Monday, September 11, 2017

செப்டம்பர் 11 - முண்டாசு கவிஞர் நினைவு நாள் 🌸🙏

🔥 அறிவே தெய்வம் 🔥

ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி 
அலையும் அறிவிலிகள் -- பால்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண் 
டாமெனல் கேளீரோ?
  
மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கும் மதியிலிகாள் -- எத
னூடும் நின் றோங்கு மறிவொன்றே தெய்வமென் 
றோதி யறியீரோ?
  
சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
சுருதிகள் கேளீரோ? -- பல
பித்த மதங்களி லேதடு மாறிப்
பெருமை யழிவீரோ?
  
வேடம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று 
வேதம் புகன்றிடுமே -- ஆங்கோர்
வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ் 
வேத மறியாதே.
  
நாமம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
நான்மறை கூறிடுமே -- ஆங்கோர்
நாமத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றந் 
நான்மறை கண்டிலதே.
  
போந்த நிலைகள் பலவும் பராசக்தி 
பூணு நிலையாமே -- உப
சாந்த நிலையே வேதாந்த நிலையென்று 
சான்றவர் கண்டனரே.
  
கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று 
காட்டும் மறைகளெலாம் -- நீவிர்
அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்கு 
அவங்கள் புரிவீரோ?
  
உள்ள தனைத்திலு முள்ளொளி யாகி 
யொளிர்ந்திடு மான்மாவே -- இங்கு
கொள்ளற் கரிய பிரமமென் றேமறை
கூவுதல் கேளீரோ?
  
மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்த்து 
வெறுங்க தைகள்சேர்த்துப் -- பல
கள்ள மதங்கள் பரப்புதற் கோர்முறை 
காட்டவும் வல்லீரோ?
  
ஒன்றுபிரம முளதுண்மை யஃதுன
உணர்வெனும் வேதமெலாம் -- என்றும்
ஒன்றுபிரம முளதுண்மை யஃது
உணர்வெனக் கொள்வாயே.

-- மகாகவிஞர் பாரதியார்

(இணைப்பு: தினமலர் - சென்னை - 11/09/2017)

No comments:

Post a Comment