Saturday, October 12, 2024

ஆக்கம் பெருக்கும் மடந்தையின் திருநாள்!


மடந்தையின் தமிழ் பெயர்கள்: பேச்சாயி, வெள்ளாயி, சொற்கிழத்தி, கலைமகள், நாமகள், பாமகள்...

மடந்தையின் ஆரியப் பெயர்கள்: சரசுவதி, சாரதா, வாக்தேவி, பாரதி, வாணி, ஹம்சவாகினி...

சரசுவதி என்ற பெயரைப் பற்றி மட்டும் சிந்திப்போம்: சரஸ் + வதி - நீர் நிலையில் இருப்பவர்.

உடன், அவரது நிறத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்: நீர் நிலையில் இருப்பவர் + வெள்ளையாக இருப்பவர்.

எது இப்படிப்பட்ட பொருள்? நமது மூளை!!

(பலர் நாக்கை மட்டும் எடுத்துக் கொள்கிறார்கள். இது தவறாகும். பேச்சுக்கலைக்கு மட்டும் அவர் கடவுளில்லை. அனைத்து கலைகளுக்கும் கடவுளாவார். எனவே, மூளையென்று எடுத்துக் கொள்வதே சரியாகும்.)

மூளையை அறிவின் இருப்பிடமாக கருதுவது மரபாகும். (மூளையிருக்கா? - அறிவிருக்கா?)

அறிவை எப்படி வளர்க்கலாம் & பாதுகாக்கலாம்?

இதற்கு விடையாக, மடந்தையின் திருவடிவைப் பற்றி சிந்திக்கலாம்.

🌷 மடந்தையின் கையிலுள்ள ஏடுகள் - நல்ல நூல்களை கற்கவேண்டும்.

🌷 ஜெபமாலை - கற்றதை மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்தி பார்க்கவேண்டும்.

🌷 வீணை மீட்டுதல் - கற்பதோடு நிற்காமல், கற்றதை செய்துபார்க்கவேண்டும்.

🌷 ஊர்தியாக அன்னப்பறவை இருந்தால் - தேவையற்றதை ஒதுக்கிவிட்டு, தேவையானதை கொள்ளவேண்டும் (பகுத்தறிவு).

🌷 ஊர்தியாக மயில் இருந்தால் - இப்பிறவியில் கற்பது இனி வரும் பிறவிகளிலும் உதவும். மயிலின் தோகையிலுள்ள கண்கள் பிறவிகளுக்கு நிகராகும்.

🌷 நீர்நிலை (ஆறு / குளம்) - மெய்யியலில், நீரானது அசைவை / மாற்றத்தை குறிக்கும். இங்கு, மொத்த படைப்பை குறிக்கும். நாம் கற்கும் யாவும் படைப்பிலிருந்து கிடைத்தவையே.

இன்னொரு பொருள்: மடந்தை கரை மீது அமர்ந்திருப்பார். அதாவது, கற்றோர் பிறவி சுழற்சியிலிருந்து (நீர் - படைப்பு - பிறவி சுழற்சி) விடுபடுவர் என்பது பொருளாகும்.

🌷 வெள்ளை நிற ஆடை - அகத்தூய்மை. கற்றோருக்கு இருக்கவேண்டிய அடிப்படை & முகமை தகுதியாகும். (அகத்தூய்மை இல்லாமல், கல்வியறிவு மட்டும் வளர்ந்தால் என்னவாகும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு: சைபர் குற்றவாளிகள்!)

🌷 மடித்திருக்கும் வலதுகால் - கற்றதைக் கொண்டு வாழ்க்கையை வாழ்.

(இடதுகால் மடிந்திருந்தால் - மெய்யறிவை நோக்கி பயணி. இரு கால்களையும் மடித்து, சம்மணமிட்டிருந்தால் - வாழ்க்கையையும் வாழ் & மெய்யறிவின் மீதும் ஒரு கண்ணை வை.)

🌷 மடந்தையின் கணவரான நான்முகன் - 4 திசைகளை குறிக்கும்.

நமது அறிவு எங்கிருந்து வருகிறது? நமக்கு கிடைக்கும் நுகர்வுகளிலிருந்து (அசுரத்தில், அனுபவங்கள்). அந்நுகர்வுகள் எங்கிருந்து கிடைக்கின்றன? 4 திசைகளிலிருந்து!

🌷 இறுதியாக, பெண்வடிவம்

மெய்யியலில், பெண்வடிவம் தோன்றி-மறைவதை, மாறிக்கொண்டேயிருப்பதை, நிலையற்றதை குறிக்கும்.

கல்வியறிவும், கலையறிவும் எல்லோருக்கும், எப்போதும் ஒன்றாகவா இருக்கிறது? மாறுபடுகிறதல்லவா? எனவே, பெண்வடிவம்!

oOo

மொத்தத்தில், மடந்தையின் வடிவத்திலிருந்து நமக்கு கிடைக்கும் செய்திகள்:

🌷 எந்த துறையிலும் / கலையிலும் சிறந்து விளங்க அத்துறை / அக்கலை சார்ந்த அறிவை வளர்த்துக் கொண்டேயிருக்க வேண்டும் (ஏடுகள்).

🌷 கற்றது என்றும் நினைவில் நிற்பதற்காக அதை தொடர்ந்து நினைவு கூறவேண்டும் (ஜெபமாலை). ஏட்டறிவு கேள்வியறிவாக மாறுவதற்காக, தொடர்ந்து சிந்திக்கவேண்டும் என்றும் கொள்ளலாம். 

🌷 கற்றதை, சிந்தித்ததை பழக்கமாக்கவேண்டும் (வீணை மீட்டுதல்). பழக்கமானால், விரைவாக செய்யமுடியும்.

🌷 வையகத்திலிருந்து தீயதும் கிட்டும்; நல்லதும் கிட்டும். தீயதை ஒதுக்கிவிட்டு, நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும் (அன்னம்).

🌷 அகத்தூய்மையே கல்விக்கான அடிப்படை தகுதியாகும். அதுவே கல்வி கற்பதின் பயனுமாகும்.

oOo

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் நல்லம்மை - தூய
உருப் பளிங்கு போல்வாள் நம் உள்ளத்தின் உள்ளே
இருப்பாள் அங்கு வாரா திடர்!

(கம்பர் பெருமானின் பாடலை சற்று மாற்றியுள்ளேன். 🙏🏽)

அனைவருக்கும் எனது மனமார்ந்த ஆற்றங்கரை சொற்கிழத்தி திருநாள் நல்வாழ்த்துகள்!! 🙏🏽🙏🏽

📖🦢🪔☀️

(ஆக்கம் பெருக்கும் மடந்தை, ஆற்றங்கரை சொற்கிழத்தி -- ஒட்டக்கூத்தர் பயன்படுத்திய பெயர்களாகும். 🙏🏽)

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

No comments:

Post a Comment