Tuesday, October 24, 2023

ஆக்கம் பெருக்கும் மடந்தையின் (ஆரியத்தில், சரசுவதி) திருநாள்!


அன்னையின் தமிழ் பெயர்கள்: பேச்சாயி, வெள்ளாயி, சொற்கிழத்தி, கலைமகள், நாமகள், பாமகள்...

அன்னையின் ஆரியப் பெயர்கள்: சரசுவதி, சாரதா, வாக்தேவி, பாரதி, வாணி, ஹம்சவாகினி...

சரசுவதி என்ற பெயரைப் பற்றி மட்டும் சிந்திப்போம்: சரஸ் + வதி - நீர் நிலையில் இருப்பவர்.

உடன், அவரது நிறத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்: நீர் நிலையில் இருப்பவர் + வெள்ளையாக இருப்பவர்.

எது இப்படிப்பட்ட பொருள்? நமது மூளை!!

(பலர் நாக்கை மட்டும் எடுத்துக் கொள்கிறார்கள். இது தவறாகும். பேச்சுக்கலைக்கு மட்டும் அவர் கடவுளில்லை. அனைத்து கலைகளுக்கும் கடவுளாவார். எனவே, மூளையென்று எடுத்துக் கொள்வதே சரியாகும்.)

மூளையை அறிவின் இருப்பிடமாக கருதுவது மரபாகும். (மூளையிருக்கா? - அறிவிருக்கா?)

அறிவை எப்படி வளர்க்கலாம் & பாதுகாக்கலாம்?

இதற்கு விடையாக, அன்னையின் திருவுருவைப் பற்றி சிந்திக்கலாம்.

🌷 அன்னையின் கையிலுள்ள ஏடுகள் - நல்ல நூல்களை கற்கவேண்டும்.

🌷 ஜெபமாலை - கற்றதை மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்தி பார்க்கவேண்டும்.

🌷 வீணை மீட்டுதல் - கற்பதோடு நிற்காமல், கற்றதை செய்துபார்க்கவேண்டும்.

🌷 அன்னப்பறவை - தேவையற்றதை ஒதுக்கிவிட்டு, தேவையானதை கொள்ளும் பகுத்தறிவு.

🌷 மயில் - இப்பிறவியில் கற்பது இனி வரும் பிறவிகளிலும் உதவும். மயிலின் தோகையிலுள்ள கண்கள் பிறவிகளுக்கு சமம்.

🌷 நீர்நிலை (ஆறு / குளம்) - அசைவது / மாறிக்கொண்டேயிருப்பது - வையகத்தை குறிக்கும். நாம் கற்கும் யாவும் வையகத்திலிருந்து கிடைத்தவையே.

🌷 வெள்ளை நிற ஆடை - அகத்தூய்மை.

🌷 மடித்திருக்கும் வலதுகால் - கற்றதைக் கொண்டு வாழ்க்கையை வாழ்.

(இடதுகால் மடிந்திருந்தால் - மெய்யறிவை நோக்கி பயணி. இரு கால்களையும் மடித்து, சம்மணமிட்டிருந்தால் - வாழ்க்கையையும் வாழ் & மெய்யறிவின் மீதும் ஒரு கண்ணை வை.)

🌷 அன்னையின் கணவரான நான்முகன் - நான்கு திசைகளை குறிக்கும். அத்திசைகளிலிருந்து வரும் செய்திகளையும், தரவுகளையும் குறிக்கும்.

oOo

மெய்யியலில் பெண்ணுருவமும், நீர்நிலையும் நிலையற்றதை குறிக்கும். எனில், நிலையற்ற வையகத்திலிருந்து பெறப்படும் நிலையற்ற அறிவை நாமகள் குறிக்கிறார் என்று கொள்ளலாம். எனில், நிலையான அறிவு என்பதெது? அது எங்கிருந்து கிடைக்கிறது? யார் தருகிறார்கள்? இது பற்றி வேறோர் இடுகையில் அலசுவோம். 🙏🏽

oOo

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் நல்லம்மை - தூய
உருப் பளிங்கு போல்வாள் நம் உள்ளத்தின் உள்ளே
இருப்பாள் அங்கு வாரா திடர்!

அனைவருக்கும் எனது மனமார்ந்த ஆற்றங்கரை சொற்கிழத்தி திருநாள் நல்வாழ்த்துகள்!! 🙏🏽🙏🏽

📖🦢🪔☀️

(கம்பர் பெருமானின் பாடலை சற்று மாற்றியுள்ளேன். 🙏🏽)

(ஆக்கம் பெருக்கும் மடந்தை, ஆற்றங்கரை சொற்கிழத்தி -- ஒட்டக்கூத்தர் பயன்படுத்திய பெயர்களாகும். 🙏🏽)

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

No comments:

Post a Comment