Monday, January 3, 2022

மார்கழி - மூலம் - மறைமதி நன்னாள்: ஆஞ்சநேயர் பிறந்தநாள்!


மார்கழி - மூலம் - மறைமதி நன்னாள். மனதைக் குறிக்கும் ஆஞ்சநேயர் திருவுருவத்தை வைணவர்கள் உருவாக்கிய நாள் அல்லது உருவாக்கலாம் என்ற எண்ணம் அவர்களுக்கு தோன்றிய நாள்.

ஆஞ்சநேயர் - அனுமான் - ஹனுமான் - ஹ (இறை/சிவம்) + னு (கருவி) + மான் (மனம்) = இறையை அடைய உதவும் கருவியே மனம்.

🔸 மனம் நிலையற்றது
🔸 ‎பலம் பொருந்தியது
🔸 ‎ஒரு நொடியில் பல இடங்களுக்கு சென்று வரக்கூடியது
🔸 இதன் மூலம் கிடைக்க பெறும் துய்ப்புகள் யாவும் இறுதியில் பிறவிப்பிணி நீக்கவல்லது
🔸சேவை மனப்பான்மையுடன் வாழ்வதே இக்கருவியை சிறந்த முறையில் பயன்படுத்துவதாகும்

இனி, சற்று விரிவாக பார்ப்போம்.

🌪‎ மனம் நிலையற்றது. காற்றைப் போல. எனவே, சதா தாவிக் கொண்டிருக்கும் குரங்கின் வடிவத்தைக் கொடுத்தார்கள் வைணவர்கள்.

💪 மனம் பலம் பொருந்தியது. மனதையடக்குவது என்பது அவ்வளவு எளிதல்ல. ஆகவே, அனுமானை பலசாலியாக வடிவமைத்தனர்.

🍩 உடல் உறுதியாகவும், நலத்துடனும் இருந்தால் மட்டுமே மனமும் பலமுடனும் இருக்கும். இதையே திருமூலர் 🌺🙏🏽🙇🏽‍♂️ "உடம்பாற் அழியின் உயிராற் அழிவர்..." என்ற திருமந்திரப் பாடலில் உணர்த்துகிறார். இதை உணர்த்தவே அனுமானுக்கு வடைமாலை சாற்றுகிறார்கள். வடைமாலை செய்ய பயன்படும் தோல் நீக்காத கருப்பு உளுந்து உடலுக்கு அவ்வளவு நன்மைகள் தரக்கூடியது.

🌏 மனதால் ஒரு நொடியில் பூமியின் எப்பகுதிக்கும் சென்றுவரலாம். அனுமான் ஒரே தாவலில் இலங்கை சென்றது போல.

😍 "மனம் என்பது ஓர் அதிசய சக்தி", என்று கூறுகிறார் பகவான் திரு ரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️. இதே போன்று மனதை அற்புதம், அழகு, விஷேசம், பிரமிப்பு என்றழைத்த அருளாளர்களும் உண்டு. மனம் கொடுமையானது என்று சொன்ன அருளாளர்களும் உண்டு. ஆனால், உலகம் செம்மையாக இயங்க வேண்டி, நம் முன்னோர்கள் முன்னதிற்கே முகமைத்துவம் கொடுத்தனர். இதனால் தான் சைவத்தில் மனதை (முருகர்) அழகு என்றனர். இதையொட்டி வைணவர்களும் அனுமானை அழகன் என்றனர்.

🔺 ஒரு நதியின் பயணத்தில் தோன்றும் இன்னல்கள் யாவும் அதன் பயனுக்கே - அதன் இறுதி இலக்கான கடலில் கலப்பதற்கே. இது போன்றதே உயிரிகளின் பிறவிப் பயணமும். எண்ணற்ற பிறவிகள். பிறவி தோறும் இன்னல்கள். இவை யாவும் உயிரியின் இறுதி இலக்கான நிலைபேற்றை அடைவதற்காகவே. பிறவிகள், இன்னல்கள் என அனைத்தும் ஒரு உயிரிக்கு மனதின் வழியாகவே துய்ப்பாகும். ஆக, மனம் (அனுமான்) கொண்டு வரும் யாவும் உயிரியின் பிறவிப்பிணியை போக்கி அவனை உயிர்ப்பிக்கும் (^) சஞ்சீவினி மருந்தாகும். இக்கருத்தையே அனுமான் சஞ்சீவினி மலையைக் தூக்கிக்கொண்டு பறந்து வருவது போன்ற ஓவியம் உணர்த்துகிறது.

(^ - பிறவியெடுத்தலை இறத்தல் என்றும், தன்னைத் தெளிவாக அறிதலே (மெய்யறிவு பெறுதலே) பிறத்தல் (விடுதலை பெறுதல்) என்றும் கூறுகிறார் பகவான்)

🐂 ஒரு மனிதன் இவ்வுலகில் எவ்வாறு வாழவேண்டும் என்பதை சிவன்காளை வழியாக சைவம் உணர்த்துகிறது.

விளையும் பயிரை தலைவன் எடுத்துக்கொள்ள, உழைத்த காளைக்கு வைக்கோல் மட்டுமே உணவாகக் கிடைக்கிறது. வண்டியை இழுத்து, ஏற்றப்பட்ட சுமைகளை தலைவன் விரும்பும் இடத்திற்குக் கொண்டு சேர்த்து, அவன் பெரும்பயன் அடைந்தாலும் காளை பெறுவது என்னவோ வைக்கோலும் தண்ணீரும் தான். ஆக, தனது உழைப்பால் காளை பெரிதாக பயனடையவில்லை. உழைப்பால் மட்டுமல்ல; தனது கழிவுகளாலும் அது பயனடைவதில்லை. ஆனாலும், அது உழைப்பதை நிறுத்துவதில்லை. தலைவன் இட்ட பணியை செவ்வனே செய்து முடிக்கிறது. இது போன்றே மனிதனும் வாழவேண்டும். 

அனைத்தையும் உடையவர் இறைவன். அனைத்தையும் இயக்குவதும் அவரே. நமக்கு வந்து சேர்வதை செவ்வனே செய்து முடிப்பது மட்டுமே நமது கடமையாகும். இதையே அப்பர் பெருமான் 🌺🙏🏽🙇🏽‍♂️ "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்று பாடினார். பகவானும், "எண்ணுரு (தோன்றும் எண்ணங்கள் அல்லது காணும் உருவங்கள்) யாவும் இறையுருவாம் என எண்ணி வழிபடலே (வாழ்தலே) ஈசனை (இறையை) நல்ல முறையில் வழிபடுதலாகும்" என்றார். "செய்யும் தொழிலே தெய்வம்" என்பதும், "வாழ்தலே வழிபடுதல்" என்பதும் இப்படிப்பட்ட சேவை மனப்பான்மையுடன் சிவன்காளையாக வாழ்வதையேக் குறிக்கிறது. இதே சேவை மனப்பான்மையைத் தான் திரு ராம-லட்சுமண-சீதா பிராட்டியாரின் முன் கூப்பிய கைகளுடன் தலைவணங்கும் அனுமான் உணர்த்துகிறார்.

அனுமான் பிள்ளையாருக்குப் பின்னர் வடிவமைக்கப்பட்டவர் என்பதை "பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்தது" என்ற சொலவடை வாயிலாக அறியலாம். அதாவது, தமிழர்களின் ஆதிசமயமான சைவத்தில் பிள்ளையார் வடிவமைக்கப்பட்டு, மிகவும் புகழ் பெற்றுவிட, அவருக்குப் போட்டியாகவும், அவரையும் சிவன்காளையையும் மிஞ்சும் வண்ணம் ஒரு வடிவத்தை உருவாக்க முயற்சி செய்து, இறுதியில் மனதைக் குறிக்கும் குரங்கு வடிவ அனுமானாய் முடிந்துவிட்டது. பிறகு, அறிவைக் குறிக்க கருடனை வடிவமைத்தார்கள்.

மனதைப் (அனுமானைப்) பற்றி எத்தனையோ நல்லவிதமாக சிந்தித்தாலும் ஒரு சமயத்தில் மனதை ஒதுக்கித் தள்ள வேண்டிவரும். தள்ளியும் விடுவோம். இல்லையெனில் மீண்டும் பிறவியெடுப்போம்.

ஒரு வேளை, "நான் ஏன் இன்னும் எனது மனதை ஒதுக்கித் தள்ளாமலிருக்கிறேன்?" என்று பகவானிடம் கேட்டால், பகவானின் பதில் பின்வருமாறு இருக்கும்:

"நீ பட்டது போதல. இன்னும் படவேண்டியிருக்கு."

☺️

oOOo

மனதைப் பற்றி பகவான் அருளியவற்றில் சில...

🔸 மனம் என்று தனியாக ஒரு பொருளில்லை. எண்ணங்களின் தொகுப்பே மனம்.
🔸 ‎ "நான்" என்னும் எண்ணமே அனைத்திற்கும் முதலாகும். இது தோன்றிய பிறகே உடல், உலகு என அனைத்தும் தோன்றுகிறது.
🔸 வெளிமுகமாகச் சென்று கொண்டிருக்கும் நம் கவன ஆற்றலை, நம் மீதே திருப்பி, இந்த நான் என்பது என்ன என்று கவனித்தோமேயானால், மனம் ஓட்டம் பிடித்துவிடும். 
🔸 ‎ நல்ல மனம் என்றும், கெட்ட மனம் என்றும் இரண்டு மனங்கள் இல்லை. எண்ணங்களே இரண்டு விதம். நல்ல எண்ணங்களின் வயப்படும் போது நல்ல மனம் என்றும், தீய எண்ணங்களின் வயப்படும் போது கெட்ட மனம் என்றும் அழைக்கிறோம்.
🔸 ‎ மெய்யறிவு பெறுவதற்கு முன் மனோமயமாகத் திகழ்வது, மெய்யறிவு பெற்ற பின் பிரம்மமயமாகத் திகழ்கிறது. (அதாவது இருப்பது ஒரு பொருளே. "இருக்கும் இயற்கையால் ஈச சீவர்கள் ஒரு பொருளேயாவர். உபாதியுணர்வு மட்டுமே வேறுபடுகிறது.")
🔸 ‎ மனம், ஆத்மன், சீவன், சித்ஜடகிரந்தி என எல்லாம் ஒரு பொருட் பன்மொழிகளாகும்.

(2018ல் நான் எழுதிய ஓர் இடுகையிலிருந்து சில பகுதிகளை மட்டும் இங்கு பதிவிட்டுள்ளேன் 🙏🏽)

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment