Tuesday, January 10, 2017

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை சிவத்தமிழ்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி

தமிழின் தாயகமான தமிழ்நாட்டுத் தமிழை விட, இலங்கைத் தமிழ் தூய்மையானதாகவும், சுவையானதாகவும் இருக்கும். சுவைத்து மகிழுங்கள்!! 👍☺

🌸🏵🌹💮🌺🌷🌼

*யாழ்ப்பாணம் தெல்லிப்பளை சிவத்தமிழ்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி*

இவர் தமிழுக்கும், சைவசமயத்துக்கும் தன் வாழ்நாளில் அரும்பெரும் தொண்டாற்றி, பிறந்த மண்ணுக்குப் பெருமை சேர்த்துள்ளார். ஒரு பெண் தனித்து நின்று சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என்பதை தனது உலகளாவிய நற்பணிகள் மூலம் நிருபித்துக் காட்டியுள்ளார். யாழ்ப்பாண வரலாற்றில் பதிவான இவரைப் பற்றிய சில வரிகள் இங்கே:

அப்பாக்குட்டி - தையற்பிள்ளை தம்பதியினருக்கு இரண்டாவது பிள்ளையாக தங்கம்மா 1925 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 07 ஆம் திகதி அவதரித்தார்.

இவரது ஜாதகத்தினை ஜோதிடர்கள் இவரிடம் பொருட் செல்வத்திலும் பார்க்க அருட் செல்வமே அதிகம் இருப்பதாக கணிப்பிட்டுச் சொன்னார்கள். தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோவிலில் இவருக்கு ஏடு தொடக்கப்பட்டது.

இவர் மல்லாகம் அமெரிக்கன் மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலையில் 1929 ஆம் ஆண்டு ஆரம்பக் கல்வியைத் தொடங்கினார்.

"பெண் பிள்ளைதானே, கடிதம், தபால் தந்தி வாசிக்கக் கூடிய அறிவு இருந்தால் போதும்" என்று பெண்களின் உயர் கல்விக்கு தடை போடும் காலம் அது. அன்றைய காலகட்டத்தில் தங்கம்மாவின் அறிவுக் கூர்மையை நன்கு உணர்ந்த பெற்றோர் அவரை உயர் கல்வி கற்கவென, 1935 ஆம் ஆண்டு மல்லாகம் விசாலாட்சி வித்தியாலத்தில் சேர்த்தனர்.

படிப்பில் கெட்டித்தனமிக்க தங்கம்மா, போட்டிகள், பரீட்சைகள் என அனைத்திலும் முதலிடம் பெற்றார். இதே போல் ஆசிரியர் பயிற்சிப் புதுமுகத் தேர்வில் சித்தி பெற்று 1941 ஆம் ஆண்டு இராமநாதன் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் இணைந்து கொண்டார்.

ஆசிரியர் கலாசாலையில் பயிற்சியை முடித்துக் கொண்டு 1945 ஆம் ஆண்டு தெல்லிப்பளை சைவப்பிரகாச வித்தியாசாலையில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்தார். பின்னர் மட்டக்களப்பு புனித சிசீலியா ஆங்கிலப்பாடசாலைக்கு நிரந்திர ஆசிரியராக நியமனம் பெற்றுச் சென்றார்.

1949 ஆம் ஆண்டு கொழும்பு மருதானை பாத்திமா பெண்கள் பாடசாலை அதிபரின் வேண்டு கோளுக்கிணங்க அங்கு சென்று 11 ஆண்டுகள் ஆசிரியப்பணியை மேற்கொண்டார்.

1941 ஆம் ஆண்டில் பிரவேச பண்டிதத் தேர்விலும் 1952 ஆம் ஆண்டில் பால பண்டிதத் தேர்விலும், 1953 ஆம் ஆண்டில் பண்டிதத் தேர்விலும் சித்தி அடைந்து தமிழ் புலமையை மேலும் வளர்த்துக் கொண்டார்.

கொழும்பில் பல இடங்களில் இவர் சமயச் சொற்பொழிவினை நிகழ்த்தினார். இதனால் இவரின் தனித்துவம் வாய்ந்த நாவன்மை கொழும்புத் தமிழ் மக்களைப் பெரிதும் கவர்ந்தது.

ஈழத்துத் தனிப் பெருமையில் நாட்டமுள்ள இவர் எழுதிய "ஈழத்துப் பிரபந்தங்கள்" என்னும் ஆராய்ச்சிக் கட்டுரை 1954 ஆம் ஆண்டு ஆரிய திராவிட பாசாவிருத்திச் சங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

சென்னை சைவசித்தாந்த சங்கம் நடத்திய சைவப் புலவர் தேர்வில் சித்தியடைந்து 1958 ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது பெண் சைவப்புலவரானார். இலங்கையில் சைவப்புலவர் சங்கம் நிறுவுவதற்கும் காரணமாக இருந்தார்.

1958 இல் கொழும்பில் நடந்த இனக்கலவரத்தினால் யாழ்ப்பாணத்திற்கு வந்த தங்கம்மா அப்பாக்குட்டி அளவெட்டி சதானந்த வித்தியாலயத்திலும் 1964 இல் இருந்து தெல்லிப்பளை யூனியன் கல்லூரியிலும் தனது கற்பித்தல் பணியைத் தொடர்ந்தார். இவர் இக்கல்லூரியிலிருந்தே ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

தாய்தந்தையின் பிரிவுத் துயர் இவரை வாட்டிய போது அதை மறப்பதற்காக திருவாசகத்தை ஒரு வருடமாக இரவு பகலாகப் படித்தார். இதனால் திருவாசகம் இவருக்கு மிகுந்த பரீட்சயமாகிற்று.

*"பேசப்படும் பேச்சின் பொருளை ஒழுங்குபடுத்தி கால நேரத்தை உணர்ந்து கட்டுப்பட்டு, யாழ்ப்பாணத் தமிழில் ஓரெழுத்தையும் சிதைக்காது, விழுங்காது பேசும் திறமை சிவத்தமிழ்ச் செல்விக்கு உண்டு" என பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை பாராட்டினார்.*

சிவத்தமிழ்ச் செல்வியின் சிறப்பை வானொலி மூலம் கேட்டறிந்த தமிழ் நாடு ஆதீனங்களும் தமிழ் மன்றங்களும் சொற்பொழிவு ஆற்ற அங்கு அழைத்தனர்.

1965 ஆம் ஆண்டு முதல் சிவத்தமிழ் செல்வியின் தமிழ்தூதுப் பயணம் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் என பல நாடுகளுக்குப் பயணிக்கத் தொடங்கியது.

1973 ஆம் ஆண்டு திருவாவடுதுறை ஆதீனத்தில் நடைபெற்ற மங்கையர் மாநாட்டில் தங்கம்மா அப்பாக்குட்டி தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆதீனத்தின் மாநாடு ஒன்றில் ஈழத்துப் பெண் ஒருவர் தலைமை தாங்கிய பெருமை இவரையே சாரும்.

இவரின் தமிழ்த் தொண்டையும், தழிழ்ப்பணியையும் பாராட்டி தமிழ்நாடு ஆதீனம் 'பொற்கிழி' வழங்கிக் கௌரவித்தது.

1971 ஆம் ஆண்டு சிலாங்கூர் இலங்கைச் சைவர் சங்கத்தின் அழைப்பை ஏற்று மலேசியா சென்ற அம்மையாருக்கு, அவர்கள் இவரின் நிகழ்ச்சிக்கான கால அட்டவணையை ஒழுங்கமைத்த விதம் வெகுவாக ஆச்சரியப்பட வைத்தது.

செல்லுமிடம் எல்லாம் பாராட்டுக்களையும், பட்டங்களையும், பொன்னாடைக் கௌரவங்களையும் பெற்றுக் கொண்டார்.

1970 ஆம் ஆண்டு 'ஈழத்து சிதம்பரம்' என்று இந்தியர்களால் அழைக்கப்படும் காரைநகர் சிவன் கோவில் ஆதீனம் இவருக்கு 'சிவத்தமிழ் செல்வி' என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்தது. இப்பட்டமே இவரின் பெயருடன் ஐக்கியமாகி விட்டது. மதுரை ஆதீனத்தால் 'செஞ்சொற் செம்மணி' (1966), காஞ்சிபுர ஆதீனத்தால் 'சித்தாந்த ஞானாகரம்' (1971), மலேசியா இலங்கை சைவர் சங்கத்தால் 'திருவாசகக் கொண்டல்' (1972), தெல்லிப்பளை ஸ்ரீதுர்க்கா தேவி தேவஸ்தானாத்தால் 'துர்க்காதுரந்தரி' (1974) வண்ணை வைத்தீஸ்வரன் ஆதீனத்தால் 'திருமுறைச் செல்வி' (1973), திருக்கேதீஸ்வர ஆதீனத்தால் 'சிவமயச்செல்வி' (1974), இணுவில் பரராசசேகரப்பிள்ளையார் ஆதீனத்தால் 'திருமொழி அரசி' (1983) போன்ற பட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

அம்மையாருக்கு 1982 ஆம் ஆண்டு காசிக்குப் போகும் வாய்ப்புக் கிட்டியது. காசிக்குச் செல்பவர்கள் இந்து சமயக்கோட்பாட்டின் படி தாம் பெறும் பற்றுக்களில் ஒன்றைத் துறக்க வேண்டும். அதற்கிணங்க இவரும் தனக்கு கிடைத்து வந்த பொன்னாடை போர்த்துக் கௌரவிக்கும் பற்றை இதன் பின் ஏற்க மாட்டேன் எனத் துறந்தார். ☺

இவர் ஆற்றி வந்த தமிழ்மொழிப் பணிக்காகவும், சமயத் தொண்டுக்காகவும் 1998 ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கிக் கௌரவித்தது.

மக்களின் பொதுப்பணிக்காக நிலையங்களையும் கல்யாண மண்டபங்களையும் கட்டி சமூகத்தொண்டாற்றினார். தனது ஒவ்வொரு பிறந்த தினத்திலும் வைத்தியசாலைக்கும், கல்விக்கூடங்களுக்கும் நிதிக்கொடைகளைச் செய்து வந்தார்.

*சங்க காலத்தில் தமிழ் வளர்க்க, சமயம் வளர்க்க ஒளவைப்பாட்டி தமிழுக்குக் கிடைத்தது போல் ஈழத்தில் தமிழ் வளர்க்கவும், சமயம் வளர்க்கவும் கிடைத்த தங்கம்மா அப்பாக்குட்டி 2008 ஆம் ஆண்டு யூன் மாதம் 15 ஆம் திகதி தனது 83 ஆவது வயதில் இவ்வுலகை விட்டுச் சென்றார்.* 🙏

(மூலம்: http://panippulam.com/index.php?Itemid=403&catid=44:homes-gardens&id=1102:2011-01-08-16-51-52&option=com_content&view=article)

🌸🏵🌹💮🌺🌷🌼

இவ்விடுகையின் வாயிலாக இங்கிருந்த ஆதீனங்கள் சிலவற்றின் பெயர்களையும், இலங்கையிலிருக்கும் சில சைவத் தலங்களின் பெயர்களையும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு நமக்கு கிடைக்கிறது.

ஆரியர்களையும், முகம்மதியர்களையும், வெள்ளையர்களையும் தாக்குப் பிடித்த இந்த ஆதீனங்கள் உலகமயமாக்கல், மேற்கத்தியமயமாக்கல், கான்-கிரஸ் மற்றும் போலித் திராவிடம் ஆகிய தேச, இன, சமுதாயக் கொல்லிகளைத் தாக்குப் பிடிக்க முடியாமல் போனது வருந்த தக்கதே. 😔

No comments:

Post a Comment