Sunday, August 4, 2024

கோலாட்டம் & குழலூதும் கண்ணன் - உட்பொருள்



செய்தி: சென்ற மார்ச் திங்கள் தொடக்கத்தில், 121+ ஆந்திரா அன்பர்கள், கோலாட்டம் அடிக்கொண்டு, சிவன் பாடல்களையும், பெருமாள் பாடல்களையும் பாடிக்கொண்டு, திரு அண்ணாமலையாரை வலம் வந்தனர்.

இன்று, இச்செய்தியில் தவறிருக்கிறது என்று சொன்னால் யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். சரி. இதே செய்தி, இன்னும் சில நூற்றாண்டுகளில், பின்வருமாறு மாறும்:

ஆந்திரா அன்பர்கள், கோலாட்டம் அடிக்கொண்டு, சிவன் பாடல்களையும், பெருமாள் பாடல்களையும், இயேசு பாடல்களையும் பாடிக்கொண்டு திரு அண்ணாமலையாரை வலம் வந்தனர். மேற்கு திசை வரும்போது, சாலையிலேயே ஒழு செய்து, மிகப்பெரிய இறைவனை வணங்கினர்!!

😃

இப்போது, முதல் செய்தியிலுள்ள தவறு புரிந்திருக்கும்!

🌷 தென்னாடுடையவன் வழிபாடு = அசைவற்ற உள்ளபொருளை போற்றுவது
🌷 பெருமாள் வழிபாடு = அசையும் யாவற்றையும் போற்றுவது

எது உங்கள் கொள்கை? எது சரியென்று கருதுகிறீர்கள்? உள்ள பொருளா? அல்லாத பொருளா?... இவ்வகையில் சிந்திக்கவேண்டும்.

இதை விடுத்து, சிவபெருமானின் மனைவி அன்னை, அன்னையின் அண்ணன் பெருமாள், பெருமாளின் மருமகன் முருகன், மாமன், மச்சான், ஒன்று விட்டது, இரண்டு விட்டது என்று சிந்தித்தால்... அவ்வளவுதான்! மீண்டும் ஜிஎஸ்டி-சூழ் வையகத்தில் பிறந்து, "இந்திரன் அசோகன் சாலையோரங்களில் மரம் நட்டான்", "வாஸ்கோடகாமா பாரதத்தை கண்டுபிடித்தான்", "திப்பு சுல்தானே முதல் விடுதலைப் போராட்ட வீரன்", "இராமசாமி சமூகநீதி காத்தான்" போன்ற "வரலாற்று உண்மைகளை" படித்து தெளிந்து, தேவர்களுக்கு அவிர்ப்பாகம் (ஜிஎஸ்டி முதலான வரிகள்) கொடுத்து, "மஸ்தான் நல்லவன்" என்பதை ருசித்துப் பார்க்கவேண்டியிருக்கும்! 😝

oOo

உறியடித்தல், வழுக்குமரம் ஏறுதல், கோலாட்டம் ஆகியவை நாம மதத்தை சார்ந்தவையாகும்.

உள்ளபொருளாய் சமைந்த மெய்யறிவாளர்களுக்கு "விறகு" என்றொரு பெயரிருக்கிறது. எப்போதும் எதனாலும் பாதிப்படையாமல், அப்படியே அவர்களிருப்பதால் இப்படியொரு பெயரைச் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள் நம் பெரியவர்கள். (அசுரத்திலுள்ள தாணு என்ற பெயருக்கும் இதே விளக்கம்தான்)

எ.கா.: (காஞ்சிபுரம் மாவட்டம்) மாகறல் பெருமான் - மா+கறல் - பெரிய / சிறந்த விறகு.

இப்போது, விறகை சற்று மாற்றினால், கோல் கிடைக்கும். இன்னும் சற்று மாற்றினால் குழல் கிடைக்கும்.

விறகு = கோல் = குழல் = உள்ளபொருள் (சிவம்).

கோலாட்டத்தில் பயன்படுத்தப்படும் கோல் என்பது அசைவற்ற உள்ளபொருளை குறிக்கும். எனில், தன்னை நன்கு ஒப்பனை செய்துகொண்டு, கோலை வைத்துக்கொண்டு, குனிந்து, நிமிர்ந்து, வளைந்தாடும் நபர்... மாயோனை (அல்லது, அன்னை மாயையை) குறிப்பார். (மாயோனை "ஒப்பனை விரும்பி" என்று அழைக்கின்றனர். எனவே, மாயோனை குறிக்கும் நபர், தன்னை நன்கு ஒப்பனை செய்துகொண்டிருக்கிறார்.)

அதாவது, உள்ளபொருளை இயக்குவது மாயை என்பது கோலாட்டம் உணர்த்தும் உட்பொருளாகும்! அசைவற்றதை அசைவது இயக்குகிறதாம்! திரைத்துணியானது படத்திற்கு இடங்கொடுக்கிறதா? அல்லது, படமானது திரைத்துணியை அசையச் செய்கிறதா?

படம்தான் துணியை அசைக்கிறது என்று நம்புகிறவர்கள் கோலாட்டம் ஆடலாம்! 😏

oOo

கோலாட்டத்தில் ஆடும் நபர் மாயோனுக்கு ஒப்பானவரென்று பார்த்தோம். இப்போது, மாயோனே அங்கு நிற்பதாக வைத்துக் கொள்வோம். கோலுக்கு பதிலாக குழலை வைத்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். குழலூதும் கண்ணன் வடிவம் கிடைத்துவிட்டது!

அதாவது, கோலாட்டத்தின் உட்பொருள் என்னவோ, அதுவேதான் குழலூதும் கண்ணன் வடிவத்தின் உட்பொருளுமாகும்: அசைவது அசைவற்றதை இயக்குகிறது! (காட்சியானது துணியை அசைக்கிறது! ☺️)

(குழலூதும் கண்ணன் நேராக நிற்கமாட்டார். வளைந்து நெளிந்து நிற்பார். இது அசைவை குறிக்கும். நேராக இருக்கும் அவரது குழல் அசைவற்ற உள்ளபொருளை குறிக்கும்.)

மேற்கண்டது திரு கண்ணபிரானின் கருத்தல்ல. அவர் மெய்யறிவிற்கு வழிகாட்டியவர். அவர் வாழ்ந்த சமயத்தில் வைணவமே இல்லை! (ஒருவேளை, அன்று, கண்ணபிரானிடம் "குழலூதும் கண்ணன்" வரைபடத்தை வைணவர்கள் காண்பித்திருந்தால், "மாமனை பிற்பாடு பார்த்துக் கொள்ளலாம். முதலில், இந்த பயல்களை போட்டுத்தள்ளவேண்டும்" என்று முடிவெடுத்திருப்பார்"!! 😆)

oOo

உண்மையில் என்ன நடக்கிறதென்பதை வெகு அழகாக, சொற்களால் படம் பிடித்து காட்டியிருக்கிறார் திரு நடனானந்தர்:

ஏதேது வந்தாலும் ஏதேது செய்தாலும்
ஏதேதில் இன்புற்று இருந்தாலும் - ஏதேதும்
தானாகா வண்ணம் தனித்திருக்கும் 
ஞானாகாரம் தானே நாம்!

என்றும் எப்போதும் எந்நிலையிலும் உள்ளபொருளாகிய நமது தன்மையுணர்வில் எம்மாற்றமும் நிகழ்வதில்லை. மாற்றங்கள் நிகழ்வதெல்லாம் மற்றவற்றில் - மனம், உடல் & வெளி. மாறுவது எதுவும் உள்ளபொருளாகாது. செயல் என்பதும் மாற்றத்தை குறிக்கும். அதுவும் உள்ளபொருளாகாது. இதனால்தான், செயலை குறிக்கும் கூத்தப்பெருமானின் திருவடிவம், தில்லையை தவிர, மற்றனைத்து திருக்கோயில்களிலும், கருவறையில் வைக்கப்படாமல், மனதை குறிக்கும் 3வது கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

செயல் நடைபெறுவதற்கு இசைவது (அனுமதிப்பது) மட்டுமே உள்ளபொருளின் பங்காகும். செயலை நிகழ்த்துவது மாயோனின் (அல்லது, மாயையின்) பங்காகும். 

"நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே..." -- கவியரசர். (நான் - தன்மையுணர்வு)

ஒரு கதையில், பேரரசர் இராவணன், தனது தலைகளில் ஒன்றை கொய்து, தனது நரம்புகளை அதில் பூட்டி, அதையொரு வீணையாக்கி, இசைத்து, இறைவனின் அருளை பெற்றாரென்று புனைந்திருப்பார்கள். இங்கு, இராவணன் மனதை குறிக்கிறார். மனமானது, தனது உருப்படிகளை வைத்து, தானே இயங்கி, விளைவுகளை உண்டாக்குகிறது என்பது உட்பொருளாகும். இது, கோலாட்டம் & குழலூதும் கண்ணன் ஆகிய வரைவுகளை (அசுரத்தில், சித்திரிப்பு) விட உண்மைக்கு பொருத்தமானதாகும்.

கோலாட்டம் ஆடுவோர், கோல்களுக்கு பதிலாக, தங்களது கைகளையே பயன்படுத்தலாம். குழலூதும் கண்ணன், தனது வாயாலோ, அல்லது, கைகளை குவித்தோ ஓசையெழுப்புவது போன்று மாற்றி வரையலாம். உண்மைக்கு பொருந்தும். மாற்றுவார்களா? (கண்ணபிரானே வந்து சொன்னாலும் மாற்றமாட்டார்கள்!! 😏)

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

No comments:

Post a Comment