Sunday, July 16, 2023

பூரி ஜெகந்நாதர் திருக்கோயில் இறையுருவங்கள்!


வையகக் காட்சி விலகி, திருநீற்று நிலை (ஆரியத்தில், சமாதி) தொடங்கியதும், சில தெளிவில்லாத காட்சிகளை அன்னை மாயை (அல்லது, மாயக்கண்ணன்) தோற்றுவித்து, நம்மை மீண்டும் வையகத்திற்குள் தள்ள முயற்சிப்பார். அந்த தெளிவில்லாத காட்சிகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டவைதாம் இந்த இறையுருவங்கள்.

இப்போது நாம் காணும் முத்திரட்சிக் (ஆரியத்தில், முப்பரிமாணம்) காட்சிகளை போலல்லாது, திருநீற்று நிலைக் காட்சிகள் இருதிரட்சிக் காட்சிகளாக இருக்கும். பழைய கருப்பு-வெள்ளைத் திரைப்படங்களை காணும்போது, படச்சுருள் முடியும் தருவாயில், சில கீறல்கள் தெளிவில்லாமல் திரையில் ஓடுவதைப் பார்த்திருப்போம். இவ்வண்ணமே திருநீற்று நிலைக் காட்சிகள் இருக்கும். இக்காட்சிகளே பூரி இறையுருவங்களின் அடிப்படையாகும்.

திருநீற்று நிலையின் தொடக்கமே இறுதிநிலை என்று கணக்கிட்டு, அப்போதுள்ள காட்சியை படம்பிடிப்பது போன்று கருவறை இறையுருவங்களை உருவாக்கியுள்ளனர். உடன், அவர்களது வைணவ நம்பிக்கைகளையும் சேர்த்துள்ளனர்:

🔸 இருளே பெரிது. எக்கணமும் இடைவிடாது இருப்பது.

திரு கண்ணபிரான் - கருப்பு நிறம். பெரிய உருவம். வட்டவடிவக் கண்கள். இடைவிடாது எக்கணமும் இருப்பதைக் குறிக்கும்.

🔸 இருளிலிருந்து ஒளி பிறந்தது. ஒளி தோன்றி மறையக்கூடியது.

திரு பலராமர் - வெள்ளை நிறம். கண்ணபிரானை விட சற்று சிறிய உருவம். முட்டைவடிவக் கண்கள். ஒரு புறம் குவிந்தும், மறுபுறம் விரிந்துமிருக்கும். தோன்றி மறைவதைக் குறிக்கும்.

🔸 இறுதியாக காட்சிகள் பிறந்தன. காட்சிகளும் தோன்றி மறையக்கூடியவை.

திரு சுபத்திரை - மஞ்சள் நிறம். விளையாட்டுப் பிள்ளையை நினைவுபடுத்தும் சிறிய உருவம். பலராமரைப் போன்ற முட்டைவடிவக் கண்கள்.

இம்மூன்று உருவங்களையும் சற்று மாற்றி சிந்தித்தால்... இறை-உயிர்-தளை (ஆரியத்தில், பசு-பதி-பாசம்கிடைத்துவிடும்! ☺️

மேலும், பூரி இறையுருவங்கள் வைக்கப்பட்டிருக்கும் வரிசையை சிந்தித்தால்... உமைமுருகுஈசர் (ஆரியத்தில், சோமாஸ்கந்தர்) கிடைத்துவிடுவார்! 😏

🌷 உமைமுருகுஈசர்: கணவன் + விளையாட்டுப் பிள்ளை + மனைவி

🌷 பூரி: அண்ணன் + விளையாட்டுத் தங்கை + தம்பி

ஆனால், ஒரு பெரிய வேறுபாடுள்ளது. நம் பெரியவர்கள் இறை-உயிர்-தளை என்று மூன்று முடிவில்லாத பொருட்களை வரையறுத்திருந்தாலும், உமைமுருகுஈசர் என்ற இறையுருவை வடித்திருந்தாலும், கருவறையில் வைத்தது சிவலிங்கமென்ற ஓர் இறையுருவை மட்டுமே! ஏனெனில், இருப்பது ஒரு பொருளேயாகும். திருநீற்று நிலையின் தொடக்கத்தில் வேண்டுமானால் 2 அல்லது 3 பொருட்கள் இருப்பதுபோன்று தோன்றலாம். ஆனால், அந்நிலை தொடரும்போது, இருப்பது ஒரு பொருளே என்பது தெளிவாகும்.

🌷 சிவலிங்கத்தின் வளைந்த மேல்பகுதி - உள்ளபொருள் முடிவற்றது

🌷 சிவலிங்கத்தின் சீரான தண்டுப்பகுதி - உள்ளபொருள் மாற்றமடையாதது

oOo


வைணவத்தின் சின்னமாக பெண்குறியை மட்டும் இராமானுஜர் அறிவித்தார். ஆனால், மற்ற பகுதிகளில் வாழ்ந்த வைணவர்கள், தங்களது தனித்தன்மையை காட்டுவதற்காக அதில் சில மாற்றங்களை செய்துகொண்டனர். பூரி பகுதியில் வாழ்ந்தோர், பெண்ணுறுப்பின் வெளித்தோற்றத்தோடு, பெண்ணுடலின் உட்புறத்தில், இரு பக்கங்களிலுமுள்ள கருமுட்டைப் பைகளையும் சேர்த்துக்கொண்டனர். கருமுட்டைப் பைகளை இறையுருவின் காதணிகளாகவும், பெண்ணுறுப்பின் வெளிப்புறத்தோற்றத்தை கழுத்தணியாகவும் காட்டியுள்ளனர்.

குருவாயூர் பகுதியில் வாழ்ந்தோர், பெண்ணுறுப்பின் உட்புறத்தோற்றத்தை, குறிப்பாக கருப்பையையும், கருமுட்டைப் பைகளையும் எடுத்துக்கொண்டுள்ளனர். இவற்றை குருவாயூர் உடையவரை சுற்றியுள்ள ஒப்பனையில் காட்டியுள்ளனர்.

oOo

இராமானுஜருக்கு முன்னர் நாமச்சின்னம் கிடையாது. 1,300 ஆண்டுகளுக்கு முன்னர் வைணவமே கிடையாது. ஆனால், பூரி திருக்கோயில் வெகு பழமையானதாக கருதப்படுகிறது. எனில், 1,300 ஆண்டுகளுக்கு முன்னர் அக்கருவறையில் இருந்த இறையுரு எது?

வடக்கிலிருந்து வந்த பெளத்தம் போனியாகாத நிலை ஏற்பட்ட பிறகு, அதிலிருந்து ஒரு பகுதியினர் வைணவத்தை உருவாக்கி, தொழிலைத் தொடர்ந்தனர் என்பது வரலாறு. எனில், 1,300 ஆண்டுகளுக்கு முன்னர் பூரி திருக்கோயில் பௌத்தக் கோயிலாக இருந்ததா?

ஆனால், அத்திருக்கோயிலின் கருவறை பல்லாயிரமாண்டுகள் பழமையானது என்கிறார்கள். பௌத்தத்தின் வயதோ 2,500 ஆண்டுகள் மட்டுமே. இதிலும், 500-700 ஆண்டுகள் கழித்தே அது தெற்கில் பரவத்தொடங்கியது. எனில், பௌத்தத்திற்கு முன்னர் அக்கருவறையில் இருந்த இறையுரு எது? அக்கருவறையின் கீழ் திருநீற்று நிலையிலிருக்கும் பெருமானின் கண்ணோட்டம்தான் யாது?

உடலாக (பூரி) உலகைக் (ஜெகம்) கொண்ட தலைவனாக (நாதன்) வைணவர்கள் போற்றும் அந்த பூரி பெருமானுக்கே வெளிச்சம்! 🙏🏽

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌼🌼🌼🌼🌼

No comments:

Post a Comment