Showing posts with label கங்கை குளியல். Show all posts
Showing posts with label கங்கை குளியல். Show all posts

Wednesday, November 3, 2021

அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்!! 🙏🏽✨🎁🍥🍡🎊🎉


☀️ தீபாவளி - திரு கண்ணபிரான் 🌺🙏🏽🙇🏽‍♂️ நரகாசுரனை கொன்ற நாள். அதாவது, கண்ணபிரான் மெய்யறிவு பெற்ற நாள்.

☀️ நரகாசுரன் - "நான் இந்த உடல்" என்ற தவறான எண்ணம். இந்த தவறான எண்ணத்தை விட்டொழிக்க வேண்டுமெனில் நம்மைப் பற்றிய சரியான அறிவு துய்ப்பாக மலரவேண்டும். இது கண்ணபிரானுக்கு நடந்த நாளே தீபாவளியாக கொண்டாடப்படுகிறது.

☀️ கங்கை குளியல் - தீபாவளியன்று சந்திக்கும் நபர்களிடம் கேட்கப்படும் கேள்வி: கங்கையில் குளித்தீரா? (கங்கா ஸ்நானம் ஆச்சா?) இதன் பொருள்: மெய்யறிவு கிடைத்ததா?

மெய்யறிவில் திளைக்கும்போது நம் தலையிலுள்ள பிட்டியூட்டரி சுரப்பி சிறப்பாக வேலை செய்யும். இதனால் உடலிலுள்ள மற்ற சுரப்பிகள் தூண்டப்பட்டு, அவையும் சிறப்பாக வேலை செய்யும். இதையே குளியல் என்று குறிப்பிட்டுள்ளனர். பிட்டியூட்டரி சுரப்பியிலிருந்து வெளிப்படும் நீர் வெள்ளை (கங்கை) நிறத்தில் இருப்பதால் "கங்கை குளியல்" என்று பெயரிட்டுள்ளனர். இதையே "சிவபெருமானின் தலையிலிருந்து கங்கை நீர் வெளிப்படுவதாக" உருவகப்படுத்தியிருக்கிறார்கள்.

☀️ தமிழகத்தில் தீபாவளியை அறிமுகப்படுத்தியது தெலுங்கு வைணவ மன்னரான திருமலை நாயக்கராவார். வைணவம் பரவுவதற்காகவும், அடைமழை காலத்தில் அடங்கிப் போகும் பொருளாதாரத்தை தூண்டிவிடுவதற்காகவும் அறிமுகப்படுத்தினார். இன்றும் கூட, பெரும்பாலான கிராமப்புற தமிழர்கள் தீபாவளியை கொண்டாடுவதில்லை. பொங்கலே தமிழர் திருநாளாகும்.

☀️ கண்ணபிரான் உணர்ந்து வெளிப்படுத்திய பேருண்மை மெய்யறிவைப் பற்றியது. ஆனால், தீபாவளி என்ற சொல் உணர்த்தும் பேருண்மை வேறு: விளக்குகள் பலவானாலும் எரியும் நெருப்பு ஒன்றுதான். இது போன்று, உயிரிகள் பலவானாலும் எல்லோருள்ளும் உள்ள தன்மையுணர்வு ஒன்றுதான்.

இந்த உண்மை உணரப்பட்ட திருத்தலம் நமது திருவண்ணாமலை (உணரப்பட்ட திருநாள் - திருக்கார்த்திகை). சில சமயம், ஒரு திரைப்படம் தமிழிலிருந்து வடக்கிற்கு சென்று, மீண்டும் வடக்கிலிருந்து தமிழுக்கு வரும். இது போன்று, திருக்கார்த்திகை வடக்கிற்கு சென்று கண்ணபிரானின் திருநாளோடு இணைந்து தீபாவளியாகி, பின்னர், மீண்டும் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது. ஆனாலும், நம்மவர்கள் விளக்கிடுதலை மட்டும் திருக்கார்த்திகையன்றே தொடர்ந்துள்ளனர்.

தீபாவளியன்று விளக்கிடுதலை வடக்கத்தியர் வைத்துக்கொள்ளட்டும். நாம் "தொல் கார்த்திகை நாளன்று" (காழியூர் பிள்ளையாரின் சொற்கள் 🌺🙏🏽🙇🏽‍♂️) விளக்கேற்றுவோம். நமது தொன்மையான மரபைக் காப்போம்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Wednesday, January 6, 2021

தீபாவளி - திரு கண்ணபிரான் 🌺🙏🏽 மெய்யறிவு பெற்ற நாள்!!


🪔 நம் உடலே நரகம். நாம் இவ்வுடல் என்ற தவறான எண்ணமே நரகாசுரன். இத்தவறான எண்ணத்தை விட்டொழித்தலே தீபாவளி - கொண்டாட்டம் - பெருமகிழ்ச்சி - மரணமில்லாப் பெருவாழ்வு!

🪔 நரகாசூரன் பன்றிப் பெருமாளுக்கும் நிலமகளுக்கும் பிறந்தவர் - நிலமகள் என்பது நமது உடல். பன்றிப்பெருமாள் என்பது மெய்யறிவு பெறாத நாமே.

(பன்றித்திருவிறக்க கதையில் பன்றிப்பெருமாள் கடலுக்குள் சென்று பூமாதேவியை மீட்டு வருவார். இவ்வுருவகக் கதையில் வரும் பூமாதேவி மெய்யறிவைக் குறிக்கும். பூமா எனில் முழுமை. ஆனால், பூமி என்று தவறாகப் பொருள் கொண்டுவிட்டனர். இக்கதையில் வரும் கடல் என்பது நமது உடல். கடலுக்குள் செல்லும் பெருமாள் என்பது மெய்யறிவுக்காக வடக்கிருக்கும் நாம். பூமாதேவியுடன் திரும்ப வரும் பெருமாள் என்பது மெய்யறிவு பெற்று உலக வாழ்க்கைக்கு திரும்பும் நாம். கடலுக்குள் செல்லும் போதும், பூமாதேவியுடன் வெளிப்படும் போதும் பெருமாள் பெருமாள் தான். வேறுபாடு பூமாதேவி மட்டுமே. இவ்வாறே, மெய்யறிவு பெறுவதற்கு முன்னும், பெற்ற பின்னும் நாம் நாம் தான். வேறுபாடு நம்மைப் பற்றிய மெய்யறிவு மட்டும் தான்.)

நம்மைப் பற்றிய தெளிவு இல்லாததால் அழிவற்ற நம்மை (பெருமாள்) அழியும் உடலுடன் (நிலமகள்) இணைத்துக் கொள்கிறோம். விளைவு... "நாம் இவ்வுடல்" என்ற நரகாசூரன்!!

🪔 நரகாசூரனின் இறப்பு. தனது இறப்பு தன் தாயின் மூலமாக மட்டுமே நிகழ வேண்டும் என்ற பேறுபெற்று வந்தவன் நரகாசூரன். இதன்படி, கண்ணபிரான் திருவிறக்கத்தில் கண்ணபிரான் (தந்தை) போராடி அயர்ந்த பின்னர், சத்யபாமா (தாய்) போராடி நரகாசூரனைக் கொல்லுவார்.

இக்கதையில் வரும் கண்ணபிரான் நாமே. எவ்வளவு முட்டிமோதினாலும் "நாம் இவ்வுடல்" என்ற பொய்யறிவு நம்மைவிட்டு விலகாது. இது விலக 2 வழிகள் உண்டு: 1. பல காலம் வடக்கிருந்து, மிகவும் முதிர்ந்த (பக்குவமடைந்த) பின்னர் பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 போன்ற மெய்யாசிரியர்களின் அறிவுரைகளால் நமதுண்மையை உணர்தல், 2. மொத்த அண்டமும் நமக்குள் இருந்தாலும், நாம் அதற்குள் இருப்பது போல் கண்கட்டு வித்தைக் காட்டிக்கொண்டிருக்கும் அன்னை மாயை (சத்யபாமா) சில கணங்கள் காட்சிகளைத் தவிர்த்து நமதுண்மையை நாம் உணர வழிவிடுதல்.

இரண்டாவது வழியில் அன்னையால்தான் "நாம் இவ்வுடல்" என்ற எண்ணம் (நரகாசூரன்) அழிகிறது என்றால் ஏற்றுக் கொள்வோம். முதலாவது வழியிலும் அன்னை தான் கொல்கிறார். அறிவுரையை வெளிவிட்ட மெய்யாசிரியர் சிவப்பரம்பொருளில் நிலைபெற்றவராய் இருந்தாலும், அவரிடமிருந்து வெளிப்பட்ட அறிவுரை உயிரற்ற பொருளாகிறது - அன்னையின் கூறாகிவிடுகிறது (அம்சமாகிவிடுகிறது).

ஆக, இரு வழிகளிலும் அன்னை தான் "நாம் இவ்வுடல்" என்ற தவறான எண்ணத்தை அழிக்கிறார். இதையே அன்னை சத்யபாமாவால் நரகாசூரன் இறப்பதாக உருவகப்படுத்தியுள்ளனர்.

🪔 "கங்கை நீரில் குளித்தீரா?" - தீபாவளியன்று கேட்கப்படும் பாரம்பரிய கேள்வி. நலம் விசாரிப்பது போல.

மெய்யறிவில் நிலைபெறும்போது நம் உச்சந்தலையிலுள்ள பிடியுட்டரி சுரப்பி நன்கு சுரக்கும். அதன் வெள்ளை நீர் (கங்கை நீர்; கங்கை - வெள்ளை) உடலெங்கும் பரவி, மற்ற சுரப்பிகளைத் தூண்டி உடலை சீராக்கி, மகிழ்ச்சியைக் கொடுக்கும். இதை, சிவபெருமானின் ஓவியத்தில் அவரது தலையிலிருந்து கங்கை நீர் வெளிப்படுவது போல் வரைந்திருப்பார்கள்.

"கங்கை நீரில் குளித்தீரா?" என்ற கேள்வியின் உட்பொருள்:

- மெய்யறிவு பெற்றீரா?
- உமதுண்மையை உணர்ந்தீரா?
- சிவப்பரம்பொருளாய் சமைந்தீரா?
- தன்மையுணர்வில் நிலைபெற்றீரா?

🪔 இவ்வளவு பொருள் பொதிந்த திருவிழாவாக இருந்தாலும், வடக்கத்திய தீபாவளி நம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் திருமலை நாயக்கர் காலத்தில்தான். இந்நாளன்று வடகத்தியர் தீபங்களை ஏற்றுவதற்கு அடிப்படை நமது கார்த்திகை திருநாள்! இடைக்காட்டுச் சித்தர் உணர்ந்து உணர்த்திய "ஏகன் அநேகன்" என்ற பேருண்மையைக் கொண்டாடும் கார்த்திகை திருநாள் திருவிழா அவ்வளவு தாக்கத்தை ஆரியர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

oOOo

ஒரு தீபாவளி திருநாளுக்காக பகவான் எழுதிய பாடல்:

நர குடல் நானா நர குலகு ஆளும்
நரகன் எங்கென்று உசாவின்ஞானத் திகிரியால்
நரகனைக் கொன்றவன் நாரணன் அன்றே
நரக சதுர்த்தசி நல் தினமாமே

பொருள்: அழியும் இவ்வுடலா நான்? இவ்வுடலை ஆளும் நரகாசூரன் எங்கு உள்ளான்? என்று ஆராய்ந்து, தானே உள்ளபொருள் என்று தெளிந்து, அந்த மெய்யறிவினால் (ஞானத்திகிரி - பெருமாளின் கையிலுள்ள சக்கிராயுதம்) தான் இவ்வுடல் என்ற தவறான எண்ணத்தை (நரகாசூரனை) விட்டொழித்தவனே (கொன்றவனே) நாராயணன். அப்படி விட்டொழித்த நாளே நரகசதுர்த்தசி எனும் தீபாவளி நன்னாளாம்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

oOOo

பி.கு.: வைணவத்திற்கும் கண்ணபிரானுக்கும் எந்த தொடர்புமில்லை. வைணவம் தோன்றியது பொது ஆண்டு 700களில். நிலைபெற்றதோ 1500களில் (விஜயநகர & நாயக்க மன்னர்களின் காலத்தில்). ஆனால், கண்ணபிரான் வாழ்ந்ததோ சுமார் 5,100 ஆண்டுகளுக்கு முன்னர்!