்) ஒரு படம்பக்கப் பெருமானாவார். தன் வாழ்நாளின் இறுதிவரை வையகக் காட்சியை "கண்கூடாக" காணும் பேறுபெற்றவராக இருந்திருக்கிறார்.

oOo

ஆழமான பொருள்கொண்டதும், சிந்திக்க எளிமையானதும், நம்மை செம்மையாக்கக்கூடியதுமான "படம்பக்கப் பெருமான்" போன்ற தமிழ் திருப்பெயர்களை பயன்படுத்தி பயன்பெறுவோம். பன்னெடுங்காலமாக நம் முன்னோர்கள் பாடுபட்டுச் சேர்த்த விலைமதிப்பற்ற முத்துக்களைக் காப்போம்.

சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே 💪🏽

oOOo

என்றுமுள தென்தமிழ் வாழ்க 🌷🙏🏽

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

Friday, January 13, 2023

பொங்கலோ பொங்கல்!! 😍🥳



🔥 மனதிலுள்ள குப்பைகளை போக்கி (போகி),

🍚 நமது தன்மையுணர்வாய் எக்கணமும் விளங்கும் உள்ளபொருளைப் பற்றிய மெய்யறிவைப் பொங்கவிட்டு (பொங்கல்)

⛏️ வான்புகழ் வள்ளுவன் சுட்டிக்காட்டும் உழவனாக வாழ்ந்து (யாரிடமும் இரவாமலும், வந்து இரப்போர்க்கு இல்லையென்று சொல்லாமலும்)

🛕 வேண்டுதலும் வேண்டாமையும் இல்லா நிலைபேற்றினை (சிவம்) அடைந்து, வருவதை கண்டு களித்திருப்போம் (காணும் பொங்கல்)!!

அனைவருக்கும் எனது உளங்கனிந்த போகி, பொங்கல் & உழவர் திருநாள் நல்வாழ்த்துகள்!! 🌞🌧️🐂🌾🪔🙏🏽

Wednesday, January 4, 2023

வைகுண்ட ஏகாதசி - சில சிந்தனைகள்



🌷 வைகுண்ட ஏகாதசி - திரு நம்மாழ்வார் 🌺🙏🏽🙇🏽‍♂️ உடலிலிருந்து விடுதலை (முக்தி) பெற்ற நாள்.

🌷 மண்டையோட்டின் உச்சிப்பகுதி திறந்து, அதன் வழியாக நம்மாழ்வாரின் உயிர் வெளியேறியதாக தொன்நம்பிக்கை. இதையுணர்த்தவே திருவரங்கத்து நம்பெருமாள் (விழாத்திருமேனி) பரமபதவாயில் வழியாக கொண்டுவரப்படுகிறார். கருவறை தலைக்கு சமம். பரமபதவாயில் தலையுச்சிக்கு சமம்.

🌷 நம்மாழ்வாரின் விடுதலை நிகழ்வு வெகு சிறப்பாக திருவரங்கத்தில் கொண்டாடப்பட்டாலும், அவர் திருநீற்று நிலையை அடைந்தது ஆழ்வார் திருநகரி எனப்படும் திருக்குருகூரில்தான். எனில், திருவரங்கத்தில் (உடையவருக்கு கீழே) திருநீற்று நிலையிலிருப்பது... 18 சித்தர்களில் ஒருவரான சட்டைமுனி சித்தராவார் 🌺🙏🏽🙇🏽‍♂️.

🌷 முதன்முதலில் திருவரங்கத்தில் நம்மாழ்வாருக்கு விழா எடுத்தது திருமங்கையாழ்வாராவார். ஒரு நாள் விழாவாக தொடங்கப்பட்டது, பின்னர் வந்தவர்களால் 10 நாட்கள், 20 நாட்கள் என விரிவு படுத்தப்பட்டு தற்போதைய நிலையை பிற்காலத்தில் அடைந்தது.

oOo

வைகுண்ட ஏகாதசி என்றதும் "பரமபதவாயில் வழியாக வெளியேறுவது" என்ற படி நம் நினைவுக்கு வரும்படி விழாவை வடிவமைத்திருக்கிறார்கள். இதை இரு வகையாக அணுகலாம்.

🔸 முதலில், நம்மாழ்வாரை வைத்து அணுகுவோம்:

விழாத்திருமேனி பரமபதவாயில் கடக்கும்போது, மண்டையோட்டின் உச்சிப்பகுதி திறந்து, அதன் வழியாக நம்மாழ்வார் வெளியேறினார் என்ற நிகழ்வு நம் நினைவுக்கு வரவேண்டும். நினைவு வருகிறதா?

நம்மாழ்வார் மெய்யறிவு பெற்ற / காட்டிய வழியைப் பற்றி சிந்திப்பது நல்லதா? அல்லது, அவர் வெளியேறிய வகையைப் பற்றி சிந்திப்பது நல்லதா? 

எந்த வகையில் அவர் வெளியேறியிருந்தால் என்ன? 

வேறு வகையில் அவர் வெளியேறியிருந்தால் நிலைபேற்றினை அடைந்திருக்கமாட்டாரா?

வெளியேறும் வகை அவர் கையிலாயிருந்தது? 

உடலைவிட்டு அவர் வெளியேறினாரா? அல்லது, அவரைவிட்டு உடல் விலகியதா?

🔸 அடுத்து, நம்மை வைத்து அணுகுவோம்:

வைகுண்ட ஏகாதசி என்றதும் நம் நினைவுக்கு வருவனவற்றில் ஒன்று, "பரமபதவாயில் வழியாக வெளியேறினால் வைகுண்டம் உறுதியாகக்கிட்டும்" என்ற நம்பிக்கையாகும். அதாவது, நம்மாழ்வாரைப்போன்று நமது மண்டையோட்டின் உச்சி திறந்து, அதன் வழியாக நாம் வெளியேறினால் நிலைபேறு கிட்டும் என்பது பொருளாகும். இது முற்றிலும் தவறான நம்பிக்கையாகும்.

பகவான் திரு இரமண மாமுனிவரின் 🌺🙏🏽🙇🏽‍♂️ வரலாற்றில் திரு கணபதி முனி என்றொரு ஆரியக்கவிஞர் இடம்பெறுகிறார். கடுமையாக வடக்கிருந்ததின் விளைவாக மண்டையோடு திறக்கப்பெற்றவர். ஆனால், பிறவி முடியும்போதும் பற்றுகள் மீதமிருந்ததால் அவருக்கு நிலைபேறு கிட்டவில்லை. இது பகவானே சொன்ன செய்தியாகும்.

ஆக, மண்டையோடு திறப்பதினால் பயனில்லை என்பது உறுதியாகிறது. 

oOo

"மண்டையோடு பிளந்து வெளியேறுவது" என்று வடிவமைத்ததைவிட, "உடலெனும் சிறையிலிருந்து வெளியேறுவது" என்று விழாவை வடிவமைத்திருந்தால் சிறப்பாக மட்டுமில்லாமல், பயனுள்ளதாகவும் அமைந்திருக்கும். ஏனெனில், நம்மை பற்றிய மெய்யறிவை பெறுவதென்பது ஒரு படியை கடப்பதற்கு சமமெனில், அதில் நிலைபெறுவதென்பது பத்து படிகளை கடப்பதற்கு சமமாகும்!!

பெருமாளின் திருவிறக்கக் கதைகள் யாவற்றிலும், எதிரியை அவர் தனித்து நின்றே எதிர்கொள்வார் - இரு கதைகளைத் தவிர: நரகாசுரன் & கம்சன். இருவரும் குறிப்பது... "நான் இவ்வுடல்" என்ற எண்ணத்தை! அவ்வளவு கடினமானது இந்த தப்பெண்ணத்தை விடுவதென்பது!

oOOo

யானே என்னை அறியகிலாதே
யானே என் தனதே என்றிருந்தேன்
யானே நீ என் உடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே

-- நம்மாழ்வார் 🌺🙏🏽🙇🏽‍♂️

(நம்மாழ்வாரின் இப்பாடலில் இரண்டன்மை (அத்துவைதம்) வெளிப்படுவதாக பகவான் அருளியிருக்கிறார்.)

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸