Saturday, September 7, 2024

பிள்ளையாரின் திருவடிவம் - சிறு விளக்கம்


இன்று பிள்ளையார் பிறந்தநாள் - அதாவது, பிள்ளையார் என்ற இறைவடிவத்தை வடிக்கலாம் என்ற எண்ணம் நம் பெரியவர்களுக்கு தோன்றிய நாள்; அல்லது, அப்படியோர் வடிவத்தை வடித்து, அவர்கள் வெளியிட்ட திருநாள்.


🌷 யானைத் திருமேனி - நினைவுகளின் தொகுப்பே நீ!


🌷 பாசம் - பற்றுகளை சேர்த்துக்கொள்வதும் நீயே!


🌷 மழு - பற்றுகளை அறுத்தெறிவதும் நீயே!


🌷 ஒடித்த தந்தம் - உன்னுள்ளிருந்து வெளிப்படும் எண்ணங்களையும் காட்சிகளையும் கொண்டு, உனது வாழ்வை (உனது மகாபாரதத்தை) எழுதுபவனும் நீயே!


🌷 உள்ளபொருள் (சிவலிங்கம்) / இனிப்பு - வீடுபேறும் / மெய்யறிவும் உன்னிடமேயுள்ளது.


🌷 வசதியாக அமர்ந்திருத்தல் - நீ அசையாத பொருள் (காட்சிகள்தாம் அசைகின்றன).


🌷 மடக்கிய இடதுகால் - புறமுகமாக செல்லும் உன் கண்ணோக்கத்தை, அகமுகமாக உன் மீதே (உனது தன்மையுணர்வின் மீது) திருப்பிக்கொண்டிரு.


🌷 மூஞ்சூறு - பிள்ளையார் ஒளியெனில் மூஞ்சூறு இருளாகும். பிள்ளையார் அறிவெனில் மூஞ்சூறு அறியாமையாகும். பிள்ளையார் மெய்ப்பொருள் எனில் மூஞ்சூறு மனமாகும். எச்சரிக்கையாக இல்லாவிடில், மனமானது மெய்யறிவை தின்றுவிடும் (மூஞ்சூறு இனிப்பை கொறிப்பது போன்று).


மொத்தத்தில் பிள்ளையாரின் திருவுருவம் தெரிவிப்பது: உன் வாழ்க்கை உன் கையில்!!


வணங்குதல் எனில் இணங்குதலாகும். பிள்ளையாரை வணங்குதல் எனில் அவரது உருவம் உணர்த்தும் கருத்துகளோடு இணங்குதலாகும். அவ்வாறு இணங்கி அமைதியடைதலே பிள்ளையார் வழிபாட்டின் உட்பொருளாகும்!!


oOOo


குரு வடிவாகிக் குவலயந் தன்னில்

திருவடி வைத்துத் திறமிது பொருளென

வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிய

பகவான் திருவடி போற்றி!


(மேலுள்ள செய்யுள் "விநாயகர் அகவல்" பாடலில் இடம்பெறுகிறது. திரு ஒளவைப்பாட்டி 🌺🙏🏽🙇🏽‍♂️, பிள்ளையார் என்ற இறைவடிவத்தை  போற்றுவது போன்று, தனது மெய்யாயரை போற்றியிருப்பார். அவரது திருவடி பின்பற்றி, எனது பிள்ளையாரான பகவான் திரு இரமண மாமுனிவரை போற்றிப் பணிகிறேன். 🌺🙏🏽🙇🏽‍♂️)


திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️


🪻🌼🪷🌼🪻

No comments:

Post a Comment