Showing posts with label பாரத்தழும்பர். Show all posts
Showing posts with label பாரத்தழும்பர். Show all posts

Saturday, October 19, 2024

திருமாகறல் பெருமானின் சிறப்புகள் மற்றும் "திருமணம் கைகூடும்", "கிரக தோஷம் விலகும்" போன்ற சொற்றொடர்களின் உண்மை பொருள்!


கிரக தோஷம் விலகுவது இருக்கட்டும். திருநெறியத் தமிழர்களை பிடித்திருக்கும் "அசுர தோஷம்" எப்போது விலகும்? 😜

திரு சீர்காழி பிள்ளையாரின் (அசுரத்தில், திருஞானசம்பந்தரின்) பாடல் பெற்ற திருக்கோயில் என்ற பெருமையை இருட்டடித்து விட்டு, "கிரக தோஷம் விலகும்", "பிரிந்த தம்பதியினர் ஒன்று கூடுவர்" என்று கண்ட கண்ட புருடாக்களை விட்டுள்ளனர்!

அவர்கள் பட்டியலிட்டுள்ளபடியே இத்திருக்கோயிலின் & இங்கு குடிகொண்டிருக்கும் பெருமானின் சிறப்புகளை பார்ப்போம்:

🌷 மாகறல் - பெரிய / சிறந்த விறகு.

எதிலும் பற்றற்று இருத்தல். அதாவது, இவ்விறைச் சின்னத்தின் கீழே, திருநீற்று நிலையிலிருக்கும் பெருமான் எதிலும் பற்றற்றிருக்கிறார் என்பது பொருளாகும்.

🌷 உடும்பீசர் - உடும்பு + ஈசர். 

உடும்புப்பிடி என்று சொல்வது போன்று, அப்பெருமான் தனது தன்மையுணர்வை இறுக பற்றிக் கொண்டிருப்பவர்.

🌷 பாரத்தழும்பர் - பாரம் + தழும்பர். 

> பாரம் - பருமை, எடை, சுமை.
> தழும்பர் - வடு ஏற்படுத்துபவர். 

"நீரே எனக்கு தஞ்சம்" என்ற பாரத்தை அவர் மீது ஏற்றினால், "நீயே உள்ளபொருள்" என்ற மாறாத வடுவை நம்முள் ஏற்படுத்திவிடுவார்!

🌷 மகம் வாழ்வித்தவர் - வேள்வியை ஊக்குவித்தவர். 

உடனே, ஒரு வேள்விக்குழி, அதை சுற்றி 1-4 அசுரர்கள், "ஓட்டைப்பானைக்குள் ஈ" ஒலிப்பு கொண்ட அசுரம், வாயில் போடவேண்டியதை நெருப்பில் போட்டு கரியாக்குதல்... என்று கற்பனை செய்து கொள்ளக்கூடாது! ☺️

நமதுடலே வேள்விக்குழி. நான் எனும் நமது தன்மையுணர்வே நெருப்பு. நம் மனதில் தோன்றும் எண்ணங்களே நெருப்பிலிடப்படும் பொருட்கள். தோன்றும் எண்ணங்களை சட்டை செய்யாமலிருத்தலே வேள்வி! 

(எழும் எண்ணங்களை சட்டை செய்யாமலிருந்தால் அவை தாமாகவே நம்முள் (நமது தன்மையுணர்வு எனும் நெருப்பில்) அடங்கிப்போகும்.)

🌷 பிரிந்த இணையர் (அசுரத்தில், தம்பதியர்) மீண்டும் ஒன்று சேருவர். 

மேலுள்ள சொற்றொடரை பார்த்ததும், "திருமணமாகி பிரிந்துள்ளோர் இங்கு வந்து வேண்டிக்கொண்டால், மீண்டும் ஒன்று சேருவர்" என்று நாம் பொருள் கொள்ளும்படி கொம்பு சீவியுள்ளனர். இது தவறாகும்!

> தென்னாடுடையவன் - ஆண்.
> அன்னை - பெண்.

> தென்னாடுடையவன் என்பது நமது தன்மையுணர்வு - ஆண். 
> அன்னை என்பது நமது மனம் - பெண்.

> நமது மனம் புறமுகமாக சென்றால், அதற்கு பெயர்: பிரிவது / பிரிவு.
> மனம் அகமுகமாக திரும்பினால், அதற்கு பெயர்: ஒன்று சேர்வது / இணைவு.

இத்திருக்கோயிலில் குடிகொண்டிருக்கும் பெருமானின் அருட்பார்வை நம் மீது பட்டால், நமது மனமானது புறமுக நாட்டத்தை விட்டு விட்டு அகமுகமாக திரும்பிவிடும். அதாவது, மெய்யறிவு தேடலில் இறங்கிவிடுவோம்.

சில திருக்கோயில்களில், "இங்கு வேண்டிக்கொண்டால், வரைவில் திருமணம் நடக்கும்" என்று எழுதி வைத்திருப்பார்கள். அதன் பொருளும் மேற்கண்டதுதான்: அங்குள்ள பெருமானின் அருள் பெற்றால், நம் மனமானது (பெண்) அகமுகமாக திரும்பி, தன்மையுணர்வில் (ஆண்) கரைந்துவிடும் (திருமணம்).

🌷 கோள் நோய் (அசுரத்தில், கிரக தோஷம்) விலகும்.

கோள் என்றவுடன் பகலோன், இரவோன், அறிவன், வெள்ளி... என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. கோள் எனில் கருதுகோளாகும்!

யாரை பார்த்தாலும், எதை பார்த்தாலும் ஒரு கருத்து நம் மனதில் தோன்றுகிறதல்லவா? இதையே "[கருது]கோள் நோய்" என்று நம் பெரியவர்கள் அழைத்துள்ளனர். அசுரர்கள், இதை, "கிரக தோஷம்" என்று பெயரை மாற்றி, சோதிடத்துடன் தொடர்புபடுத்தி, துட்டு பார்க்கின்றனர்!

இக்கருதுகோள் நோய் ஏன் ஏற்படுகிறது? மனம் இயங்குவதால்! எனில், மனமழிந்தால்... கருதுகோள் நோய் நீங்கிவிடும்! மனமியங்கும் வரை கருத்துகள் தோன்றுவதை தவிர்க்கமுடியாது. மனதின் இயக்கத்தை நிறுத்தவும் முடியாது. பின்னர், என்ன செய்வது?

"பிரிந்த இணையர்" பகுதியில் கண்டவாறு, மனதை அகமுகமாக நம் தன்மையுணர்வின் மீது திருப்பிக்கொண்டால், மனதும் தொடர்ந்து இயங்கும்; கருத்துகளும் தோன்றாது.

oOo

ஆக, எப்படி பார்த்தாலும் நமக்கு கிடைக்கும் செய்தி ஒன்றுதான்: திருமாகறல் திருக்கோயிலின் கருவறையிலுள்ள இறைசின்னத்திற்கு கீழே திருநீற்று நிலையிலிருக்கும் பெருமான் யாரோ, அவரது அடிசேர்ந்தால், பிறவிப்பெருங்கடலை நீந்திவிடலாம்!

oOOo

அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻