Saturday, October 17, 2020

திரு சதாசிவ பிரமேந்திரருக்கு வந்த "ரோசம்"!!

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த திரு சதாசிவ பிரமேந்திரர் 🌺🙏🏽 என்ற பெருமானின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு.

பிறந்தமேனியாக திரிந்த இவர், ஒரு முறை, அறுவடை முடிந்த ஒரு வயலில், வரப்பில் தலை வைத்துப் படுத்திருந்தார். அப்போது அவ்வழியே வந்த சில குடியானவப் பெண்கள் இவரைப் பார்த்து, "சாமிக்கு சொகுசு தேவைப்படுது, பாரேன்!" என்று பேசிக்கொண்டு சென்றனர். இதை கேட்ட பிரமேந்திரர் வரப்பிலிருந்து தலையை இறக்கிக்கொண்டார். சிறிது நேரம் கழித்து திரும்ப வந்த அப்பெண்கள், இப்போது பிரமேந்திரர் இருந்த நிலையைப் பார்த்து, "இந்த சாமிக்கு இருக்கிற ரோசத்தப் பாரேன்!!" என்று சற்று வியந்தபடி சென்றனர்.

மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒரு சாதாரண நிகழ்வாகத் தோன்றும். சற்று ஆழ்ந்து சிந்தித்தால் எல்லாவற்றையும் துறந்து, மெய்யறிவில் நிலைபெற்ற ஒரு துறவியின் உள்ள நிலை எப்படிப்பட்டதாக இருக்கும் என்ற அறிவு அன்றைய சமூகத்தின் அடிமட்டம் வரை இருந்துள்ளது என்ற வியப்பூட்டும் உண்மை புரியும்!!

நாம் காண்பவை யாவும் திரையில் தோன்றும் காட்சிகள் போன்றவை. நாமே அந்த திரை. எனில், தன்னில் தோன்றும் காட்சிகளின் கருத்துகளால் திரை பாதிக்கப்படுமா? பாதிப்படையலாமா? இந்த உண்மையை உணர்ந்திருந்ததால் தான் "ரோசத்தப் பாரேன்" என்று அப்பெண்கள் குத்திக்காட்டியுள்ளனர்!! 👏🏽👍🏽

நாம் காணும் யாவும் ஒரு சமயத்தில் நம்மிடம் எண்ணங்களாக இருந்தன என்கிறார் பகவான் திரு ரமணர் 🌺🙏🏽. அதாவது, உலகம் என்பது வெறும் எண்ணங்களின் உரு. மேலும் பகவான் கேட்கிறார், "இதை உணர்ந்து கொண்டால் அவற்றை விரும்புவோமா? அல்லது, வெறுப்போமா?" அதாவது, விரும்பவும் மாட்டோம். வெறுக்கவும் மாட்டோம். அப்படியே இருப்போம். "எல்லாம் வெறும் காட்சிகள் மட்டும் தான் என்றால் ஏன் எங்களது கேள்விகளுக்கு பதிலளிக்கிறீர்கள்?" என்று கேள்வி கேட்ட ஒரு அன்பருக்கு பகவான் அளித்த பதில்: உங்கள் மீது இருக்கும் இரக்கத்தால்!!

oOOo

பிரமேந்திரர் வாழ்வில் வரும் இந்த நிகழ்வு ஒளவைப்பாட்டியின் 🌺🙏🏽 வாழ்வில் வரும் "சுட்ட பழமா? சுடாத பழமா?" என்ற நிகழ்வுக்கும், ஆதிசங்கரர் 🌺🙏🏽 வாழ்வில் வரும் இழிந்தவனின் (சண்டாளன்) சந்திப்பு நிகழ்வுக்கும் சமமாகும். எவ்வளவு மேம்பட்டவராயினும் எச்சரிக்கையாக இல்லாவிடில் மாயையால் வீழ்ந்துவிடுவர் என்பதற்கு இவை சிறந்த எடுத்துக்காட்டுகள்.

இந்நிகழ்வுகளால் அப்பெருமான்கள் தாழ்ந்துவிட்டதாக பொருளன்று. மாறாக, இந்நிகழ்வுகள், இறுதி இலக்கான நிலைபேற்றை அடையும் முன்னர் ஒர் ஆன்மபயிற்சியாளன் சந்திக்கக்கூடிய ஆபத்துகளைப் பற்றி எச்சரித்து, அப்பெருமான்களும் போராடித்தான் இறுதி இலக்கை அடைந்தனர் என்பதை உணர்த்தி, பயிற்சியாளனை ஊக்குவிக்கும் வழிகாட்டிகள்!

மேலும், இந்நிகழ்வுகள் நம் சமூகத்திலிருந்த கருத்துரிமைக்கும் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். மற்ற மதங்களில் யாரேனும் இவ்வாறு பதிவு செய்ய முற்பட்டிருந்தால்... உடலுறுப்புகளையோ, உயிரையோ இழந்திருப்பர்! 😏

"நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே!!" என்று முழங்கிய ஒரே இனம் உலகில் நம் தமிழினமாகத் தானிருக்கும்!! 💪🏽

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment