Showing posts with label கண்ணன். Show all posts
Showing posts with label கண்ணன். Show all posts

Wednesday, October 30, 2024

யாருடைய தீபாவளியை தமிழர்கள் கொண்டாடவேண்டும்?


🌷 தீபாவளி - திரு கண்ண பெருமான் மெய்யறிவு அடைந்த திருநாள்.

🌷 "நான் இவ்வுடல்" என்ற எண்ணமே நரகாசுரன். இதையுணர்ந்து, அவ்வெண்ணத்தை விட்டொழித்தலே விடுதலையாகும் (தீபாவளியாகும்).

🌷 தமிழ்நாட்டில் தீபாவளி அறிமுகப்படுத்தப்பட்டது திருமலை நாயக்கரின் ஆட்சிப் பொழுதில் (பொ.ஆ. 1623-59). அதற்கு முன்னர், இங்கு, கொண்டாடப்படவில்லை.

🌷 நாம மதத் திருவிழாக்களில், தீபாவளி மட்டுமே மெய்யறிவை போற்றும். மற்றவை... தூற்றும்! (எ.கா.: கண்ணன் பிறந்தநாளன்று வரையப்படும் கண்ணனின் காலடிச்சுவடுகள் - வெண்ணெய் திருடிய கண்ணன் - மெய்யறிவை திருடிய மனம்!) இதையுணர்ந்து கொள்ள ஒரு சிறிய எடுத்துக்காட்டு:

🔸 திருநெறி திருக்கோயில்களில் திருநீறு தருவார்கள். நாம விகாரைகளில் நீர் தருவார்கள்.

🔸 திருநீறு - திண்பொருள் - நிலைபேறு.
நீர் - நீர்மப்பொருள் - அலைபேறு.

🔸 நிலைபேறு - மனதை அழி. பற்றுகளை அறு. பிறவியறு.

🔸 அலைபேறு - மனதை அலைய விடு. பற்றுகளை சேர்த்துக்கொள். பிறவியெடு.

🌷 மொத்த நாம மதமே மெய்யறிவுக்கு எதிரானதாக இருந்தும், அவர்களுக்கேற்ற தெலுங்கு நாயக்க மன்னர்களின் ஆட்சி நடந்தும், ஏன் மெய்யறிவை போற்றும் தீபாவளியை அறிமுகப்படுத்தினார்கள்?

ஏனெனில், இது மெய்யறிவுத் திருமண்ணாகும்!

அப்போது, 300 ஆண்டுகளுக்கு மேலாக தமிழரல்லாதோர் ஆட்சி நடந்தும், ஊராட்சி அமைப்புகளுக்குள் அசுரர்கள் வெகுவாக நுழைந்திருந்தும், வளங்கொழிக்கும் தொழில்கள் தெலுங்கர்களிடம் சென்றதால் வருமானம் சரிந்திருந்தும், தொல் தமிழரிடம் பண்பாடு சரிந்திருக்கவில்லை! கொள்கைகள் நீர்த்துப் போகவில்லை!! அவ்வளவு உரமேறிய திருமண்ணாக விளங்கியது தமிழ் திருநிலம்!!!

("முதலில், நமது இனத்தவரான கண்ண பெருமானை வைத்து, நம்மை நிலை நிறுத்திக் கொள்வோம். நமது 'கொள்கைகளை' பிறகு பார்த்துக் கொள்ளலாம்." என்பது நாமாசுரர்களின் நிலைப்பாடாக இருந்திருக்கவேண்டும். 😏)

🌷 திருவிழா முடிவாகிவிட்டது. மன்னரின் ஆதரவும் கிடைத்துவிட்டது. பட்டாசு, புதுத்துணி, இனிப்பு என்று மக்களை கவரும் நுட்பங்களும் சேர்த்தாகிவிட்டது. ஆனாலும், "மக்கள் ஏற்றுக் கொள்வார்களா?" என்ற ஐயம் இருந்திருக்கிறது. எனவே, "கங்கையில் குளித்தீரா?" என்ற திருநெறியின் கூறு ஒன்றை சேர்க்கிறார்கள்!

கங்கையில் குளித்தீரா? (கங்கா ஸ்நானம் ஆச்சா?) = மெய்யறிவு பெற்றீரா?

குளிர்ந்த கங்கை நீரில், முதன் முதலாக முழுகும் போது, ஓரிரு நொடிகளுக்கு உடல் மரத்துப்போகும். ஆனால், நான் எனும் நமது தன்மையுணர்வு மரத்துப்போகாமல் விழிப்புடனிருக்கும். இது, "நாம் உடலல்ல" என்ற உண்மையை உணருவதற்கு ஓர் எளிய வழியாகும்.

🌷 நமது விளக்கீடு திருவிழாவைப் போன்று, தீபாவளியின் போது வடவர்கள் இல்லந்தோறும் விளக்கேற்றுவார்கள்.

விளக்கீடின் போது, திருவண்ணாமலையின் முகட்டில் (அசுரத்தில், உச்சியில்) விளக்கேற்றுவார்கள். அதைக் கண்டதும், சுற்றுப்புறங்களிலுள்ள மக்கள் தங்களது வீடுகளில் விளக்கேற்றுவார்கள். இக்காட்சியை திருவண்ணாமலை மீதிருந்து கண்டால், விளக்கொளி அலை அலையாக பரவுவது போன்றிருக்கும். கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அதில் மனதை பறிகொடுத்த வடவர்கள், விளக்கிடுதலை அவர்களது தீபாவளியோடு இணைத்துக் கொண்டார்கள். ஆனால், இது தவறாகும்!

🙏🏽 கண்ண பெருமான் உணர்ந்த பேருண்மை: நான் இவ்வுடல் என்ற எண்ணமே நரகம். அதை விட்டொழித்தலே விடுதலை.

🙏🏽 திரு இடைக்காடர் உணர்ந்த பேருண்மை: உயிரிகள் பல்வேறு வகையாக தோன்றினாலும், எண்ணற்றவையாக தோன்றினாலும், அவர்களுக்குள் இருக்கும் நான் என்ற தன்மையுணர்வு ஒன்றுதான். (எரியும் விளக்குகள் பல்வேறு வகையாக இருந்தாலும், எண்ணற்றவையாக இருந்தாலும், அவற்றில் எரியும் நெருப்பு ஒன்றுதான்.)

இரண்டு பேருண்மைகளும் ஒன்றல்ல. இரண்டையும் இணைப்பது சரியல்ல.

oOo

தமிழர்கள், ஒரு பெருமான் மெய்யறிவு பெற்ற திருநாளை கொண்டாட வேண்டுமெனில், அது திரு சீர்காழி பிள்ளையாரின் (அசுரத்தில், திருஞானசம்பந்தர்) திருநாளாகத்தான் இருக்கவேண்டும். அப்பெருமான் மட்டும் தோன்றியிருக்காவிட்டால், மூன்றாவது அகவையில் அவர் மெய்யறிவு பெற்றிருக்காவிட்டால்... திருநெறியத் தமிழரது மொழியும், சமயமும், வாழ்வியலும், வரலாறும் & அருமைப் பெருமைகளும் என்றோ வடவர்களால் மண்ணோடு மண்ணாக்கப்பட்டிருக்கும்!

இதையுணர்ந்ததால்தான், திரு வள்ளற்பெருமான், தனது வழிகாட்டி நூலாக திருவாசகத்தை கொண்டிருந்தாலும், தனது மெய்யாயராக திருவாதவூர் அடிகளாரை கொள்ளாமல், திரு சீர்காழி பிள்ளையாரை கொண்டார்.

oOo

தமிழர்களுக்கு தீபாவளி என்பது திரு காழியூர் பிள்ளையாரின் திருநாள் எனில், வையகத்திற்கு... பகவான் திரு இரமண மாமுனிவரின் திருநாளாகும்!

கடந்த ஒரு நூற்றாண்டில், வையகம் முழுவதும், பிறவிப் பெருங்கடல் நீந்தியோரை அணுக முடிந்தால், அவர்கள் அனைவரிடமும் "பகவான்" என்ற ஒரு பொது கூறு (factor) இருக்கும். இனிவரும் நாட்களில், "பகவானின்றி கிட்டாது வீடுபேறு" என்று கூறுமளவிற்கு அவரது திருச்சொற்கள், மெய்யியலுக்கு இன்றியமையாததாக இருக்கும்.

தொன்று தொட்டு, வையகம் முழுவதும் எண்ணற்ற பெருமான்கள் அவ்வப்போது தோன்றி, நல்வழி காட்டியிருந்தாலும், குறுகிய கண்ணோட்டம் கொண்ட நரகாசுரக்கூட்டங்களால் மீண்டும் மீண்டும் இவ்வையகம் குப்பைத்தொட்டியாகிவிடும்! இம்முறை அத்தகைய கூட்டங்களிடமிருந்து நம்மை காக்கவும், அக்கூட்டங்களின் வேரறுக்கவும், இனி எவரும் எப்போதும் "மீகாமன் இல்லா மாகாற்று அலைகலம்"- ஆகாமலும் காக்கப்போவது பகவானிடமிருந்து வெளிப்பட்ட திருச்சொற்களாகும்!

இத்தகைய பெருமான் நம் மண்ணில் பிறந்து, தென்தமிழை விரும்பி, தூய தமிழில் இரண்டன்மை (அசுரத்தில், அத்துவைதம்) பற்றிய நூலில்லை என்ற குறையை போக்கி, மெய்யியல் கலங்கரை விளக்கமாக திகழ்ந்து, பலரையும் கரையேற்றிக் கொண்டிருக்கிறார் என்பது...

தெக்கணமும் அதிற்சிறந்த நற்றமிழ்நாடே 
என்றும் செம்பொருள் விரும்பும் திருநாடு

... என்பதற்கு இன்னொரு சான்றாகும்!

oOOo

தமிழே நிறைமொழி, மறைமொழி & இறைமொழி! 🙏🏽💪🏽

பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Sunday, August 25, 2024

வெண்ணெய் திருடும் கண்ணன்!! 🥸


🌷 மெய்யியலில் வெண்ணெய், அமுது, கொழுக்கட்டை & இனிப்பு ஆகியவை மெய்யறிவை குறிக்கும். சில எடுத்துக்காட்டுகள்:

- பிள்ளையாரின் கையிலிருக்கும் கொழுக்கட்டை / இனிப்பு
- பாற்கடலை கடைந்து பெறப்பட்ட அமுது
- "வெண்ணெய் திருடும் கண்ணன்" வடிவத்திலிருக்கும் வெண்ணெய்

💥 வெண்ணெய் திருடுதல் = மெய்யறிவை திருடுதல்.

பகவான் திரு இரமண மாமுனிவர் போன்ற பெருமானை, அவரது உயரிய நிலையிலிருந்து வீழ்த்தி, ஜிஎஸ்டி-சூழ் வையகத்திற்குள் மீண்டும் பிறக்க வைத்து, மெக்காலே மண்டையனாக்கி, (இந்துவாக இருந்தால்) 'மம' சொல்லும் மடையனாக்கும் மாயை / மாயோனின் பெயர்தான் "வெண்ணெய் திருடும் கண்ணன்"!!

💥 வெண்ணெயை திருடிவிட்டு வீட்டிற்குள் வரும் கண்ணனை வரவேற்பதென்பது...

அண்மையில், கொல்கத்தாவில், தனது உடற்பசிக்காக ஒரு பயிற்சி-மருத்துவரை கற்பழித்துக் கொன்ற கொடியவனான சஞ்சய் ராயை மகிழ்ச்சியுடன் வரவேற்று, மரியாதை செய்து, விருந்தளித்து மகிழ்வதற்கு நிகராகும்!!

(திரு மறைக்காட்டு மணாளரையோ (விசுவாமித்திரர்), திருவாதவூரடிகளையோ (மாணிக்கவாசகர்) கேட்டால் தெரியும் "வெண்ணெய் திருடும் கண்ணன்" என்ற மாயை / மாயோன் எவ்வளவு கொடியதென்று!)

💥 பிள்ளையார் என்ற இறைவடிவத்தில், ஒரு மூஞ்சூறு இனிப்பை கொறித்துக் கொண்டிருக்கும். அந்த மூஞ்சூறை ஓர் அழகான கருப்புக் குழந்தையாக மாற்றி, இனிப்புக்கு பதிலாக வெண்ணெயை கொடுத்து, "சின்னத்தம்பி" ஐயிட்டத்தை சேர்த்துவிட்டால் "வெண்ணெய் திருடும் கண்ணன்" கிடைத்துவிடுவார்! 😀

அதாவது, இனிப்பை கொறிக்கும் மூஞ்சூறுவும், வெண்ணெயை திருடும் கண்ணனும் ஒன்றுதான் - ஒரே கருத்தை வெளிப்படுத்துகின்றன: மெய்யறிவை திருடுதல்.

(அதென்ன "சின்னத்தம்பி" ஐயிட்டம்? சென்டிமென்ட்! - திவ்யமங்கள ரூபம் & நாமம், இலட்டு, வடை, புளியோதரை, மனதை மயக்கும் குரலில் தீந்தமிழ்ப்பாடல்கள்... 😉)

💥 5,125 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கண்ணபிரானுக்கும் பெண்குறி மதத்திற்கும் எந்த தொடர்புமில்லை. பெண்குறி மதம் உருவாக்கப்பட்டதோ 7ம் நூற்றாண்டில் பிற்பகுதியில். பெண்குறியை அம்மதத்தின் சின்னமாக தெலுங்கர் இராமானுஜர் அறிவித்ததோ 11ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்.

🌷 படம் #1:


🔸 குழந்தை கண்ணன் - மாயை / மாயோன்
🔸 கவிழ்ந்த பானை - பகவான் போன்ற மெய்யறிவாளர்

🌷 படம் #2:


🔸 உறியில் தொங்கும் வெண்ணெய் பானை - பகவான் போன்ற மெய்யறிவாளர்.

இவர்கள் மிக உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் என்பதை காட்டுவதற்காக உறியை கூரையில் (உயரமான இடத்தில்) தொங்கவிட்டிருக்கிறார்கள்.

🔸 கண்ணனின் நண்பர்கள் - விருப்பு & வெறுப்புகள் / பற்றுகள். 

இவை கீழானவை என்பதை காட்டுவதற்காக, தரையிலிருந்து ஒருவர் மீது ஒருவரை நிற்க வைத்து, மாடம் அமைத்திருக்கிறார்கள்.

🔸 கண்ணன் - மாயை / மாயோன்

🌷 வெண்ணெய் திருடும் கண்ணனுக்கு நிகரான அன்னை வடிவம்: அன்பு விழியாள் (அசுரத்தில், காமாட்சி).

👊🏽 பெண்குறி மதத்தை இரு சொற்களாக சுருக்கினால்: நாமம் போட்டுட்டாங்களா? (ஏமாற்றிவிட்டார்களா?)

பெண்குறி மதம் = ஏமாற்று வேலை!!

oOOo

அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Sunday, January 28, 2024

திரு இரமண நிலையத்தில் இராமன் வழிபாடு நடந்துள்ளது!! 😔


மெய்பொருளுக்கு உள்ளபொருள் என்று பெயரிட்ட மாமுனிவரின் நிலையத்தில், அல்லாத பொருளுக்கு வழிபாடு!! 😔

💥 பகவான், தனது வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தியது - அசைவற்ற நிலை (நிலைபேறு).

இராமனின் வடிவம் உணர்த்துவது - அசைவு (அலைபேறு).

பகவானின் நிலைப்பாட்டிற்கு நேரெதிர் நிலைப்பாட்டினை உணர்த்தும் ஒரு வடிவத்தை, அவரது நிலையத்தில் வைத்து, வழிபடலாமா?

💥 பௌத்தம் போற்றும் சூன்ய நிலையை பற்றிய உரையாடலின் போது, "அது இருளல்ல. அவ்விருளை காண்பவன் ஒருவன் இருக்கிறான். அதுவே ஒளி." என்று அருளினார். எனில், இருளை போற்றும் / முன்வைக்கும் வைணவத்தின் இறைவடிவத்தை, ஒளியை மட்டும் போற்றியவரின் திருக்கோயிலில் வைத்து, வழிபடலாமா? (வைணவத்தின் வேர் அம்மன் வழிபாடாகும். வைணவர்களின் வேர் பௌத்தமாகும்.)

💥 இராமனின் வடிவத்தை 2 வகையாக ஆராயலாம்:

🔸 கறுப்பு உடல் & அவ்வுடலை போர்த்திய காவி / மஞ்சள் / வெள்ளை ஆடை

பொருள்: இருளிலிருந்து ஒளி பிறந்தது. அல்லது, இருளுக்குள் ஒளி அடக்கம்.

🔸 மேல் பாதி கறுப்பு நிறம் & கீழ் பாதி காவி / மஞ்சள் / வெள்ளை நிறம்

பொருள்: இருள் மேலானது. ஒளி கீழானது.

அறிவிலிருந்து அறிவற்றது பிறந்ததா? அறிவற்றதிலிருந்து அறிவு பிறந்ததா? அறிவு மேலானதா? அறிவற்றது மேலானதா?

"நாமுலங் காண்டலால்..." என்ற செய்யுளை அருளியவரின் நிலையத்தில் வைப்பதற்கே ஏற்புடைய வடிவமில்லாத போது, எப்படி அதற்கு வழிபாடு நடத்தலாம்?

💥 இராமன் என்ற வடிவத்துடன் சேர்க்கப்பட்டிருக்கும் யாவற்றையும் (பெருமாளின் திருவிறக்கம், இன்னாரின் மகன், இன்னார் உடன்பிறந்தோர், இராமன் என்ற பெயர்....) நீக்கிவிட்டுப் பார்த்தால், அது அன்னை மாயையின் ஆண் வடிவமென்பது புலப்படும். எதை காமாட்சி, வெண்ணெய் திருடிக் கண்ணன் என்றழைக்கிறோமோ, அதுவே இங்கு வில்லேந்திய இராமனாகிறது. இராமனின் அம்பு... பற்றுகளை தோற்றுவிக்கும் கணையாகிறது!

பற்றுகளை அறுத்தெறிவதற்கு வழிகாட்டிய பெருமானின் நிலையத்தில், பற்றுகளை தோற்றுவிக்கும் வடிவங்களை வைத்து, வழிபாடு செய்யலாமா?

oOo

இராமனும் கண்ணனும் அவர்களுடைய இனமாக இருக்கலாம். அல்லது, அவர்கள் படைத்த கதாபாத்திரங்களாக இருக்கலாம். அல்லது, இம்மண்ணின் மைந்தர்கள் படைத்ததை, அவர்கள் தங்களுடையதாக்கி இருக்கலாம். எப்படியானாலும், இன்று வரை, இராமனும் கண்ணனும் அவர்களுக்கு தேவைப்படுகிறார்கள். எனில், அவரவர் இல்லங்களில், அல்லது, வேறு ஏதாவதொரு இடத்தில் வைத்து, வழிபாடு செய்து கொள்ளலாம். திரு இரமண நிலையத்தில் வைத்து, வழிபாடு செய்வது தவறாகும்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Thursday, July 29, 2021

பாதங்களை நன்கு பார்க்கவேண்டுமாம்! உலகில் வேறெங்கும் இப்படியொரு அமைப்பு கிடையாதாம்!! 🤦



இந்த சிலைகள் என்ன தாமாகவே முளைத்தவையா? பாதங்கள் சற்று மாறியிருக்கும்படியான சிலைகளை இவர்களே செய்து வைத்து விட்டு, "இப்படி இருக்கிறது, பார்", "அப்படி இருக்கிறது, பார்" என்று கதைவிடுகிறார்கள்!!

கருவறையில் இருக்கும் திரு சீதை-ராம-லட்சுமணர் திருவுருவங்கள் உணர்த்துவது:

🌷 ராமர் - மரா எனில் இறப்பு. ராம எனில் இறப்பற்றது. பரம்பொருள்.
🌷 லட்சுமணர் - பரம்பொருளுடன் என்றுமே இருக்கும் அறிவு
🌷 சீதை - மெய்யறிவு கிடைத்த பின்னர் கிடைக்கும் குளுமை

அது சமாதித்தலமெனில், அங்கு சமாதியாகி இருக்கும் பெருமானின் நிலையை இவ்வுருவங்கள் உணர்த்துகின்றன.

இங்கு ராமர் (இருள்) முதலில் தோன்றியவர். லட்சுமணர் (ஒளி) பின்னர் தோன்றியவர். மெய்யறிவு கிடைத்தவுடன் துய்க்கப்படும் குளுமை (சீதை) ராமரின் மனைவியாகிறார். இங்கு அண்ணன்-அண்ணி & தம்பி என்பது பூரி திரு ஜெகந்நாதர் திருக்கோயிலில் சகோதர சகோதரியாகிவிடும். மேலும், அங்கு ஒளி (பலராமர்) முதலில் தோன்றியதாகவும், இருள் (கண்ணபிரான்) பின்னர் தோன்றியதாகவும், மெய்யறிவு கிடைத்தவுடன் துய்க்கப்படும் மகிழ்ச்சி தங்கையாகவும் (சுபத்ரை) கருதப்படுகிறது.

ஒரே வைணவத்திற்குள் ஏன் இவ்வளவு மாறுபாடுகள் என்று சிந்தித்தால் நாமும் ராம பிரானாகலாம் அல்லது கண்ண பிரானாகலாம். இதை விட்டு, மாறுபட்ட கால்களை நன்கு உற்றுப்பார்த்து 😳, உற்றுப்பார்த்ததை அவ்வப்போது நினைவிலும் நிறுத்திக்கொண்டிருந்தால் 😖, எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் என்ற விதியின் படி நாமும் அம்மாறுபட்ட கற்பாதங்களாக ஆகலாம்!! 🥴

("அன்பே வா" நாகேஷ் பாணியில்) எப்படி நம்ம வசதி? 😁

Wednesday, January 6, 2021

தீபாவளி - திரு கண்ணபிரான் 🌺🙏🏽 மெய்யறிவு பெற்ற நாள்!!


🪔 நம் உடலே நரகம். நாம் இவ்வுடல் என்ற தவறான எண்ணமே நரகாசுரன். இத்தவறான எண்ணத்தை விட்டொழித்தலே தீபாவளி - கொண்டாட்டம் - பெருமகிழ்ச்சி - மரணமில்லாப் பெருவாழ்வு!

🪔 நரகாசூரன் பன்றிப் பெருமாளுக்கும் நிலமகளுக்கும் பிறந்தவர் - நிலமகள் என்பது நமது உடல். பன்றிப்பெருமாள் என்பது மெய்யறிவு பெறாத நாமே.

(பன்றித்திருவிறக்க கதையில் பன்றிப்பெருமாள் கடலுக்குள் சென்று பூமாதேவியை மீட்டு வருவார். இவ்வுருவகக் கதையில் வரும் பூமாதேவி மெய்யறிவைக் குறிக்கும். பூமா எனில் முழுமை. ஆனால், பூமி என்று தவறாகப் பொருள் கொண்டுவிட்டனர். இக்கதையில் வரும் கடல் என்பது நமது உடல். கடலுக்குள் செல்லும் பெருமாள் என்பது மெய்யறிவுக்காக வடக்கிருக்கும் நாம். பூமாதேவியுடன் திரும்ப வரும் பெருமாள் என்பது மெய்யறிவு பெற்று உலக வாழ்க்கைக்கு திரும்பும் நாம். கடலுக்குள் செல்லும் போதும், பூமாதேவியுடன் வெளிப்படும் போதும் பெருமாள் பெருமாள் தான். வேறுபாடு பூமாதேவி மட்டுமே. இவ்வாறே, மெய்யறிவு பெறுவதற்கு முன்னும், பெற்ற பின்னும் நாம் நாம் தான். வேறுபாடு நம்மைப் பற்றிய மெய்யறிவு மட்டும் தான்.)

நம்மைப் பற்றிய தெளிவு இல்லாததால் அழிவற்ற நம்மை (பெருமாள்) அழியும் உடலுடன் (நிலமகள்) இணைத்துக் கொள்கிறோம். விளைவு... "நாம் இவ்வுடல்" என்ற நரகாசூரன்!!

🪔 நரகாசூரனின் இறப்பு. தனது இறப்பு தன் தாயின் மூலமாக மட்டுமே நிகழ வேண்டும் என்ற பேறுபெற்று வந்தவன் நரகாசூரன். இதன்படி, கண்ணபிரான் திருவிறக்கத்தில் கண்ணபிரான் (தந்தை) போராடி அயர்ந்த பின்னர், சத்யபாமா (தாய்) போராடி நரகாசூரனைக் கொல்லுவார்.

இக்கதையில் வரும் கண்ணபிரான் நாமே. எவ்வளவு முட்டிமோதினாலும் "நாம் இவ்வுடல்" என்ற பொய்யறிவு நம்மைவிட்டு விலகாது. இது விலக 2 வழிகள் உண்டு: 1. பல காலம் வடக்கிருந்து, மிகவும் முதிர்ந்த (பக்குவமடைந்த) பின்னர் பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 போன்ற மெய்யாசிரியர்களின் அறிவுரைகளால் நமதுண்மையை உணர்தல், 2. மொத்த அண்டமும் நமக்குள் இருந்தாலும், நாம் அதற்குள் இருப்பது போல் கண்கட்டு வித்தைக் காட்டிக்கொண்டிருக்கும் அன்னை மாயை (சத்யபாமா) சில கணங்கள் காட்சிகளைத் தவிர்த்து நமதுண்மையை நாம் உணர வழிவிடுதல்.

இரண்டாவது வழியில் அன்னையால்தான் "நாம் இவ்வுடல்" என்ற எண்ணம் (நரகாசூரன்) அழிகிறது என்றால் ஏற்றுக் கொள்வோம். முதலாவது வழியிலும் அன்னை தான் கொல்கிறார். அறிவுரையை வெளிவிட்ட மெய்யாசிரியர் சிவப்பரம்பொருளில் நிலைபெற்றவராய் இருந்தாலும், அவரிடமிருந்து வெளிப்பட்ட அறிவுரை உயிரற்ற பொருளாகிறது - அன்னையின் கூறாகிவிடுகிறது (அம்சமாகிவிடுகிறது).

ஆக, இரு வழிகளிலும் அன்னை தான் "நாம் இவ்வுடல்" என்ற தவறான எண்ணத்தை அழிக்கிறார். இதையே அன்னை சத்யபாமாவால் நரகாசூரன் இறப்பதாக உருவகப்படுத்தியுள்ளனர்.

🪔 "கங்கை நீரில் குளித்தீரா?" - தீபாவளியன்று கேட்கப்படும் பாரம்பரிய கேள்வி. நலம் விசாரிப்பது போல.

மெய்யறிவில் நிலைபெறும்போது நம் உச்சந்தலையிலுள்ள பிடியுட்டரி சுரப்பி நன்கு சுரக்கும். அதன் வெள்ளை நீர் (கங்கை நீர்; கங்கை - வெள்ளை) உடலெங்கும் பரவி, மற்ற சுரப்பிகளைத் தூண்டி உடலை சீராக்கி, மகிழ்ச்சியைக் கொடுக்கும். இதை, சிவபெருமானின் ஓவியத்தில் அவரது தலையிலிருந்து கங்கை நீர் வெளிப்படுவது போல் வரைந்திருப்பார்கள்.

"கங்கை நீரில் குளித்தீரா?" என்ற கேள்வியின் உட்பொருள்:

- மெய்யறிவு பெற்றீரா?
- உமதுண்மையை உணர்ந்தீரா?
- சிவப்பரம்பொருளாய் சமைந்தீரா?
- தன்மையுணர்வில் நிலைபெற்றீரா?

🪔 இவ்வளவு பொருள் பொதிந்த திருவிழாவாக இருந்தாலும், வடக்கத்திய தீபாவளி நம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் திருமலை நாயக்கர் காலத்தில்தான். இந்நாளன்று வடகத்தியர் தீபங்களை ஏற்றுவதற்கு அடிப்படை நமது கார்த்திகை திருநாள்! இடைக்காட்டுச் சித்தர் உணர்ந்து உணர்த்திய "ஏகன் அநேகன்" என்ற பேருண்மையைக் கொண்டாடும் கார்த்திகை திருநாள் திருவிழா அவ்வளவு தாக்கத்தை ஆரியர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

oOOo

ஒரு தீபாவளி திருநாளுக்காக பகவான் எழுதிய பாடல்:

நர குடல் நானா நர குலகு ஆளும்
நரகன் எங்கென்று உசாவின்ஞானத் திகிரியால்
நரகனைக் கொன்றவன் நாரணன் அன்றே
நரக சதுர்த்தசி நல் தினமாமே

பொருள்: அழியும் இவ்வுடலா நான்? இவ்வுடலை ஆளும் நரகாசூரன் எங்கு உள்ளான்? என்று ஆராய்ந்து, தானே உள்ளபொருள் என்று தெளிந்து, அந்த மெய்யறிவினால் (ஞானத்திகிரி - பெருமாளின் கையிலுள்ள சக்கிராயுதம்) தான் இவ்வுடல் என்ற தவறான எண்ணத்தை (நரகாசூரனை) விட்டொழித்தவனே (கொன்றவனே) நாராயணன். அப்படி விட்டொழித்த நாளே நரகசதுர்த்தசி எனும் தீபாவளி நன்னாளாம்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

oOOo

பி.கு.: வைணவத்திற்கும் கண்ணபிரானுக்கும் எந்த தொடர்புமில்லை. வைணவம் தோன்றியது பொது ஆண்டு 700களில். நிலைபெற்றதோ 1500களில் (விஜயநகர & நாயக்க மன்னர்களின் காலத்தில்). ஆனால், கண்ணபிரான் வாழ்ந்ததோ சுமார் 5,100 ஆண்டுகளுக்கு முன்னர்!

Friday, July 10, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #54 - சிவபெருமான் தூது சென்றது, காமனை எரித்தது, தமிழ் சங்கம் நடத்தியது - சிறு விளக்கம்

தொல்நாவல் சுந்தரற்காத் தூதுபோய் வந்தமலை
நன்மைதரத் தொண்டருக்கு நல்குமலை - மன்மதனைக்
காய்ந்தமலை கூடலில்சங் கத்தா ருடன்தமிழை
ஆய்ந்தமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #54

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

🔸தொல்நாவல் ... வந்தமலை

பழமையான திருநாவலூரில் பிறந்த திரு சுந்தரமூர்த்தி நாயனாருக்காக 🌺🙏🏽 அவர் தம் முதல் மனைவியார் பரவை நாச்சியாரிடம் பகவான் 🌺🙏🏽 போன்ற ஒரு மெய்யறிவாளர் தூது போய்வந்த வரலாறு. ஏற்கனவே சற்று விரிவாகப் பார்த்திருக்கிறோம். "சிவபெருமான் தூது போய் வந்தார்" என்றதும், சடைமுடி, பிறைநிலவில் ஆரம்பித்து கால்களில் கழல் பூட்டிய ஒரு உருவம் தான் நம் நினைவுக்கு வரும்படி செய்துவிட்டார்கள்! இது தவறு.

தன் இருப்புணர்வில் நிலைபெற்ற அனைவருமே சிவபரம்பொருள் தான். ஆறுகள் பலவாக இருக்கலாம். கடலில் கலந்த பின்னர் அனைத்திற்கும் கடல் என்று ஒரு பெயர் தான். நீர்குமிழிகள் பலவிதமாக இருக்கலாம். அவை வெடித்த பின் இருப்பது ஒரே நீர்நிலைதான். இது போன்றே சீவர்களும் சிவமும். சீவர்கள் பலவாகத் தோன்றலாம். அவர்கள் காணும் காட்சிகளும் பலவாகத் தோன்றலாம். ஆனால், எல்லாம் "அடங்கிய" பின் (மெய்யறிவு பெற்ற பின்) இருப்பது ஒரு சிவபரம்பொருள்தான். இதனால் தான், அருணை, கூடல், நெல்லை போன்ற பழம்பெரும் திருத்தலங்களில் சமாதியாகி இருக்கும் மாமுனிவர்களை அண்ணாமலையார், சொக்கநாதர், நெல்லையப்பர் என்று தனித்தனியாக அழைத்தாலும் பொதுவாக சிவபெருமான் என்றே அழைத்தனர் நம் முன்னோர்.

மேற்கண்ட "#அடங்கு" என்ற சொல்லைப் பற்றி: தமிழில் வேடிக்கையாக "#அடங்குடா" என்பார்கள். அதிகம் ஆட்டம் போடுபவர்களைப் பார்த்து சொல்லப்படும் சொல்லாக இன்று விளங்குகிறது. ஆனால், இதன் வேர் ஆன்மிகத்தில் உள்ளது. நம்மை (நமது கவன ஆற்றலை) நாம் வெளிவிட்டால் தான் உலகம். அடங்கியிருந்தால் - அடக்கிக் கொண்டிருந்தால் - நமது கவன ஆற்றலை நம் இருப்புணர்வின் மீதே வைத்துக் கொண்டிருந்தால் - எல்லாம் சிவமயம் தான். "மனதை அடக்கிக் கொண்டிருந்தால் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்" என்பது பகவானது வாக்கு. அடங்கு எனில் தன்மையுணர்வில் அடங்குதல்!!

தமிழ் ஆன்மிக மொழி என்பதையுணர இன்னொரு எடுத்துக்காட்டு: மேற்சொன்னது போன்றே, அங்கும் இங்கும் அலைந்து திரிபவர்களைக் கண்டு பெரியவர்கள், "செத்த நேரம் #சிவனேன்னு கெடக்க வேண்டியது தானே?" என்று திட்டுவதைக் கேட்டிருப்போம். படித்தவர் முதல் பாமரர் வரை பயன்படுத்தும் சொற்றொடர் இது. உலகில் வேறெங்கும் இப்படியொரு வசைவுச் சொற்றொடர் இருக்காது. வேறெந்த தெய்வத்தைக் கொண்டும் இருக்காது. இன்று இது வெறும் சொற்றொடர். ஆனால், அன்று, இவ்வாறு திட்டியவருக்கும், திட்டுப் பெற்றவருக்கும் "சிவம் என்றால் என்ன?", "சிவமாய் கிடப்பது எப்படி?" என்ற கேள்விகளுக்கு பதில்கள் தெரிந்திருந்ததால் தான் அவ்வாறு திட்டமுடிந்தது, திட்டை ஏற்க முடிந்தது என்பதை நாம் உணரவேண்டும்!!

இவையெல்லாம் நம் அன்னைத்தமிழில் எவ்வளவு தூரம் ஆன்மிகம் கலந்திருக்கிறது என்பதற்கும், நம் முன்னோர்கள் எவ்வளவு தூரம் மெய்யறிவுத் தாகம் கொண்டவர்கள் என்பதற்கும், ஆதிசைவமே நமது சமயம் என்பதற்கும், சிவபரம்பொருளே நாம் போற்றிய தெய்வம் என்பதற்கும் சிறு எடுத்துக்காட்டுகள்.

🔸நன்மைதரத் தொண்டருக்கு நல்குமலை

இறைவன் நமக்கு வழங்கும் அறிவும், பொருளும் மற்றவர்களுக்கு நாம் நன்மை செய்வதற்காக, மற்றவர்களுடன் நாம் பகிர்ந்து கொள்வதற்காக என்கிறார் ஆசிரியர். இதில் பொருளைப் பற்றி நாம் சிந்திக்கத் தேவையில்லை. சாங்கியம், சடங்கு, சம்பிரதாயம், நியாயம், தர்மம், கடமை, சமூக அநீதி, மக்களாட்சி, கல்வி, மருத்துவம் என பல பெயர்களால் நம்மிடமிருப்பதை பறித்துக் கொள்ள குடும்பம், உறவினர், சமூகம், மாநில அரசு, நடுவண் அரசு, பரங்கியர்கள் (எதிர்காலத்தில் சீனர்கள்) என பல அமைப்புகள் உள்ளன. தனியாகப் பகிர்ந்து கொண்டு நமக்கு நாமே பட்டைநாமம் போட்டுக் கொள்ளத் தேவையில்லை. 😁

🔸மன்மதனைக் காய்ந்தமலை

சிவபெருமான் மன்மதனை எரித்த கதை.

ஒரு எடுத்துக்காட்டு. எந்நேரமும் பகவானது அறிவுரைகளைப் படித்துக் கொண்டும், அவற்றைப் பற்றி சிந்தித்துக் கொண்டும் ஒரு தீவிர அன்பர் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ஒரு சமயம், வேறொரு மாமுனிவரின் அறிவுரையைப் படிக்கிறார். படித்ததும் சமாதியடைந்துவிடுகிறார். ஆனால், அவரது வினைத்தொகுதி இன்னமும் முழுவதும் தீரவில்லை. ஆகையால், அவரால் அந்நிலையில் தொடர்ந்து நீடிக்க முடியாது. சமாதியில் இருக்க வேண்டிய காலம் முடிந்ததும், மாயை தனது வேலையைக் காட்டும்.

"பகவானின் அறிவுரைகளால் அல்லவா இங்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும். இப்படி வேறாரு பெருமானின் அறிவுரையால் வந்திருப்பது பகவானது புகழுக்கு இழுக்கல்லவா?" என்று தூபம் போடும். இவரும், தான் ஏமாற்றப்படுவது அறியாமல், "ஆம். இதுவும் சரிதான். பகவானது அறிவுரைகளால் மீண்டும் இங்கு வந்து சேருவோம்." என்று எண்ணிக் கொண்டு புறமுகமாகிவிடுகிறார். இதன் பிறகே, தான் ஏமாற்றப்பட்டதை உணர்கிறார். அடுத்த முறை, வினைத்தொகுதி முழுவதும் தீர்ந்து, மீண்டும் சமாதியடைகிறார். இம்முறை மாயை தனது வேலையைக் காட்டினாலும் ஏமாறமாட்டார், கண்டுகொள்ளமாட்டார். பற்றிக்கொள்வதற்கு ஒருவரும் இல்லாததால் எழுந்த மாயை அடங்கிவிடும்.

முதல் முறை, நமது அன்பரை புறமுகப்படுத்திய இறையாற்றலை சைவத்தில் #சிவகாமி, #காமாட்சி என்றும், வைணவத்தில் வெண்ணெய் திருடிய #கண்ணன் என்றும் அழைப்பர்! அடுத்த முறை, அன்பரால் ஒதுக்கித் தள்ளப்பட்டு, அடங்கிய இறையாற்றலே #மன்மதன் எனப்படும். ஒதுக்கித் தள்ளப்பட்ட செயலே மன்மதனை எரித்ததாகும் (#காம #தகனம்)!!

(நம் நாட்டில் பல சமயப் பிரிவுகள் இருந்தன. ஒருவர் பெண்ணாக பார்த்ததை இன்னொருவர் ஆணாக பார்த்திருக்கிறார். மற்றொருவர் அதை ஆண்-பெண் (மன்மதன்-ரதி) என்று மேற்கொண்டு பிரித்திருக்கிறார். இவை எல்லாம் பிற்காலத்தில் இணைந்து, ஒன்றுக்குள் ஒன்றாகி விட்டன.  "மன்மதன் என்ற சொல் எதைக் குறிக்கிறது?" என்று சிந்தித்தால் போதும். "ஏன் மன்மதன்-ரதி என்று பிரித்தார்கள்?" என்று சிந்தித்தால் ஓரளவிற்கு மேல் பதில் கிடைக்காது. எல்லாவற்றிற்கும் அடிப்படை காரணங்கள் மனிதனின் ஆணவம், சுயநலம் மற்றும் தேவை என்பதை நினைவில் கொண்டால் போதுமானது.)

🔸கூடலில் சங்கத்தாருடன் தமிழை ஆய்ந்தமலை

கடல் கொண்ட தென்மதுரையில் நடந்த #முதல் #தமிழ் #சங்கம் சிவபெருமானின் தலைமையில் நடந்த வரலாறு.

சிவபெருமான் என்பது தன்னையுணர்ந்த மெய்யறிவாளரைக் குறிக்கும் என்று முன்னமே பார்த்தோம். ஆணவம் சிறிதுமற்ற, பொய் சொல்ல தேவையற்ற, மனிதப்பிறவியின் நோக்கமறிந்த இத்தகையோர் உருவாக்கிய மொழி என்பதால் தான் நம் அன்னைக்கு நிறைமொழி என்று பெயர்!!

இப்பெருமான்கள் நமது மொழியை மட்டுமல்ல, நமது வாழ்க்கைமுறை, கலாச்சாரம், உணவு, உடை, இருப்பிடம், மருந்து, இவற்றை அடிப்படையாகக் கொண்ட தொழில்கள் என அனைத்தையும் உருவாக்கி/சீர்செய்து கொடுத்தவர்கள். ஆரியத்தில் சத்ய யுகம் என்று ஒரு காலப் பகுதிக்கு பெயரிட்டிருப்பார்கள். இக்காலத்தில் பிராமணர்கள் ஆண்டார்கள் என்பார்கள் (பிராமணர் - பிரம்மத்தை அறிந்தவர் / பிரம்மமாய் இருப்பவர் - மெய்யறிவாளர்கள்). இது, அவர்களது தாயகமான ரிஷிவர்ஷாவில் (இன்றைய சைபீரியா-ரஷ்யா) நடந்ததோ இல்லையோ, நமது புண்ணிய பூமியில் நடந்துள்ளது.

அன்று சிவபெருமானை ஆட்சியில் வைத்த நாம், இன்று கொள்ளையர்களை ஆட்சியில் வைத்திருக்கிறோம்! 😔 காலம் மாறும். என்றும் வாய்மையே வெல்லும்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽