Showing posts with label ஆஞ்சநேயர். Show all posts
Showing posts with label ஆஞ்சநேயர். Show all posts

Friday, August 23, 2024

அமெரிக்காவின் 90-அடி உயர குரங்குச்சிலை!!


🔸 குரங்கு - மனம்

🔸 வானளாவிய குரங்கு - மனம், உடல், வையகம் என படைப்பு முழுவதும்.


மனமியங்கும் வரை இணைவு (அசுரத்தில், யோகம் & பீட்டரில், யூனியன்) என்பது கிடையாது. எனில், எவ்வாறு அச்சிலையை "Statue of Union" என்றழைக்கலாம்? வேண்டுமானால் "Statue of Disunion" என்றழைக்கலாம்!


- சுடர்நெறியில் (சைவத்தில்) விடை,

- தென்னாடுடையவனின் முடி மேலிருக்கும் கங்கையன்னை,

- உமைமுருகுஈசர் வடிவத்தில் முருகர்,

- இறைகுடும்ப வடிவத்தில் முருகர்,

- அன்னை வழிபாட்டில் மாயை, தவ்வை & பல அன்னை வடிவங்கள்

- பிள்ளையார் வழிபாட்டில் மூஞ்சூறு,

- முருகர் வழிபாட்டில் வள்ளி,

- பெண்குறி மதத்தில் குரங்கு & பெருமாள் (#),

- பாலைவன மதங்களில் சாத்தான் & சைத்தான்


ஆகிய அனைத்தும் மனதையே குறிக்கின்றன!


"ஏன் மனதை வெறுக்கவேண்டும்? மனம் இயங்கினாலென்ன?", போன்ற கேள்விகள் எழலாம். இதற்கான பதில்-கேள்விகள்:


💥 கொரோனாவை வைத்து பில்கேட்ஸ் பெரும் பணம் சம்பாதித்ததில் தவறென்ன இருக்கிறது?

💥 பணம் படைத்த (!) பொதுமக்களை பிழிந்து, பரம ஏழைகளான அம்பானி-அதானிகளுக்கு நம்ம ஜி வாரி கொடுப்பதில் தவறென்ன இருக்கிறது?

💥 தனது உடற்பசிக்காக, கொல்கத்தா பயிற்சி-மருத்துவரை ஒரு கொடியவன் கற்பழித்துக் கொன்றதில் தவறென்ன இருக்கிறது?

...

...


இவையெல்லாம் மனம் "நன்கு" இயங்கியதால் ஏற்பட்ட சில விளைவுகளாகும். மனதிற்கு நம் பெருமான்கள் இட்ட சில பெயர்கள்: ஆய், பேய், நச்சி, பாம்பு, கொடுங்காடு!!


மனதை போற்றக்கூடாது; வணங்கக்கூடாது. எப்பாடுபட்டாவது அதை அழிக்கவேண்டும்.


வானளாவிய குரங்குச்சிலை - 👎🏽👎🏽!!


(# - பெண்குறி மதத்தின் (நாம மதத்தின்) தொடக்க கால நிர்வாகிகள், மனதை குறிக்க பெருமாளை பயன்படுத்தினார்கள். பின்னர் வந்தவர்கள், பெருமாள் வடிவத்திற்கு பதவி உயர்வு கொடுத்துவிட்டு, மனதை குறிக்க குரங்கை பயன்படுத்தினார்கள். சுடர்நெறியுடன் இணைந்த பிள்ளையார் வழிபாட்டிற்கு போட்டியாக கொண்டுவரப்பட்டது தான் குரங்கு வடிவம் -"பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்தது"!!)


oOOo


கண்ணனே அச்சிலையை செய்தான். 

கண்ணனே இவ்விடுகையை எழுதினான்.


கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️


திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️


🪻🌼🪷🌼🪻

Friday, January 12, 2024

மார்கழி-மூலம்: திரங்கன்முகவன் என்ற வடிவம் வெளியிடப்பட்ட நாள்!


திரங்கன்முகவனின் (அசுரத்தில், ஆஞ்சநேயர், அனுமான்) மொத்த வரலாறு: பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காய் முடிந்தது!

💥 சைவத்துடன் இணைந்துவிட்ட பிள்ளையார் வழிபாடு, மக்களிடையே ஹிட் அடித்ததால், அதற்கு போட்டியாக நாமப்பேர்வழிகள் வடிவமைத்ததுதான் இந்த திரங்கன்முகவன். இப்படியொரு வடிவத்தை வடிக்கலாமென்ற எண்ணம் அவர்களுக்கு தோன்றிய நாளை, அல்லது, இப்படியொரு வடிவத்தை வடித்து, அவர்கள் வெளியிட்ட நாளை, இவ்வடிவத்தின் பிறந்தநாளாக கொண்டாடுகிறார்கள்.

💥 மாயையை பெண்ணாக பார்த்தால் அன்னை; ஆணாக பார்த்தால் பெருமாள். அதாவது, பெருமாள் அசையும் யாவற்றையும் (மனம், உடல், வையகம், படைப்பு) குறிக்கிறார். ஏற்கனவே மனதை குறிக்க பெருமாள் என்ற வடிவம் இருக்கும்போது, திரங்கன்முகவன் என்ற இன்னொரு வடிவம் எதற்கு தேவைப்படுகிறது?

💥 அத்தனை அநீதிகளுக்கும் அட்டூழியங்களுக்கும் அடிப்படை மனமாகும். எப்பாடுபட்டாவது மனதை அழிக்க வேண்டுமென்று அனைத்து மதங்களும் வலியுறுத்தும்போது, மனதை போற்றலாமா? வணங்கலாமா? வலுப்படுத்தலாமா (உளுந்துவடை, வெற்றிலை, ஜிலேபி மாலைகள்)?

💥 ஒழுங்காக போய்க்கொண்டிருந்த அயோத்தி இராமர் கோயில் நிகழ்ச்சி ஏற்பாடுகள், ஒருவரது மனம், "தான் சிலையை நிறுவவேண்டும்" என்று நினைத்ததால், என்னவாயிற்று என்பது அனைவருக்கும் கண்கூடாகும்.

👊🏽 உள்ளபொருளை உள்ளபொருளாக அறிந்திருந்த மக்கள்திரளை வெற்றுச் சிலைவணங்கிகளாக, கண்டதையும் வணங்கும் முட்டாள்களாக, கிடைத்தற்கரிய மனிதப்பிறவியை வீண் செய்யும் ஏமாளிகளாக மாற்றியது... ஒரு கூட்டத்தின் மனமேயாகும்!

🌷 திரு கௌதம புத்தரை திருநீற்று நிலையிலிருந்து வெளித் தள்ளுவதற்காக, அவரது திரங்கன்முகவன் (மனம்), "வையகத்தையே ஆளும் அளவிற்கு உன்னை உயர்த்துகிறேன்" என்று தூண்டில் போட்டதாம். தூண்டிலில் மாட்டியிருந்தால் அவரது நிலை என்னவாகியிருக்கும்?

🌷 திரங்கன்முகவனே அனைத்து தொல்லைகளுக்கும் மாறலாகும் (அசுரத்தில், காரணமாகும்). அதை வணங்கக்கூடாது. அழிக்கவேண்டும்.

மனதின் உருவை மறவாது உசாவ
மனமென ஒன்றில்லை உந்தீபற
மார்க்கம் நேர் ஆர்க்கும் இது உந்தீபற

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Monday, January 3, 2022

மார்கழி - மூலம் - மறைமதி நன்னாள்: ஆஞ்சநேயர் பிறந்தநாள்!


மார்கழி - மூலம் - மறைமதி நன்னாள். மனதைக் குறிக்கும் ஆஞ்சநேயர் திருவுருவத்தை வைணவர்கள் உருவாக்கிய நாள் அல்லது உருவாக்கலாம் என்ற எண்ணம் அவர்களுக்கு தோன்றிய நாள்.

ஆஞ்சநேயர் - அனுமான் - ஹனுமான் - ஹ (இறை/சிவம்) + னு (கருவி) + மான் (மனம்) = இறையை அடைய உதவும் கருவியே மனம்.

🔸 மனம் நிலையற்றது
🔸 ‎பலம் பொருந்தியது
🔸 ‎ஒரு நொடியில் பல இடங்களுக்கு சென்று வரக்கூடியது
🔸 இதன் மூலம் கிடைக்க பெறும் துய்ப்புகள் யாவும் இறுதியில் பிறவிப்பிணி நீக்கவல்லது
🔸சேவை மனப்பான்மையுடன் வாழ்வதே இக்கருவியை சிறந்த முறையில் பயன்படுத்துவதாகும்

இனி, சற்று விரிவாக பார்ப்போம்.

🌪‎ மனம் நிலையற்றது. காற்றைப் போல. எனவே, சதா தாவிக் கொண்டிருக்கும் குரங்கின் வடிவத்தைக் கொடுத்தார்கள் வைணவர்கள்.

💪 மனம் பலம் பொருந்தியது. மனதையடக்குவது என்பது அவ்வளவு எளிதல்ல. ஆகவே, அனுமானை பலசாலியாக வடிவமைத்தனர்.

🍩 உடல் உறுதியாகவும், நலத்துடனும் இருந்தால் மட்டுமே மனமும் பலமுடனும் இருக்கும். இதையே திருமூலர் 🌺🙏🏽🙇🏽‍♂️ "உடம்பாற் அழியின் உயிராற் அழிவர்..." என்ற திருமந்திரப் பாடலில் உணர்த்துகிறார். இதை உணர்த்தவே அனுமானுக்கு வடைமாலை சாற்றுகிறார்கள். வடைமாலை செய்ய பயன்படும் தோல் நீக்காத கருப்பு உளுந்து உடலுக்கு அவ்வளவு நன்மைகள் தரக்கூடியது.

🌏 மனதால் ஒரு நொடியில் பூமியின் எப்பகுதிக்கும் சென்றுவரலாம். அனுமான் ஒரே தாவலில் இலங்கை சென்றது போல.

😍 "மனம் என்பது ஓர் அதிசய சக்தி", என்று கூறுகிறார் பகவான் திரு ரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️. இதே போன்று மனதை அற்புதம், அழகு, விஷேசம், பிரமிப்பு என்றழைத்த அருளாளர்களும் உண்டு. மனம் கொடுமையானது என்று சொன்ன அருளாளர்களும் உண்டு. ஆனால், உலகம் செம்மையாக இயங்க வேண்டி, நம் முன்னோர்கள் முன்னதிற்கே முகமைத்துவம் கொடுத்தனர். இதனால் தான் சைவத்தில் மனதை (முருகர்) அழகு என்றனர். இதையொட்டி வைணவர்களும் அனுமானை அழகன் என்றனர்.

🔺 ஒரு நதியின் பயணத்தில் தோன்றும் இன்னல்கள் யாவும் அதன் பயனுக்கே - அதன் இறுதி இலக்கான கடலில் கலப்பதற்கே. இது போன்றதே உயிரிகளின் பிறவிப் பயணமும். எண்ணற்ற பிறவிகள். பிறவி தோறும் இன்னல்கள். இவை யாவும் உயிரியின் இறுதி இலக்கான நிலைபேற்றை அடைவதற்காகவே. பிறவிகள், இன்னல்கள் என அனைத்தும் ஒரு உயிரிக்கு மனதின் வழியாகவே துய்ப்பாகும். ஆக, மனம் (அனுமான்) கொண்டு வரும் யாவும் உயிரியின் பிறவிப்பிணியை போக்கி அவனை உயிர்ப்பிக்கும் (^) சஞ்சீவினி மருந்தாகும். இக்கருத்தையே அனுமான் சஞ்சீவினி மலையைக் தூக்கிக்கொண்டு பறந்து வருவது போன்ற ஓவியம் உணர்த்துகிறது.

(^ - பிறவியெடுத்தலை இறத்தல் என்றும், தன்னைத் தெளிவாக அறிதலே (மெய்யறிவு பெறுதலே) பிறத்தல் (விடுதலை பெறுதல்) என்றும் கூறுகிறார் பகவான்)

🐂 ஒரு மனிதன் இவ்வுலகில் எவ்வாறு வாழவேண்டும் என்பதை சிவன்காளை வழியாக சைவம் உணர்த்துகிறது.

விளையும் பயிரை தலைவன் எடுத்துக்கொள்ள, உழைத்த காளைக்கு வைக்கோல் மட்டுமே உணவாகக் கிடைக்கிறது. வண்டியை இழுத்து, ஏற்றப்பட்ட சுமைகளை தலைவன் விரும்பும் இடத்திற்குக் கொண்டு சேர்த்து, அவன் பெரும்பயன் அடைந்தாலும் காளை பெறுவது என்னவோ வைக்கோலும் தண்ணீரும் தான். ஆக, தனது உழைப்பால் காளை பெரிதாக பயனடையவில்லை. உழைப்பால் மட்டுமல்ல; தனது கழிவுகளாலும் அது பயனடைவதில்லை. ஆனாலும், அது உழைப்பதை நிறுத்துவதில்லை. தலைவன் இட்ட பணியை செவ்வனே செய்து முடிக்கிறது. இது போன்றே மனிதனும் வாழவேண்டும். 

அனைத்தையும் உடையவர் இறைவன். அனைத்தையும் இயக்குவதும் அவரே. நமக்கு வந்து சேர்வதை செவ்வனே செய்து முடிப்பது மட்டுமே நமது கடமையாகும். இதையே அப்பர் பெருமான் 🌺🙏🏽🙇🏽‍♂️ "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்று பாடினார். பகவானும், "எண்ணுரு (தோன்றும் எண்ணங்கள் அல்லது காணும் உருவங்கள்) யாவும் இறையுருவாம் என எண்ணி வழிபடலே (வாழ்தலே) ஈசனை (இறையை) நல்ல முறையில் வழிபடுதலாகும்" என்றார். "செய்யும் தொழிலே தெய்வம்" என்பதும், "வாழ்தலே வழிபடுதல்" என்பதும் இப்படிப்பட்ட சேவை மனப்பான்மையுடன் சிவன்காளையாக வாழ்வதையேக் குறிக்கிறது. இதே சேவை மனப்பான்மையைத் தான் திரு ராம-லட்சுமண-சீதா பிராட்டியாரின் முன் கூப்பிய கைகளுடன் தலைவணங்கும் அனுமான் உணர்த்துகிறார்.

அனுமான் பிள்ளையாருக்குப் பின்னர் வடிவமைக்கப்பட்டவர் என்பதை "பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்தது" என்ற சொலவடை வாயிலாக அறியலாம். அதாவது, தமிழர்களின் ஆதிசமயமான சைவத்தில் பிள்ளையார் வடிவமைக்கப்பட்டு, மிகவும் புகழ் பெற்றுவிட, அவருக்குப் போட்டியாகவும், அவரையும் சிவன்காளையையும் மிஞ்சும் வண்ணம் ஒரு வடிவத்தை உருவாக்க முயற்சி செய்து, இறுதியில் மனதைக் குறிக்கும் குரங்கு வடிவ அனுமானாய் முடிந்துவிட்டது. பிறகு, அறிவைக் குறிக்க கருடனை வடிவமைத்தார்கள்.

மனதைப் (அனுமானைப்) பற்றி எத்தனையோ நல்லவிதமாக சிந்தித்தாலும் ஒரு சமயத்தில் மனதை ஒதுக்கித் தள்ள வேண்டிவரும். தள்ளியும் விடுவோம். இல்லையெனில் மீண்டும் பிறவியெடுப்போம்.

ஒரு வேளை, "நான் ஏன் இன்னும் எனது மனதை ஒதுக்கித் தள்ளாமலிருக்கிறேன்?" என்று பகவானிடம் கேட்டால், பகவானின் பதில் பின்வருமாறு இருக்கும்:

"நீ பட்டது போதல. இன்னும் படவேண்டியிருக்கு."

☺️

oOOo

மனதைப் பற்றி பகவான் அருளியவற்றில் சில...

🔸 மனம் என்று தனியாக ஒரு பொருளில்லை. எண்ணங்களின் தொகுப்பே மனம்.
🔸 ‎ "நான்" என்னும் எண்ணமே அனைத்திற்கும் முதலாகும். இது தோன்றிய பிறகே உடல், உலகு என அனைத்தும் தோன்றுகிறது.
🔸 வெளிமுகமாகச் சென்று கொண்டிருக்கும் நம் கவன ஆற்றலை, நம் மீதே திருப்பி, இந்த நான் என்பது என்ன என்று கவனித்தோமேயானால், மனம் ஓட்டம் பிடித்துவிடும். 
🔸 ‎ நல்ல மனம் என்றும், கெட்ட மனம் என்றும் இரண்டு மனங்கள் இல்லை. எண்ணங்களே இரண்டு விதம். நல்ல எண்ணங்களின் வயப்படும் போது நல்ல மனம் என்றும், தீய எண்ணங்களின் வயப்படும் போது கெட்ட மனம் என்றும் அழைக்கிறோம்.
🔸 ‎ மெய்யறிவு பெறுவதற்கு முன் மனோமயமாகத் திகழ்வது, மெய்யறிவு பெற்ற பின் பிரம்மமயமாகத் திகழ்கிறது. (அதாவது இருப்பது ஒரு பொருளே. "இருக்கும் இயற்கையால் ஈச சீவர்கள் ஒரு பொருளேயாவர். உபாதியுணர்வு மட்டுமே வேறுபடுகிறது.")
🔸 ‎ மனம், ஆத்மன், சீவன், சித்ஜடகிரந்தி என எல்லாம் ஒரு பொருட் பன்மொழிகளாகும்.

(2018ல் நான் எழுதிய ஓர் இடுகையிலிருந்து சில பகுதிகளை மட்டும் இங்கு பதிவிட்டுள்ளேன் 🙏🏽)

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Saturday, December 1, 2018

அனுமாரையும் குடும்பி ஆக்கிவிட்டார்கள்!! 😀


மனதைக் குறிக்க வைணவர்கள் உருவாக்கிய உருவம் தான் #ஆஞ்சநேயர் / #அனுமார்.

அலைபாயுதல் என்பது மனதின் இயல்பு. இதனால் தான் குரங்கைக் குறியீடாக எடுத்துக்கொண்டனர். இப்போது இந்த இயல்பை தனியாகப் பிரித்து, #சுவர்ச்சலா தேவி என்ற பெண்ணாக்கி, அப்பெண்ணிற்கு மனித முகத்தை வேறு கொடுத்துள்ளனர். அலைபாயும் தன்மை இல்லையெனில் மனம் மனமாகாது. அது "திரு" என்றாகும் வாய்ப்புள்ளது (திரு - நிலைத்த; நிலைபேறு - மெய்யறிவு - இறை)!!

"ஒரு நீர் நிலையில் உள்ள நீர் அசையாமலும் தெளிவாகவும் இருந்தால் நீர் தெரியாது. உள்புறம் மட்டுமே தெரியும்." என்கிறார் #பகவான் #ஸ்ரீரமணர் (பகவத் வசனாம்ருதம், எண் # 146; இதே விளக்கத்தை குங்ஃபூ பாண்டா - பாகம் 1 என்ற ஹாலிவுட் திரைப்படத்திலும் பயன்படுத்தியிருப்பர் (ஆசான் ஊக்வே ஆசான் ஷிஃபூவிற்கு மெய்யறிவு பற்றி விளக்கமளிக்கும் காட்சி)). இது போன்றே மனதின் அலைபாயும் தன்மையை விளக்கிவிட்டால் அங்கே மனம் இருக்காது; இறை வெளிப்படவே வாய்ப்புள்ளது. அப்படி வெளிப்படுங்கால், இணைப்பு படத்தின் பொருள் பெருந்தவறாகிவிடும் - பெருமாளும் சுவர்ச்சலா தேவியும் அமர்ந்திருப்பது போலாகிவிடும்!! 😀

இறையுருவம் என்பது ஒரு காலத்தில் ஒரு மெய்யறிவாளரின் (ஞானியின்) சமாதியைக் குறிப்பதற்காக (அடையாளத்திற்காக) பயன்படுத்தப்பட்டது. இன்று, அழிக்கப்பட வேண்டிய மனதிற்கு துணைவியைத் தரும் அளவிற்கு தரம் தாழ்ந்துள்ளது. பெரும்பாலான மதங்களும், நம் சமயத்தின் சில பிரிவுகளும் "மனதை அழி" என்று அறிவுறுத்தும் போது, நம் சமயத்தின் மீத பிரிவுகள் மட்டும் மனதைக் கொண்டாட 3 முக்கிய காரணங்கள்:

▶ மனதின் வழியாகத்தான் இறையை அடைய முடியும்
▶ உலகம் செவ்வனே இயங்க மனம் இன்றியமையாதது
▶ மனமும் இறைவனின் படைப்பே

வாழ்க்கை வண்டி ஓட வேண்டும் என்பதற்காக, மற்றவர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காண்பிக்க வேண்டும் என்பதற்காக எதையாவது செய்து வைக்கிறார்கள். பின்னர், அது நம் சமயத்திற்கே பெரும் கேடாக வந்து நிற்கின்றது!! 😔

மனதின் உருவை மறவாது உசாவ
மனமென ஒன்றில்லை உந்தீபற
மார்க்கம் நேர் யாவர்க்கும் இது உந்தீபற

-- பகவான் ஸ்ரீரமணர், உபதேச உந்தியார்


🌸🙏🌸🙏🌸


__(ஸ்ரீஆஞ்சநேயரைப் மேலும் அறிந்து கொள்ள: https://m.facebook.com/story.php?story_fbid=10156330139391052&id=698176051)__

posted from Bloggeroid