Saturday, May 14, 2022

திரு வாசவி அம்மனின் திருவுருவம் உணர்த்தும் செய்திகள்!!


எனக்கு தெரிந்த நபரொருவர், அவருக்கு கிடைத்த திரு வாசவி அம்மன் படத்தைப் பற்றி உருகிப் பேசினார். அவர் உருகிப் போனதற்கு ஏது: அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த வெள்ளியாலான புடவை! 😏

"அம்மன் வெள்ளிப்புடவை அணிந்திருந்தாலென்ன? நூல் புடவை அணிந்திருந்தாலென்ன? அவரது தோற்றம் உணர்த்தும் உண்மைகளென்ன?" என்று தொடங்கி, அவருக்கு நான் அளித்த விளக்கங்களின் தொகுப்பே இந்த இடுகை. 🙏🏽

oOo

எவ்வாறு பொருளுணர்ந்து சொல்லாத பாட்டினால் பயனில்லையோ, அவ்வாறே பொருளுணராமல் இறையுருவங்களை வணங்குவதாலும், அவைகளுக்கு செய்யப்படும் ஒப்பனைகளை & பூசைகளைக் காண்பதாலும் பயனில்லை!

🔸 இங்கு அன்னையின் உடலமைப்பு நேராக இல்லை: பாதங்களிலிருந்து இடுப்பு வரை ஒரு கோணத்திலும், இடுப்பிலிருந்து தோள்பட்டை வரை எதிர் கோணத்திலும், தோள்பட்டையிலிருந்து கழுத்து & தலை நேராகவும் உள்ளது. (முதல் படத்தில், ஒப்பனையினால் உடலமைப்பு தெளிவாக இல்லை. அடுத்த படத்தில் தெளிவாகத் தெரியும்.)


இது போன்ற கோணலான உடலமைப்பு கொண்ட இறையுருவங்கள் உணர்த்துவது: குறிப்பாக, அசைவு. உடன், மாற்றம், தோற்றம் & மறைவு.

எது அசைந்து கொண்டேயிருக்கிறது?
எது மாறிக் கொண்டேயிருக்கிறது? 
எங்கு தோற்றம் & மறைவு நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது?

காணப்படும் உலகில்!! அன்னை = உலகம்.

உலகில், எல்லாம் அசைகிறது; எதுவும் நிலையாக இல்லை; எல்லாம் மாறிக்கொண்டேயிருக்கிறது; தோற்றமும் மறைவும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.

(கோணலமைப்பிற்கு வேறொரு பொருளுமுண்டு. அதை குறிப்பிடுவதற்கான இடுகை இதுவல்ல.)

🔸 அன்னையின் கையிலிருக்கும் மலர் மொட்டு, ஒரு கணக்கில், உயிரைக் குறிக்கும். இன்னொரு கணக்கில், இந்த உலகம் நமக்கு வழங்கும் இன்பம், துன்பம் முதலிய யாவற்றையும் குறிக்கும்.

🔸 அன்னை பெண்ணாவார். அவர் ஏந்தியிருக்கும் மலர் ஆணாகும்.

மொத்தத்தில், அன்னையின் உருவம் உணர்த்துவது:

1. அசைவதிலிருந்து அசைவற்றது தோன்றுகிறது
2. மாறுவதிலிருந்து மாறாதது தோன்றுகிறது
3. நிலையற்றதிலிருந்து நிலையானது தோன்றுகிறது
4. காணப்படுவதிலிருந்து காண்பான் தோன்றுகிறான்
5. உயிரற்றதிலிருந்து உயிர் தோன்றுகிறது
6. பெண்ணிலிருந்து ஆண் தோன்றினான்

ஓர் இறையுருவம் உணர்த்தும் கருத்துகள் ஒருவருக்கு ஏற்புடையவையாக இருந்தால் அவ்வுருவத்தை வணங்கலாம்; அக்கருத்துகளைப் பற்றி தொடர்ந்து சிந்திக்கலாம். இல்லையெனில், நமக்கு ஏற்புடைய வேறொரு இறையுருவத்தை தேர்ந்தெடுக்கலாம்.

"கடவுளைக் காண்பதென்பது கடவுளை அறிவது. கடவுளை அறிவதென்பது கடவுளாய் ஆவது. கடவுளாய் ஆவதென்பது கடவுளாய் இருப்பது." -- பகவான் திரு இரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ / திரு சாதுஓம் சுவாமிகள் 🌺🙏🏽🙇🏽‍♂️.

இதன்படி, இந்த அன்னையாய் இருக்க வேண்டுமெனில் வாழ்நாள் முழுவதும் இயங்கிக் கொண்டேயிருக்கவேண்டும்! மற்றவர்களுக்கு பொருள், சேவை, அறிவு முதலானவற்றை வழங்கிக் கொண்டேயிருக்கவேண்டும்!!

(இந்த இடுகையை இதுவரை படித்தவர்களுடைய மைண்ட்வாய்ஸ், பெரும்பாலும்: இது ஆவறதில்லே! 😁)

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment