Saturday, June 5, 2021

திருக்குறளே நமக்கு மறைமொழி!! - கிஆபெ



"முத்தமிழ் காவலர்" திரு கிஆபெ விசுவநாதம் அவர்கள் எழுதிய "திருக்குறள் கட்டுரைகள்" எனும் நூலிலிருக்கும் "மறைமொழி" எனும் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி:

மறைமொழி என்பது மறைக்கப்பெற்ற மொழி எனப் பொருள் பெறும். இதை மந்திரம் என்றும், 'வேத பாஷை' என்றும் வடமொழியாளர் கூறுவர். திருக்குறள் தமிழ் மறை ஆதலின், அது கூறும் மொழிகள் யாவும் நமக்கு மறை மொழிகளேயாம்! என்றாலும், நான் இங்கு கூறவந்தது அப்பொருளில் அல்ல. 'மறைமொழி' (பரி பாஷை) என்ற பொருளில் ஆகும்.

நகை வியாபாரிகள், மாட்டு வியாபாரிகள், நகை செய்பவர்கள், தரகுத் தொழில் செய்பவர்கள், தோல் வியாபாரிகள். மார்வாடிகள் ஆகிய பலரிடமும், கேட்போர் அறிய முடியாத மறைமொழிகளை அவர்கள் தங்களுக்குள்ளாகவே வழங்கி வருவதை இன்றும் காணலாம்.

அதுபோலவே, தமிழ் அறிஞர்களுக்குள்ளே - தமிழ் கற்ற மக்களுக்குள்ளே ஒரு மறைமொழி வழங்கவேண்டும் என்பது எனது ஆசை. இது மொழிப் பற்றுக்கும், கல்விப் பெருக்குக்கும், அறிவு வளர்ச்சிக்கும், நாட்டு நலனுக்கும் ஏற்ற துணை செய்யும் என்பது எனது எண்ணம். இந்த மறைமொழியைப் பாருங்கள்:

அ. நண்பரே வரவேண்டும்! வரவேண்டும்! அந்தப் பையன் 13-ல் எப்படி?

ஆ. அதைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. நிரம்ப உடையவன்.

இ. நேற்று நாம் போய்க் கேட்டுக் கொண்டிருந்தோமே; அவருக்கு 73 எவ்வளவு இருக்கிறது பார்த்தீர்களா?

ஈ. ஆம். 73 இருந்து என்ன செய்ய? 65 சிறிதும் இல்லையே!

உ. பையனுடைய 40 எப்படி?

ஊ. 40 நிறைய உண்டு. என்றாலும் 42 இல்லாமல் 41 மாதிரி இருக்கிறான்.

எ. தாங்கள் ஏன் இப்போது இராமனிடம் 70 வைப்பதில்லை?

ஏ. அவன் இருந்தாற்ப் போலிருந்து 92, 93, 94க்குப் போய்விட்டான். நான் 82 என எண்ணிச் சும்மா இருந்து விட்டேன். இல்லாவிட்டால் நம்முடைய 97 போய் விடாதா?

எப்படி இந்த மறைமொழி? திருக்குறள் படித்திருந்தால் இது உங்களுக்கு விளங்கியிருக்கும். இல்லையானால் அதைப் படியுங்கள். அதிலுள்ள அதிகாரங்கள்தாம் இவை!

13. அடக்கமுடைமை
40. கல்வி
41. கல்லாமை
42. கேள்வி
65. சொல்வன்மை
67. அவையஞ்சாமை
70. மன்னரைச் சேர்ந்தொழுதல்
82. தீ நட்பு
92. வரைவின்மகளிர்
93. கள்ளுண்ணாமை
94. சூது
97. மானம்

திருக்குறள் தமிழனுடைய தனிச் சொத்து. அது தமிழ்நாட்டுக் கருவூலமும் ஆகும். திருக்குறளில் கூறப்படாதது எதுவும் இல்லை. அதை ஒவ்வொரு தமிழ் மகனும் தமிழ்மகளும் படித்துத் தீரவேண்டும். அதன் 1330 குறளையும் படிப்பதற்குக் குறுக்குவழி ஒன்று உண்டு. அது 133 அதிகாரத்தையும் முதலில் மனப்பாடம் பண்ணுவதுதான்.

நாள் ஒன்றுக்கு பத்துப் பத்து அதிகாரங்களாகப் பயில்வது நல்லது. பதின்மூன்றே நாட்களில் உங்கள் உள்ளத்தில் திருக்குறளின் அதிகாரத் தலைப்புகள் முழுவதும் பதிந்து விடும். பிறகு உங்களுக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் திருவள்ளுவர் எந்தத் தலைப்பில் எது எதைச் சொல்லியிருக்கிறார் என்று ஒவ்வொரு குறளாக அந்தந்த அதிகாரத்தின் கீழ்ப் படித்து அறிவை வளர்த்துக் கொள்ளலாம். இது குறளைப் படிக்கும் குறுக்கு வழியாகும்.

தம்பி! உனக்குக் கூறுவது இது ஒன்றுதான். எல்லா உறுப்புக்களும் நன்கு அமைந்ததுதான் உடல். அதுபோல, எல்லாத் துறைகளிலும் ஒளிவீசுவதுதான் அறிவு. முன்னதற்கு முழு உடல் என்றும், பின்னதற்கு முழு அறிவு என்றும் பெயர். முழு உடலைப் பெற்றதனாலேயே ஒருவன் முழு மனிதனாகிவிட முடியாது. அவன் முழு அறிவையும் பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் அவன் முழு மனிதனாகிறான். நீயும் ஒரு முழு மனிதனாக விரும்புகிறாயா? அப்படியானால், திருக்குறளைப் படி! உடனே எடுத்துப் படி!!

No comments:

Post a Comment