Tuesday, September 26, 2023

அட்டமங்கலம் = 8 உகந்த பொருட்கள் = எண்பொருட்கள்: உட்பொருள்


அட்டமங்கலம் என்பது பின்வரும் 8 உகந்த பொருட்களை குறிக்கும்:


கண்ணாடி

நிறைகுடம்

கொடி

விசிறி

தோட்டி

முரசு

விளக்கு

இரு மீன்கள் - இணைக்கயல்


இவற்றை தனித்தனி பொருட்களாகவோ, அல்லது, அனைத்தையும் ஒன்றாக ஒரு தாமிரத்தகட்டில் அச்சடித்தோ, சிலர் தங்களது வழிபாட்டு அறையில் வைத்திருப்பதை காணலாம்.


oOo


முதற்கண் தெரிந்துகொள்ளவேண்டியது மங்களம் & மங்கலம் ஆகிய இரு ஆரியச் சொற்களுக்கு இடையேயுள்ள வேறுபாடு:


மங்களம் - நிறைவு

மங்கலம் - உகந்தது / நற்குறி


அட்டமங்கலம் = 8 உகந்த பொருட்கள் = எண்பொருட்கள்.


1. கண்ணாடி


இது எதற்கு உதவுகிறது? முகம் பார்க்க. முகம் பார்த்து என்ன செய்யப்போகிறோம்? நம்மை சீர் செய்து கொள்ளப்போகிறோம். இவ்வாறே நமக்கு அமைந்திருக்கும் உடல், நம் கண் முன்னே விரியும் வையகம், நமக்கு தோன்றும் எண்ணங்கள் என யாவும் நமக்கு கண்ணாடி போன்றவையாகும். இவற்றினால் நாம் சீராகவேண்டும் / மேம்படவேண்டும் என்பது உட்பொருளாகும்.


2. நிறைகுடம்


முழுமையான அறிவு - எதையறிந்தால் நமது மனம் நிறைவடையுமோ அதைப் பற்றிய அறிவு. அதாவது, மெய்யறிவு.


3. கொடி


தரையில் படராமல், மேலெழும்பும் கொடிவகைகளைக் குறிக்கும். அவற்றை போன்று, மேலான குறிக்கோளை நோக்கி செல்லவேண்டும். எது மேலான குறிக்கோள்? உள்ளபொருள் / பரம்பொருள்!


4. விசிறி


அ. இளைப்பாறுதல். மொத்தப் பிறவியே இளைப்பு-ஆறுவதற்காகத்தானே! எனவே, எதையும் பொறுமையாக அணுகவேண்டும்.


ஆ. விசிறியை வீசிக்கொண்டிருந்தால் ஈ, கொசு முதலான பூச்சிகள் நம்மை அண்டாது. இதுபோன்று, "தீய எண்ணங்களை / தீய நபர்களை அண்டவிடாதே" என்றும் பொருள் கொள்ளலாம்.


5. தோட்டி


தோட்டி எனில் அங்குசமாகும். வெறி பிடிக்காமல் இருப்பதற்காக. யானைக்கு மதம் பிடித்தால், பாகன் தோட்டியை பயன்படுத்துவதை பார்த்திருக்கலாம். அதுபோன்று, ஒரு வேளை, நமக்கு வெறி பிடித்தால் நமது தோட்டியை பயன்படுத்தி வெறியை அடக்கவேண்டும். யானைக்கு தோட்டியென்பது ஒரு பொருளாகும். நமக்கு தோட்டியென்பது நமது மெய்யாசிரியர், நமது அறநூல்கள், நமது நலம்-விரும்பிகள், நம் வாழ்வில் என்றோ நடந்த நிகழ்வுகள் என யார் / எது வேண்டுமானாலும் இருக்கலாம்.


தோட்டிக்கு பதிலாக மழு இருக்கலாம். அப்படி மழுவை வைத்தால் நமக்கு கிடைக்கும் பொருள்: பற்றுகளை அறுத்தெறி. அல்லது, பற்றுகளை சேர்த்துக்கொள்ளாமல் இரு.


6. முரசு


போர்முரசு. ஒலித்தவுடன், எல்லாவற்றையும் விட்டுவிட்டு போருக்கு புறப்படுதல். இவ்வாறே, செயல் / கடமை என்று வந்தவுடன், உடனடியாக, முனைப்புடன் ஈடுபடவேண்டும்.


7. விளக்கு


விளக்கு எரிவதால் மற்றவர்களுக்கே பயன் கிட்டும். விளக்கிற்கு பயனில்லை. இது போன்று, தந்நலம் கருதாது மற்றவர்களுக்கு உதவிடவேண்டும்.


8. இணைக்கயல்


அன்னை அங்கையர்கண்ணியின் இரு விழிகளைக் குறிக்கும்: விழித்திரு!


வள்ளற்பெருமான் அறிவுருத்திய 3 சொற்களில் ஒன்றாகும். நமது தன்மையுணர்விலிருந்து ஒரு நொடி தவறினாலும், மாயையின் பிடிக்குள் சிக்கிக் கொள்வோம். எனவே, எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.


(ஒரு சாரர், இக்குறியீடு பிறவிகளின் தொடர்ச்சியை, அதாவது, மறுபிறவியை விரும்புதலைக் குறிக்கும் என்று எடுத்துக் கொள்கின்றனர். இது தவறாகும். இப்படி பொருள் கொண்டால், நம் முன்னோர்கள் வகுத்த அறம், பொருள், இன்பம் & வீடு என்ற 4 வழிகளில், வீடு என்ற மேலான வழி தவறானது / தேவையற்றது என்றாகிவிடும். மனிதப்பிறவியின் குறிக்கோள் பிறப்பறுப்பதாகும்.)


oOOo


கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️


திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️


🪻🌼🪷🌼🪻

Saturday, September 23, 2023

பிள்ளையாரை நீர்நிலையில் கரைத்தல் - உட்பொருள்


பிள்ளையாரின் பிறந்தநாள் எவ்வளவு சிறப்பு பெறுகிறதோ அவ்வளவு சிறப்பு அவரது திருவுருவை கரைக்கும் வினைமுறைக்கும் (ஆரியத்தில், சடங்கு) உண்டு. இது வேறெந்த திருவுருவுக்கும் கிடைக்காத சிறப்பாகும்.

பிள்ளையாரை தனிக்கடவுளாக காணும்போது, அவரது திருவுருவம் உள்ளபொருளை (பரம்பொருளை) குறிக்கும். சிவ குடும்பத்தில் ஒருவராக காணும்போது நமது அறிவை குறிக்கும். இங்கும் நமது அறிவை மட்டும் குறிக்கும்.

🌷 கரைக்கப்படும் நீர்நிலை - நாம் வாழும் இவ்வையகம்.

🌷 கரைக்கப்படும் பிள்ளையார் - பிறப்பு முதல் இறப்பு வரை நாம் சேர்த்து வைத்திருக்கும் யாவும்.

எதையெல்லாம் சேர்த்து வைத்திருக்கிறோம்?

நான் மனிதன்.
நான் ஆண் / பெண்.
இன்ன குடும்பத்தைச் சேர்ந்தவன்.
இன்ன படித்திருக்கிறேன்.
இன்ன வேலை / தொழில் செய்கிறேன்.
இன்ன சொத்துகள் சேர்த்திருக்கிறேன்.
இன்ன பதவிகள் வகித்திருக்கிறேன்.
இவர்கள் எனது குடும்பத்தினர்.
இன்ன ஊர்களுக்கு / நாடுகளுக்கு / கோயில்களுக்கு சென்று வந்திருக்கிறேன்.
இன்ன திறமைகளை வளர்த்துக் கொண்டுள்ளேன்.
இன்ன கடவுளை வணங்குகிறேன்.
இவர் எனது மெய்யாசிரியர்.
நான் அருள் பெற்றவன் / தீமையாளன்பிள்ளையார் நான்மை, விநாயகர் சதுர்த்தி, பிள்ளையாரை கரைத்தல்.
...
...

மொத்தத்தில் இவையனைத்தையும் சேர்த்து இரண்டு சொற்களில் அடக்க முடியும்: நான் இன்னார்!

பிறவியின் இறுதியில், அல்லது, பிறவி முடிந்தவுடன் இந்த "இன்னாரை" அப்படியே விட்டுவிடவேண்டும் என்பதே பிள்ளையாரை நீர்நிலையில் கரைக்கும் வினைமுறையின் உட்பொருளாகும்.

ஏன் விடவேண்டும்?

"இன்னார்" என்பதை விட்டாலும், நான் எனும் நமது தன்மையுணர்வை விடமுடியாது. அதுதான் நாம். அதுதான் உள்ளபொருள். அந்நிலையில் அப்படியேயிருத்தலே நிலைபேறு / வீடுபேறு ஆகும். வினைப்பயன்கள் முழுவதும் தீர்ந்திருந்தால் மட்டுமே இந்நிலையில் நீடித்திருக்க முடியும். இல்லையெனில்... கோவிந்தா! மீதமிருக்கும் ஏதாவதொரு பற்றை வைத்து அன்னை மாயை /மாயக்கண்ணன் தனது தில்லாலங்கடி வேலையை செய்து, நம்மை மீண்டும் இந்த ஜிஎஸ்டி-சூழ் வையகத்திற்குள் தள்ளிவிடுவார்.

அப்படி மீண்டும் பிறக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். இப்போது நாமிருக்கும் சூழலைவிட மேலான சூழல் கிடைத்தால் மகிழ்ச்சியடைவோம். ஒரு வேளை, கீழான சூழலமைந்தால்... தாவரம், புழு, பூச்சி, விலங்கு, பறவை என அஃறிணையாக பிறந்தால், அல்லது, பிச்சையெடுக்கும் பெற்றோருக்கு பிறந்தால், கொடுமையான பெற்றோர் / உடன்பிறந்தோருடன் பிறந்தால், விலைமகளுக்கு பிறந்தால், போக்கற்றவனாக (ஆரியத்தில், திக்கற்றவனாக - அநாதையாக) பிறந்தால், உடல் / மன ஊனத்துடன் பிறந்தால்... மிகவும் வருந்துவோம், துன்பப்படுவோம்.

மறுபிறவி கிடைத்தவுடன் முற்பிறவியின் நினைவுகள் அப்படியே நீங்கிவிடாது. மெல்ல மெல்லவே நீங்கும். ஒரு வேளை, முற்பிறவியில் மனிதனாக பிறந்து, சற்று நல்ல சூழலில் வாழ்ந்துவிட்டு, இப்போது, அதே பகுதியில் குப்பைத்தொட்டியை கிளறும் ஒரு நாய்க்கு மகவாக பிறந்து, முற்பிறவியில் தான் வாழ்ந்த வீட்டை, தன்னுடனிருந்த மக்களை காணும் நிலை ஏற்பட்டால் எப்படியிருக்கும்? 😔

எனவேதான், பிறவி முடியும் தருவாயில், அல்லது, பிறவி முடிந்தவுடன் நமது "பிள்ளையாரை" (நாம் சேர்த்தவற்றை) முழுவதுமாக கரைக்கச் சொல்லி நம் பெரியவர்கள் அறிவுருத்தியுள்ளனர்.

கரைத்தால் மட்டும் போதாது; நிலைபெறவும் தெரிந்திருக்கவேண்டும். இது முடியாதெனில், குறைந்தது, அடுத்த பிறவியில் எப்படிப்பட்ட சூழல் கிடைத்தாலும், அழுது அரற்றாது, அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனமுதிர்ச்சியையாவது வளர்த்துக் கொள்ளவேண்டும். அதாவது, பழைய பிள்ளையாரை கரைத்துவிட்டு, புதிய பிள்ளையாரை, அவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும், அப்படியே வரவேற்க அணியமாகவேண்டும்! (தயார் - தமிழல்ல)

oOo

... குருவடிவாகி குவலையந்தன்னில்
திருவடி வைத்து திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக்கருளி 
கோடாயுதத்தால் கொடுவினை களைந்த ...

அருமையான இவ்வரிகள் "விநாயகர் அகவலில்" இடம் பெற்றுள்ளன. பிள்ளையாரை போற்றிப் பாடுவது போன்று வரிகள் அமைத்து, உண்மையில், தனது மெய்யாசிரியரை போற்றிப் பாடியுள்ளார் ஒளவைப் பாட்டி! 😍

🌺🙏🏽🙇🏽‍♂️

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Monday, September 18, 2023

பிள்ளையார் பிறந்தநாள் / பிள்ளையார் நான்மை / பிள்ளையார் சதுர்த்தி


இன்று பிள்ளையாரின் பிறந்தநாள் - அதாவது, பிள்ளையார் என்ற இறையுருவத்தை உருவாக்கலாம் என்ற எண்ணம் நம் பெரியவர்களுக்கு தோன்றிய நாள்; அல்லது, அப்படியோர் உருவத்தை உருவாக்கி, அவர்கள் வெளியிட்ட திருநாள்.

🌷 யானைத் திருமேனி - நினைவுகளின் தொகுப்பே நீ!

🌷 பாசம் - பற்றுகளை சேர்த்துக்கொள்வதும் நீயே!

🌷 மழு - பற்றுகளை அறுத்தெறிவதும் நீயே!

🌷 ஒடித்த தந்தம் - உன்னுள்ளிருந்து வெளிப்படும் எண்ணங்களையும் காட்சிகளையும் கொண்டு, உனது மகாபாரதத்தை (உனது வாழ்வை) எழுதுபவனும் நீயே!

🌷 சிவலிங்கம் / இனிப்பு - வீடுபேறும் / மெய்யறிவும் உன்னிடமேயுள்ளது.

🌷 வசதியாக அமர்ந்திருத்தல் - நீ அசையாத பொருள் (காட்சிகள்தாம் அசைகின்றன).

🌷 மடக்கிய இடதுகால் - புறமுகமாக செல்லும் உன் கண்ணோக்கத்தை, அகமுகமாக உன் மீதே (உனது தன்மையுணர்வின் மீது) திருப்பிக்கொண்டிரு.

🌷 மூஞ்சூறு - பிள்ளையார் ஒளியெனில் மூஞ்சூறு இருளாகும். பிள்ளையார் அறிவெனில் மூஞ்சூறு அறியாமையாகும். எச்சரிக்கையாக இல்லாவிடில், அறியாமை மெய்யறிவை தின்றுவிடும் (மூஞ்சூறு இனிப்பை கொறிப்பது போன்று).

மொத்தத்தில் பிள்ளையாரின் திருவுருவம் தெரிவிப்பது: உன் வாழ்க்கை உன் கையில்!!

வணங்குதல் எனில் இணங்குதலாகும். பிள்ளையாரை வணங்குதல் எனில் அவரது உருவம் உணர்த்தும் கருத்துகளோடு இணங்குதலாகும். அவ்வாறு இணங்கி அமைதியடைதலே பிள்ளையார் வழிபாட்டின் உட்பொருளாகும்!!

oOOo

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு

-- ஒளவையார் 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Sunday, September 10, 2023

செப் 5 - ஆசிரியர் தினம் - சில சிந்தனைகள் ...


🔸 குரு (ஆரியம்) - தான் கற்றதைக் கொண்டு, நமது அறியாமை இருளை அகற்றுபவர்.

🔸 ஆச்சாரியார் (ஆரியம்) - குருவிற்கு மேலானவர். கற்றுக் கொடுப்பதோடு நிற்காமல், அதன் படி வாழ்ந்தும் காட்டுபவர். இச்சொல்லின் தமிழாக்கமே ஆசிரியர் ஆகும்!

🔸 ஆசிரியரைக் குறிக்கும் சில தூய தமிழ் சொற்கள்:

அண்ணாவி
ஆயன்
ஈவோன் (தொல்காப்பியம்)
நுவல்வோன் (நன்னூல்)
ஐயன்
ஓதுவான்
பணிக்கன் (மலையாளச் சொல்லல்ல)
புலவன்

🔸 தினம் என்பதும் ஆரியச் சொல்லாகும். தமிழில் "நாள்" என்றழைக்கலாம்.

🔸 ஆசிரியர் தினத்தை "ஆயர் திருநாள்" என்று தமிழில் அழைக்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்தாகும்.

🔸 ஆயர் என்பவர்...

- நுணுக்கமாக ஆராய்பவர்
- உள்ளதை விட்டுவிட்டு அல்லாததை பிரித்தெடுப்பவர்
- கூட்டத்தை பராமரித்து, வழிநடத்துபவர்

🔸 "ஆயர் என்பவர் மனித உருவில்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. ஒரு சொல்லாக, பொருளாக, குறியீடாக, நிகழ்வாகக்கூட இருக்கலாம்." என்பது பகவான் திரு இரமண மாமுனிவரின் 🌺🙏🏽🙇🏽‍♂️ வாக்காகும். நம்மை மேம்படுத்தும் யாவும் நமது ஆயர்களே!

🔸 இத்திருநாளை செப் 5 அன்று கொண்டாடுவதைவிட (இராதாகிருஷ்ணனை பற்றிய உண்மைகள் இன்று வெளிவந்துவிட்டன), தமிழர்களாகிய நாம் திருவள்ளுவர் திருநாளன்று கொண்டாடுவது பொருத்தமாகவிருக்கும்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Sunday, August 27, 2023

திரு பண்ணாரி அம்மன் என்ற திருப்பெயருக்குள் புதைந்திருக்கும் பொருட்கள்!! 🌺🙏🏽🙇🏽‍♂️


🔸 பண்ணாரி - பண் + ஆரி

🔸 ஆரி - ஆர் -> ஆரி - அருமை, மேன்மை, சிறப்பு, அழகு.

🔸 பண் - இசை, நரம்பு இசைக்கருவி, கூத்து, குதிரைக்கலனை (Saddle), ஒப்பனை, விலங்கு செல்லும் வழி, கப்பலின் இடப்பக்கம், தொண்டு, நீர் நிலை.

இனி, இவற்றை இணைத்துப் பார்ப்போம்.

🌷 இசை + அருமை / மேன்மை / சிறப்பு / அழகு + அம்மன் - அருமையான இசையை வெளிப்படுத்தும் அம்மன்.

இசையென்பது எதை குறிக்கிறது? நம் மனதில் தோன்றும் எண்ணங்களை! நாம் காணும் காட்சிகளை!!

🌷 நரம்பு இசைக்கருவி + அருமை... + அம்மன் - அருமையான நரம்பு இசைக்கருவியை மீட்டும் அம்மன்.

எது அப்படிப்பட்ட கருவி? நமதுடல்!!

🌷 கூத்து + அருமை... + அம்மன் - அருமையான கூத்தாடும் அம்மன்.

எது அப்படிப்பட்ட கூத்து? நமது வாழ்க்கை; நாம் வாழும் இவ்வையகம்!!

🌷 ஒப்பனை + அருமை... + அம்மன் - அருமையான ஒப்பனையாகிய அம்மன்.

எது அப்படிப்பட்ட ஒப்பனை? நமது உடல்தானது!

யாருக்கு அப்படிப்பட்ட ஒப்பனை? நமக்கு. 

உடலை ஆதனுக்கு (ஆரியத்தில், ஆன்மா) போர்த்திய போர்வையாகவும் கொள்வார்கள்; ஆதனுக்கு அணிவிக்கப்பட்ட அணிகலனாகவும் (ஒப்பனை) கொள்வார்கள்.

🌷 விலங்கு செல்லும் வழி + அருமை... + அம்மன் - விலங்கு செல்லும் அருமையான வழியாகிய அம்மன்.

எந்த விலங்கு? நமது மனமெனும் விலங்கு!! மனம் செல்லும் வழி. மனம் போன போக்கு. மனமடங்கினால் அப்பன். மனம் வெளிப்பட்டால் அன்னை.

🌷 கப்பலின் இடப்பக்கம் + அருமை... + அம்மன் - கப்பலின் இடப்பக்கமாகிய அருமையான அம்மன்.

எனில், வலப்பக்கம் அப்பனுடையதாகிறது. இடப்பக்கம் + வலப்பக்கம் = அம்மையப்பர் = கப்பல். எனில், கப்பல் எதை குறிக்கிறது? நாமே அந்த கப்பல்!! அசைவற்ற நமது தன்மையுணர்வு அப்பனாகும். அசையும் நமது மனம் & உடல் அம்மையாகும்.

🌷 தொண்டு + அருமை... + அம்மன் - அருமையாக தொண்டாற்றும் அம்மன்.

திரு விசாலாட்சி அன்னை எவற்றையெல்லாம் திரு விசுவநாதருக்கு உணவாக பரிமாறுகிறாரோ அவற்றையெல்லாம் "அப்பனுக்கு அம்மை ஆற்றும் தொண்டு" என்று கொண்டால் நமக்கு கிடைப்பது "அருமையாக தொண்டாற்றும் பண்ணாரி அம்மன்"!!

எவற்றையெல்லாம் அன்னை பரிமாறுகிறார்? அல்லது, எவற்றையெல்லாம் பரிமாறும் தொண்டு புரிகிறார்? எண்ணங்கள் மற்றும் ஐம்புலன்களின் வழியே கிடைக்கும் நுகர்ச்சிகளே (ஆரியத்தில், அனுபவங்கள்) அன்னை நமக்கு பரிமாறும் உணவாகும். இதுவே அவர் நமக்கு ஆற்றும் சிறந்த தொண்டுமாகும்.

🌷 நீர்நிலை + அருமை... + அம்மன் - அருமையான நீர் நிலையாகிய அம்மன்.

அசைவற்ற உள்ளபொருளை (இறைவனை) மலையாகவும், அசையும் மற்றனைத்தையும் (அன்னையை) நீர்நிலையாகவும் கொள்வது மரபாகும். எ.கா.: திருக்கயிலாய மலை & மானசரோவர் நீர்நிலை.

அசையும் தன்மையை தவிர, நீர்நிலையின் இன்னொரு தன்மை: எதிரொளிப்பு (ஆரியத்தில், பிரதிபலிப்பு)!

நமக்கு கிடைத்திருக்கும் உடல், நம் கண்முன்னே விரியும் வையகம் என யாவும் நமது எதிரொளிப்பாகும். அதாவது, முற்பிறவிகளின் வினைப்பயன்களாகும். எதற்கு இப்படிப்பட்ட எதிரொளிப்பு?

இதற்கு பகவான் திரு இரமண மாமுனிவர் கொடுக்கும் பதில்: காண்பான் என்றொருவன் இருப்பதை உணர்வதற்காக!!

oOo

🌸 பண்ணாரி அம்மன் திருக்கோயில் ஓர் உயிருள்ள கோயிலாகும். கருவறையின் கீழே ஒரு பெருமான் திருநீற்று நிலையிலிருக்கிறார்.

🌸 அப்படியொருவர் இருக்கிறாரென்பதை குறிப்பதற்காக வைக்கப்பட்ட அடையாளச் சின்னம்தான் பண்ணாரி அம்மன் எனும் திருவுருவமாகும். 

🌸 இறை-உயிர்-தளை (ஆரியத்தில், பசு-பதி-பாசம்) பற்றிய அப்பெருமானின் கண்ணோக்கத்தை பண்ணாரி அம்மன் எனும் திருவுருவாக வடித்துள்ளனரென்று கொள்ளலாம். 

🌸 அல்லது, அந்த திருவிடம் (ஆரியத்தில், சமாதியிடம்) அம்மன் வழிபாட்டினரிடம் சென்றுவிட்டதால், அவர்களது நம்பிக்கைகளுக்கு ஏற்றவாறு ஒரு திருவுருவை வடித்து வைத்துள்ளனரென்றும் கொள்ளலாம்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Wednesday, August 23, 2023

7 கன்னியர் - சிறு விளக்கம்


தேவாரப் பாடல் பெற்ற திருக்கடம்பந்துறை (குளித்தலை) திரு கடம்பங்காட்டு அப்பர் (கடம்பவனநாதர்) திருக்கோயிலின் கருவறை பின்புற சுவற்றில் 7 கன்னியர் புடைப்புச்சிற்பமாக இருப்பதைக் காணலாம். இதற்கு அத்திருக்கோயிலின் புனைவுக்கதை கூறும் விளக்கம்: கருவறை உடையவரின் கீழே திருநீற்று நிலையிலிருக்கும் பெருமானை வணங்கியவர்களுள் 7 கன்னியரும் அடங்குவராம். அதை குறிக்கவே 7 கன்னியரின் உருவம் புடைப்பாக செதுக்கப்பட்டுள்ளதாம். 🤦🏽🤦🏽

("புகை நமக்கு பகை", "குடி குடியை கெடுக்கும்" என்று அச்சிடுவது போன்று, இதுபோன்ற பிட்டுகளுடன், "தல புருடாக்கள் அன்பர்களுக்கும், இந்து சமயத்திற்கும் கேடு" என்று அச்சிடவேண்டும். அல்லது, திரைப்படங்களுக்கு தரச்சான்றிதழ் வழங்குவது போன்று, இவைகளுக்கும் வழங்கவேண்டும். எ.கா.: "அனைவருக்கும் பொருந்தும்", "வயது வந்தவர்களுக்கு மட்டும்", "மனநலம் பாதிக்கக்கூடும்"... 👊🏽👊🏽👊🏽)

கடம்பந்துறை கோயில் உயிருள்ள திருக்கோயிலாகும். அதாவது, இங்குள்ள கருவறை உடையவரின் கீழே ஒரு பெருமான் திருநீற்று நிலையில் (ஆரியத்தில், சமாதி) இருக்கிறாரென்பது பொருளாகும். அவரது நிலையை குறிக்கும் இறையுருவங்கள்தாம் கருவறையிலிருக்கும்:

🌷 சிவலிங்கம்

- சீரான தண்டுப்பகுதி - உள்ளபொருளாய் சமைந்துள்ள பெருமானின் நிலை என்றும் மாறாதது

- சற்றே வளைந்துள்ள உச்சிப்பகுதி - பெருமானின் நிலை முடிவற்றது

🌷 7 கன்னியர்

"7 கன்னியர்" என்றவுடன் பிராம்மி, வாராகி... என்ற ஆரியப் பெயர்வரிசையை நாம் நினைவுகூறும்படி கைங்கரியம் செய்திருக்கிறார்கள். இவ்விடத்தில், இது தவறாகும்!

இங்கு, 7 கன்னியர் எனில் நிணநீர், குருதி, தசை, கொழுப்பு, எலும்பு, எலும்புச் சோறு மற்றும் வெண்ணீர் ஆகும்.

அதாவது, 7 கன்னியர் = நமது உடல்!!

எனில், 7 கன்னியரின் புடைப்பிலிருந்து நாம் எய்தக்கூடிய முடிவுகள்:

🔸 உடையவரின் கீழேயிருக்கும் பெருமான் உடலுடன் உள்ளேயிறங்கி இருக்கலாம்.

(திரு சதாசிவ பிரம்மேந்திரப் பெருமானும் உடலுடன் திருநீற்றுக் குழிக்குள் இறங்கினாரென்பதை இங்கு நினைவுகூறலாம்.)

🔸 அல்லது, அப்பெருமான் இன்றும் உடல் தாங்கியிருக்கலாம்.

(வள்ளிமலை திருப்பணியின்போது, மலைப்பாதையில், ஓரிடத்திலிருந்த கற்பலகையை நகர்த்திப் பார்த்தபோது, உள்ளே 4 (அல்லது, 5) பெருமான்கள் எலும்புந்தோலுமாக, திருநீற்றுநிலையில் இருப்பதைக் கண்டு திரு கிருபானந்த வாரியாரும், அவருடனிருந்த இன்னொருவரும் மயங்கி விழுந்த நிகழ்வை இங்கு நினைவுகூறலாம்.)

🔸 அல்லது, உடலென்பது மேற்கண்ட 7 பொருட்களால் ஆனது என்ற கூற்றை வையகத்திற்கு வழங்கியது அப்பெருமானாக இருக்கலாம்! அவரது பங்களிப்பை வையகம் மறவாதிருக்க, 7 கன்னியர் புடைப்பை கருவறையில் வைத்திருக்கிறார்கள் என்று கொள்ளலாம்.

oOo

சில திருக்கோயில்களில், உடையவருக்கு பின்புறம் அம்மையப்பர் திருவுருவை செதுக்கியிருப்பார்கள். இதற்கு "அவ்விடத்தில் திரு அகத்தியப் பெருமானுக்கு இறைவன் திருமணக்காட்சியை காட்டியருளினார்" என்றொரு கதையை புனைந்திருப்பார்கள்.

திருமணக்காட்சி, திருக்கயிலாயக்காட்சி, சூழ்ச்சியில்லாக்காட்சி என பல பெயர்களில் அழைக்கப்படும் அக்காட்சியில் காண்பானும் (அப்பன் - நாம்) உண்டு, காட்சியும் (அம்மை - நம்மை தவிர மீதமனைத்தும்) உண்டு. உடலல்லாத நம்மை உடலாக காணும் சூழ்ச்சி (அன்னை மாயை / மாயோன்) மட்டுமிருக்காது. இப்போது, வையகம் என்ற திரைப்படத்திற்குள் நாமிருப்பது போன்று தோன்றுகிறது. திருக்கயிலாயக்காட்சியில், நாம் ஒரு புறமும் (அப்பன்), காட்சி ஒரு புறமும் (அம்மை) தோன்றும். இதையே அம்மையப்பராக உருவகப்படுத்தியிருக்கிறார்கள்.

இவ்வுருவகம் இருக்கும் திருக்கோயில்களில் உறையும் பெருமான்கள் (கருவறை உடையவர்களுக்கு கீழே திருநீற்று நிலையிலிருப்பவர்கள்) அத்தகைய காட்சியை கண்டுகொண்டிருக்கிறார்கள் என்பது பொருளாகும்.

oOo

சென்னை திருவேற்காட்டிலுள்ள திரு வேற்காட்டீசர் திருக்கோயிலின் கருவறையில் அம்மையப்பருடன் பிள்ளையாரையும் காணலாம்.

திருக்கயிலாயக்காட்சியில் காண்பான் (அப்பன்) காட்சியுடன் (அம்மை), காணும் அறிவும் (பிள்ளையார்) உடனிருக்கிறது என்பது அங்கு உறையும் பெருமானின் கருத்து என்று கொள்ளலாம்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Thursday, August 17, 2023

சிதறு தேங்காய் / சூரத்தேங்காய் - உட்பொருள்


பிள்ளையார் வழிபாட்டின் முகமைச் சடங்குகளில் ஒன்றான சிதறு தேங்காய் பற்றி சற்று பார்ப்போம்.

தேங்காய் என்பது நமது தலைக்கு சமமாகும். நமது தலையென்பது "நான் இன்னார்" என்ற எண்ணம் முதற்கொண்டு நாம் சேர்த்து வைத்திருக்கும் அனைத்து பற்றுகளுக்கு சமமாகும். தேங்காயை சிதற விடுவதென்பது எல்லா பற்றுகளையும் உடனடியாக, இப்பொழுதே விட்டொழிப்பதற்கு சமமாகும்.

எவ்வாறு "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என்ற வரியை படித்ததும், திரு பட்டினத்து அடிகள் அனைத்தையும் விட்டுவிட்டாரோ (அதாவது, அவரது தேங்காயை உடைத்துவிட்டாரோ), அவ்வாறு யாவற்றையும் விட்டுவிடுவதுதான் [சிதறு] தேங்காய் உடைப்பதின் உட்பொருளாகும். இதுவேதான் "தேங்காய் சிதறுவதுபோன்று ஒருவரது துன்பங்களும் சிதறிப்போகும்" என்ற நம்பிக்கையின் உட்பொருளுமாகும்.

ஒன்று நமதென்ற எண்ணம் இருக்கும்வரை அதனால் விளையும் இன்பமும் துன்பமும் நம்மை சாரும். எதுவும் நமதல்ல என்ற உண்மையை புரிந்துகொண்டு, பற்றுகளை விட்டுவிட்டால் (தேங்காயை உடைத்துவிட்டால்), விளைவுகளும் நமதல்ல என்றாகிவிடும் (விளைவுகளால் பாதிப்படையமாட்டோம்).

oOo

சிதறு தேங்காயை சூரத் தேங்காயென்றும் அழைப்பர்.

சூரன் என்ற சொல்லுக்கு, இங்கு, ஆரியத்தில் பொருள் காணவேண்டும்.

சூ + ர -> தந்தை + பற்று -> பற்றுகளின் தந்தை -> எல்லா பற்றுகளும் எங்கிருந்து தோன்றுகின்றனவோ அது -> பற்றுகளின் ஆணிவேர்!!

எது பற்றுகளின் ஆணிவேர்?

"நான் இவ்வுடல்" என்ற தவறான எண்ணம்தான் எல்லாவற்றிற்கும் தொடக்கமாகும். இதை விட்டொழித்தலே சூரத்தேங்காய் உடைத்தலாகும்.

oOo

பற்றுகளை விடுவதென்பது ஒரு முறைதான் நடக்கும் (ஒரு தேங்காய் உடைப்பதற்கு சமம்). பிறகு, ஏன் 11, 18, 108 என்று பல தேங்காய்களை உடைக்கிறார்கள்? உட்பொருளை உணராததால்!

பொருள் புரியாமல் சடங்குகளை செய்வது பொருளாதாரத்திற்கு நல்லதாகும்! பொருளை புரிந்துகொண்டு செய்வது அன்பர்களுக்கு நல்லதாகும்!! ☺️

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻