Friday, November 30, 2018

சிறைமீட்ட தமிழ்ப்பா -- முனைவர் எஸ். சந்திரா

#பரத்தைவயல் #நாக #முத்தையா என்ற புலவர் இராமநாதபுரத்திலுள்ள #நயினார் #கோயில் நாகநாத சுவாமியிடமும், சவுந்தர்யநாயகி அன்னையிடமும் பேரன்பு கொண்டவர்.

ஒரு சமயம், அவர் முத்துராமலிங்க சேதுபதி அரண்மனைக்குச் செலுத்தவேண்டிய பணத்தில் நூறு பொன் பாக்கி வைத்து விட்டார். அதனால் இரக்கமின்றி தாசில்தார் அவரை சிறையில் அடைத்துவிட்டார்.

சிறையில் வாடிய அவர் #நயினார்கோயில் இறைவனை நினைத்து இந்த பாடலை பாடினார்:

கையிலே ஒருகாசுக்கு இடமோ இல்லை
கடனென்றால் ஐஞ்ஞூறு பொன் மேலாச்சு
நெய்யிலே கைபோட்டுக் கொடுப்போம் என்றால்
நிருவாகம் அரண்மனையார் அறிய மாட்டார்
பையிலே பணமிருக்க நீரும் சும்மா
பார்த்திருக்க நீதியுண்டோ பரனே எம் ஐயா
மையிலே தோய்ந்த விழி உமையாள் பங்கா
மருதூரா என் வரிக்கே வழி செய்வாயே.

அவர் பாடிய பாடலைக் கேட்டு பரமனின் மனம் இளகியது! அன்பனுக்கு உதவ அன்றிரவே இறைவன் சேதுபதியின் கனவில் சென்று, "ஏன் என் மகன் நாகமுத்தனை சிறையில் அடைத்தாய்?" எனக் கேட்டு மறைந்தார்.

திடுக்கிட்டு எழுந்த சேதுபதிக்கு ஒன்றும் புரியவில்லை. சிறிது நேரம் யோசித்துவிட்டு மீண்டும் உறங்கச் சென்றார்.

ஆனால், சற்று நேரத்தில் அன்னையும் அவர் கனவில் தோன்றி, "மகனே, என் தாலிப்பொட்டை அடகு வைத்து, வரிப் பணத்தை வாங்கிக் கொள்" என்று சொல்லி மறைந்தார்.

நடுக்கத்துடன் விழித்தெழுந்த சேதுபதி விபரமறிய தாசில்தாரை வரவழைத்தார். நடந்ததை அறிந்து, தானே சிறைச்சாலைக்குச் சென்று, அவரை வணங்கி மன்னிப்புக் கேட்டு அவரை விடுவித்தார். அத்தோடு, தன் தவறுக்குப் பரிகாரமாக அவருக்கு இரண்டு கிராமங்களை நன்கொடையாக அளித்தார்.


(இந்தக் கட்டுரை #ஸ்ரீராமகிருஷ்ண #விஜயம், மார்கழி 2018 இதழில் வெளியாகி உள்ளது. அதன் ஒளியுருவை இங்கே இணைத்துள்ளேன். பின்னரும், எழுத்துருவாக பதிவேற்றக் காரணம், இணையத் தேடலில், இது போன்ற ஆராய்ந்து உறுதி செய்யப்பட்ட நிகழ்வுகள், இடம் பெற வேண்டும் என்பதால் தான்.)

posted from Bloggeroid

No comments:

Post a Comment