Friday, July 23, 2021

அங்காளம்மன் வந்திருக்கிறேன்டா!!

https://youtu.be/BX4jjVMbMGo

"யாரு வந்திருக்கிறது?"

"அங்காளம்மன் வந்திருக்கிறேன்டா!"

☺️

இது எப்படியுள்ளது எனில் நீருக்குள்ளிருக்கும் மீன், "தண்ணீர் வந்திருக்குடா" என்று சொல்வது போலுள்ளது!!

தண்ணீருக்குள் ஏற்கனவேயிருக்கும் மீனின் மீது மீண்டும் தண்ணீர் எப்படி வந்துசேர முடியும்?

இவ்வாறே, நாம் வாழும் அண்டம்தான் அங்காளம்மன்! ஏற்கனவே நாம் அவரை பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம். காணப்படும் யாவும் அவர்தான். ஏற்கனவே இருக்கும் ஒருவர் மீண்டும் எப்படி வர முடியும்?

oOOo

சமயச் சின்னங்களை, குறியீடுகளைப் பற்றி ஒரு சிறிதும் தெரியாதவர்களின் கவனத்திற்கு: சில சொற்கள், செய்திகள், விளக்கங்கள் முதலில் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தும். பின்னர், தொடர்ந்து படித்துமுடிக்கும் போது இதிலுள்ள ஏரணம் (தருக்கம்/லாஜிக்) புரியும். ஏற்றுக்கொள்ளவும் இயலும். நன்றி. 🙏🏽

oOOo

உலகிலுள்ள அனைத்துப் பொருட்களையும் இரண்டாக பிரிக்கலாம்:

நிலையானது - நிலையற்றது
காண்பவன் - காணப்படுவது
உயிர் - உயிரற்றது
ஒளி - இருள்

இருள் - கருப்பு - கருப்பி - காளி.

அங்காளி - அங்கத்திலுள்ள காளி அல்லது அங்கமாகிய காளி. (அங்கம் என்பது பெண்ணுறுப்பைக் குறிக்கும்)

☀️ அங்கத்திலுள்ள காளி: பெண்ணின் பிறப்புறுப்பில் உள்ள இருள். உயிரை உருவாக்குவதற்காக ஆணும் பெண்ணும் இணையும் போது, ஆணின் பிறப்புறுப்பு பெண்ணுக்குள் நுழைவதற்கு முன்பே அங்கு இருள் உள்ளது. இது பிண்டத்தின் (தனிப்பட்ட உடலின்) அடிப்படையில். இதுவே அண்டம் எனில் படைப்புத் தொடங்குவதற்கு முன்பு எங்குமுள்ள இருள். இந்த இருளில் இருந்தே யாவும் தோன்றியதால் இதுவே அனைத்திற்கும் மூலமாகிறது. இந்த மூல இருளே (பொருளே) அங்காளியாகிறார்.

☀️ அங்கமாகிய காளி: பெண்ணுறுப்பு இருந்தால் தான் ஆணுறுப்பு இயங்கி உயிர் உருவாகும். இவ்வாறே, அண்டம் என்று வரும் போது, உயிரற்றவை முதலில் இருந்ததால்தான் உயிர் வந்து கூடி படைப்புத் துவங்க முடிந்தது. இவ்வகையில், அங்காளியே முதலில் தோன்றியவராகிறார்.

☀️ பெரும் பொருள் பொதிந்ததும், படைப்பின் துவக்கத்தைக் குறிப்பதுமான மயானக் கொள்ளை திருவிழா இன்று பல அம்மன் கோயில்களில் நடைபெற்றாலும், உண்மையில் இத்திருவிழா அங்காளம்மன் வழிபாட்டிற்கு உரியதாகும். இதிலிருந்தும் அங்காளம்மன் படைப்பின் துவக்கத்தைக் குறிப்பவர் என்று அறியலாம். அங்காளம்மன் வந்திருக்கிறேன்டா!

☀️ அங்காளம்மன் கோயில் திருவிழாக்களில் ஊஞ்சல் சடங்கு நடக்கும். வேறு நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தாலும் ஊஞ்சலை நிறுத்தாமல் ஆட்டிக்கொண்டேயிருப்பர். "அங்காளம்மன் நிலையற்றவர்; மாறிக் கொண்டேயிருப்பவர்" என்பதை உணர்த்தவே இப்படிச் செய்வர். எனில், அங்காளம்மன் என்பது யாது?

நாம் வாழும் அண்டம் தான் அது!! அண்டமானது நிலையற்றது. மாறிக்கொண்டேயிருப்பது. எனில், இதிலுள்ள யாவும் தோற்றம்-வளர்ச்சி-சிதைவு-மறைவு என்ற சுழற்சியில் பயணித்துக் கொண்டேயிருக்கிறது.

அங்காளம்மன் - நிலையற்ற பொருள் - அண்டம் - படைப்பு முழுவதும்.

முடிவாக, அங்காளம்மனே படைப்பின் மூல பொருளாகிறார். முதலில் தோன்றியவராகிறார். மொத்த படைப்புமாகிறார். நிலையற்றவராகிறார்.

("தலையில் ஆப்பிள் விழுந்ததும் புவியீர்ப்பு விசையை உணர்ந்ததாக" புருடா விடும் வெள்ளையினத்தின் கவனத்திற்கு: தம் முன் பழுதற தோன்றும் காட்சியைக் கூர்ந்து கவனித்து ஆராய்ந்து, காட்சியின் அடிப்படை அலகு "நிலையாமை / மாற்றம்" என்றுணர்ந்து, உணர்ந்ததைப் போற்றி பாதுகாக்க ஒரு வழிபாட்டு முறையை உருவாக்கி, அதை வைத்து மக்களை நெறி படுத்தி, பொருளாதாரத்திற்கும் வழிகோலிய எம் முன்னோர்களே உண்மையான இறைமகனார்களும், இறைதூதுவர்களும், அறிவியலாளர்களும், மாமேதைகளும், பகுத்தறிவு தந்தைகளும், சமூகவியலாளர்களும் & சமூக பணியாளர்களும் ஆவர்!! 💪🏽)

oOOo

பெண்தெய்வ வழிபாடு பிற்காலத்தில் மூன்று பிரிவானது:

🌷 மாரியம்மன், காளியம்மன்... - இந்த பிரிவில் அங்காளம்மன் இருக்கிறார்.
🌷 காமாட்சி, மீனாட்சி ... - இப்பிரிவிலுள்ள ஆதி பராசக்தி அங்காளம்மனுக்கு சமமாகிறார்.
🌷 பெருமாள் - இங்கு துணைவியர், கருடன், அனுமன் என யாருமில்லாத பெருமாள் அங்காளம்மனுக்கு சமமாகிறார். பெண்தெய்வ வழிபாட்டிலிருந்து வந்ததால்தான் வைணவத்திலும் ஊஞ்சல் சடங்கு சிறப்பு பெறுகிறது.

பெண்தெய்வ வழிபாட்டினர் எப்பொருளை அங்காளம்மன் என்று குறிப்பிடுகின்றனர் என்பதை சுட்டிக்காட்டவே இந்த இடுகையை எழுதியுள்ளேன். அவர்களது கொள்கை ஏற்புடையதா, அல்லதா என்று நான் விளக்க முற்படவில்லை. நிலையற்ற பொருளை அதற்கு எதிரான நிலையான பொருளோடு (சிவம்) ஒப்பிடவேயில்லை.

oOOo

இறுதியாக, இணைப்புக் காணொளியில் நடக்கும் சடங்கை அருள்வாக்கு என்றழைப்பர். ஆனால், இன்று, இவை பெரும்பாலும் வெற்றுச் சடங்காக, அரங்கேற்றப்பட்ட வாக்குகளாகிவிட்டன!!

உடுக்கை, பம்பை போன்ற இசைக்கருவிகளின் ஒலியால் சிலர் தன்னிலையிழப்பர். ஒன்று சரி அல்லது தவறு, ஒன்றைச் செய்யலாம் அல்லது செய்யக்கூடாது என்ற சிந்தனையற்று, மனம் சொல்வதை அப்படியே சொல்வார்கள். மனமானது அன்னை மாயையின் (காளியின்) கூறாவதால் மனம் சொல்வதை வடிக்கட்டாமல் அப்படியே வெளிப்படுத்தும்போது அது அன்னையிடமிருந்து நேரடியாக வெளிப்படுவதாகிறது.

(இது போன்ற பழங்கால நாகரிகங்களின் சடங்குகளைத் திருடி உருவாக்கப்பட்டதுதான் வெள்ளையர்களின் உளவியல். கேட்டால், மதுரை, தென்காசி, திருநெல்வேலி என்று அல்வா பெயர்களைக் ("அறிவியல்" சொற்களைக்) கூறுவான்!! 😏)

oOOo

யாதுமாகி நின்றாய் - காளி
தீது நன்மையெல்லாம் - காளி
பூதம் ஐந்தும் ஆனாய் - காளி
போதமாகி  நின்றாய் - காளி 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment