Monday, October 24, 2016

சுசுல் நினைவிடம்

300 பருத்திவீரர்கள் (300 Spartans) பற்றித் தெரியும் நமக்கு 120 இந்திய வீரர்களைப் பற்றித் தெரியுமா?

ஒரு கிராமத்தைக் காக்க 120 இந்திய வீரர்கள் 5000 சீன வீரர்களை எதிர்த்து சண்டையிட்டு 1300க்கும் அதிகமானவர்களை கொன்று குவித்ததை அறிவோமா?

கனரக துப்பாக்கிகளுடன் வந்தவர்களை வெறும் கையால் அடித்துக் கொன்ற இந்திய வீரர்களை தெரியுமா?

             The Battle of Rezang La
            
அது ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒரு மலைப் பிரதேசம். சீன எல்லைக்கு சில கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்தது அந்த கிராமம். பெயர் சுசுல் (Chushul). பனி மூடிய மலைகளால் சூழப்பட்ட அழகான அமைதியான கிராமம் சுசுல்.

நவம்பர் 18, 1962...

பலத்த துப்பாக்கி ஓசைகளுடன் தான் அந்தக் கிராமத்தின் விடியல் ஆரம்பித்திருந்தது. அன்று அங்கிருந்த இராணுவ முகாமில் 120 இந்திய இராணுவ வீரர்கள் முகாமிட்டிருந்தனர். அன்று பனியின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது. அதிகாலை 3.30 மணி அளவில் சீன இராணுவத்தினர் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தாக்கத் தொடங்கினர்.

இந்திய இராணுவத்தினர் பதில் தாக்குதலுக்கு தயாரான போது நிலைமை தெளிவாக தெரிந்தது. சுமார் 5000க்கும் மேற்பட்ட எதிரிகள் தங்களை தாக்குவதை அறிந்தனர். 120 பேரில் Major Shaitan Singhம் ஒருவர். அவரே அந்த இராணுவ முகாமின் தலைவர். அவர் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தார். அவருக்கு இரண்டு வழிகள் மட்டுமே இருந்தன:
1. கிராமத்தை கைவிட்டு வெளியேறுவது
2. எதிர்த்து போரிட்டு வீரமரணம் அடைவது

இரண்டாவது வழியை தேர்ந்தெடுத்தார் அவர்.

இந்திய படைகளிடம் .22, .303 போன்ற சிறிய ரக ரைபில்களும் சில கையெறி குண்டுகளும் மட்டுமே இருந்தன. சீன இராணுவத்தினர் 7.62 Self Loading Rifle, Light Machine Gun போன்ற இயந்திர துப்பாக்கிகளை வைத்திருந்தனர். போரிடுவது தற்கொலைக்குச் சமம் என்பதை முன்னரே அறிந்திருந்தனர் அனைவரும். மலைப்பாங்கான பிரதேசத்தில் போரிடுவதற்கான வியூகம் உடனே வகுக்கப்பட்டது.

சீன இராணுவத்தினரின் முதல் படை இந்திய எல்லைக்குள் வந்தது. 120 இந்திய வீரர்கள் தங்களை எதிர்த்துப் போரிடுவார்கள் என்பதை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.
கொட்டும் பனிக்கு நடுவே தோட்டாக்கள் சீறிப்பாய்ந்தன. பல உடல்கள் மண்ணில் சரிந்தன. அவற்றில் பெரும்பாலானவை சீன இராணுவத்தினருடையது. சீனாவின் முதல் படைத் தோல்வியை கண்டது.

இரண்டாம் படை களத்திற்கு இயந்திர, கனரக துப்பாக்கிகளுடன் விரைந்தது. அதற்கும் அதே நிலைமை தான். இந்திய வீரர்களின் ஆக்ரோஷமான போரால் மீண்டும் தோல்வியைத் தழுவினர்.

முழு மூச்சாக சீனா தனது மூன்றாவது படையை இறக்கியது. இந்த முறை இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் தீர்ந்து போயிருந்தன. அனைத்து தோட்டாக்களும் காலி ஆகி இருந்தன. அதனாலென்ன? உடலில் உயிர் இருக்கிறதே! ஒவ்வொரு இராணுவ வீரரும் மலைச்சரிவுகளில் பதுங்கி இருந்து வெறும் கைகளால் சீன படைகளை துவம்சம் செய்தனர். சிலர் துப்பாக்கியை மாற்றி பிடித்து சரமாரியாக எதிரிகளைத் தாக்கினர்.

போரில் உயிர் பிழைத்த ராம்சந்தர் கூறும் போது, "என்னுடைய சக இராணுவ வீரர் ராம் சிங் என்பவர் குத்துச்சண்டை வீரர். என் கண்முன்னே பல சீன இராணுவத்தினரை அடித்துக்கொன்றார். இறுதியில் தலையில் குண்டடி பட்டு இறந்தார்" என்று பேட்டி கொடுத்துள்ளார்.

எல்லையைக் காத்த 120 இராணுவ வீரர்களும் சேர்ந்து 1300 சீன இராணுவத்தினரை கொன்று குவித்தனர். 114 வீரர்கள் தங்கள் உடலில் இறுதி அசைவிருக்கும் வரை, போராடி வீர மரணத்தை தழுவினர். எஞ்சிய 6 பேர் சீன இராணுவத்தினரால் சிறைபிடிக்கப் பட்டனர். அந்த 6 பேரும் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் சிறையிலிருந்து தப்பி இந்தியாவிற்கு வந்து சேர்ந்தனர். Major shaitan singhஇன் உடல் கையில் துப்பாக்கியை இறுக்கிப் பிடித்தபடி மலைப்பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டது.
இன்று 2016 கணக்கெடுப்பின் படி, தப்பித்த அந்த 6 வீரர்களில் 4 பேர் மட்டும் உயிருடன் இருக்கின்றனர். அந்த நால்வரில் ஒருவரான கேப்டன் ராம்சந்தர், "போரில் நடந்த வீரச்சம்பவங்களை மக்களிடம் கூறவே ஆண்டவன் என்னை உயிரோடு விட்டுவத்தான் என நம்புகிறேன்" என்று பேட்டி கொடுத்துள்ளார்.

ஒரு கிராமத்தைக் காக்க தனது இறுதி மூச்சு வரை போராடிய 114 பேரின் தியாகமும் வீரமும், வரலாற்றில் "The Greatest Last Stands in the History" என்று பொறிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசு, போரைத் தலைமை ஏற்று நடத்திய Major Shaitan Singhகிற்கு 'Param Vir Chakra' விருதையும், Captain Ramchandar உட்பட 5 பேருக்கு 'Vir Chakra' விருதையும், மேலும் 4 பேருக்கு Sena Medals ஐயும் அறிவித்து கௌரவித்தது.

1300 எதிரிகளைக் கொன்ற '120 இந்தியர்களின்' கதை இதுவே...

(மூலம்: https://plus.google.com/+DWARAKANATHREDDYK/posts/bEkYsy8mCVP)

No comments:

Post a Comment