Wednesday, August 12, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் - #59 - வடக்கிருத்தல், மலைமாது, ஒரு பாகம் - சிறு விளக்கம்

தரைஎலாம் உய்யத் தனித்திருந்து செய்யும்
கரைஇலா மாதவத்தைக் கண்டு - விரவிஒரு
பாகம்மலை மாதுபெறப் பாலித்து நின்றுஅருளும்
மாகமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #59

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

மேலோட்டமாகப் பார்த்தால் உமையன்னை இடப்பாகம் பெற்ற வரலாற்றைப் பற்றி பாடுகிறார் குருநமச்சிவாயர் 🌺🙏🏽 என்று தோன்றும். ஆனால், சற்று ஆழ்ந்து சிந்தித்தால் பல காலம் கடுமையாக வடக்கிருக்கும் ஒருவர், முதலில் நிர்விகற்ப சமாதியைப் பெற்று, இறுதியில் சகஜ சமாதியில் நிலை பெறுவதைப் பற்றி பாடியிருக்கிறார் என்பது விளங்கும்.

🔸தனித்திருந்து - உலக வாழ்க்கையிலிருந்து விலகியிருந்து

🔸கரைஇலா மாதவம் - ஆற்றின் நீரோட்டத்தைப் போல், உருக்கிய நெய்யின் வீழ்ச்சியைப் போல் விடாது செய்யப்படும் வடக்கிருத்தல்.

நம் தலையானது உடலின் வடக்குப் பகுதியில் இருப்பதாக கணக்கு. நமது கவனத்தை உடலின் வேறு பகுதிகளுக்கு செல்லவிடாமல் நம் தலை / முகப்பகுதியிலேயே வைத்திருப்பதற்குப் பெயர் தான் #வடக்கிருத்தல் (ஆரியத்தில், #தவம்). எப்படி எக்கணமும் கவனத்தை தலையிலேயே வைத்திருப்பது? நம் மீது - நம் இருப்புணர்வின் மீது - கவனத்தை செலுத்திக்கொண்டிருந்தால் முடியும். இவ்வாறு நம் மீது கவனத்தை செலுத்திக்கொண்டிருப்பதே சும்மா இருத்தல், தானாய் இருத்தல், தன்னை நாடுதல், தன்னாட்டம், ஆத்மவிசாரம் (ஆரியம்) என பலவாறாக அழைக்கப்படுகிறது.

தானாய் இருத்தலே தன்னை அறிதலாம் - #பகவான் திரு #ரமணர் 🌺🙏🏽

🔸#விரவி - கலந்து. "நாம் வேறு உலகம் வேறு" என்ற துய்ப்பை நீக்கி, "நாமும் உலகமும் ஒன்றே" / "நாமே உள்ளபொருள்" என்ற துய்ப்பைக் கொடுத்தலே விரவுதல்.

🔸ஒரு பாகம் மலைமாது பெற பாலித்து

🔹#மலைமாது - சீவன். விழிப்பு நிலையில் சீவன் தலையிலிருப்பதாக கணக்கு. இங்கு மலை என்பது தலையைக் குறிக்கும். மெய்யறிவு பெறும் வரை மாது. பெற்ற பின், அப்பன்!

🔹ஒரு பாகம் - இடப்பாகமோ வலப்பாகமோ அல்ல. அசைவற்ற பாகம் - அசைவற்ற நிலை. மேற்சொன்ன "விரவி" நிலைக்குப் பின், நாம் யாரென்றும், உலகின் தன்மை என்னவென்றும் உணர்ந்து கொள்வோம். முயற்சிகளற்று (அசைவற்று) இருப்போம். இந்நிலையை நாம் அடைவதற்கு உதவிய "விரவுதலே" அருள் பாலித்தலாகும்.

🔸மாக மலை - வானளாவிய உயர்ந்த மலை

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

No comments:

Post a Comment