Saturday, June 11, 2022

அன்னையின் மைந்தனும் தகப்பன் சுவாமியும்!!


விநாயகர் எனில் விசேட நாயகர். அதாவது, சிறப்பு வாய்ந்த நாயகர்.

🌷 இவரிடமென்ன சிறப்புள்ளது?

அப்பனின் தொடர்பில்லாமல், அன்னையால் மட்டுமே உருவாக்கப்பட்டவர் என்பதால் "சிறப்பு வாய்ந்தவர்" ஆகிறார். அதாவது, நம்மிடம் சேர்ந்துள்ள அறிவு (விநாயகர்) அனைத்தும் உலகிலிருந்து (அன்னை) பெறப்பட்டது; உள்ளபொருளில் (அப்பன்) இருந்து அல்ல என்பது உட்பொருள்.

அடுத்து, இளைய பிள்ளையான கந்தன்.

கந்தன் - திரண்டவன் - நம்மிடமிருந்து திரண்டு வெளிப்படும் ஓர் ஆற்றல் / அறிவு.

🌷 இவ்வாற்றல் / இவ்வறிவு வெளிப்படும்போது 4 செயல்கள் ஒருங்கே நடைபெறும்:

🔸 ஆற்றல் / அறிவு வெளிப்படுதல் (கந்தன்)
🔸 காணப்படும் உலகம் (அன்னை) மறைதல்
🔸 நம்மை நாம் (அப்பன்) தெளிவாக உணர்தல்
🔸 "நாம் இன்னார்" என்ற பொய்யறிவு (அசுரன்) நீங்குதல்

🌷 கந்தன் எனும் ஆற்றல் / அறிவு வெளிப்படும்போதுதான் நம்மை நாம் (தகப்பன்) தெளிவாக உணர்வதால், கத்தனுக்கு "தகப்பன் சுவாமி" / "சுவாமிநாதன்" என்று பெயரிட்டனர்.

🌷 முதலில் உலகைப் பற்றிய தேவையான அறிவு (விநாயகர்) கிடைக்கிறது. இறுதியில், நம்மைப் பற்றிய அறிவு (கந்தன்) கிடைக்கிறது. இதனால், விநாயகர் மூத்தவராகிறார்; கந்தன் இளையவராகிறார்.

🌷 விநாயகர் எனும் அறிவு உலகிலிருந்து பெறப்பட்டது. இதனால்தான், அன்னையின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட சந்தனத்திலிருந்து (உலகிலுள் நானாவகையான பொருள்களிலிருந்து) பிறந்தவர் விநாயகர் எனப்படுகிறார். இதற்கு மாறாக, கந்தன் எனும் மெய்யறிவு நம்மிடமிருந்து பிறக்கிறது. இதனால்தான், அன்னையின் துணையில்லாமல், அப்பனிடமிருந்து பிறந்தவர் கந்தன் எனப்படுகிறார்.

(இங்கு கந்தன் மெய்யறிவுக்கு சமமாகிறார். இதே கந்தன் சிவகுடும்பத்தில் ஒருவராய் வீற்றிருக்கும்போது மனதிற்கு சமமாவார். இவரே தனியாகவோ அல்லது துணைவியருடன் இருக்கும்போது உள்ளபொருளாகிறார். தமிழ் எழுத்துகளை இடத்திற்கேற்றவாறு உச்சரிப்பது போன்று, இவரையும் இடத்திற்கேற்றவாறு பொருள் கொள்ளவேண்டும்.)

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment