Monday, March 29, 2021

பிறப்பறுக்க தமிழ் பிள்ளையார் கூறும் அறிவுரை!!

பிறவி யறுப்பீர்காள், அறவன் ஆரூரை
மறவா தேத்துமின், துறவி யாகுமே!!
🌺🙏🏽🙇🏽‍♂️

-- சம்பந்தர் தேவாரம் - 1.91.2

இச்செய்யுள், ஆளுடையபிள்ளையார் 🌺🙏🏽 திருவாரூர் திருத்தலத்தில் பாடிய முதல் பதிகத்தின் 2வது செய்யுளாகும்.

மேலோட்டமான பொருள்: பிறவித்தளையை அறுக்க விரும்பும் அன்பர்களே, நீதியே வடிவான ஆரூர் பெருமானை மறவாது துதித்தால் துறவு கிடைக்குமே.

🔸"பிறவித்தளையை அறுக்க" என்று தான் குறிப்பிட்டுள்ளார். "பிறவியெடுத்துள்ள" என்று குறிப்பிடவில்லை. ஏனெனில், பிறவியெடுத்துள்ளது நமதுடல் தான். நாமல்ல. நாம் நமதுடலோடு பிணைக்கப்பட்டிருக்கிறோம். இந்த பிணைப்பை - தளையை - அறுத்தெறியவேண்டும்.

🔸ஆரூர் பெருமானை இடைவிடாது (மறவாது) துதித்தால் என்னவாகும்? ஆரூர் மூலவர் போலாகிவிடுவோம்!! ☺️ எதைத் தொடர்ந்து நினைக்கின்றோமோ அதுவாகிவிடுவோம். எனில், ஆரூர் மூலவரைத் தொடர்ந்து நினைத்துக்கொண்டிருந்தால் அந்த உருவத்தைத்தான் பெறுவோம். அதற்காகவா இவ்வளவு போராட்டம்?

ஆரூர் பெருமான் என்பது கருவறையிலுள்ள மூலவரல்ல. அதன் கீழ் சமாதியாகியிருக்கும் மாமுனிவருமல்ல 🌺🙏🏽. எங்கும் எக்கணமும் நீக்கமற நிறைந்திருக்கும் சிவப்பரம்பொருளாகும். நாமே - நமது தன்மையுணர்வே - அப்பரம்பொருள்!! அப்பொருளை மறவாது துதித்தல் என்பது நம்மை (நமது தன்மையுணர்வை) விடாதிருத்தல்.

"தன்னை விடாதிருத்தல் ஞானம். அந்நியத்தை நாடாதிருத்தல் வைராக்கியம். உண்மையில் இரண்டும் ஒன்றே." என்பது பகவான் திரு ரமண மாமுனிவரின் 🌺🙏🏽 வாக்கு.

🔸நம்மை விடாது பற்றிக் கொண்டிருந்தால், ஒரு சமயத்தில், நாம் யாரென்ற தெளிவு பிறக்கும். "நாம் இன்னார்" என்பதிலுள்ள "இன்னாரை" (அகந்தையை) விட்டுவிடுவோம். இதுவே துறவு எனப்படும். பெயர், உடை, இடங்களை மாற்றிக்கொள்வது துறவாகாது. அகந்தையை துறத்தலே துறவாகும். (இக்கருத்தை பல முறை பகவான் வலியுறுத்தியுள்ளார்)

ஆக, தன்மையுணர்வை விடாது பற்றி, தன்னைப் பற்றிய தெளிவு பெற்று, அகந்தையை துறந்து, பிறவித்தளைகளிலிருந்து விடுபடவேண்டும் என்பதே தமிழ் காத்த திருஞானசம்பந்த பெருமானின் அறிவுரையாகும்!!

oOOo

பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி 🌺🙏🏽

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Monday, February 22, 2021

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்!! 😛

"காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்"
என்கிறார் நாலடியார்!!

"காக்கா கறி சமைத்து,
கருவாடு உண்பவர்களா சைவர்கள்?" என்று பதற வேண்டாம்! ☺️

சைவர்களின் மேன்மையைக் கூறுவதற்காக தமிழில் விளையாடியிருக்கிறார் ஆசிரியர். தமிழும் சைவமும் தமிழரின் இரு கண்கள்.

இனி, பாடலின் உட்பொருளைப் பார்ப்போம்.

🔸 காக்கை = கால் கை. உள்ளங்கையில் கால் அளவு.

🔸 கறி சமைத்து = காய்கறி சமைத்து. உள்ளங்கையில் கால் அளவு காய்கறி சமைத்து.

🔸 கருவாடு மென்று = கரு வாடும் என்று. உடலின் கருவாகிய உயிர் வாடும் என்று.

🔸 உண்பர் சைவர் = சைவர்கள் உண்பார்கள்

பொருள்: உள்ள பொருளாகிய சிவமாய் சமையும் வாழ்நாள் நோக்கம் கொண்ட சைவர்கள், உடலில் உயிர் தங்க வேண்டுமென்பதற்காக, உள்ளங்கையில் கால் அளவு காய்கறி சமைத்து உண்பர்.

இப்படி உண்பதால், உடல் நோய்கள் பெருகாது; சுறுசுறுப்பாக இயங்க முடியும்; பற்றுகள் குறைய வாய்ப்புண்டு; எல்லாவற்றிற்கும் மேலாக, வடக்கிருத்தல் எளிதாகும்!!

வடக்கிருத்தல் = தவமியற்றுதல்.

"நான் இன்னார்" என்ற அகந்தை அற்ற பின் "இருந்து விளங்கும்" உள்ளபொருளை அறிந்து கொள்ள உதவும் வழியே / உத்தியே தவமாகும்.

-- பகவான் திரு ரமணர் 🌺🙏🏽🙇🏽‍♂️

oOOo

அன்னைத்தமிழ் வாழ்க!

மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்!!

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

(வாட்ஸ்அப்பில் கிடைத்த ஓர் இடுகையை சிறிது செப்பனிட்டு பதிவேற்றியிருக்கிறேன் 🙏🏽)

Wednesday, January 6, 2021

தீபாவளி - திரு கண்ணபிரான் 🌺🙏🏽 மெய்யறிவு பெற்ற நாள்!!


🪔 நம் உடலே நரகம். நாம் இவ்வுடல் என்ற தவறான எண்ணமே நரகாசுரன். இத்தவறான எண்ணத்தை விட்டொழித்தலே தீபாவளி - கொண்டாட்டம் - பெருமகிழ்ச்சி - மரணமில்லாப் பெருவாழ்வு!

🪔 நரகாசூரன் பன்றிப் பெருமாளுக்கும் நிலமகளுக்கும் பிறந்தவர் - நிலமகள் என்பது நமது உடல். பன்றிப்பெருமாள் என்பது மெய்யறிவு பெறாத நாமே.

(பன்றித்திருவிறக்க கதையில் பன்றிப்பெருமாள் கடலுக்குள் சென்று பூமாதேவியை மீட்டு வருவார். இவ்வுருவகக் கதையில் வரும் பூமாதேவி மெய்யறிவைக் குறிக்கும். பூமா எனில் முழுமை. ஆனால், பூமி என்று தவறாகப் பொருள் கொண்டுவிட்டனர். இக்கதையில் வரும் கடல் என்பது நமது உடல். கடலுக்குள் செல்லும் பெருமாள் என்பது மெய்யறிவுக்காக வடக்கிருக்கும் நாம். பூமாதேவியுடன் திரும்ப வரும் பெருமாள் என்பது மெய்யறிவு பெற்று உலக வாழ்க்கைக்கு திரும்பும் நாம். கடலுக்குள் செல்லும் போதும், பூமாதேவியுடன் வெளிப்படும் போதும் பெருமாள் பெருமாள் தான். வேறுபாடு பூமாதேவி மட்டுமே. இவ்வாறே, மெய்யறிவு பெறுவதற்கு முன்னும், பெற்ற பின்னும் நாம் நாம் தான். வேறுபாடு நம்மைப் பற்றிய மெய்யறிவு மட்டும் தான்.)

நம்மைப் பற்றிய தெளிவு இல்லாததால் அழிவற்ற நம்மை (பெருமாள்) அழியும் உடலுடன் (நிலமகள்) இணைத்துக் கொள்கிறோம். விளைவு... "நாம் இவ்வுடல்" என்ற நரகாசூரன்!!

🪔 நரகாசூரனின் இறப்பு. தனது இறப்பு தன் தாயின் மூலமாக மட்டுமே நிகழ வேண்டும் என்ற பேறுபெற்று வந்தவன் நரகாசூரன். இதன்படி, கண்ணபிரான் திருவிறக்கத்தில் கண்ணபிரான் (தந்தை) போராடி அயர்ந்த பின்னர், சத்யபாமா (தாய்) போராடி நரகாசூரனைக் கொல்லுவார்.

இக்கதையில் வரும் கண்ணபிரான் நாமே. எவ்வளவு முட்டிமோதினாலும் "நாம் இவ்வுடல்" என்ற பொய்யறிவு நம்மைவிட்டு விலகாது. இது விலக 2 வழிகள் உண்டு: 1. பல காலம் வடக்கிருந்து, மிகவும் முதிர்ந்த (பக்குவமடைந்த) பின்னர் பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 போன்ற மெய்யாசிரியர்களின் அறிவுரைகளால் நமதுண்மையை உணர்தல், 2. மொத்த அண்டமும் நமக்குள் இருந்தாலும், நாம் அதற்குள் இருப்பது போல் கண்கட்டு வித்தைக் காட்டிக்கொண்டிருக்கும் அன்னை மாயை (சத்யபாமா) சில கணங்கள் காட்சிகளைத் தவிர்த்து நமதுண்மையை நாம் உணர வழிவிடுதல்.

இரண்டாவது வழியில் அன்னையால்தான் "நாம் இவ்வுடல்" என்ற எண்ணம் (நரகாசூரன்) அழிகிறது என்றால் ஏற்றுக் கொள்வோம். முதலாவது வழியிலும் அன்னை தான் கொல்கிறார். அறிவுரையை வெளிவிட்ட மெய்யாசிரியர் சிவப்பரம்பொருளில் நிலைபெற்றவராய் இருந்தாலும், அவரிடமிருந்து வெளிப்பட்ட அறிவுரை உயிரற்ற பொருளாகிறது - அன்னையின் கூறாகிவிடுகிறது (அம்சமாகிவிடுகிறது).

ஆக, இரு வழிகளிலும் அன்னை தான் "நாம் இவ்வுடல்" என்ற தவறான எண்ணத்தை அழிக்கிறார். இதையே அன்னை சத்யபாமாவால் நரகாசூரன் இறப்பதாக உருவகப்படுத்தியுள்ளனர்.

🪔 "கங்கை நீரில் குளித்தீரா?" - தீபாவளியன்று கேட்கப்படும் பாரம்பரிய கேள்வி. நலம் விசாரிப்பது போல.

மெய்யறிவில் நிலைபெறும்போது நம் உச்சந்தலையிலுள்ள பிடியுட்டரி சுரப்பி நன்கு சுரக்கும். அதன் வெள்ளை நீர் (கங்கை நீர்; கங்கை - வெள்ளை) உடலெங்கும் பரவி, மற்ற சுரப்பிகளைத் தூண்டி உடலை சீராக்கி, மகிழ்ச்சியைக் கொடுக்கும். இதை, சிவபெருமானின் ஓவியத்தில் அவரது தலையிலிருந்து கங்கை நீர் வெளிப்படுவது போல் வரைந்திருப்பார்கள்.

"கங்கை நீரில் குளித்தீரா?" என்ற கேள்வியின் உட்பொருள்:

- மெய்யறிவு பெற்றீரா?
- உமதுண்மையை உணர்ந்தீரா?
- சிவப்பரம்பொருளாய் சமைந்தீரா?
- தன்மையுணர்வில் நிலைபெற்றீரா?

🪔 இவ்வளவு பொருள் பொதிந்த திருவிழாவாக இருந்தாலும், வடக்கத்திய தீபாவளி நம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் திருமலை நாயக்கர் காலத்தில்தான். இந்நாளன்று வடகத்தியர் தீபங்களை ஏற்றுவதற்கு அடிப்படை நமது கார்த்திகை திருநாள்! இடைக்காட்டுச் சித்தர் உணர்ந்து உணர்த்திய "ஏகன் அநேகன்" என்ற பேருண்மையைக் கொண்டாடும் கார்த்திகை திருநாள் திருவிழா அவ்வளவு தாக்கத்தை ஆரியர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

oOOo

ஒரு தீபாவளி திருநாளுக்காக பகவான் எழுதிய பாடல்:

நர குடல் நானா நர குலகு ஆளும்
நரகன் எங்கென்று உசாவின்ஞானத் திகிரியால்
நரகனைக் கொன்றவன் நாரணன் அன்றே
நரக சதுர்த்தசி நல் தினமாமே

பொருள்: அழியும் இவ்வுடலா நான்? இவ்வுடலை ஆளும் நரகாசூரன் எங்கு உள்ளான்? என்று ஆராய்ந்து, தானே உள்ளபொருள் என்று தெளிந்து, அந்த மெய்யறிவினால் (ஞானத்திகிரி - பெருமாளின் கையிலுள்ள சக்கிராயுதம்) தான் இவ்வுடல் என்ற தவறான எண்ணத்தை (நரகாசூரனை) விட்டொழித்தவனே (கொன்றவனே) நாராயணன். அப்படி விட்டொழித்த நாளே நரகசதுர்த்தசி எனும் தீபாவளி நன்னாளாம்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

oOOo

பி.கு.: வைணவத்திற்கும் கண்ணபிரானுக்கும் எந்த தொடர்புமில்லை. வைணவம் தோன்றியது பொது ஆண்டு 700களில். நிலைபெற்றதோ 1500களில் (விஜயநகர & நாயக்க மன்னர்களின் காலத்தில்). ஆனால், கண்ணபிரான் வாழ்ந்ததோ சுமார் 5,100 ஆண்டுகளுக்கு முன்னர்!

Tuesday, November 3, 2020

ஐப்பசி நிறைமதி நாள் & சோறு கண்ட இடம் சொர்க்கம்

(தஞ்சை பெருவுடையார் 🌺🙏🏽)

ஐப்பசி நிறைமதி நாள் - சிவத்திருத்தலங்கள் அன்னாபிஷேகம் காணும் நாள்! "நாம் காணும் இவ்வுலகம் உணவுமயம்" என்ற பேருண்மையை நமது முன்னோர்கள் உணர்ந்த நாள்!!

சிவ அடையாளத்தின் மீது கொட்டப்படும் (*) சோற்றிலிருக்கும் ஒவ்வொரு பருக்கையும் ஒர் உயிரை/உயிரினத்தைக் குறிக்கும். நுண்ணோக்கி வழியாக காண்பது போன்ற திறனைப் பெற்றிருந்தோமானால் நம் முன்னே கோடான கோடி உயிரிகள் ஒன்றையொன்று அண்டியும், சார்ந்தும், கொன்றும், தின்றும் வாழ்ந்து கொண்டிருப்பதைக் காணலாம். ஒர் உயிரியின் உடலோ கழிவோ இன்னோர் உயிரியின் உணவாக மாறுவதைக் காணலாம். நம் உடலுக்குள்ளும் இதே நிகழ்வு தான். மொத்தத்தில் எங்கும் உணவுமயம் தான்!

இந்த உண்மையை நமது முன்னோர்கள் ஒர் ஐப்பசி நிறைமதி நாளன்று உணர்ந்திருக்கிறார்கள். இவ்வுண்மையை உணர்வதால் அகந்தை அடங்குவதையும் / அழிவதையும் கண்டிருக்கிறார்கள். எனவே, அவர்கள் உணர்ந்ததை அன்னாபிஷேகம் என்ற திருவிழாவின் மூலம் பதிவு செய்து, வரும் தலைமுறைகளுக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள். இத்திருவிழா தமிழகத்திற்கே உரியதாவதால், ஒரு தமிழ் பெரியோனே மேற்கண்ட உண்மையை முதன்முதலில் உணர்ந்திருக்கிறார் என்று உறுதியாக கருதலாம்.

(* - ஒரு 25+ ஆண்டுகளாகத்தான் உணவுப்பண்டங்களைக் கொண்டு உடையவருக்கு ஒப்பனை செய்கிறார்கள். அதற்கு முன்னர், உடையவர் மேல் சோற்றைக் கொட்டிவிட்டு வெளியே வந்துவிடுவார்கள். திருவிழாவின் பெயர் அன்னாபிஷேகம். அன்ன அலங்காரமன்று.)

oOOo

எல்லாம் சரி. 1600களில் தான் உலகக் கொல்லிகளான பரங்கியர்களால் நுண்ணோக்கி "கண்டுபிடிக்கப்பட்டது". எனில், எவ்வாறு "உலகம் உணவுமயம்" என்ற உண்மையை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்களால் உணரமுடிந்தது? ஹாலிவுட் திரைப்படங்களில் வருவது போன்று, 1600களில் வாழ்ந்த பரங்கியர்கள் நேரப்பயணத்தின் மூலம் முற்காலத்திற்கு சென்று காட்டுமிராண்டிகளாக இருந்த நமது முன்னோர்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கவேண்டும். வேறு வழியே இல்லையல்லவா? 😁

oOOo

(கங்கை கொண்ட சோழபுர பெருவுடையார் 🌺🙏🏽)

சோறு எனில் வெந்த அரிசி என்பது இன்றைய பொதுவான பொருள். ஆனால், கம்பஞ்சோறு, பனஞ்சோறு (நுங்கு), கற்றாழைச் சோறு போன்ற பயன்பாடுகளும் உண்டு. இவற்றிலிருந்து சோறு எனில் "உள்ளிருப்பது. பக்குவமடைந்தது. நன்மை தரக்கூடியது." என்று பொருள் கொள்ளலாம்.

இந்த கணக்கில், மேற்கண்ட நெல்லின் உமி, பனங்காயின் ஓடு, கற்றாழையின் தோலுக்கு நம் உடல் சமமானால், உடலின் உள்ளிருக்கும் ஆன்மா (தன்மையுணர்வு) சோறுக்கு சமமாகிறது. எப்போது? பக்குவமடைந்த பிறகு!

பக்குவமடைதல் என்றால் என்ன? நாம் இவ்வுடலல்ல என்பதை உணர்ந்து, நாம் யாரென்று தெளிந்து, நாம் நாமாக நிலை பெறுவதே பக்குவமடைதல். இவ்வாறு பக்குவமடைந்த பிறகு கவலை, துன்பம், தொல்லை என எதுவும் நம்மை அண்டாது. எப்போதும் பேரமைதியில் திளைப்போம். இந்நிலையை சொர்க்கம் என்று வைத்துக்கொண்டால், பக்குவமடைந்த நம்மை சோறு என்று வைத்துக்கொண்டால், நம்மை நாம் உணர்ந்த இடம் - நம்மை நாம் கண்ட இடம் - சோறு கண்ட இடம் சொர்க்கமாகிவிடுகிறது!! ☺️

தீதீல்லை மாணி சிவகருமம் சிதைத்தானைச்
சாதியும் வேதியன் தாதைதனைத் தாளிரண்டுஞ்
சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர்தொழப்
பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்

-- திருத்தோணோக்கம், திருவாசகம்

மேலுள்ள பாடலில் வரும் "சோறு பற்றினவா" என்ற சொற்களை மணிவாசகப் பெருமான் 🌺🙏🏽 பயன்படுத்திய விதத்தை வைத்து, இவ்விடுகையின் "சோறு" பகுதியை எழுதியுள்ளேன்.

(சோறு என்ற சொல்லுக்கு வீடு பேறு, நிலைபேறு, விடுதலை (ஆரியத்தில், முக்தி/மோட்சம்) என்ற பொருள்களும் உண்டு)

oOOo

ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி 🌺🙏🏽

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

🌸🌼🌻🏵️💮

Saturday, October 17, 2020

திரு சதாசிவ பிரமேந்திரருக்கு வந்த "ரோசம்"!!

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த திரு சதாசிவ பிரமேந்திரர் 🌺🙏🏽 என்ற பெருமானின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு.

பிறந்தமேனியாக திரிந்த இவர், ஒரு முறை, அறுவடை முடிந்த ஒரு வயலில், வரப்பில் தலை வைத்துப் படுத்திருந்தார். அப்போது அவ்வழியே வந்த சில குடியானவப் பெண்கள் இவரைப் பார்த்து, "சாமிக்கு சொகுசு தேவைப்படுது, பாரேன்!" என்று பேசிக்கொண்டு சென்றனர். இதை கேட்ட பிரமேந்திரர் வரப்பிலிருந்து தலையை இறக்கிக்கொண்டார். சிறிது நேரம் கழித்து திரும்ப வந்த அப்பெண்கள், இப்போது பிரமேந்திரர் இருந்த நிலையைப் பார்த்து, "இந்த சாமிக்கு இருக்கிற ரோசத்தப் பாரேன்!!" என்று சற்று வியந்தபடி சென்றனர்.

மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒரு சாதாரண நிகழ்வாகத் தோன்றும். சற்று ஆழ்ந்து சிந்தித்தால் எல்லாவற்றையும் துறந்து, மெய்யறிவில் நிலைபெற்ற ஒரு துறவியின் உள்ள நிலை எப்படிப்பட்டதாக இருக்கும் என்ற அறிவு அன்றைய சமூகத்தின் அடிமட்டம் வரை இருந்துள்ளது என்ற வியப்பூட்டும் உண்மை புரியும்!!

நாம் காண்பவை யாவும் திரையில் தோன்றும் காட்சிகள் போன்றவை. நாமே அந்த திரை. எனில், தன்னில் தோன்றும் காட்சிகளின் கருத்துகளால் திரை பாதிக்கப்படுமா? பாதிப்படையலாமா? இந்த உண்மையை உணர்ந்திருந்ததால் தான் "ரோசத்தப் பாரேன்" என்று அப்பெண்கள் குத்திக்காட்டியுள்ளனர்!! 👏🏽👍🏽

நாம் காணும் யாவும் ஒரு சமயத்தில் நம்மிடம் எண்ணங்களாக இருந்தன என்கிறார் பகவான் திரு ரமணர் 🌺🙏🏽. அதாவது, உலகம் என்பது வெறும் எண்ணங்களின் உரு. மேலும் பகவான் கேட்கிறார், "இதை உணர்ந்து கொண்டால் அவற்றை விரும்புவோமா? அல்லது, வெறுப்போமா?" அதாவது, விரும்பவும் மாட்டோம். வெறுக்கவும் மாட்டோம். அப்படியே இருப்போம். "எல்லாம் வெறும் காட்சிகள் மட்டும் தான் என்றால் ஏன் எங்களது கேள்விகளுக்கு பதிலளிக்கிறீர்கள்?" என்று கேள்வி கேட்ட ஒரு அன்பருக்கு பகவான் அளித்த பதில்: உங்கள் மீது இருக்கும் இரக்கத்தால்!!

oOOo

பிரமேந்திரர் வாழ்வில் வரும் இந்த நிகழ்வு ஒளவைப்பாட்டியின் 🌺🙏🏽 வாழ்வில் வரும் "சுட்ட பழமா? சுடாத பழமா?" என்ற நிகழ்வுக்கும், ஆதிசங்கரர் 🌺🙏🏽 வாழ்வில் வரும் இழிந்தவனின் (சண்டாளன்) சந்திப்பு நிகழ்வுக்கும் சமமாகும். எவ்வளவு மேம்பட்டவராயினும் எச்சரிக்கையாக இல்லாவிடில் மாயையால் வீழ்ந்துவிடுவர் என்பதற்கு இவை சிறந்த எடுத்துக்காட்டுகள்.

இந்நிகழ்வுகளால் அப்பெருமான்கள் தாழ்ந்துவிட்டதாக பொருளன்று. மாறாக, இந்நிகழ்வுகள், இறுதி இலக்கான நிலைபேற்றை அடையும் முன்னர் ஒர் ஆன்மபயிற்சியாளன் சந்திக்கக்கூடிய ஆபத்துகளைப் பற்றி எச்சரித்து, அப்பெருமான்களும் போராடித்தான் இறுதி இலக்கை அடைந்தனர் என்பதை உணர்த்தி, பயிற்சியாளனை ஊக்குவிக்கும் வழிகாட்டிகள்!

மேலும், இந்நிகழ்வுகள் நம் சமூகத்திலிருந்த கருத்துரிமைக்கும் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். மற்ற மதங்களில் யாரேனும் இவ்வாறு பதிவு செய்ய முற்பட்டிருந்தால்... உடலுறுப்புகளையோ, உயிரையோ இழந்திருப்பர்! 😏

"நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே!!" என்று முழங்கிய ஒரே இனம் உலகில் நம் தமிழினமாகத் தானிருக்கும்!! 💪🏽

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Tuesday, October 13, 2020

கடவுளைக் காண்பதென்பது சங்கு, சக்கிரம், கதை போன்ற ஆயதங்களைத் தாங்கிய உருவத்தைக் காண்பதா? -- பகவான் திரு ரமணர்

பின்வரும் கேள்விகளும் கருத்துகளும் பகவான் திரு ரமணரிடமிருந்து 🌺🙏🏽 10/03/1968 அன்று வெளிப்பட்டவை:

💥 மெய்யறிவு பெறுதல் (ஞானமடைதல்) என்றால் என்ன?

💥 சங்கு, சக்கிரம், கதை போன்ற ஆயுதங்களைத் தாங்கிய 4 கைகளுடன் கூடிய உருவமாக கடவுளைக் காண்பதா?

💥 அப்படியே கடவுள் அவ்வடிவில் தோன்றினாலும் காண்பவனின் அறியாமை எவ்வாறு அழியும்?

💥 ஒரு கோடி பகலவன்களின் ஒளிப் பொருந்தி (கோடி சூரியப் பிரகாசம்) கடவுள் தோன்றினாலும் அது அவரை நேரடியாக காண்பதாகுமா (பிரத்யட்சம்)?

💥 எதையும் காண்பதற்கு கண்களும் மனமும் வேண்டும். புலன்களின் மூலம் பெறப்படும் யாவையும் மறைமுக அறிவாகும். இதை பெறுபவனே (காண்பவனே) என்றுமிருக்கும் உள்ளபொருளாகும். அவனே பிரத்யட்சமாகும்.

oOOo

உண்மை இவ்வளவு எளிதானதாக இருக்க, பிரத்யட்சம் என்ற சொல்லை வைத்து எவ்வளவு தூரம் நாம் ஏமாற்றப்பட்டிருக்கிறோம்! ("கடவுள் பிரத்யட்சமாகக் காட்சி கொடுத்தார்") திருவுருவங்கள் உணர்த்தும் பேருண்மைகளைப் புரிந்துகொள்ளாமல் செக்கு மாடுகள் போல் அவ்வுருவங்களை சுற்றி வருமாறு ஆக்கப்பட்டிருக்கிறோம்!!

இங்கு பகவான் குறிப்பிடும் சங்கு, சக்கிரம், கதை முதலானவற்றை தாங்கிய திருவுருவம் பெருமாளினுடையது. இந்த உருவம் உணர்த்துவது என்ன?

🌷 பெருமாளின் மேல் கைகளிலுள்ள சக்கிரம் & சங்கு ஒளி & ஒலியைக் குறிக்கும். இவ்வுலகம் என்பது வெறும் ஒலிஒளி மட்டுமே. காணப்படும் உலகம் தான் அசைகின்றது (சக்கிரம் சுழல்கிறது). காண்பவன் (பெருமாள்) அசைவதில்லை. கூத்தப்பெருமானின் மேல்கைகளிலுள்ள உடுக்கை & நெருப்பு (ஒலி & ஒளி) ஆகியவற்றின் கண்ணாடி பிரதிபலிப்பாக சக்கிரமும் & சங்கும் அமையும்.

🌷 சிவபெருமானின் கையிலுள்ள முத்தலைச்சூலம் பெருமாளின் கையில் கதையாக மாறியிருக்கிறது. பல காலம் வடக்கிருந்து, சரியான சமயம் வரும் போது நம்முள்ளிருந்து ஒரு தெளிவு / ஆற்றல் வெளிப்படும். இது வெளிப்படும் போதே "நாமே உள்ளபொருள்" என்று உணர்ந்து கொள்வோம். இது வெளிப்பட்டவுடன் கனவு, நனவு & தூக்கம் ஆகிய மூன்று நிலைகளும் முடிவுக்கு வந்துவிடும். இதை உணர்த்தவே சூலத்திற்கு 3 தலைகளைக் கொடுத்தனர் நம் முன்னோர்கள். இதிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக "தெளிவு வெளிப்பட்டவுடன் அறியாமை இருள் ஒரேடியாக விலகுகிறது" என்ற பொருளை உணர்த்தும் கதையை எடுத்துக்கொண்டனர் வைணவர்கள்.

🌷 கூத்தப்பெருமானின் திருவுருவத்தில் உள்ள திருவாசி (உயிரற்றவை), பெருமாளின் பின்புறம் குடை போன்ற அமைப்பில் படமெடுத்து நிற்கும் 5 தலை பாம்பாகியிருக்கிறது. உலகில் காணும் உயிரற்றவை யாவும் ஐம்பூதங்களால் ஆனவை என்பதால் 5 தலைகளும், இந்த ஐம்பூதங்களால் ஆனவை தான் (மண், பெண், பொன் போன்று) எல்லாத் தொல்லைகளுக்கும் காரணம் என்பதால் நச்சு உயிரியான பாம்பையும் எடுத்துக்கொண்டுள்ளனர்.

(ஓவியத்தில் பாற்கடல் இருப்பின் பாற்கடல் உடலையும், பாம்புக்குடை ஐம்புலன்களையும் குறிக்கும். பாற்கடல் இல்லையெனில் பாம்புக்குடை மேற்சொன்னவாறு ஐம்பூதக் கலவையான உடலைக் குறிக்கும்.)

🌷 பெருமாளுக்கு கொடுக்கப்படும் பாம்பணையும், பாம்பு குடையும் வைணவர்களின் தாய்மதமான பௌத்தத்திலிருந்து வருகின்றன. பௌத்தத்தில் கெளதம புத்தரை 🌺🙏🏽 பாம்பணையில் அமர்ந்திருப்பது போன்றும், பாம்புக் குடையின் கீழ் நிற்பது போன்றும் சித்தரித்திருப்பார்கள்.

🌷 மொத்தத்தில் பெருமாளின் திருவுருவம் மெய்யறிவு பெற்று பரம்பொருளாய் சமைந்த ஒரு மெய்யறிவாளரைக் குறிக்கும்.

ஆனால், இப்படி புரிந்துகொள்ளாமல், இப்படியொருவர் வைகுண்டம் எனுமிடத்தில் இருப்பதாகவும், அவரை வேண்டி வடக்கிருப்போருக்கு காட்சித் தருவார் என்றும், "புண்ணியங்கள்" சேர்த்துக்கொண்டால், "கைங்கர்யங்கள்" செய்தால் இப்பிறவிக்குப் பின்னர் அங்கு போய் சேரலாம் என்றும் ஏமாற்றப்பட்டிருக்கிறோம்!!

(வைணவத்தை வைத்து இவற்றையெல்லாம் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், இருப்பற்ற படைப்பு உயர்ந்தது என்றும் (பெருமாள் உருவத்தின் மேல்பாதி, நாமச்சின்னத்தின் வெளிகோடுகள்), என்றும் மாறாத அழியாத பரம்பொருள் தாழ்ந்தது என்றும் (பெருமாள் உருவத்தின் கீழ்பாதி, நாமச்சின்னத்தின் நடுகோடு) புரிந்துகொண்டு நமக்கு நாமே நாமம் போட்டுக்கொள்ளவேண்டும். 😁)

oOOo

பகவான் பேசியதின் ஆங்கில மூலம் (Talk #469 from Talks with Maharishi):

What is Realisation? Is it to see God with four hands, bearing conch, wheel, club, etc.? Even if God should appear in that form, how is the disciple's ignorance wiped out? The truth must be eternal realisation. The direct perception is ever-present Experience. God Himself is known as directly perceived. It does not mean that He appears before the devotee as said above. Unless the Realisation be eternal it cannot serve any useful purpose. Can the appearance with four hands be eternal realisation? It is phenomenal and illusory. There must be a seer. The seer alone is real and eternal.

Let God appear as the light of a million suns: Is it pratyaksha?

To see it, the eyes, the mind, etc. are necessary. It is indirect knowledge, whereas the seer is direct experience. The seer alone is pratyaksha. All other perceptions are only secondary knowledge. The present super-imposition of the body as I' is so deep-rooted, that the vision before the eyes is considered pratyaksha but not the seer himself. No one wants realisation because there is no one who is not realised. Can anyone say that he is not already realised or that he is apart from the Self? No. Evidently all are realised. What makes him unhappy is the desire to exercise extraordinary powers. He knows that he cannot do so. Therefore he wants God to appear before him, confer all His powers on the devotee, and keep Himself in the background. In short, God should abdicate His powers in favour of the man.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Saturday, September 26, 2020

மெய்கண்டாருக்கு நடந்த கைங்கர்யம்!! 😠😡🤬

மெய்கண்ட சிவம் 🌺🙏🏽

சிவஞானபோதம் எனும் ஒப்பற்ற சாத்திர நூலைப் படைத்தவர். நம் சமயத்தின் புற சந்தான குரவர்களில் முதன்மையானவர். 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். திரு சுந்தரமூர்த்தி நாயனார் 🌺🙏🏽 தடுத்தாட்கொள்ளப்பட்ட திருத்தலமான திருவெண்ணெய்நல்லூரில் (திருஅருட்துறை) சமாதியடைந்தார் (மேலுள்ள படம் பெருமானின் சமாதியாகும்).

இப்பெருமான் பிறந்த காலத்தில் வேற்று இனத்தவர் நம் தமிழகத்தில் கோலோச்சத் தொடங்கிவிட்டனர். "அதெப்படி மிகச்சிறந்த சாத்திர நூலைப் படைத்த பெருமை ஒரு தமிழனுக்கு கிடைக்கலாம்?" என்று உயரிய எண்ணம் கொண்டு, அந்நூல் ஒரு ஆரிய நூலைத் தழுவி எழுதப்பட்டது என்று கதை கட்டிவிட்டு மெய்கண்ட பெருமானின் புகழுக்கு களங்கம் விளைவித்தனர். 😠😡🤬 அதன் பின், நம்மவர்கள் ஆராய்வுகள் வழியாக "சிவஞானபோதம் தான் மூல நூல்" என்ற உண்மையை நிலைநிறுத்த வேண்டியதாயிற்று.

நல்லவேளை, 63 நாயன்மார்களும் 🌺🙏🏽 அவ்வினம் வந்து சேரும் முன்னரே சிவபதம் அடைந்துவிட்டனர். வந்த இனம் நிலைபெற்று கோலோச்சும் முன்னரே சேக்கிழார் பெருமானும் 🌺🙏🏽 பெரியபுராணம் பாடிவிட்டார். இல்லையெனில், நாயன்மார்களுக்கும், பெரியபுராணத்திற்கும் கைங்கர்யம் நடந்திருக்கும்!

ஆனாலும், கைங்கர்யம் வேறு விதத்தில் நடந்தது. நாயன்மார்களின் வரலாற்றை அவர்களது மொழியில் எழுதும் போது புகழ் பெற்ற சில நாயன்மார்கள் அவர்களது முற்பிறவியில் அவ்வினத்தவராக அல்லது அவ்வினத் தொடர்பில் பிறந்தவர்களாக புனைந்துள்ளனர். அந்த கைங்கர்யங்கள் சொற்பொழிவுகள், கட்டுரைகள் என பல வழிகளில் தமிழகத்திற்குள் நுழைந்துவிட்டன. நாயன்மார்கள் வரலாற்றை தெரிந்து கொள்ள விரும்புவோர் பெரியபுராணத்தை மட்டுமே படிக்கவேண்டும்.

பகவான் திரு ரமணரும் 🌺🙏🏽 நம்மவராகப் பிறந்து, அவரது புகழும் வெள்ளையர்களால் உலகெங்கும் பரவாமல் போயிருந்தால் அவருக்கும் மெய்கண்டாருக்கு நடந்த கைங்கர்யம் நடந்திருக்கும்! 😏

இன்றும் பகவானை ஒதுக்கும் "பாரம்பரிய" சிந்தனை கொண்டோர் அவ்வினத்தில் உள்ளனர். காரணம் உள்ளபொருள் (பரம்பொருள்), மெய்யறிவு (ஞானம்), விடுதலை (முக்தி / மோட்சம்) என எல்லாவற்றைப் பற்றிய உண்மைகளையும் பகவான் வெளிவிட்டுவிட்டார். பகவானே இதைப் பற்றி பாடியிருக்கிறார்:

வெளிவிட்டேன் உன் செயல் வெறுத்திடாது உன் அருள்
வெளிவிட்டு எனைக்கா அருணாசலா!!

இதற்கும், சமயவியலில் உள்ள பொருள்கள் முழுவதும் நம்முடையதே. இவர்கள் எதையும் அவர்களது பிறப்பிடத்திலிருந்து கொண்டுவரவில்லை. இங்கு வந்துதான் நம்மிடமிருந்து கற்றுக்கொண்டார்கள்; பண்பட்டார்கள். கற்றதை அவர்களது பூமிக்கும் எடுத்துச் சென்றார்கள்.

🔸 நாம் எவ்வளவு தூரம் பண்பட்டிருந்தோம் என்பதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு:

மேல்தட்டு முதல் அடித்தட்டு வரை நம் சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் அனைவரும் அறிந்திருந்த ஒரு சொல் தான் சிவம். "சிவம் என்றால் என்ன?", "சிவமாயிருத்தல் எவ்வாறு?" ஆகிய கேள்விகளுக்கு பதில்கள் அறிந்திருந்ததால் தான், "சித்த நேரம் சிவனேன்னு கிடக்க வேண்டியதுதானே" என்று நம் பெரியவர்களால் திட்டமுடிந்தது! திட்டுவதில் கூட சமயவியலை நுழைத்த இனம் உலகில் நம்முடைய இனமாகத்தான் இருக்கும்!! 😊

🔸 நமது மொழி எவ்வளவு தூரம் சமயவியலை அடிப்படையாகக் கொண்டது என்பதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு:

திட்டு என்ற சொல்லை சற்று பார்ப்போம்.

பொதுவாக, திட்டு எனில் சமதளத்திலிருந்து சற்று உயர்ந்த சிறு பகுதி. திட்டுத்திட்டாக எனில் ஆங்காங்கே உயர்ந்து கிடக்கும் பகுதிகள்.

சமதளத்தை திட்டுகள் இல்லாத பகுதி, ஏற்றஇறக்கங்கள் இல்லாத பகுதி, வேறுபாடுகள் இல்லாத பகுதி, சீரான பகுதி என்றும் விளக்கலாம்.

சமதளம் - சீரான பகுதி
திட்டு - சீரற்ற பகுதி

நமது உள்ளநிலை சீராக இருப்பின் சிவநிலை. திட்டும்போது சீரற்று போவதால் சிவநிலையின் எதிர் நிலையான சீவநிலை.

"என்னை திட்ட வைக்காதே" எனில் "என்னை சிவநிலையில் இருந்து இறங்க/மாற வைக்காதே" என்று பொருள்!! 💪🏽😍😎

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮