Showing posts with label ஆவதும் பெண்ணாலே. Show all posts
Showing posts with label ஆவதும் பெண்ணாலே. Show all posts

Monday, March 17, 2025

ஆவதும் பெண்ணாலே! அழிவதும் பெண்ணாலே!!


(கடந்த மகளிர் திருநாளுக்காக ஒரு குழுவில் பதிவிட்டதை, சற்று மாற்றி, இங்கு பதிவிடுகிறேன்.)

🔸 ஆவது - உள்ளபொருளாய் ஆவது. மெய்யறிவு அடைவது. பிறவிப்பெருங்கடலை கடப்பது. தன்னிலைக்கு மீள்வது.

🔸 அழிவது - மற்றபொருளாய் ஆவது. மெய்யறிவை இழப்பது. பிறவிப்பெருங்கடலில் விழுவது. தன்னிலை தவறுவது.

எல்லாமே மனதின் (அன்னையின்) வேலையென்பதாலே "ஆவதும்... அழிவதும்..." என்று சொல்லி வைத்தார்கள்.

oOo

🔸 தாய் - தம்+ஆய் - என் இறைவி.

🔸 அன்னை - அ+ன்+ஐ

அ - தமிழ் எழுத்துகளின் முதல்.
ன் - தமிழ் எழுத்துகளின் இறுதி.
ஐ - வியப்பு

அதாவது, யாவுமானவளே என்ற வியப்பு!!

"வையக மகளிர் திருநாள்" என்று வெ(கொ)ள்ளையன் முடிவு செய்த ஒரு நாளை கொண்டாடுவதை விட,

🔸 செயற்கரிய செயல்களை செய்து, நாயன்மார்கள் வரிசையில் அமரும் பேறு பெற்ற ஒரே நாயன்மாரான திரு காரைக்கால் அம்மையார்

🔸 தொல் தமிழரது மொழியும், நெறியும், வாழ்வியலும் அழிந்திடாது காத்த திரு மங்கையர்க்கரசியார்

🔸 எளிய செய்யுள்களால் தென்தமிழையும் அறத்தையும் பரப்பிய ஒளவைப்பாட்டி

🔸 வெ(கொ)ள்ளையனை புறமுதுகிட்டு ஓடச் செய்த வேலு நாச்சியார்

🔸 சோழரது படைகள் போருக்கு சென்றிருந்த சமயத்தில், அவர்களது [நெற்] களஞ்சியங்களை, [உணவுப்பொருள்] சேமிப்புக் கிடங்குகளை அழிக்க வந்த சாளுக்கிய படைகளை, தன்னந்தனியாக, சிறு படை கொண்டு சிதறடித்து விட்டு, உயிர்துறந்த வீரப்பெண்மணி (இவரையே, இன்று, முண்டகக் கன்னியம்மன் என்று வணங்குகிறோம்)

போன்றோரது திருநாளை மகளிர் நாளாக கொண்டாடுவதே சிறப்பாகும்.

யாதுமாகி நின்றாய் கோடுடைச் செல்வி!
தீது நன்மை எல்லாம் கானமர் செல்வி!
பொருள் ஐந்துமானாய் காடுறைச் செல்வி!
அறிவாகி நின்றாய் செல்வ செல்வியே!!

(முண்டாசுக் கவிஞரின் பாடலிலிருந்து சில சொற்றொடர்களையும், அன்னையின் பழந்தமிழ் பெயர்களையும் இணைத்துள்ளேன்.)

oOOo

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻