Saturday, July 5, 2025

கும்பாபிஷேகம் எனும் காது குத்தல்!



(நாளை திருச்செந்தூரிலும், வரும் ஆகஸ்டில் திரு இரமணநிலையத்திலும் குடமுழுக்கு நடக்கவுள்ளன. நிலையத்தை வைத்து இவ்விடுகையை எழுதியிருந்தாலும், செந்தூருக்கும் இது பொருந்தும்.)

🤑 பாலாலயம்:

ஓம் மேபெக்காய நமஹ
ஓம் ஃபாண்டமாய நமஹ
ஓம் மெர்சிடீஸ்ஸாய நமஹ

அடுத்து, வாத்தியாரின் கட்டளை: பகவான், அழகம்மா எல்லாம் எழுந்து, இப்படி வந்து, இந்த வரைபடத்துல உக்காந்துக்கோங்கோ!

(பகவான் எழுவதை பார்த்து, அண்ணாமலை பெருமான், முருகனார் பெருமான் மற்றும் அங்கு குடி கொண்டிருக்கும் அனைத்து பெருமான்களும் எழத் தொடங்குகிறார்கள்.)

உடனே, வாத்தியார், "நீங்கெல்லாம் அப்படியே இருங்கோ. உங்களுக்கு ஜலம் மட்டுந்தான். அஷ்டபந்தனம் இல்லை. அப்படியே ஜலத்த ஏத்துக்கோங்கோ." என்று கட்டளையிடுகிறார்.

🤑 ஹோமம் & கலச ஆவாகனம்:

ஓம் பிஎம்டபிள்யூ-வாய நமஹ
ஓம் ஜகுவாராய நமஹ
ஓம் டெஸ்லாய நமஹ

அடுத்து, வாத்தியாரின் கட்டளை: பகவான், அழகம்மா! இரண்டு பேரும் எழுந்து வந்து, இந்த ஜலத்துல எறங்கிடுங்கோ!

🤑 கும்பாபிஷேகம்:

ஓம் போர்ஷாய நமஹ
ஓம் ஆடியாய நமஹ
ஓம் ஜீப்பாய நமஹ

(அடுத்து, அவர்கள் அழுக்கு செய்த நீரை நெடுமாடங்கள் மீதும், இறை வடிவங்கள் மீதும் ஊற்றுகிறார்கள்.)

வாத்தியார்: பகவானையும், அவரது தாயாரையும் அவங்கவங்க அதிஷ்ட்டானத்துல உக்கார வெச்சாச்சு. பவர் கொடுத்தாச்சு. சேனல் ஓபன் பண்ணியாச்சு. இனி, பக்தாள் அவாள நமஸ்காரம் பண்ணிக்கலாம்!

😄😄😁😁

அவனன்றி ஓரணுவும் அசையாது. ஒரு புல்லைக் கூட தன் விருப்பப்படி அசைக்க முடியாத திருட்டுக்கூட்டம், உள்ளபொருளுக்கு வலு சேர்க்கிறதாம்! தம்மையுணராத ஏமாற்றுக்கூட்டம் உள்ளபொருள் நம்மை காணவும், உள்ளபொருளை நாம் காணவும் வழி ஏற்படுத்திக் கொடுக்கிறதாம்!! 👊🏽 அவர்களது திரு(ட்டு)மறைகளிலேயே இது பற்றிய கதையுண்டு:

செருக்கு மிகுந்திருந்த அசுரக்கூட்டத்திற்கு பாடம் கற்பிப்பதற்காக, இறைவன் ஓர் ஒளிப்பிழம்பாக தோன்றுவார். அதுவரை அப்படியொரு காட்சியை கண்டிராத அக்கூட்டம், அது பற்றி தெரிந்து கொள்வதற்காக, முதலில் நெருப்பை (அக்னி) அனுப்பி வைக்கும். அவர் போய் தன்னைப் பற்றிச் சொல்ல, அப்பிழம்பிலிருந்து ஒரு துரும்பு வந்து விழும். அதை எரிப்பதற்காக நெருப்பு செய்த அனைத்து முயற்சிகளும் தோற்றுவிடும். அடுத்து, காற்றை (வாயு) அனுப்பி வைப்பார்கள். அவரால் அத்துரும்பை அசைக்கக்கூட முடியாது. இறுதியில், அக்கூட்டத்தின் தலைவனான மனம் (இந்திரன்) அப்பிழம்பை பணிவுடன் அணுகுவார். அவரிடம் செருக்கில்லாததால், தன்னைப் பற்றிய உண்மையை அப்பிழம்பே தெரிவிக்கும்.

இதுபோன்று இன்னும் சில கதைகள் உள்ளன. நமது முன்னோர்களும் பல பெருமான்களும் இவர்களது பித்தலாட்டத்திற்கு எதிரானவர்களாக இருந்துள்ளனர். கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான். இறைவனை வைத்து ஊரை ஏமாற்றும் கூட்டங்களை, அந்த இறைவனே ஒழித்துக் கட்டுவார்!

எப்படம் யார்யார்காட்ட காண்பினும் அப்படம்
மெய்ப்படம் காண்ப தறிவு!!

oOo

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

No comments:

Post a Comment