Showing posts with label திருவைந்தெழுத்து. Show all posts
Showing posts with label திருவைந்தெழுத்து. Show all posts

Saturday, September 19, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #70 - ஆத்தி, கடுக்கை, கொன்றை - சிறு விளக்கம்

ஆத்தி கடுக்கைமுத லானமலர் ஐந்துஎழுத்தால்
சாத்தி அடியவரும் தக்கோரும் - ஏத்திப்
புகழுமலை ஆங்குஅவரைப் பொற்கொடியோடு எய்தி
மகிழுமலை அண்ணா மலை

-- அண்ணாமலை வெண்பா - #70

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

🔸 பொதுவான பொருள்:

ஆத்தி, கொன்றை போன்ற மலர்களாலும், நமசிவாய என்ற திருவைந்தெழுத்தாலும் அடியவர்களும், தகுதியுடைய ஏனையோரும் சிவப்பரம்பொருளை போற்றி வணங்குவர். அவ்வாறு போற்றி வணங்குவோரை, அவர் தம் இடத்திற்கே உமையன்னையுடன் சென்று காட்சியருளி மகிழ்வார் எம்பெருமான்.

🔸 உட்பொருள்:

🔹 ஆத்தி - இங்கு மலரைக் குறிக்கவில்லை. தொடர்பு (சம்பந்தம்) என்ற பொருளைக் குறிக்கிறது. "நான் இன்னார்" என்று நம்மை நம் உடம்புடன் தொடர்பு படுத்திக் கொள்வது.

🔹 கடுக்கை - கொன்றை மலரல்ல. சேட்டை. நமது செயல்கள். "நான் செய்கிறேன்" என்ற எண்ணம்.

🔹 ஐந்தெழுத்து - நமசிவாய.

உணர்த்தும் பொருள்: எதுவும் நானில்லை. எல்லாம் நீயே. எல்லாம் உன்னிடமிருந்து வெளிப்படுபவையே. எல்லாம் உனது வெளிப்பாடே.

இந்த வகையில் தொடர்ந்து சிந்திக்க, நமது ஆணவம் ஒழியும்.

🔹 பொற்கொடி - உமையன்னையைக் குறிக்கும். உமையன்னை என்பது நம்மைத் தவிர (நான் என்னும் தன்மையுணர்வைத் தவிர) மீதமனைத்தும் அடங்கும். ஏற்கனவே உமையன்னையோடு தான் இருக்கிறோம். இனி புதிதாக எப்படி "ஆங்கு பொற்கொடியோடு எய்த" முடியும்?

இப்போது, உலகினுள் நாமிருப்பதாக உணர்கிறோம். இது உலகக்காட்சி - பொய் காட்சி. திருக்கயிலாயக் காட்சியின் போது அனைத்தும் நம்முள்ளிருப்பதை உணர்வோம். நாமும் இருப்போம் (சிவம்). காட்சிகளும் தோன்றும் (உமை). இச்சமயத்தில் மகிழ்ச்சியும் தோன்றும் (மகிழும் மலை). யாருக்கு இந்த காட்சி கிடைக்கும்?

"நான் இன்னார்" (ஆத்தி), "நான் செய்கிறேன்" (கடுக்கை) போன்ற தவறான கண்ணோட்டங்களை விடுத்து, "எதுவும் நானில்லை. எல்லாம் நீயே." (திருவைந்தெழுத்து) என்று சிந்தித்து ஆணவத்தை ஒழிக்கும் மெய்யன்பர்களுக்கு!!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Thursday, June 11, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #40: திருவைந்தெழுத்து - சிறு விளக்கம்

அனைத்துலகும் போற்றுதிரு ஐந்தெழுத்தை ஓதித்
தனைத்தொழுது பேணும் தவத்தோர் - நினைத்தவரம்
நல்குமலை எந்நாளும் நல்லோரும் நன்னெறியும்
மல்குமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #40

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

🔸#திருவைந்தெழுத்து

அருளாளர்கள் பலராலும் போற்றப்பட்ட ந, ம, சி, வா, ய ஆகிய 5 திருவெழுத்துகள். திருஞானசம்பந்தர் 🌺🙏🏽 பாடிய கடைசி திருப்பதிகம் (காதலாகி கசிந்து...) முடிவதும் இவற்றுடன் தான். "நாதன் நாமம் நமச்சிவாயவே" என்று மெய்ப்பொருளின் பெயரே இவ்வைந்தெழுத்துதான் என்று முடிக்கிறார்!

ந - இல்லை
ம - நான்
சி - அழியாதது. மாறாதது. தேயாதது. வேறெது? மெய்ப்பொருள்.
வா - வீசும்
ய - ஒளி

பொருள்: எதுவும் நானில்லை. எல்லாம் மெய்ப்பொருளின் வெளிப்பாடே. 🌺🙏🏽

தொடர்ந்து சிந்திப்பதால் கிடைக்கும் பயன்: ஆணவம் அழியும். ஒப்புவித்து வாழும் மனப்பான்மை பெருகும். இறுதியில், நிலைபேற்றில் முடியும்.

தமிழிலும் சரி, ஆரியத்திலும் சரி இவ்வைந்தெழுத்து சொல் என்று அழைக்கப்படுவதில்லை. ஐந்தெழுத்து என்றே அழைக்கப்படுகிறது. மேற்சொன்ன பொருள் தவிர, இவ்வெழுத்துகளுக்கு பல பொருள்கள் உண்டு. இவை ஐம்பூதங்களையும் குறிக்கும். இறைவனது ஐந்தொழில்களையும் குறிக்கும். சற்று மாற்றினாலும் பொருள் முற்றிலும் மாறிப்போகும்.

🔹#சிவாயநம - மேற்கண்ட நமசிவாய வரிசைக்கு எதிர்பொருளைக் கொடுக்கும். "எல்லாம் நீயே" என்பது போய் "எல்லாம் பொய். நான் மட்டுமே மெய்." என்ற பொருளைக் கொடுக்கும். பகவானும் 🌺🙏🏽, பல இடங்களில், "நீ காண்பதும் கேட்பதும் பொய். நீ மட்டுமே மெய்." என்று அறிவுறுத்தியுள்ளார்.

"சிவாயநம என்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை" என்பது புகழ்பெற்ற வசனம். தானே தானாய் இருப்போரை யார்தான் எதுதான் என்னதான் செய்துவிடமுடியும்? எனவே, அபாயம் ஒருநாளும் இல்லை!!

🔹#சிவசிவ - முதல் சிவ மெய்ப்பொருளையும், இரண்டாவது சிவ அதிலிருந்து வெளிப்பட்ட அனைத்தையும் குறிக்கும். இரண்டுமே சமமானது. முழுமையிலிருந்து முழுமையை எடுத்த பின்னும் முழுமை முழுமையாகவே இருக்கிறது என்ற திருமறைச் சொற்றொடருக்கு சமமானது. அம்மையப்பன், மாதொருபாகன், சங்கரநாராயணன் போன்ற இறையுருவங்கள் இதன் உருவ வடிவம்.

🔹சிவ - அழியாதது. மாறாதது. தேயாதது. வலிமையானது. நல்லது.

🔹சி - மெய்ப்பொருள் மட்டுமே. "நான் என்ற எண்ணம் கிஞ்சித்தும் இல்லாத இடமே மெளனம் (மெய்ப்பொருள்) எனப்படும்" என்கிறார் பகவான்.

oOOo

அக்கரம் அதோர் எழுத்தாகும் இப்புத்தகத்தோர்
அக்கரமாம் அஃதெழுத வாசித்தாய் - அக்கரமாம்
ஒரெழுத்து என்றும் தானாய் உள்ளத்தொளிர்வதாம்
ஆரெழுத வல்லார் அதை

இப்பாடல், யோகி ராமைய்யா என்ற அன்பர் கேட்டுக்கொண்டதற்காக, அவரது காகிதப் புத்தகத்தில் பகவான் எழுதிக் கொடுத்தது. #அக்கரம் என்பது #அக்ஷரம் என்ற ஆரிய சொல்லாகும். இதற்கு எழுத்து & அழியாதது என்று 2 பொருள்கள் உள்ளன.

பொருள்: அக்கரம் என்பது ஓர் எழுத்தாகும். இந்த காகிதப் புத்தகத்தில் நான் எழுதிய அக்கரத்தை வாசித்தாய். ஆனால், என்றும் அழியாத ஓர் அக்கரம் எல்லோர் உள்ளத்திலும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. யாரால் அதை எழுத முடியும்? (யாராலும் எழுத முடியாது. அதுவாய் ஆகத்தான் முடியும் என்பது கருத்து.)

பகவான் குறிப்பிடும் அழியாத அவ்வெழுத்து எது? மேற்கண்ட 'சி' என்ற திருவெழுத்து உணர்த்தும் மெய்ப்பொருளே அது!!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽