Tuesday, November 8, 2022

டேனியல் கிரெய்க் சாத்திக்கொண்ட பட்டை நாமம்!! 😁


இருப்பவர்களிடமிருந்து கறப்பதற்கும், தாங்குதிறனுள்ளவர்களை கேடயமாக பயன்படுத்துவதற்கும் சாங்கியம், சடங்கு, சம்பிரதாயம், காரியம், நீதி (நியாயம்), விதி (தருமம்), அறம், கடமை, கொடை, குடும்பம், சமூகம், மதம் என பல பட்டை நாமங்கள் இங்குண்டு. இதற்கு சமமான பட்டை நாமங்கள் உலகமெங்கும் உண்டு. அதிலொன்றை கிரெய்க் சாத்திக்கொண்டுள்ளார். அல்லது, சாத்திவிட்டிருக்கிறார்கள். இது பற்றி சற்று பார்ப்போம்.

oOo

"இறக்கும்போது பணக்காரனாக இறக்காமல், ஏழையாக இறக்கவேண்டுமென்பது நம் தொன்நம்பிக்கை. அதன்படி, எனது சொத்துகளை எனது குழந்தைகளுக்கு விட்டுச்செல்லாமல், அவற்றை கொடையாக கொடுத்துவிடப்போகிறேன்." என்று பேசியிருக்கிறார்.

ஒருவர் இறக்கும்போது அவரது சொத்துகளா அவருடன் செல்கின்றன? இல்லை! அவரது வினைப்பயன்களும், பற்றுகளுமே அவருடன் செல்கின்றன. இவையே ஒருவருடைய உண்மையான சொத்துகள். இவற்றிற்கேற்றவாறு பிறவிகள் அமைகின்றன. பிறவிகள் வேண்டாமெனில் ஏழையாக இறக்கவேண்டும். அதாவது, மேற்கண்ட சொத்துகளின்றி இறக்கவேண்டும். பணம், பொருள், நிலம், வீடு எனில் கொடையாக அளிக்கலாம். மேற்கண்டவற்றை எப்படி மற்றவர்களுக்கு கொடுக்கமுடியும்? யார் பெற்றுக்கொள்வார்கள்?

"பற்றுகளின்றி இறக்கவேண்டும்" என்ற அறிவுரை திரிந்து / திரிக்கப்பட்டு, "சொத்துகளின்றி இறக்கவேண்டும்" என்று ஆகிவிட்டது / ஆக்கப்பட்டுவிட்டது. சொத்துகளின்றி இறந்தாலும், பற்றுகளின்றி இறக்காவிட்டால் அடுத்த பிறவி ஏற்படுவது உறுதி.

வினைப்பயன்கள் வினைகளாலும், வினைகள் பற்றுகளாலும், பற்றுகள் நமதுண்மையை நாம் உணராததாலும் விளைகின்றன. உடலல்லாத நம்மை நாம் உடலாகக் காணும் தவறே அனைத்து தொல்லைகளுக்கும் அடிப்படையாகும். இந்த தவறை சரி செய்துகொண்டாலே போதுமானதாகும். இதற்கு ஒரே வழி: நான் யார்?

oOo

பாலைவன பகுதிகளிலிருந்து பெருக்கெடுத்த சாக்கடைகளில் ஒன்று ஐரோப்பாவில் வந்து கலக்கும்வரை, அவர்களிடமும் மெய்யறிவுத் தாகமும், மனிதப்பிறவியின் நோக்கமான பிறவியறுத்தலும் இருந்துள்ளன என்பது "பற்றுகளின்றி இறக்கவேண்டும்" என்ற அம்மக்களின் நம்பிக்கையிலிருந்து கண்கூடாகிறது.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

No comments:

Post a Comment